Thursday, 31 January 2013

ஸ்ரீ சாயி சத்சரிதம் - ஆரத்தி

ஜீவன்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் ஓ! சாயிபாபா, தங்களுக்கு தீப ஆராதனை செய்கிறோம்.  
தங்களுடைய சேவார்த்திகளும், பக்தர்க்களுமான எங்களுக்குத் தங்கள் பாதாரவிந்தங்களில் அமைதியைக் கொடுங்கள்.  ஆசைகளை அழித்து, எங்களது ஆத்மாவுக்குள்ளேயே தாங்கள் கலந்து, வேண்டுவோர்க்கு இறைவனைக் காட்டுகிறீர்கள்.  பேரார்வத்துடன் விரும்பினோர்க்குத் தாங்கள் அனுபவங்களையும் அல்லது உணர்வுகளையும் கொடுக்கிறீர்கள். 

 ஓ! அன்புள்ளம் கொண்டோரே, தங்கள் சக்தி அத்தகையது.  தங்கள் திருநாமஸ்மரணை எங்கள் சம்சார பயங்களைப் போக்குகிறது.  தங்களது லீலைகள் ஆழங்காண முடியாதவை.  எப்போதும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் அருள்கிறீர்கள்.  இந்தக் கலியுகத்தில் சர்வவியாபியான, தத்தாவாகிய தாங்கள் சகுணப் பிரம்மமாக உண்மையில் அவதரித்தீர்.  வியாழக்கிழமை தோறும் தங்களிடம் வரும் பக்தர்களைக் கடவுளின் திருவடிகளைக் காணச்செய்து அவர்களின் சம்சார பயங்களைப் போக்குங்கள்.

ஓ! இறைவனுக்கெல்லாம் இறைவனே!  எனது செல்வங்கள் யாவும் தங்களது சேவையில் இருக்கவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.  சாதகப் பறவைக்கு மேகங்கள் சுத்தமான நீரை அளிப்பதுபோல் இதைப் படிப்பவர்களுக்கு (இந்த ஆரத்திப் பாடல் சமகாலத்தில் வாழ்ந்த மாதவ் அட்கர் என்னும் அடியவரால் இயற்றப்பட்டது)  மகிழ்வுடன் உணவளித்துத் தங்கள் வாக்கை நிலைநிறுத்துங்கள்.  


ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்


Wednesday, 30 January 2013

ஸ்ரீ சாயி சத்சரிதம் - முடிவுரை

நாம் 51வது அத்தியாயத்தை முடித்துவிட்டு கடைசி அத்தியாயத்திற்கு (மூல நூலில் 52வது அத்தியாயம்) வருகிறோம்.  இதில் முடிவுரையாகச் சொல்லும்போது ஹேமத்பந்த் மராத்தியப் புனித நூல்களில் உள்ளபடி இதுவரை உள்ள அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களை பாடல்களாக அட்டவணைப்படுத்தி எழுதப்போவதாகக் கூறியிருந்தார்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக அம்மாதிரி அட்டவணை ஹேமத்பந்தின் எழுத்துப் பிரதிகளில் இல்லை.

எனவே பாபாவின் ஆசிபெற்ற சிறந்த பக்தரான தாணேவைச் சேர்ந்த மாஜி மம்லதார் திரு B.V.தேவ் என்பவர் அதை அமைத்து வழங்கினார்.  ஆங்கிலப் புத்தகங்களில் ஆரம்பத்தில் அட்டவணை கொடுத்து ஒவ்வொரு அத்தியாயத்தில் கண்டுள்ளவற்றை அதன் தலைப்பில் கொடுப்பதுபோல், இந்த அத்தியாயத்தில் கண்டுள்ளவற்றை அட்டவணையின் கடைசியாகக் கருதவேண்டாம்.  எனவே இதை முடிவுரையாகக் கருதுவோம்.  துரதிர்ஷ்டவசமாக இந்த அத்தியாயத்தின் கையெழுத்துப் பிரதியைச் சரிபார்த்து அச்சிடும் வரையில் ஹேமத்பந்த் உயிருடன் இல்லை.  அது அச்சகத்துக்கு அனுப்பப்படும் சமயம் தேவ் அவர்கள் அவற்றின் முடிவற்ற நிலையையும் சில இடங்களில் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதையும் கண்டார்.  ஆயினும் அது அவ்வாறே பிரசுரிக்கப்பட வேண்டியதாயிற்று.  அவற்றின் முக்கியமான தலைப்புக்கள் இங்கு சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 



சத்குரு சாயி மகிமை

விருப்பு வெறுப்பு இல்லாதவரும், உயர்வு தாழ்வுகளைக் கருதாதவரும், எவருக்கு பக்தர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகக் காணப்படுகிறார்களோ, எவர் உயிரினங்கள் எல்லாவற்றிலும் எவ்வித பேதமுமின்றி கலந்து நிற்கிறாரோ, எவர் இந்த அண்ட சராசரங்களில் உள்ள அசையும் - அசையாப் பொருட்களை பகவான் பிரம்மனுடைய ரூபத்தில் உண்டாக்கி வீடுகள், அரண்மனைகள் மற்றும் ஆகாயம் இவை யாவற்றையும் சூழ்ந்து நிற்கிறாரோ அந்த சமர்த்த சாயியை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறோம்.

அவரை நினைத்தாலும், சரணடைந்தாலும் அவர் நமது எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி நம்மை வாழ்வின் இலட்சியங்களை அடையச் செய்கிறார்.

லோகாயத இச்சைகளாகிய இந்த சமுத்திரத்தைக் கடப்பது மிகக் கடினம்.  மோகம் என்ற அலைகள் உயர்ந்து, தீய எண்ணங்களாகிய கரையை நோக்கி ஓடி மோதுகின்றன. ஆதலால் நமது மன வலிமையாகிய மரங்கள் வேருடன் வீழ்த்தப்படுகின்றன.  அஹங்காரமென்னும் காற்று கடுமையாக வீசி, கடலைக் கொந்தளிக்கச் செய்கிறது. வெறுப்பு, கோபமாகிய முதலைகள் பயமின்றித் திரிகின்றன. நான், எனது என்ற எண்ணங்களும் மற்ற சந்தேகங்களும் நீர்ச்சுழல்களாக இடையறாது சுற்றிக்கொண்டிருக்கின்றன. திட்டுதல், வெறுத்தல், பொறாமை ஆகிய எண்ணற்ற மீன்கள் அங்கு விளையாடுகின்றன.

இவ்வளவு பயங்கரமானதாகவும், கொடுமையானதாகவும் இந்தக் கடல் இருந்தாலும் சத்குரு சாயி இதை அழிக்கவல்லவர்.  அவரது பக்தர்கள் இதைப்பற்றிப் பயமடைய வேண்டியதில்லை.  நமது சத்குரு இந்தக் கடலை பத்திரமாகக் கடப்பதற்கு வேண்டிய படகு போன்றவர்.



பிரார்த்தனை

இப்போது நாம் சாயிபாபாவின் முன்னே முழுவதுமாக வீழ்ந்து அவர் பாதகமலங்களைப் பற்றிக்கொண்டு கீழ்கண்டவாறு எல்லோரும் எல்லாவற்றிற்குமாகப் பிரார்த்திப்போம்.

"எங்களது மனம் கண்டவாறு அலையாமல் தங்களைத் தவிர வேறு எதையும் விரும்பாமல் இருக்கட்டும்.  இந்த சத்சரிதம் எல்லோருடைய இல்லங்களிலும் இருந்து தினசரி பாராயணம் செய்யப்படட்டும்.  இதைத் தினமும் முறையாகப் படிப்பவர்களின் துயரங்களைத் தீருங்கள்."



பலஸ்ருதி (பாராயண பலன்)

இச்சரிதம் படிப்பதால் நீங்கள் பெறும் நலன்களைப் பற்றிச் சில வார்த்தைகள்.  புனித கோதாவரி நதியில் குளித்துவிட்டு ஷீர்டியில் உள்ள சமாதி மந்திரிலுள்ள பாபாவின் சமாதியை வணங்கித் தரிசித்து இந்த சத்சரிதத்தைப் படிக்கவோ அல்லது கேட்கவோ வேண்டும்.  இதைச் செய்தால் உங்கள் உடல், பொருள், ஆவியைத் தாக்கும் தீங்குகள் மறையும். தற்செயலாக சாயியின் கதைகளை நினைப்பதன் மூலம், உங்களை அறியாமலேயே நீங்கள் ஆன்மிக வாழ்வில் விருப்பம் கொள்வீர்கள்.  இச்சரிதத்தை ஆர்வமுடனும், பக்தியுடனும் படிப்பதால் உங்கள் பாவங்கள் அழிக்கபபடும். ஜனன மரணச் சுழலை ஒழிக்க நீங்கள் விரும்பினால் சாயியின் சரிதங்களைப் பாராயணம் செய்து, அவரை நினைத்து அவரது திருவடிகளில் உங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.  நீங்கள் சாயி சரித சாகரத்தில் மூழ்கி மேலெழுந்து அதன் இன்பத்தை மற்றவர்களுக்குக் கூறும்போது அவற்றின் புதுப்புது நித்ய சுகந்தத்தை உணர்ந்து மற்றவர்களையும் தொல்லைகளிலிருந்து காப்பீர்கள். 

சாயியின் உருவையே நீங்கள் தொடர்ந்து தியானித்தால் நாளடைவில் உருவம் மறைந்து உங்கள் தன்னுணர்விலேயே கலந்துவிடும்.  தன்னையறிதலும், பிரம்மத்தை உணர்தலும் மிகக் கடினம்.  ஆனால் சகுண பிரம்மாவாகிய சாயியின் உருவத்தின் மூலம் வழிபட்டால் உங்கள் பிரம்ம உணர்வின் முனேற்றம் எளிதாகும். பக்தனானவன் தன்னை சாயியிடம் பரிபூர்ண சரணாகதியாக்கிவிட்டால் தன்னுடைய தனித்தன்மையை இழந்து ஐக்கியமாகி கடலுடன் நதி சங்கமிப்பது போல் அவருடன் ஒன்றாகிறான்.  கனவிலோ,  உறக்கத்திலோ அல்லது விழித்திருக்கும் நிலையிலோ இவ்வாறு அவருடன் இரண்டறக் கலந்தால், நீங்கள் சம்சார பந்தத்தை ஒழிக்கிறீர்கள்.  யாராயினும் குளித்துவிட்டு அன்புடனும், உண்மையுடனும் இதை ஒரு வாரத்திருக்குள் படித்தால் அவர்களைப் பிடித்த கேடுகள் மறையும்.  படிக்கக் கேட்பவர்களுக்கு வரும் அபாயங்களும் நீக்கப்படும்.  

இதைப் பாராயணம் செய்து செல்வத்தை விரும்புபவன் செல்வத்தையும், நல்ல வியாபாரிகள் வியாபாரத்தில் வெற்றியையும் அடைவர்.  உண்மைக்கும், பக்திக்கும் தகுந்தவாறே பலன்களும் அமையும்.  இவைகளின்றி எவ்விதமான அனுபவமும் இல்லை.  இச்சரிதத்தை பக்தியுடன் படித்தால் சாயி மனம் மகிழ்ந்து உங்கள் அறியாமையையும், ஏழ்மையையும் நீக்கி உங்களுக்கு ஞானமும், செல்வமும், க்ஷேமமும் நல்குவார். கருத்தூன்றிய மனத்துடன் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் படித்தால் அது எல்லையற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும்.  தது நலனை எவன் மனதில் கொண்டுள்ளானோ, அவன் கட்டாயம் கவனமாகப் படிக்கவேண்டும்.  தொடரும் பிறவிகளில் ஒவ்வொரு பிறவியிலும் எப்போதும் சந்தோஷமாக அவன் சாயியை நினைப்பான். முக்கியமாக குருபூர்ணிமா, கோகுலாஷ்டமி, ராமநவமி, நவராத்திரி (பாபா சமாதியான விஜயதசமி) தினங்களில் இச்சரிதம் வீடுகளில் பாராயணம் செய்யப்படவேண்டும்.  இதைக் கவனமுடன் படித்தால் உங்கள் ஆசைகள் நிறைவேற்றப்படும்.  

அவர் பாதகமலங்களை உங்கள் மனத்தால் நினைப்பதால் சம்சார சாகரத்தைச் சுலபமாகக் கடப்பீர்கள்.  இதைக் கற்பதால் நோயாளிகள் குமுற்று திடகாத்திரமடைவர். ஏழைகள் செல்வம் அடைவர்.  கீழ்நிலையில் உள்ளோரும், நசுக்கப்பட்டோரும் உன்னத நிலை பெறுவர்.  மனம் சலனங்களிலிருந்து விடுபட்டு ஒருநிலைப்படும்.  

நல்ல அன்பும், பக்தியுமுள்ள வாசகர்களே, கேட்போரே! உங்களை வணங்குகிறோம்.  வணங்கி ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம்.  தினமும், மாதக்கணக்கிலும் படித்த சாயியின் கதைகளை ஒருபோதும் மறக்காதீர்கள்.  நீங்கள் எவ்வளவு ஆவலுடன் படிக்கிறீர்களோ அல்லது கேட்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குச் சேவை செய்வதில் உதவியாக இருப்போம்.  இதன் ஆசிரியர், வாசகர் இருவரும் ஒத்துழைத்து உதவிசெய்து மகிழ்ச்சியுற வேண்டும். 



ப்ரசாத் யாசனா - பிரசாதம் கோரல்

கீழ்கண்ட பிரசாதம் அல்லது உதவிகோரிப் பிரார்த்தித்து இவ்வத்தியாயத்தை முடிக்கிறோம். 

வாசகரும், பக்தர்களும் சாயியின் பாதகமலங்களை சர்வ பக்தி பூர்வமாக நினைக்கட்டும்.  சாயியின் உருவம் அவர்கள் கண்களில் நிலைக்கட்டும்.  அவர்கள் சாயிபாபாவை எல்லா உயிர்களிலும் காணட்டும்.


ததாஸ்து - அப்படியே நடக்கட்டும் 

ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்


Thursday, 24 January 2013

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 50

•   காகா சாஹேப் தீஷித்
•   ஸ்ரீ தேம்பே ஸ்வாமி
•   பாலாராம் துரந்தர்
    ஆகியோரின் கதைகள்


சத்சரிதம் மூலநூலில் ஐம்பதாவது அத்தியாயத்தின் மையப்பொருள் 39ஆம் அத்தியாயத்தில் உள்ள அதே மையப் பொருளைப் பற்றியது.  ஆதலால் இந்த அத்தியாயத்துடனேயே இணைக்கப்பட்டிருக்கிறது. இப்போது 51வது அத்தியாயம் இங்கே 50ஆம் அத்தியாயமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.  இந்த அத்தியாயம் காகா சாஹேப் தீஷித், ஸ்ரீ தேம்பே ஸ்வாமி, பாலாராம் துரந்தர் ஆகியோரின் கதைகளைக் கூறுகிறது.


முன்னுரை

பக்தர்களின் மூலாதாரமும், சத்குருவும், கீதையை விளக்குபவரும், நமக்கு எல்லா ஆற்றல்களையும் கொடுப்பவருமான சாயிக்கு ஜெயம் உண்டாகட்டும். ஓ! சாயி, எங்களுக்கு அனுகூலம் செய்து ஆசீர்வதியுங்கள். மலயகிரியில் வளரும் சந்தன மரங்கள் உஷ்ணத்தைப் போக்குகின்றன.  மேகங்கள் மழைநீரைப் பொழிந்து மக்களைக் குளிர்வித்து புத்துணர்வூட்டுகின்றன. வசந்தகாலத்தில் மலர்கள் மலர்ந்து அவைகளால் நாம் கடவுளை வழிபட வகை செய்கின்றன.  அது போலவே சாயிபாபாவின் கதைகள் பயில்வோருக்குச் சாந்தியையும், சௌகரியத்தையும் அளிக்க முன்வருகின்றன. பாபாவின் கதைகளை எடுத்துக் கூறுவோர், அதைக் கேட்போர் இருபாலரும் மற்றும் முன்னவர்களின் வாக்கும், பின்னவர்களின் காதுகளும் ஆசீர்வதிக்கப்பட்டுப் புனிதம் அடைகின்றன.

நூற்றுக்கணக்கான பயிற்சிகளையும் செயல்முறைகளையும் நாம் கடைப்பிடித்தும், ஒரு சத்குரு அவர்தம் அருளால் நம்மை ஆசீர்வதித்தாலன்றி, நாம் ஆன்மிக இலட்சியத்தை அடையமாட்டோம்.  இந்த வாக்கிற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் கதையினைக் கேளுங்கள்.



காகா சாஹேப் தீஷித் (1864 - 1926)

ஹரி சீதாராம் என்னும் காகா சாஹேப் தீஷித் 1846ல் வத்நாகர நகர், காண்ட்வாவில் (மத்திய மாகாணம்) பிராமணக் குடும்பத்தில் அவதரித்தார்.  அவர் ஆரம்பக் கல்வி காண்ட்வா, ஹிங்கான்காட் என்னும் ஊர்களிலும், நடுத்தரக் கல்வி நாக்பூரிலும் பயின்றார்.  மேற்படிப்புக்காக பம்பாய் வந்து வில்ஸன் கல்லூரியில் முதலிலும், பின்னர் எல்பின்ஸ்டன் கல்லூரியிலும் பயின்றார்.  1883இல் பட்டம் பெற்ற பிறகு அவர் L.L.B. யிலும் வக்கீல் பரீட்சையிலும் தேறி, அரசு தரப்பு வக்கீல்களின் லிட்டில் & கம்பெனி என்ற நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, சிறிது காலத்திற்குப்பின் தாமே சொந்தமாக வழக்குரை அறிஞர்கள் நிறுவனத்தைத் தொடங்கினார்.

1909ஆம் ஆண்டுக்கு முன்னர் சாயிபாபாவின் பெயர், காகா சாஹேப் தீஷித்துக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் அதற்குப்பின் அவர் பாபாவின் ஒரு பெரும் பக்தராக ஆனார். லோனாவாலாவில் தங்கியிருந்தபோது தனது பழைய நண்பரான நானா சாஹேப் சாந்தோர்கரைச் சந்திக்க நேர்ந்தது.  பல விஷயங்களைப் பற்றிப் பேசுவதில் இருவரும் சிறிதுநேரத்தைச் செலவழித்தனர்.  காகா சாஹேப், தாம் லண்டனில் ஒரு டிரெயினில் போய்க்கொண்டிருக்கும்போது எங்ஙனம் ஒரு விபத்து நேரிட்டு தனது பாதம் நழுவிக் காயமடைந்தார் என்று அவருக்கு விளக்கினார். நூற்றுக்கணக்கான சிகிச்சைகள் செய்தும் எதுவும் அவருக்குப் பலனை அளிக்கவில்லை.

 நானா சாஹேப் அவரிடம் அவர்தம் காலின் ஊனத்தையும், வழியையும் நீக்கிக்கொள்ள விரும்பினால் தனது சத்குரு சாயிபாபாவிடம் செல்லவேண்டும் என்றார்.  மேலும் சாயிபாபாவைப்பற்றிய முழு விபரத்தையும் அவர் காகாவுக்குக் கொடுத்து சாயிபாபாவின் மஹாவாக்கியமான "எனது மக்களை நெடுந்தொலைவிலிருந்தும், ஏழ்கடலுக்கு அப்பாலிருந்தும் கூட குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போன்று இழுக்கிறேன்" என்பதைக் கூறினார்.

பாபாவின் ஆளாயில்லாவிட்டால் அவர் பாபாவால் கவரப்படமாட்டார் என்பதையும், தரிசனம் அளிக்கப்படமாட்டார் என்பதையும் அவர் தெளிவாக்கினார். இவைகளையெல்லாம் கேட்க காகா சாஹேபுக்கு மகிழ்வுண்டாயிற்று.  தாம் பாபாவிடம் போவதாகவும், அவரைத் தரிசித்துப் பிரார்த்தித்து கால் ஊனத்தை அவ்வளவாக குணமாக்காவிடினும் ஊனமான ஒட்டித்திரியும் மனத்தை ஒழுங்காக குணப்படுத்தி தமக்கு எல்லையற்ற பேரின்பத்தை நல்கும்படியும் வேண்டிக்கொள்ளப் போவதாகவும் கூறினார்.

காகா சாஹேப் தீஷித் சில நாட்களுக்குப் பிறகு பம்பாய் கீழ் சட்டசபையில் தமக்கு ஒரு இடம் கிடைப்பதற்காக, ஓட்டுக்கள் பெறும் நோக்குடன் அஹமத்நகர் சென்று சர்தார் காகா சாஹேப் மிரீகருடன் தங்கினார்.  காகா சாஹேப் மிரீகருடைய புதல்வரான பாலா சாஹேப் மிரீகர் என்னும் கோபர்காவனின் மம்லதார், அச்சமயத்தில் அஹமத்நகருக்கு அவ்விடத்தில் நடைபெற்ற குதிரைக் கண்காட்சியைக் காணும்பொருட்டு வந்தார்.  தேர்தல் வேலை முடிந்ததும் காகா சாஹேப் தீஷித் ஷீர்டி செல்ல விரும்பினார். தந்தையும், மகனுமாகிய இரு மிரீகர்களும், அவருடன் அனுப்புவதற்கு ஒரு தகுதியான, ஒழுங்கான வழிகாட்டியாக யாரை அனுப்பலாம் என்று தங்கள் இல்லத்தில் யோசித்துக்கொண்டிருந்தனர்.

ஷீர்டியில் சாயிபாபா அவர்களின் வரவேற்புக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்.  ஷாமாவுக்கு அவரின் மாமனாரிடமிருந்து ஷாமாவின் மாமியார் தீவிரமாகக் காய்ச்சலாக இருப்பதையும், ஷாமா தனது மனைவியுடன் அவளைக் காண அஹமத்நகர் வரவேண்டுமென்றும் ஒரு தந்தி வந்தது.  ஷாமா பாபாவின் அனுமதியுடன் அங்கு வந்து தனது மாமியார் முன்னைவிட இப்போது நலமாகி வருவதைக் கண்டார்.  நானா சாஹேப் பான்சேயும், அப்பா சாஹேப் கத்ரேயும் அவர்கள் குதிரைக் கண்காட்சிக்குப் போகும்வழியில் ஷாமாவைக் கண்டு, அவரை மிரீகரின் வீட்டுக்குச் சென்று காகா சாஹேப் தீஷித்தைப் பார்த்து ஷீர்டிக்கு அவரையும் உடனழைத்துச் செல்லும்படி கூறினார்கள்.  காகா சாஹேப் தீஷித்துக்கும், மிரீகர்களுக்கும் கூட ஷாமாவின் வருகை தெரிவிக்கப்பட்டது.  மாலையில் ஷாமா மிரீகர்களிடம் வந்தார்.  அவரை அவர்கள் காகா சாஹேப் தீஷித்துக்கு அறிமுகப்படுத்தினர்.  

ஷாமா, காகா சாஹேப் தீஷித்துடன் இரவு 10 மணி ரயில் வண்டியில் கோபர்காவனுக்குச் செல்வதென ஏற்பாடு செய்யப்பட்டது.  இது முடிவானதும் ஒரு விசித்திர நிகழ்ச்சி நடைபெற்றது.  பாலா சாஹேப் மிரீகர் பாபாவின் படத்தின்மீது இருந்த திரையை அகற்றிவிட்டு அதை காகா சாஹேப் தீஷித்துக்குக் காண்பித்தார்.  யாரைப் பார்க்க ஷீர்டிக்குப் போகப் போகிறாரோ அவர் அவ்விடத்திலேயே தமது சித்திர ரூபத்தில் வரவேற்க இருந்ததைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார்.  அவர் மிகவும் மனமுருகி படத்தின்முன் வீழ்ந்துபணிந்தார்.  அப்படம் மேகாவுடையது.  அதன்மேல் உள்ள கண்ணாடி உடைந்துவிட்டதால், பழுதுபார்க்க அது மிரீகர்களிடம் அனுப்பபட்டிருந்தது.  தேவையானபடி பழுது பார்க்கப்பட்டு விட்டபடியால் படத்தை இப்போது ஷாமாவிடமும், காகா சாஹேபுடனும் அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.

பத்து மணிக்கு முன்னரே அவர்கள் ரயில் நிலையத்துக்குச் சென்று நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டனர்.  ஆனால் வண்டி வந்ததும் இரண்டாம் வகுப்பு மிகவும் கூட்டமாக இருப்பதையும், அவர்களுக்கு இடமில்லாதிருப்பதையும் அறிந்தனர்.  அதிர்ஷ்டவசமாக அந்த வண்டியின் கார்டு, காகா சாஹேபின் நண்பராக இருந்தார்.  அவர்களை முதல் வகுப்பில் அமர்த்தினார்.  இவ்வாறாக அவர்கள் சௌக்கியமாகப் பிரயாணம் செய்து கோபர்காவனில் இறங்கினார்கள்.  ஷீர்டிக்குச் செல்ல நானா சாஹேப் சாந்தோர்கரும் அங்கு வந்திருப்பதை அவர்கள் கண்டபோது அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

காகா சாஹேபும், நானா சாஹேபும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர்.  பிறகு புனித கோதாவாரியில் நீராடிய பின்னர் அவர்கள் ஷீர்டிக்குப் புறப்பட்டனர்.  அங்கு போய்ச்சேர்ந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றவுடன் காகா சாஹேபின் மனது உருகியது. அவர் கண்கள் குளமாயின. அவர் மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கடிக்கப்பட்டார்.  
பாபா அவரிடம் தாம்கூட அவருக்காகவே காத்துக்கொண்டிருப்பதாகவும், அவரை வரவேற்பதற்காகவே ஷாமாவை முன்னால் அனுப்பியதாகவும் கூறினார்.

பின்னர் காகா சாஹேப் பல சந்தோஷமான வருடங்களை பாபாவின் கூட்டுறவில் கழித்தார்.  ஷீர்டியில் அவர் ஒரு வாதா(சத்திரம்) கட்டினார்.  ஏறக்குறைய அதையே நிரந்தர வாசஸ்தலமாக ஆக்கிக்கொண்டார்.  பாபாவிடமிருந்து அவர் பெற்ற அனுபவங்கள் எண்ணற்றவையாதலால் அவைகளை எல்லாம் கூறுவதற்கு இங்கு இடமில்லை.  இது குறித்து சாயிலீலா சஞ்சிகை (தொகுப்பு 12, எண் 6,7,8,9) 'காகா சாஹேப் தீஷித்" சிறப்புமலரைப் பார்க்குமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஒரே ஒரு உண்மையைக் கூறி இந்த விஷயத்தை முடித்துக் கொள்கிறோம்.  பாபா அவரை "நான் உன்னை புஷ்பக விமானத்தில் எடுத்துச் செல்கிறேன்" என்று கூறியிருந்தார்.  (அதாவது மகிழ்வான மரணத்தை அவருக்குக் கொடுத்தல்) இது உண்மையாயிற்று.  1926ஆம் வருடம் ஜூலை மாதம் 5ஆம் தேதி அவர் ஹேமத்பந்துடன் ரயிலில் செல்லும்போது சாயிபாபாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.  அவர் நினைவிலேயே ஆழ்ந்திருந்தார்.  திடீரெனத் தமது கழுத்தை ஹேமத்பந்தின் தோள்களில் சாய்த்து எவ்வித வலியோ, அசௌகரியமோ இன்றிக் காலமானார்.

ஸ்ரீ தேம்பே ஸ்வாமி

ஞானிகள் ஒருவருக்கொருவர் சகோதர பாசத்துடன் எங்ஙனம் நேசித்துக்கொள்கிறார்கள் என்பதை விளக்கும் அடுத்த கதைக்கு வருவோம்.  ஸ்ரீ வாசுதேவானந்த் சரஸ்வதி என்ற தேம்பே ஸ்வாமி என்பார் ஒருமுறை ஆந்திராவில் கோதாவரிக் கரையிலுள்ள ராஜமஹேந்திரியில் வந்து தங்கியிருந்தார்.  அவர் பக்தியும் வைதீகமும் உடைய ஞானியாகவும், யோகியாகவும் இறைவனாகிய தத்தாத்ரேயரின் பக்தருமாக விளங்கிவந்தார்.  நிஜாம் ராஜ்யத்தைச் சேர்ந்த நாந்தேட் நகரின் வக்கீலான ஸ்ரீ புண்டலிக்ராவ் என்பவர் சில நண்பர்களுடன் அவரைக் காணச் சென்றிருந்தார்.  அவர்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஷீர்டி, சாயிபாபா முதலிய பெயர்கள் தற்செயலாக அப்பேச்சின்போது கூறப்பட்டன.

பாபாவின் பெயரைக் கேட்டதும், ஸ்வாமி கைகளால் வணங்கி ஒரு தேங்காயை எடுத்து அதை புண்டலிக்ராவிடம் கொடுத்து, "என் வணக்கங்களுடன் சகோதரர் சாயியிடம் இதைச் சமர்ப்பித்து விடுங்கள்.  என்னை மறந்துவிடாமல் என்மேல் அன்புடனிருக்கச் சொல்லுங்கள்" என்றார்.  மேலும் "ஸ்வாமிகள் பொதுவாக யாரையும் வணங்குவதில்லை. ஆனால் இந்த விஷயத்தில் இந்த விதி விலக்குச் செய்யப்படவேண்டும்" என்றும் கூறினார்.  புண்டலிக்ராவ் தேங்காயையும், செய்தியையும் பாபாவிடம் எடுத்துச்செல்லச் சம்மதித்தார்.  பாபாவைச் சகோதரன் என்று இந்த ஸ்வாமி அழைப்பது சரியே.  ஏனெனில் அவருடைய வைதீக சம்பிரதாயப்படி அக்னிஹோத்ரம் என்ற புனித நெருப்பை இரவும், பகலும் அவர் காத்துவந்ததைப் போலவே பாபாவும் அக்னிஹோத்ரத்தை அதாவது துனியை மசூதியில் எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருந்தார்.  ஒரு மாதத்திற்குப் பின்னர் புண்டலிக்ராவும் மற்றவர்களும் தேங்காயுடன் ஷீர்டிக்குப் புறப்பட்டு மன்மாடை வந்தடைந்தனர்.  தாகமாக இருந்ததால் ஓர் ஓடைக்குத் தண்ணீர் பருகச் சென்றனர்.  வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கக் கூடாதாகையால் கொஞ்சம் சிவடா என்ற காரம் கலந்த அவலை சிற்றுண்டியாக உட்கொண்டனர்.  அது அதிகக் காரமாக இருந்ததால் யாரோ ஒருவர் தேங்காயை உடைத்து தேங்காய்ப்பூவை அதனுடன் கலந்துவிடலாம் என்று கூறி அதேபோல் செய்தும் விட்டார்.  சிவடாவை அதிகச் சுவையுள்ளதாகவும், நாவுக்கு ருசியுள்ளதாகவும் செய்துகொண்டனர்.  துரதிர்ஷ்டவசமாக அந்தத் தேங்காய் புண்டலிக்ராவிடம் ஒப்படைக்கப்பட்ட தேங்காயாக இருந்தது.

அவர்கள் ஷீர்டியை நெருங்கியதும் புண்டலிக்ராவ், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகிய தேங்காய் உடைக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை வெகுவருத்ததுடன் அறிந்தார்.  பயந்து நடுங்கிக்கொண்டு ஷீர்டிக்கு வந்து சாயிபாபாவைப் பார்த்தார்.  பாபா முன்னமேயே தேம்பே ஸ்வாமி தேங்காய் அனுப்பியுள்ள கம்பியில்லாத் தந்தியின் செய்தியைப் பெற்றுவிட்டார்.
பாபா தாமாகவே தமது சகோதரன் கொடுத்தனுப்பியுள்ள பொருளை முதலில் கொடுக்கும்படி புண்டலிக்ராவிடம் கேட்டார்.  அவர் பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு தமது குற்றத்தையும் கவனமின்மையையும் கூறி, மனம் வருந்தி பாபாவின் மன்னிப்பை வேண்டினார்.  மற்றொரு தேங்காயை அதற்குப் பதிலாகக் கொடுத்துவிடுவதாகக் கூறினார்.  ஆனால் அத்தேங்காய்க்கு இணையாக வேறொன்றை ஈடுசெய்ய முடியாதென்றும், சாதாரணக் காயைக் காட்டிலும் பல மடங்கு அது உயர்ந்ததென்றும் கூறி பாபா அதைப் பெறுவதற்கு மறுத்துவிட்டார்.  மேலும் பாபா கூறினார், "இனிமேல் இவ்விஷயத்தைப்பற்றி நீ கவலைகொள்ளத் தேவையில்லை.  எனது விருப்பத்தின் காரணமாகவே தேங்காய் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டு முடிவில் உடைக்கப்பட்டும் விட்டது.  செயல்களின் கர்த்தாவாக உன்னையே ஏன் நீ ஆக்கிக்கொள்கிறாய்?
நற்கருமங்களையோ அல்லது தீய செயல்களையோ செய்யும் கர்த்தாவாக உன்னை நீயே எண்ணிக்கொள்ளும் உணர்வை அனுமதிக்காதே.  எல்லாவற்றிலும் முழுமையாக அஹங்காரமற்று இரு.  அதனால் உனது ஆன்மிக முன்னேற்றம் துரிதமடையும்" என்றார்.  எத்தகைய அழகிய ஆன்மிக போதனையை இந்நிகழ்ச்சியின் மூலம் பாபா உணர்த்தியிருக்கிறார்!   




பாலாராம் துரந்தர் (1878 - 1925)

பாலாராம் துரந்தர், பம்பாய் சாந்தாகுருசைச் சேர்ந்த பதாரே பிரபு இனத்தைச் சேர்ந்தவர்.  அவர் பம்பாய் ஹைகோர்ட்டின் வக்கீலாகவும், சிறிது காலம் பம்பாய் அரசாங்க சட்டப்பள்ளியின் (Law School) தலைவராகவும் பணியாற்றினார்.  துரந்தர் குடும்பம் முழுவதுமே தெய்வபக்தியும், மத உணர்வும் கொண்டது.  பாலாராம் தனது இனத்தாருக்குச் சேவை செய்தார்.  அதைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதி அதைப் பதிப்பித்தார்.

பின்னர் அவர் ஆன்மிக மத விஷயங்களுக்கு திரும்பினார். கீதையையும், அதற்கான வியாக்கியானமான ஞானேஸ்வரியையும், மற்ற தத்துவ நூல்களையும், நுண்ணியல் கோட்பாட்டு நூல்களையும் ஆழ்ந்து படித்தார். அவர் பண்டரீபுரத்து விட்டோபாவின் பக்தர்.  பாபாவுடன் 1912ல் தொடர்பு கொண்டார்.  அதற்கு ஆறு மாதங்களுக்குமுன் பாபுல்ஜி, வாமன்ராவ் என்ற அவரின் இரு சகோதரர்களும் ஷீர்டிக்கு வந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றனர்.  வீடு திரும்பி அவர்களின் இனிய அனுபவங்களை பாலாராமுக்கும், குடும்பத்தினருக்கும் எடுத்துரைத்தனர்.  அதன் பின்னர் அவர்களெல்லோரும் சாயிபாபாவைத் தரிசிக்கத் தீர்மானித்தார்கள்.

அவர்கள் ஷீரடிக்கு வரும்முன்னரே பாபா வெளிப்படையாக "இன்று எனது தர்பாரைச் சேர்ந்த பெருபாலோர் வருகிறார்கள்" என உரைத்தார்.  துரந்தர் சகோதரர்கள் முன்கூட்டியே செய்தி ஏதும் அனுப்பவில்லையாதலால், மற்றவர்களிடமிருந்து பாபா கூறிய இக்குறிப்பைக் கேட்டு ஆச்சரியமடைந்தனர்.  மற்றவர்கள் எல்லோரும் பாபாவின் முன் வீழ்ந்து வணங்கி அவருடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.  பாபா அவர்களிடம் "நான் முன்னரே குறிப்பிட்ட எனது தர்பார் மக்கள் இவர்களே" எனக்கூறி, துரந்தர் சகோதரர்களிடம் "கடந்த அறுபது தலைமுறைகளாக நாம் ஒருவரோடொருவர் உறவுபூண்டு இருக்கிறோம்" என்றார்.  அச்சகோதரர்கள் எல்லோரும் எளிமையுடனும், பணிவுடனும் உற்றுப் பார்த்தவண்ணம் நின்றிருந்தனர். கண்ணீர், தொண்டை அடைத்தல், மயிர்க்கூச்செறிதல் முதலான எல்லா சத்துவ உணர்வுகளும் அவர்களை உருக்கின.

அவர்களெல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர்.  பின்னர் அவர்கள் தங்களது இருப்பிடத்துக்குச் சென்று உணவு உட்கொண்டு சிறிது களைப்பாறிவிட்டு மீண்டும் மசூதிக்கு வந்தனர்.  பாபாவுக்கு, பாலாராம் அமர்ந்து அவரது கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார்.  சில்லிம் என்ற மட்குழாயில் புகை பிடித்துக்கொண்டிருந்த பாபா, அதை அவரிடம் நீட்டி புகை பிடிக்குமாறு அழைத்தார். புகைபிடித்து வழக்கமில்லை எனினும், பாலாராம் அக்குழாயை வாங்கிக்கொண்டு பெருஞ்சிரமத்துடன் புகைபிடித்துவிட்டு, பக்தியுடன் வணங்கி அதைத் திருப்பி அளித்தார்.  பாலாராமுக்கு இதுவே மிகமிகப் புனிதமான நேரம்.  ஆறு ஆண்டுகளாக அவர் ஆஸ்துமாவால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்.  இப்புகை அவரை முழுவதுமாகக் குணப்படுத்தியதுடன் மீண்டும் அவ்வியாதிக்கு உட்படுத்தவேயில்லை.  ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் மீண்டும் அவருக்கு ஆஸ்துமாவின் தாக்குதல் நேரிட்டது.  இது பாபா மஹாசமாதி அடைந்த அதே நேரமாகும். 

அவர்கள் சென்றிருந்த தினம் வியாழக்கிழமையாதலால் துரந்தர் நண்பர்கள் சாவடி ஊர்வலத்தை அன்று இரவு கண்டுகளிக்கும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தனர்.  சாவடியில் ஆரத்தி நிகழ்ச்சியின்போது பாலாராம் பாபாவின் முகத்தில் பாண்டுரங்கரின் ஜோதியைக் கண்டார்.  மறுநாள் காலை காகட் ஆரத்தியின்போதும் அதே அபூர்வ நிகழ்ச்சியை, அதாவது அவரின் அன்புக்குரிய தெய்வமான  பாண்டுரங்கரின் ஜோதி பாபாவின் முகத்தில் ஒளிர்ந்ததைக் கண்டார்.

 பாலாராம் துரந்தர் மராத்தியில் மகாராஷ்ட்ர ஞானி  துகாராமின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதினார்.  ஆனால், அதன் பதிப்பைக் காண அவர் உயிருடனிருக்கவில்லை. பின்னர் 1928இல் அவரது சகோதரர்களால் பிரசுரிக்கப்பட்டது.  பாலாராமின் வாழ்க்கையைப்பற்றிக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிறுகுறிப்பு அந்நூலின் ஆரம்பத்தில் உள்ளது.  பாலாராமைப் பற்றிய மேற்கூறிய தகவல் அதில் முழுவதுமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
(அந்தப் புத்தகத்தின் 6ம் பக்கத்தில் காண்க)



ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

To download an MP3 version of this chapter please follow below link:
http://rapidshare.com/files/3524550718/Ch.50-Shri%20Sai%20Satcharitra.mp3

To download a PDF version of this chapter please follow below link:
http://rapidshare.com/files/1342439921/ShriSaiSatchritra%20-%20Ch50.pdf
(enhanced for iPad)


Thursday, 17 January 2013

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 49

•   ஹரி கானோபா
•   ஸோமதேவ் ஸ்வாமி
•   நானா சாஹேப் சாந்தோர்கர்
     ஆகியோரின் கதைகள்




முன்னுரை

வேதங்களும், புராணங்களும் பிரம்மத்தையோ, சத்குருவையோ போதுமான அளவில் விவரிக்க இயலாது.  அவ்வாறெனின் ஏதுமறியாதவர்களாகிய நாம் எங்ஙனம் நமது சத்குரு, சாயிபாபாவை விவரிக்க இயலும்?  இவ்விஷயத்தில் அமைதியாக இருப்பதே சிறந்தது என்று எண்ணுகிறோம்.  உண்மையில் மௌனவிரதம் அனுஷ்டிப்பதே, சத்குருவைப் புகழ்வதற்கு சிறப்பான வழியாகும்.  ஆனால் சாயிபாபாவினது நல்ல பண்புகள் மௌன விரதத்தை மறக்கச்செய்து நம்மைப் பேசுமாறு ஊக்குவிக்கின்றன.  நண்பர்கள், உறவினர்கள் இவர்களும் நம்மோடு இருந்து உண்ணவில்லையாயின் நல்ல ருசியான உணவுகூட நமக்குச் சுவையாக இருப்பதில்லை.  ஆனால் அவர்கள் நம்முடன் சேர்ந்து உண்பார்களானால், அவைகள் இன்னும் அதிக சுவையைப் பெறுகின்றன.  சாயி லீலைகள் என்ற ரூபத்தில் உள்ள அமிர்தமான சாயி லீலாம்ருதமும் இது போன்றதே.  அமிர்தத்தை நாம் மட்டுமே தனியாக உண்ணமுடியாது.  நண்பர்களும், சகோதரர்களும் நம்முடன் சேரவேண்டும்.  எவ்வளவு அதிகமோ அவ்வளவு நலம்.

இக்கதைகளுக்குத் தெய்வீக உணர்ச்சியூட்டுவதும் தம் விருப்பப்படியே அவைகளை எழுதுமாறு செய்வதும் சாயிபாபா அவர்களேயாகும்.  பரிபூரண சரணாகதியடைவதும், தியானிப்பதும் மட்டுமே நமது கடமை.  க்ஷேத்ராடனம், பிரதிக்ஞை, தியாகம், தர்மம் இவை எல்லாவற்றையும்விட தவமிருத்தல் நல்லது.  தவமிருத்தலைக் காட்டிலும் ஹரியைத் தொழுவது நலம்.  இவையெல்லாவற்றையும் விட சத்குருவைத் தியானிப்பது மிகச்சிறந்தது.  

ஆகவே சாயியின் நாமத்தை ஸ்மரணம் செய்து அவர் மொழிகளை மனதில் நினைத்து, அவர் உருவைத் தியானித்து, இதயபூர்வமாக அவரிடம் அன்பு செலுத்தி, அவருக்காகவே எல்லாச் செயல்களையும் செய்வோமாக.  சம்சார பந்தத்திலிருந்து விடுபட இதைவிட வேறு சிறந்த வழியில்லை.  மேலே கூறியவாறு நமது கடமையைச் செய்தோமானால் சாயி நமது விடுதலைக்கு உதவக் கட்டுப்பட்டவர்.  இப்போது இந்த அத்தியாயத்தின் கதைக்கு வருவோம்.



ஹரி கானோபா

பம்பாயைச் சேர்ந்த ஹரி கானோபா என்பவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மூலம் பாபாவின் பல லீலைகளைக் கேள்வியுற்றார்.  அவர் ஒரு சந்தேகப் பிராணியாக இருந்ததால் அவற்றை நம்பவில்லை.  அவர் பாபாவைத் தாமே பரீட்சிக்க விரும்பினார்.  எனவே சில பம்பாய் நண்பர்களுடன் ஷீர்டிக்கு வந்தார்.  ஜரிகைத் தலைப்பாகையும், காலில் இரண்டு புதிய காலணிகளையும் அணிந்திருந்தார்.  பாபாவைத் தொலைவிலிருந்து கண்ட அவர், அவரிடம் சென்று வீழ்ந்துபணிய எண்ணினார்.  அவரது புதிய காலணிகளை என்ன செய்வதென்று தெரியவில்லை.  எனினும் திறந்தவெளியில் ஒரு மூலைக்குச் சென்று அவைகளை வைத்துவிட்டு, மசூதிக்குள் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்றார்.

பாபாவைப் பக்தியுடன் வணங்கி உதி, பிரசாதம் இவைகளைப் பெற்றுக்கொண்டு திரும்பினார்.  அங்கு மூலையில் வைத்திருந்த காலணிகள் மறைந்து போயிருந்ததை அவர் கண்டார்.  அவைகளுக்காக வீணாகத் தேடியபின், தான் இருந்த இடத்துக்கு மிகவும் மனமுடைந்துபோய்த் திரும்பினார்.  குளித்து வழிபட்டு நைவேத்தியம் சமர்ப்பித்துவிட்டு, உணவுக்காக அமர்ந்தார்.  ஆயினும் அவ்வளவு நேரமும் காலணிகளைத் தவிர வேறொன்றையும் பற்றி அவர் நினைக்கவில்லை.

உணவை முடித்துக்கொண்டபின், கை கழுவுவதற்காக வெளியே வந்தபோது ஒரு மராத்தியப் பையன் அவரை நோக்கி வந்துகொண்டிருந்தான்.  அவனது கையில் ஒரு கோல் இருந்தது.  அதன் நுனியில் ஒரு ஜோடி புதிய காலணிகள் தொங்கவிடப்பட்டிருந்தன.  கை கழுவ வெளியேவந்த நண்பர்களிடம் பாபா தன்னை இக்கோலுடன் அனுப்பியிருப்பதாகவும், 'ஹரிகா பேடா ஜரிகா ஃபேடா!' ('க' என்பவரின் புதல்வரான ஹரியே! ஜரிகைத் தலைப்பாகைக்காரரே!) என்று கூவிக்கொண்டே வீதிகளில் செல்லும்படி சொல்லியிருப்பதாகவும், யாராவது இக்காலணிகளைக் கேட்டால் அவரது பெயர் ஹரிதானா என்றும் அவர் 'க'வின் (அதாவது கானோபா) புதல்வர்தானா என்றும், அவர் ஜரிகை தலைப்பாகை அணிபவர்தானா என்றும் தன்னை உறுதிப்படுத்திக்கொண்ட பின்பு, அதை அவரிடம் கொடுக்கும்படி கூறியிருப்பதாகவும் சொன்னான்.  இதைக்கேட்டு ஹரி கானோபா மிகவும் மகிழ்வும், ஆச்சரியமும் அடைந்தார்.  அவர் பையனிடம் சென்று காலணிகள் தம்முடையவையே என்றார்.  தனது பெயர் ஹரி என்றும், தாம் 'க'வின் (கானோபா) புதல்வன் என்றும் கூறி ஜரிகைத் தலைப்பாகையையும் காண்பித்தார்.

பையன் திருப்தியடைந்து அவரிடம் காலணிகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.  தனது ஜரிகைத் தலைப்பாகை வெளியில் அனைவருக்கும் தெரியுமாறு இருந்தது.  எனவே பாபாவும் அதைக் கண்டு இருக்கலாம்.  ஆனால் தன் பெயர் ஹரி என்பதும், கானோபாவின் மகன் என்றும், தான் முதல் முறையாக ஷீர்டிக்கு வந்திருப்பதால் பாபா எங்ஙனம் அறிந்திருக்கக்கூடும் என மனதில் நினைத்து வியந்தார்.  வேறு எவ்வித குறிக்கோளும் இன்றி பாபாவைச் சோதிக்கும் ஒரே நோக்கத்துடன் மட்டுமே அவர் ஷீர்டிக்கு வந்தார்.  இந்நிகழ்ச்சியால் பாபா ஒரு மிகப்பெரும் சத்புருஷர் என்று அவர் அறிந்துகொண்டார்.  அவர் விரும்பியதை அறிந்துகொண்டு திருப்தியுடன் வீடு திரும்பினார்.



சோமதேவ் ஸ்வாமி

பாபாவை சோதிக்கவந்த மற்றொரு மனிதரின் கதையை இப்போது கேளுங்கள்.  காகா சாஹேபின் சகோதரரான பாயிஜி நாக்பூரில் தங்கியிருந்தார்.  1906ம் ஆண்டில் இமயமலை சென்றிருந்தபோது கங்கோத்ரி பள்ளத்தாக்கில் உள்ள உத்தர் காசியில், ஹரித்வாரைச் சேர்ந்த சோமதேவ் ஸ்வாமி என்பாருடன் அறிமுகமானார்.  இருவரும் ஒருவர் மற்றவரின் பெயரை தங்கள் நாட்குறிப்பேட்டில் எழுதிக்கொண்டனர்.  ஐந்தாண்டுகளுக்குப்பின் சோமதேவ் ஸ்வாமி, பாயிஜியின் விருந்தினராக நாக்பூருக்கு வந்தார்.  பாபாவின் லீலைகளைக் கேட்டு மகிழ்வெய்தினார்.

ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் காண அவருக்கு ஒரு பெரும் ஆசை எழுந்தது.  பாயிஜியிடம் இருந்து அறிமுகக் கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு, ஷீர்டிக்குக் கிளம்பினார்.  மன்மாட், கோபர்காவன் இவைகளைக் கடந்ததும், ஒரு வண்டியமர்த்திக்கொண்டு ஷீர்டிக்குப் போனார்.  ஷீர்டிக்கு அருகில் வந்ததும் மசூதியில், இரண்டு உயரமான கொடிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டார்.  வெவ்வேறு ஞானிகளிடம் வெவ்வேறு விதமான குணாதிசயங்களும், வெவ்வேறு வாழ்க்கை முறைகளும், வெவ்வேறு புறப்பரிவாரங்களும் இருப்பதை நாம் பொதுவாகக் காண்கிறோம்.  ஆயின் இப்புறச் சின்னங்கள் அந்த ஞானிகளின் தகுதிகளை எடை போடுவதற்கு உகந்த அளவுகோல் ஆகா.  ஆனால் சோமதேவ் ஸ்வாமியின் விஷயத்தில், அது வேறு விதமாய் இருந்தது.  கொடிகள் பறப்பதை அவர் கண்டவுடனே, "ஞானி ஒருவர், கொடிகள் மீது ஏன் ஆர்வம் வைக்கவேண்டும்?  இது துறவையா உணர்த்துகிறது?  இது அந்த ஞானி புகழுக்காக ஏங்குவதை அல்லவா உணர்த்துகிறது" என எண்ணினார்.

இவ்வாறாக அவர் தமது ஷீர்டி விஜயத்தை ரத்துச் செய்ய விரும்பி, தாம் திரும்பிப் போவதாக கூட வந்த சக பயணிகளிடம் கூறினார்.  அவர்கள் அதற்கு, "பின் இவ்வளவு தூரம் நீங்கள் ஏன் வரவேண்டும்.  கொடியைக் கண்டே தங்கள் மனம் கலக்கமுறும்போது ஷீர்டியில் ரதம், பல்லக்கு, குதிரை மற்றும் பல பரிவாரங்களையெல்லாம் கண்டால் தங்கள் மனம் எவ்வளவு நிலைகுலையும்" என்றார்கள்.  இதைக்கேட்டு ஸ்வாமி மேலும் குழப்பமடைந்தவராக, "குதிரை, பல்லக்கு இன்னோரன்ன படாடோபங்களையுடைய சாதுக்கள் சிலரை மட்டும் நான் கண்டதில்லை, (அனேகரைக் கண்டிருக்கிறேன்)  அத்தகைய சாதுக்களைக் காண்பதைவிட திரும்பிப் போதலே எனக்கு நன்று" என்றுரைத்தார்.  இதைக்கூறிக்கொண்டு அவர் திரும்பிப்போகக் கிளம்பினார்.  உடன் வந்தோர் அங்ஙனம் செய்யவேண்டாம் என்றும், தொடர்ந்து போகலாம் என்றும் வற்புறுத்தினர்.

பாபாவை இங்ஙனம் குறுகிய மனமுள்ளவராக சிந்திப்பதை நிறுத்தும்படியும், அந்த சாது (அதாவது பாபா) கொடிகளையோ, பரிவாரங்களையோ, புகழையோ எள்ளளவும் பொருட்படுத்துபவர் அல்ல என்று கூறினர்.  அன்பாலும், பக்தியாலும் அவரது அடியவர்களும், பக்தர்களுமே இவற்றையெல்லாம் ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் கூறினர்.  முடிவாகப் பயணத்தைத் தொடரும்படி அவரை இணங்கவைத்து ஷீர்டிக்குச் சென்று பாபாவைத் தரிசிக்கச் செய்தனர்.  பாபாவை முற்றத்திலிருந்து கண்டவுடன் அகமுருகி கண்களில் கண்ணீர் மல்க குரல் நெகிழ அவரது கெடுதலான எண்ணங்களெல்லாம் அவரைவிட்டு அகன்று போயின.  "எங்கே நமது மனம் மிகமிக மகிழ்ந்து களிப்படைகிறதோ, அதுவே நமது இருப்பிடமும், களைப்பாறும் இடமுமாகும்", என்ற அவரது குருவின் மொழிகளை நினைவுகூர்ந்தார்.  பாபாவின் பாதத் தூளிகளில் அவர் புரள விரும்பி பாபாவை நெருங்கியபோது, பாபா கடுங்கோபமடைந்து "எங்களுடைய டம்பமெல்லாம் எங்களுடம் இருக்கட்டும்.  நீ திரும்ப உன் வீட்டிற்குப் போ.  இம்மசூதிக்குள் வந்தாயோ, ஜாக்கிரதை.  மசூதிமேல் கொடி பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் ஒருவரின் தரிசனத்தை ஏன் காணவேண்டும்?  இது துறவின் அறிகுறியா?  இங்கே கணமேனும் இருக்காதே" என்றார்.  ஸ்வாமி ஆச்சரியத்தால் திடுக்கிட்டார்.

 பாபா தமது உள்ளத்தைப் படித்து அதைப் பேசினார் என உணர்ந்தார்.  எத்தகைய நிறைபேரறிவுடையவர் அவர்!  தாம் ஞாமற்றவர் என்றும், பாபா புனிதமான உயர்ந்தோர் என்றும் அவர் உணர்ந்தார்.  சிலரை பாபா அரவணைப்பதையும், வேறு ஒருவரைக் கையால் தொடுவதையும், மற்றவர்களைத் தேற்றுவதையும், சிலரை நோக்கிப் புன்னகை செய்வதையும், சிலருக்கு உதிப்பிரசாதம் அளிப்பதையும், இவ்வாறாக அனைவரையும் மகிழ்வூட்டி, திருப்திப்படுத்திக் கொண்டிருப்பதையும் கண்டார்.  தான் மட்டும் ஏன் அவ்வளவு கடுமையாக நடத்தப்பட வேண்டும்?  அதைப்பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்து, தமது அந்தரங்க எண்ணமே பாபாவின் நடத்தையில் எதிரொலிப்பதை உணர்ந்து இதையே ஒரு பாடமெனக் கருதி முன்னேறவேண்டுமென நினைத்தார்.  பாபாவின் கோபம் மறைமுகமான ஆசீர்வாதமே.  பிற்காலத்தில் பாபாவின் மீது அவருக்குள்ள நம்பிக்கை, உறுதிப்படுத்தப்பட்டு பாபாவின் ஒரு முற்றிலும் பற்றுறுதியுள்ள அடியவராக ஆனார் என்று சொல்லத் தேவையில்லை.  

 

நானா சாஹேப் சாந்தோர்கர்

நானா சாஹேப் சாந்தோர்கரின் கதையுடன் ஹேமத்பந்த் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.  ஒருமுறை மசூதியில் நானா சாஹேப், மஹல்ஸாபதி மற்றுமுள்ளோருடன் அமர்ந்திருக்கையில், பீஜப்பூரிலிருந்து ஒரு முஹமதிய கனவான் தனது குடும்பத்துடன் பாபாவைக் காணவந்தார்.  கோஷா(பர்தா) அணிந்த பெண்மணிகளைக் கண்ட நானா, அப்பால் போய்விட விரும்பினார்.  ஆனால் பாபா அவர் அங்ஙனம் செய்வதைத் தடுத்துவிட்டார்.  பெண்மணிகள் வந்து பாபாவைத் தரிசனம் செய்தனர்.  பாபாவின் பாதங்களை வணங்குமுகமாக அவர்களில் ஒருத்தி முகத்திரையை எடுத்து வணங்கிவிட்டுப் பிறகு மூடும்போது, நானா சாஹேப் அவளது முகத்தைக்கண்டு அவளின் அபூர்வ அழகின் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டவராய், அவளது முகத்தை மீண்டும் காண விரும்பினார்.  அப்பெண்மணி அந்த இடத்தைவிட்டு அகன்றதும், நானாவின் குழப்பத்தை அறிந்துகொண்டு, பாபா அவரை நோக்கி,


"நானா நீ ஏன் வீணாகக் கலங்குகிறாய்.  புலன்கள் அவைகளுக்கிடப்பட்ட பணியை அல்லது கடமையைச் செய்யட்டும்.  நாம் அவைகளின் வேலையில் குறுக்கிட வேண்டாம்.  கடவுள் இவ்வழகிய உலகத்தைப் படைத்துள்ளார்.  அதன் அழகைப் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும்.  மனம் மெதுவாகப் படிப்படியாக அமைதியுறும்.  முன்கதவு திறந்திருக்கும்போது, பின்வழியாக ஏன் செல்ல வேண்டும்.  உள்ளம் தூய்மையாக இருக்குமிடத்து எவ்வகையிலும் எவ்விதக் கஷ்டமும் இல்லை.  நம்மிடத்தே எவ்விதக் கெட்ட எண்ணமும் இல்லையென்றால், ஏன் ஒருவர் மற்றொருவருக்குப் பயப்படவேண்டும்?  கண்கள் தம் வேலையைச் செய்யலாம், நீ ஏன் வெட்கப்பட்டுத் தடுமாறுகிறாய்?" என்றார்.

ஷாமா அவ்விடத்தில் இருந்தார்.  பாபா கூறியதன் பொருளை அவரால் உணர இயலவில்லை.  எனவே வீடு திரும்பும் வழியில் இதை நானாவிடம் கேட்டார்.  நானா, அழகிய பெண்மணியைக் கண்டதும், தாம் மனக்கலக்கமடைந்ததையும், பாபா அதை எங்ஙனம் அறிந்து அதைப்பற்றி அறிவுரை கூறினார் என்பதையும் கூறினார்.  பாபாவின் பொருளை நானா இவ்வாறாக விளக்கினார்.  "அதாவது நமது மனம் இயற்கையாகவே சலனமுள்ளது.  அதைத் தான்தோன்றித்தனமாகப் போக அனுமதிக்கக் கூடாது.  உணர்வுகள் குழப்பமுறலாம்.  ஆயினும் உடம்பு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படவேண்டும்.  பொறுமையை இழக்க அனுமதிக்கக் கூடாது.

விஷயங்களின் பின்னால் உணர்வுகள் தம் குறிக்கோளை நோக்கி ஓடுகின்றன.  ஆனால் அவைகளை நாம் தொடர்ந்து சென்று அவைகளின் குறிக்கோளுக்காக ஏங்கக்கூடாது.  மெதுவான படிப்படியான பயிற்சியினால் சலனங்களை வெற்றிகாண இயலும்.  உணர்ச்சிகளால் நாம் இயக்கப்படக்கூடாது.  ஆயினும் அவைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்த இயலாது.  தக்க முறையிலும், ஒழுங்காக சந்தர்ப்பத்துக்குத் தேவையானபடியும் அவைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.  அழகு என்பது பார்க்கப்படவேண்டிய ஒன்றே.  பொருட்களின் அழகை நாம் பயமின்றிக் காணவேண்டும்.  வெட்கத்துக்கோ, பயத்துக்கோ அதில் இடமில்லை.  கெட்ட எண்ணங்களை மட்டும் நம் மனதில் அனுமதிக்கக் கூடாது.  பற்றில்லாத மனதுடனே கடவுளின் அழகான படைப்புக்களைக் கவனிக்கவேண்டும்.  இவ்வாறாக உணர்வுகள் எளிதாகவும், இயற்கையாகவும் கட்டுக்குள் கொணரப்பட்டுவிடும்.  பொருட்களை அனுபவிப்பதில்கூட நீங்கள் இறைவனைப்பற்றி ஞாபகப்படுத்தப்டுவீர்கள்.

வெளி உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்து, மனம் இலட்சியத்தை ஓடித்தொடர அனுமதிக்கப்பட்டு அவைகள்பால் பற்றுக்கொண்டிருப்பின் ஜனன மரணச் சுழல் முடிவுறாது.  புலன் உணர்வுகளின் விஷயங்கள் தீமையானது.  விவேகம் என்னும் சாரதியைக்கொண்டு நாம் மனதைக் கட்டுப்படுத்தி உணர்வுகளைத் தாறுமாறாக அலையவிடாமல் இருப்போம்.  அத்தகையதொரு சாரதியுடன் நம் முடிவான இருப்பிடமும், நமது உண்மையான வீடுமாகிய, எங்கு சென்றால் மறுபிறவி இல்லையோ அந்தத் திருமாலின் திருவடிகளை எய்துவோம்" என்றார்.  

ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

Thursday, 10 January 2013

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 48

•   அடியவர்களின் அல்லலை அகற்றுதல்
•   ஷேவடே
•   சபட்ணேகர் ஆகியோரின் கதைகள்


இவ்வத்தியாயத் தொடக்கத்தில் சாயிபாபா குருவா, சத்குருவா என்று யாரோ ஒருவர் ஹேமத்பந்த்தைக் கேட்டார்.  அக்கேள்விக்கு விடையளிக்குமுகமாக ஹேமத்பந்த் சத்குருவின் லட்சணங்களையும், அடையாளங்களையும் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.



சத்குருவின் லட்சணங்கள்

வேதம், வேதாந்தம் அல்லது சாஸ்திரங்கள் ஆறையும் நமக்குக் கற்பிப்பவர் அல்லது மூச்சைக் கட்டுப்படுத்துபவர், அன்றித் தமது உடம்பில் முத்திரைச் சின்னகளைப் (விஷ்ணுவின் சங்கு சக்கரச் சின்னங்களைப்) பொறித்துக்கொண்டிருப்பவர் அல்லது பிரம்மத்தைப் பற்றி இனிமையாக உபதேசம் செய்பவர், தமது சீடர்களுக்குச் சில மந்திரங்களை உபதேசித்து அதைக் குறிப்பிட்ட முறை ஜெபிக்கச் சொல்லி, குறிப்பிட்ட நிச்சயமான காலத்தில் அதனால் ஏற்படும் பலனைக் காட்டஇயலாதவர், முடிவான தத்துவங்களைத் தனது வார்த்தை ஞானத்தால் அழகாக விளக்கினாலும் தனக்கு எவ்வித சொந்த அனுபவமோ, ஆன்ம உணர்வோ இல்லாதவர் எவரோ ஆகிய இவரெல்லாம் சத்குரு அல்ல.

தனது உபன்யாசத்தால் இகபர இன்பங்களின் மீது வெறுப்புத் தோன்றச்செய்து, ஆன்ம உணர்வில் ஒரு சுவையை அளிப்பவரும், ஆன்ம உணர்வைப்பற்றிய ஏட்டுக்கல்வி, நடைமுறை ஞானம் இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்றவரும் 'சத்குரு' என்று அழைக்கபபடுவற்குத் தகுதி உடையவராகிறார்.  ஆன்ம உணர்வில் குறைபாடுடைய ஒருவர் அஃதை எங்ஙனம் பிறருக்கு அளிக்கஇயலும்?  சத்குரு என்பார் கனவிலும்கூடத் தமது அடியவர்களிடம் இருந்து எவ்விதச் சேவையையோ, இலாபத்தையோ எதிர்பார்ப்பதில்லை.  மாறாக அவர்களுக்குச் சேவைசெய்ய விரும்புகிறார்.  தாம் உயர்ந்தவர், தமது அடியவர் தாழ்ந்தவர் என்றும் அவர் எண்ணுவதில்லை.  அவரைத் தமது புதல்வன் என்று கருதுவதோடு மட்டுமல்லாது தமக்குச் சமமானவன் அல்லது பிரம்மத்துக்குச் சமமானவன்  என்று கருதுகிறார்.  சத்குருவின் முக்கியமான பண்பு அவர் அமைதியின் உறைவிடம் என்பதே.  அவர் அமைதியற்றோ, மனவுளைவுடனோ இருந்ததே இல்லை.  கற்றோன் என்ற கர்வம், அவருக்குக் கிடையாது.  ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் யாவரும் அவருக்கு ஒன்றே.

முந்தைய பிறப்புக்களில் செய்த நற்கருமங்களின் குவியலின் விளைவால் சாயிபாபாவைப் போன்ற சத்குருவைச் சந்தித்து தாம் அவரால்  ஆசீர்வதிக்கப்படும் நல்லதிர்ஷ்டத்தைப் பெற்றதாக ஹேமத்பந்த் நினைக்கிறார்.  தம்முடைய இளமையான காலத்தில்கூட பாபா எதையும் சேகரிக்கவில்லை.  (சில்லிம் என்ற புகைக்குழாய் மட்டும் இருக்கலாம்)  அவருக்குக் குடும்பம் ஏதுமில்லை, நண்பர் யாருமில்லை, வீடு ஏதும் இல்லை, எவ்வித ஆதாரமும் இல்லை, பதினெட்டாம் வயதிலிருந்தே அவரின் மனக்கட்டுப்பாடு முழுமையானதும், அசாதாரணமானதாகவும் இருந்தது.  அப்போது அவர் தனியான இடத்தில் பயமற்று வாழ்ந்தார்.  எப்போதும் அவர் ஆன்ம உணர்விலேயே மூழ்கி இருந்தார்.  தமது அடியவர்களின் தூய அன்பைக்கண்டு அவர்களின் விருப்பப்படியே, அவர் எப்போதும் நடந்தார்.  எனவே ஒருவகையில் அவர்கள்பால் அவர் சார்ந்தவரானார்.  பூதவுடலில் வாழ்ந்தபோது தமது அடியவர்களுக்கு என்னென்ன அனுபவங்களை அளித்து வந்தாரோ, அதே அனுபவங்களை அவரை நேசிப்பவர்களுக்கு மஹாசமாதியான பின்பு இன்றும் அளித்து வருகிறார்.

பக்தி, நம்பிக்கை என்னும் அகவிளக்கை அவர்கள் ஏற்றி, அன்பெனும் திரியை ஏற்றவேண்டும்.  அது செய்யப்படும்போது, ஞானம் (ஆன்ம உணர்வு) என்னும் ஜோதி சுடர்விட்டு அதிகமாகப் பிரகாசிக்கும்.  அன்பில்லாத வெறும் ஞானம் வறண்டது, எவரும் அத்தகைய ஞானத்தை விரும்புவதில்லை.  அன்பின்றி திருப்தி ஏற்படுவதில்லை.  எனவே நாம் தடையற்ற, எல்லையற்ற, அன்பு உடையவர்களாக வேண்டும்.  அன்பை எங்ஙனம் நாம் புகழ்வது?  அதன்முன் எதுவும் முக்கியமற்றுவிடுகிறது?  அன்பின்றி நமது கல்வி, கேள்வி, படிப்பு யாவும் பயனற்றுவிடுகிறது.  அன்பு உதயமாகும்போது பக்தி, பற்றின்மை, அமைதி, விடுதலை இவையாவும் அவைகளின் அனைத்துச் செல்வக் களஞ்சியங்களுடன் வருகின்றன.  அன்பை அதையடைய ஊக்கத்துடன் விரும்பினாலன்றி, எதைக்கொடுத்தும் பெற இயலாது.  எனவே எங்கே உண்மையான ஆர்வமும், ஏக்கமும் இருக்கின்றதோ, கடவுள் தம்மைத்தாமே அவ்விடத்தில் ப்ரதிஷ்டை செய்துகொள்கிறார்.  அது அன்பை உள்ளடக்கி விடுதலைக்கு ஒரு வழியாகிறது.

இந்த அத்தியாயத்தின் முக்கிய கதைக்கு இப்போது திரும்புவோம்.  ஒரு ஞானியிடம் ஒரு மனிதன் தூய உள்ளத்துடன் அல்லது அவ்விதமின்றி (கள்ள உள்ளத்துடன்) சென்று அவரின் காலைப் பிடிக்கட்டும்.  முடிவாக அவன் காப்பாற்றப்படுவது உறதி.  இது பின்வரும் கதைகளால் விளக்கப்படுகிறது.



ஷேவடே

சோலாப்பூர் ஜில்லா, அக்கல்கோட்டைச் சேர்ந்த சபட்ணேகர் வக்கீலுக்குப் படித்துக் கொண்டிருந்தார்.  அவருடன் படிக்கும் ஷேவடே அவரைச் சந்தித்தார்.  மற்றும் பல மாணவர்களும் ஒன்றாகக் கூடித் தாங்கள் படிக்கும் பாடங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.  அவர்களுக்குள் ஏற்பட்ட வினா விடைகளிலிருந்து ஷேவடே என்பவர்தான் எல்லோரைக்காட்டிலும் பரீட்சைக்குத் தயாரற்ற நிலையிலிருந்தார் என்று தெரியவந்தது.  எனவே, மற்றவர்கள் அவரைக் கேலி செய்தனர்.  தாம் சரியாகப் படிக்கவில்லையாயினும் தமது சாயிபாபா இருப்பதால் தம்மை வெற்றியடையச் செய்வார் என்று தான் உறுதியாக நம்புவதாகக் கூறினார்.

சபட்ணேகர் இக்கூற்றால் ஆச்சரியமடைந்தார்.  அவர் ஷேவடேயைத் தனியே அழைத்துக்கொண்டுபோய் அவர் அவ்வளவு உயர்வுபடக் கூறும் சாயிபாபா என்பவர் யார் என்று கேட்டார்.  அஹமத்நகர் ஜில்லா ஷீர்டியில் உள்ள மசூதியில் பக்கிரி ஒருவர் வாழ்கிறார்.  அவர் மிகப்பெரும் சத்புருஷர்.  மற்ற ஞானிகள் இருக்கலாம், ஆனால் இவர் ஒப்பற்றவர்.  முன்வினையில் பல நற்கருமங்களின் பலன் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தாலன்றி ஒருவரும் அவரைப் பார்க்க முடியாது. 

நான் முழுமையும் அவரை நிச்சயம் நம்புகிறேன்.  அவர் சொல்வது பொய்யாவதில்லை.  அடுத்த ஆண்டு நான் தேறிவிடுவேன் என்று அவர் எனக்கு உறுதிகூறி இருக்கிறார்.  கடைசி வருடப் பரீட்சையையும் அவர்தம் கருணையால் நான் தேறிவிடுவேன் எனக்கூறினார்.  சபட்ணேகர் அவர் நம்பிக்கையைக் கண்டு சிரித்து அவரையும், சாயிபாபாவையும் கேலி செய்தார்.



சபட்ணேகர்

சபட்ணேகர் தமது பரீட்சையில் தேறி அக்கல்கோட்டில் குடியேறி அங்கு வக்கீலாகத் தொழில் நடத்தினார்.  இதற்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகு அதாவது, 1913ல் தொண்டையில் வந்த வியாதி காரணமாக அவரது ஒரே மகனை இழக்கநேரிட்டது.  அது அவர் உள்ளத்தைப் பிளந்தது.  பண்டரீபுரம், கனகாபூர் மற்றும் பல புனித க்ஷேத்திரங்களுக்கு அவர் க்ஷேத்ராடனம் செய்து அமைதியைத் தேடினார்.  அவருக்கு மனஅமைதி கிடைக்கவில்லை.  பின்னர் வேதாந்தம் கற்கத் தொடங்கினார்.  அதுவும் அவருக்குப் பயனளிக்கவில்லை.  இத்தருணத்தில், தமது நண்பரான ஷேவடே பாபாவைப் பற்றிக் கூறியதும் பாபாவின்மேல் அவருக்குள்ள நம்பிக்கையையும் சபட்ணேகர் நினைவு கூர்ந்தார்.  தாமும் ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் காணவேண்டுமென்று அவர் எண்ணினார்.  தம் தம்பி பண்டிட்ராவுடன் அவர் ஷீர்டிக்குச் சென்றார்.  பாபாவைத் தூரத்திலிருந்து கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

அவர் அருகே சென்று வீழ்ந்துபணிந்து, பக்தியுடன் ஒரு தேங்காயை முன்னே வைத்தபோது, "போ! வெளியே" என்று பாபா கூச்சலிட்டார்.  சபட்ணேகர் தலைகுனிந்துகொண்டு பின்னால் நகர்ந்துபோய் வேறுபக்கம் அமர்ந்திருந்தார்.  மேற்கொண்டு என்னசெய்யவேண்டும் என்பதை அவர் யாரிடமாவது கலந்து ஆலோசிக்க விரும்பினார்.  யாரோ பாலா ஷிம்பியின் பெயரைக் குறிப்பிட்டனர்.  சபட்ணேகர் அவரைச் சந்தித்து அவருடைய உதவியை வேண்டினார்.  அவர்கள் பாபாவின் போட்டோக்களை வாங்கிக்கொண்டு அவற்றுடன் மசூதிக்குள் வந்தனர்.  பாலா ஷிம்பி ஒரு போட்டோவை எடுத்து பாபா கையில் கொடுத்து அது யார் போட்டோ என்று கேட்டார்.  பாபா சபட்ணேகரைக் காண்பித்து, இது அவரது காதலன் போட்டோ என்று கூறிவிட்டுச் சிரித்தார்.  எல்லோரும் சிரித்தனர்.  பாலா பாபாவை அச்சிரிப்பின் குறிப்பு என்ன என்று கேட்டுக்கொண்டே சபட்ணேகரை முன்னால் வந்து தரிசனம் செய்துகொள்ளும்படி சமிக்ஞை செய்தார்.

சபட்ணேகர் வீழ்ந்து கும்பிடத் தொடங்குகையில், பாபா மீண்டும் "போ! வெளியே" என்று கூச்சலிட்டார்.  சபட்ணேகருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.  பின்னர், இருவரும் (பாலா, சபட்ணேகர்) கைகோர்த்து பாபாவின்முன் அமர்ந்து பிரார்த்தனை செய்தனர்.  பாபா முடிவாக சபட்ணேகரை உடனே வெளியே போகும்படி கட்டளையிட்டார்.  இருவரும் வருத்தமடைந்து, மனமுடைந்து போயினர்.  பாபாவின் ஆணைக்குக் கீழ்ப்படிய வேண்டுமாதலால் மறுமுறை வரும்போது தரிசனம் தரவேண்டுமென்று, பிரார்த்தனை செய்துகொண்டு சபட்ணேகர்  சோர்ந்த உள்ளத்துடன் வீடு திரும்பினார்.



திருமதி சபட்ணேகர்

ஓர் ஆண்டு ஓடியது.  எனினும் அவர் மனம் அமைதியடையவில்லை.  கனகாபூருக்குச் சென்றார்.  அங்கு அவர் இன்னும் அதிகமான மனக்கலக்கத்தை அடைந்தார்.  பின்னர் ஓய்வுக்காக மதேகாவன் சென்றார்.  பின்னர் முடிவாக காசிக்குச் செல்லத் தீர்மானித்தார்.  புறப்படுவதற்கு இரண்டு தினங்களுக்குமுன் அவரின் மனைவி ஒரு கனவு கண்டாள்.  அக்கனவில் தான் ஒரு மண் பானையுடன் லக்கட்ஷாவின் கிணற்றுக்குப் போய்க்கொண்டு இருப்பதாகவும், வேப்பமரத்தடியில் ஒரு துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு ஒரு பக்கிரி அமர்ந்திருப்பதையும், அவர் அவளருகில் வந்து, "அன்புள்ள பெண்ணே! எதற்காக ஒன்றுமில்லாத ஆயாசம்?  நான் உனது பானையில் தண்ணீர் நிரப்பித் தருகிறேன்" என்று கூறியதாகவும் கண்டாள்.  அப்பக்கிரிக்குப் பயந்து காலிப் பானையுடன் விரைவாகத் திரும்பியபோது அவரால் தொடரப்பட்ட தருணத்தில் தூக்கம் கலைந்து கண்ணைத் திறந்து பார்த்தாள்.

இக்கனவைத் தனது கணவனிடம் கூறினாள்.  இது ஒரு புனிதமான நேரம் என்று அவர்கள் நினைத்து ஷீர்டிக்குப் புறப்பட்டனர்.  அவர்கள் மசூதியை அடைந்தபோது பாபா அங்கில்லை.  லெண்டித் தோட்டத்திற்குச் சென்றிருந்தார்.  அவர் திரும்பிவரும் வரையில் காத்திருந்தனர்.  அவர் திரும்பிவந்ததும் அவள் கனவில் கண்ட அப்பக்கிரியின் தோற்றம் பாபாவுடன் சரியாக ஒத்திருந்ததைக் கண்டு அவள் ஆச்சரியமடைந்தாள்.  பணிவுடன் அவள் பாபாவின்முன் வீழ்த்து வணங்கிவிட்டு அவரை நோக்கி அமர்ந்திருந்தாள்.

அவளது பணிவைக்கண்டு பாபா மிகவும் மகிழ்ச்சி அடைந்து, அவருக்கே உரிய விசித்திரமான பாணியில் மூன்றாமவர் ஒருவரிடம் ஒரு கதை சொல்லத் தொடங்கினார்.  எனது புயம், அடிவயிறு, இடுப்பு எல்லாம் நீண்ட நாட்களாக வலித்துக்கொண்டு இருந்தன.  பல மருந்துகளைச் சாப்பிட்டேன்.  வலி குறையவில்லை.  மருந்துகள் எவ்வித நிவாரணத்தையும் அளிக்கவில்லை.  ஆதலால் நான் மருந்துகளின்மேல் வெறுப்படைந்தேன்.  ஆனால் இப்போது திடீரென்று எல்லா வலிகளும் நீங்கிவிட்டதுகண்டு ஆச்சரியம் அடைகிறேன்" என்றார்.  எவ்விதப் பெயரும் சொல்லப்படவில்லை.  ஆயினும் உண்மையில் அது திருமதி சபட்ணேகரின் கதையே ஆகும்.  பாபா விவரித்தபடியாகவே அவளது வலி உடனே நீங்கிவிட்டது.  அவள் மகிழ்ச்சியடைந்தாள்.

பின் சபட்ணேகர் தரிசனம் செய்துகொள்ள முன்னால் சென்றார்.  அவர் மீண்டும் முந்தைய "வெளியே போ!" என்ற வார்த்தைகளுடன் வரவேற்கப்பட்டார்.  இந்தமுறை அவர் தவறுக்கு வருந்துபவராகவும், இன்னும் விடாமுயற்சியுள்ளவராகவும் இருந்தார்.  தனது முந்தைய வினைகளே பாபாவின் அதிருப்திக்குக் காரணம் என்று சொல்லி அதற்கு ஈடுசெய்யத் தீர்மானித்தார்.  பாபாவைத் தனியாகக்கண்டு தனது முந்தைய வினைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்ள முடிவுசெய்து தனது தலையை பாபாவின் பாதத்தின் மீது வைத்தார். 

பாபா தமது கையை கையை அவர் தலைமீது வைத்தார்.  பாபாவின் கால்களை சபட்ணேகர் கீழே அமர்ந்து வருடத் தொடங்கினார்.  பின் ஆடுமேய்க்கும் ஆய்மகள் ஒருத்தி பாபாவின் இடுப்பை உட்கார்ந்து பிடித்துவிடத் தொடங்கினாள்.  பாபா தமக்கே உரிய பாணியில் ஒரு (பனியா) வணிகனின் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

அவனது வாழ்க்கை முழுவதிலும் ஏற்பட்ட மாறுதல்களை அவனது ஒரே மகன் இறந்தது உட்பட அனைத்தையும் எடுத்துரைத்தார்.  பாபா கூறிக்கொண்டிருந்த கதை முழுவதும் தன்னுடையதே என்று அறிந்து, சபட்ணேகர் ஆச்சரியமடைந்தார்.  பாபாவுக்கு அதன் ஒவ்வொரு விவரமும் தெரிந்தது கண்டு அதிசயமடைந்தார்.  அவர் நிறைபேரறிவுடையவர் என்றும், அனைவரின் இதயங்களையும் அறிந்திருப்பவர் என்றும் அறியலானார்.

இந்த எண்ணம் அவர் மனத்துக்கு வந்தபோது, பாபா ஆடுமேய்க்கும் பெண்ணை நோக்கி சபட்ணேகரைச் சுட்டிக்காண்பித்து, "இந்த ஆள் அவரது குழந்தையை நான் கொன்றுவிட்டதாக, என் மீது பழி சுமத்தித் திட்டுகிறார்.  நான் மக்களின் குழந்தைகளைக் கொல்கிறேனா?  ஏன் இவர் மசூதிக்கு வந்து அழுகிறார்?  நான் இப்போதே இதைச் செய்கிறேன்.  அதே குழந்தையை மீண்டும் அவரது மனைவியின் கருப்பையில் கொண்டுவைக்கிறேன்" என்று கூறினார்.


இவ்வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே தமது ஆசிநல்கும் கரத்தை, அவர் தலைமீது வைத்து, "இப்பாதங்கள் தொன்மையானவை, புனிதமானவை.  இப்போது உனக்குக் கவலையில்லை.  என்மீது முழு நம்பிக்கையையும் வை.  நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்!" என்று கூறித் தேற்றினார்.  சபட்ணேகர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, பாபாவின் பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவிவிட்டுத் தனது இருப்பிடத்தை அடைந்தார்.

பின்னர் அவர் பூஜை, நைவேத்தியம் இவைகளைத் தயார் செய்துகொண்டு மனைவியுடன் மசூதிக்கு வந்தார்.  தினந்தோறும் இவைகளை பாபாவுக்குச் சமர்ப்பித்து, அவரிடமிருந்து பிரசாதம் பெற்றுக்கொண்டிருந்தார்.  மசூதிக்குள் கூட்டமாக இருந்தது.  சபட்ணேகர் அங்குசென்று மீண்டும் மீண்டும் வணங்கிக்கொண்டிருந்தார்.  தலையோடு தலைகள் மோதிக்கொள்வதைக் கண்ட பாபா சபட்ணேகரை நோக்கி, "ஓ! நீ ஏன் அடிக்கடி வணங்கிக்கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்.  "பணிவுடனும், அன்புடனும் செய்யும் ஒரு நமஸ்காரமே போதும்" என்றார்.  அன்றிரவு முன்னரே விவரிக்கப்பட்ட சாவடி ஊர்வலத்தை சபட்ணேகர் கண்டுகளித்தார்.  ஊர்வலத்தின்போது பாபா, பாண்டுரங்கன் மாதிரியே காட்சியளித்தார்.


மறுநாள் விடைபெறும்போது தக்ஷிணையாக ஒரு ரூபாய் கொடுக்கவேண்டுமென்றும், பாபா மீண்டும் கேட்டால் இல்லையென்று சொல்லாமல் பிரயாணம் செய்வதற்குப் போதுமான பணத்தை ஒதுக்கி வைத்துக்கொண்டு மேலும் ஒரு ரூபாய் கொடுக்கவேண்டுமென்றும் நினைத்தார்.  மசூதிக்கு அவர் சென்று ஒரு ரூபாய் அளித்தபோது, அவருடைய எண்ணப்படியே பாபா மேலும் ஒரு ரூபாய் கேட்டார்.  அது கொடுக்கப்பட்டபோது, பாபா இதைக்கூறி ஆசீர்வதித்தார்.

"இத்தேங்காயை எடுத்து உனது மனைவியின் சேலை முந்தானையில் போட்டுவிட்டு எவ்விதக் கவலையும்படாமல் சௌகரியமாகப் போய் வா" என்றார்.  அவரும் அங்ஙனமே செய்தார்.  ஒரு வருடத்திற்குள் அவருக்கு ஒரு மகன் பிறந்தான்.  எட்டு மாதக் குழந்தையுடன் அவ்விருவரும் ஷீர்டிக்கு வந்தனர்.  அதை பாபாவின் காலடிகளில் வைத்து, "ஓ! சாயிநாத், தங்கள் உதவிக்கு என்ன கைம்மாறு செய்வது என்று நாங்கள் அறியாமல் இருக்கிறோம்.  எனவே தங்க
ள்முன் வீழ்ந்து பணிகின்றோம்.  எளிய ஆதரவற்ற எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.  இனி தங்களின் புனிதப் பாதங்களே எங்களது ஒரே அடைக்கலமாக இருக்கட்டும்.  பற்பல எண்ணங்கள் கனவிலும், நனவிலும் எங்களை தொல்லைப்படுத்துகின்றன.  எங்கள் மனதை அவைகளிலிருந்து எல்லாம் தங்கள் வழிபாட்டுக்குத் திருப்பி, எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்" எனப் பிரார்த்தித்தனர்.  புத்திரனுக்கு 'முரளீதர்' என்று பெயரிடப்பட்டது.  பின்னர் பாஸ்கர், தினகர் என்ற இருவரும் பிறந்தனர்.  இங்ஙனமாக சபட்ணேகர் தம்பதிகள் பாபாவின் மொழிகள் பொய்ப்பதில்லை என்றும், நிறைவேறாமல் போவதில்லை என்றும், முற்றிலும் உண்மையாகவே நிகழ்கின்றன என்றும் உணர்ந்தனர்.



ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்



Thursday, 3 January 2013

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 47

•   பாபாவின் பூர்வஜென்ம ஞாபகங்கள்
•   வீரபத்ரப்பா, சனபஸப்பா (பாம்பு, தவளை) 

    ஆகியோரின் கதை

இரண்டு ஆடுகளைப்பற்றி பாபாவின் பழைய ஞாபகங்களை சென்ற அத்தியாயம் விவரித்தது.  இது அத்தகைய இன்னும் பல ஞாபகங்களையும் வீரபத்ரப்பா, சனபஸப்பா ஆகியோரின் கதையையும்  கூறுகிறது. 



முன்னுரை

சாயியின் முகம் புனிதமானது.  சில கணங்களுக்கு நாம் நமது பார்வையை அவர்பால் செலுத்தினாலும் நமது முந்தைய பல பிறவிகளின் துக்கங்களையழித்து நம்மீது பேரானந்தத்தைப் பொழிகிறார்.  கருணையுடன் அவர் நம்மீது நோக்குவாராயின் நமது முன்னைய கர்மவினைக் கட்டுக்களெல்லாம் அறுபட்டு மகிழ்ச்சிக்கு வழிகாட்டப்படுகிறோம்.  கங்கை நதியானவள், அவளிடம் குளிப்பதற்காகச் செல்லும் மக்களனைவரின் பாவங்களையும், அழுக்கையும் நீக்குகிறாள்.  ஆனால் ஞானிகள் தன்னிடம் வரவேண்டுமென்றும், அவர்களது பாதாரவிந்தங்களால்  தான் ஆசீர்வதிக்கப்பட்டு, தன்னிடம் குவிக்கப்பட்ட அழுக்கு (பாவங்கள்) நீக்கப்படவேண்டுமென்றும் மிகுந்த ஆவலுடன் விரும்புகிறாள்.  ஞானிகளின் பாதாரவிந்தங்களால் மட்டுமே இப்பாவமூட்டை அழிக்கப்படும் என்று அவள் உறுதியாக அறிகிறாள்.  ஞானிகளுக்கெல்லாம் தலையாய முடிமணியாக சாயி விளங்குகிறார்.  அவரிடமிருந்து இப்போது நம்மைத் தூய்மைப்படுத்தும் பின்வரும் கதையைக் கேளுங்கள்.



பாம்பும் தவளையும்

ஒருநாள் எனது காலை உணவை உண்டபின் ஒரு சிறு நதிக்கரை வரும்வரை மெதுவாக உலவிக்கொண்டிருந்தேன்.  களைப்பாய் இருந்தபடியால் அங்கு சற்று இளைப்பாறினேன்.  எனது கைகால்களைக் கழுவிக்கொண்டு, குளித்துவிட்டு புத்துணர்ச்சி பெற்றேன்.  அங்கு மரங்கள் அடர்ந்து நிழல்மிகுந்த ஒரு வண்டிப்பாதையும், ஒற்றையடிப்பாதையும் இருந்தது.  மெல்லிய இளங்காற்றும் இதமாக வீசிக்கொண்டிருந்தது.  நான் புகைபிடிப்பதற்கு சில்
லிம் (புகைக்குழாய்) தயார் செய்துகொண்டிருந்தபோது ஒரு தவளை ஒலமிடுவதைக் கேட்டேன்.  சிக்கிமுக்கிக் கல்லைத் தட்டி நெருப்புப் பற்றவைத்தபோது, ஒரு வழிப்போக்கன் எனதருகில் வந்து அமர்ந்து, என்னைப் பணிவுடன் வணங்கி உணவுக்கும், இளைப்பாறுதலுக்கும் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தான்.  புகைக்குழாயைப் பற்றவைத்து என்னிடம் கொடுத்தான்.  மீண்டும் ஓலம் கேட்டது.  அவன் அது என்னவென்று அறிந்துகொள்ள விரும்பினான்.

நான் அவனிடம் ஒரு தவளை கஷ்டத்தில் இருக்கிறதென்றும், அது தன்னுடையதேயான முந்தைய வினைகளின் கசப்பான பலனை அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்றும் கூறினேன்.  முந்தைய பிறவிகளில் நாம் விதைத்த பழத்தின் பலனை நாமே அறுவடை செய்யவேண்டும்.  அதைப்பற்றிக் கதறுவதால் பலன் ஒன்றும் இல்லை என்றேன்.  பின்னர் அவன் புகைபிடித்துவிட்டு குழாயை என்னிடம் கொடுத்துவிட்டு தானே நேரடியாகச் சென்று அதைப் பார்த்து வருவதாகக் கூறினான்.  அதற்கு நான், ஒரு பெரிய பாம்பு தவளையைப் பிடித்துக்கொண்டிருப்பதாகவும், தவளை ஓலமிட்டு அழுவதாகவும் முந்தைய பிறவிகளில் இவ்விருவருமே மிகக் கொடூரமானவர்களாயிருந்தனர் என்றும், இப்போது அவைகளின் பலனை இவ்வுடம்பில் அனுபவிக்கிறார்கள் என்றும் நான் அவனிடம் கூறினேன்.  அவன் வெளியேசென்று ஒரு பெரும் கருநாகம், ஒரு பெரிய தவளையைத் தன் வாயில் கவ்விக்கொண்டிருந்ததைக் கண்டான்.

பிறகு என்னிடம் திரும்பிவந்து இன்னும் பத்துப் பன்னிரண்டு நிமிடங்களில் தவளையைப் பாம்பு தின்றுவிடும் என்று கூறினான்.  நான், "இல்லை அப்படி இருக்கமுடியாது.  நானே அதன் தந்தை (பாதுகாவலன்)  மேலும் நான் இப்போது இங்கேயே இருக்கிறேன்.  அப்பாம்பு அதைத் தின்பதை எங்ஙனம் நான் அனுமதிப்பேன்?  வெறும் தண்டத்துக்கா நான் இங்கு இருக்கிறேன்?  அதை எங்ஙனம் விடுவிக்கிறேன் என்பதைச் சற்றே பாருங்கள்" என்று கூறினேன்.
   


மீண்டும் புகைபிடித்த பின்னர் நாங்கள் அவ்விடத்துக்கு நடந்துசென்றோம்.  அவன் பயந்து பாம்பு எங்களைத் தாக்கலாமாதலால் மேற்கொண்டு செல்லவேண்டாமென்று என்னிடம் கூறினான்.  அவனைப் பொருட்படுத்தாது நான் முன்னேசென்று அந்த ஜந்துக்களை நோக்கி இங்ஙனம் விளித்துக் கூறினேன், "ஓ! வீரபத்ரப்பா, உனது பகைவனான பஸப்பா தவளையாகப் பிறந்தபோதிலும், தான் செய்ததற்காக வருத்தப்படவில்லையா?  நீயும் பாம்பாகப் பிறந்தும் அவன்மீது இன்னும் கசப்பான பகைமையை வைத்திருக்கிறாயா?  சீ! கேவலம் வெட்கப்படு.  உன்னுடைய பகைமையை இப்போதே ஒழித்துவிட்டு அமைதியாக இரு" என்றேன்.

இவ்வார்த்தைகளைக் கேட்டு, பாம்பு தவளையை விட்டு உடனே அகன்று ஆற்றில் தாவி மறைந்துவிட்டது.  தவளையும் குதித்து புதர்களில் தன்னை மறைத்துக்கொண்டது. 

வழிப்போக்கன் மிகவும் ஆச்சரியப்பட்டான்.  அந்த மொழிகளைக் கூறியவுடன் பாம்பு எங்ஙனம் தவளையைப் போட்டுவிட்டு மறைந்தது என்பது தனக்கு விளங்கவில்லை என்றும், யார் வீரபத்ரப்பா?  யார் பஸப்பா?  அவர்களின் பகைக்குக் காரணம் என்ன என்றும் கேட்டான்.  அவனுடன் நான் மரத்தடிக்கு வந்து சிறிது புகைபிடித்த பின்னர் அப்புதிர் முழுவதையும் பின்வருமாறு விளக்கினேன்.
 


எனது இடத்திலிருந்து நாலைந்து மைல் தொலைவில் மஹாதேவரின் கோவிலால் புனிதமாக்கப்பட்ட ஒரு புராதன க்ஷேத்திரம் இருந்தது.  கோவில் மிகப் பழமையானதாகவும், சிதிலம் அடைந்தும் இருந்தது.  அவ்வூரார் கோவிலின் பழுதுபார்க்கும் வேலைகளுக்கு நிதி வசூலித்தனர்.  பெருந்தொகை வசூலிக்கப்பட்டதும் வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  பழுதுபார்ப்பதற்குத் திட்டமும், மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது.  ஒரு உள்ளூர் பணக்காரன் பொக்கிஷதாரனாக நியமிக்கப்பட்டு, முழு வேலையும் அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.  அவன் ஒழுங்காகக் கணக்கு வைத்துக்கொண்டு, தனது எல்லா விஷயங்களிலும் நேர்மையாக இருந்திருக்கவேண்டும்.  அவன் முதல் தரமான கஞ்சன்.  பழுதுபார்க்கும் செலவுகளுக்காக மிகக்கொஞ்சமே பணம் கொடுத்ததால் வெகுசொற்ப முன்னேற்றமே காணப்பட்டது.

எல்லா நிதியையும் அவனே செலவழித்து ஏப்பம் விட்டுவிட்டான்.  தனது பணம் ஏதுமே செலவழிக்கவில்லை.  அவனுக்கு இனிமையாகப் பேசுந்திறன் இருந்தது.  வேலையின் தாமதத்தைப் பற்றியும், மிகசொற்ப முன்னேற்றத்துக்கும் சாமர்த்தியமாக ஒப்புக்கொள்ளக்கூடிய சமாதானங்கள் கூறினான்.  அவனாலான மிகச்சிறந்த முயற்சியை செய்து உதவினாலன்றி வேலை பூர்த்தியடையாது என்று மக்கள் மீண்டும் அவனிடம் சென்று கூறினர்.  அவ்வேலையைச் செய்துமுடிக்க அவர்கள் அவனிடம் வேண்டிக்கொண்டு மீண்டும் நிதி சேகரித்து அவனிடம் கொடுத்தனர்.  அவன் அதைப் பெற்றுக்கொண்டு முன்போலவே எவ்வித முன்னேற்றமும் செய்யாமல் இருந்தான்.


சிலநாட்களுக்குப் பிறகு கடவுள் (மஹாதேவ்) அவனது மனைவியின் கனவில் தோன்றி, "எழுந்திரு, கோவிலின் கோபுரத்தைக் கட்டு.  நீ செலவழித்ததைப் போல் நூறு பங்கு உனக்குத் திருப்பித் தருகிறேன்" என்று அவளிடம் கூறினார்.  இக்காட்சியை அவள் தன்னுடைய கணவனுக்கு அறிவித்தாள்.  அது அவனுக்குக் கொஞ்சம் செலவுவைக்கும் என்று பயந்து, அது வெறும் கனவே என்றும் அதை நம்பிச் செயலில் இறங்கத் தேவையில்லை என்றும், அல்லாவிடில் தன்னிடமும் ஏன் கடவுள் தோன்றிச் சொல்லவில்லை என்றும் கூறி, சிரித்து மழுப்பிவிட்டான்.  அவன் அவளிடமிருந்து நெடுந்தொலைவிலா இருந்தான்?  கணவன் மனைவியிடத்தே மனஸ்தாபம் உண்டாக்கும் நோக்கத்துடன் கூடிய கெட்டகனவு மாதிரி தோன்றுகிறது என்றான்.  அவள் அமைதியாக இருக்கவேண்டியதாயிற்று. 

நன்கொடையாளர்களின் விருப்பத்துக்கு மாறாக சேகரிக்கப்படும் பெருந்தொகைகளைக் கடவுள் விரும்புவதில்லை.  ஆனால் அன்பு, பக்தி, ஆர்வம் இவற்றுடன் கொடுக்கப்படும் எளிய தொகைகளையே அவர் உவப்புடன் ஏற்கிறார்.  சில நாட்களுக்குப் பின்னர் கடவுள் மீண்டும் அவளது கனவில் தோன்றி, "உனது கணவனைப்பற்றியோ அல்லது அவனிடமிருக்கும் நிதியைப்பற்றியோ கவலைப்படாதே.  கோவிலுக்காக அவனை எதையும் செலவு செய்யும்படியும் வற்புறுத்தாதே.  எனக்குத் தேவையானது உணர்வும், பக்தியுமே.  எனவே உனக்குச் சொந்தமானது எதையும் நீ விரும்பினால் கொடுப்பாயாக" என்று அவளிடம் கூறினார்.  இக்காட்சியைப்பற்றி அவள் தன் கணவனுடன் கலந்தாலோசித்தாள்.

தனது தந்தையால் கொடுக்கப்பட்ட ஆபரணங்களையெல்லாம் கொடுக்கத் தீர்மானித்தாள்.  கஞ்சன் கலக்கமடைந்து கடவுளையே இவ்விஷயத்தில் ஏமாற்றத் தீர்மானித்தான்.  அவன் அவ்வாபரணங்களை ரூபாய் ஆயிரத்துக்கு குறைவாக மதிப்பீடுசெய்து தானே வாங்கிக்கொண்டு அதற்குப் பதிலாக கடவுளுக்கு ஒரு நிலத்தை பாதுகாப்புச் சொத்தாக அளித்தான்.  இதற்கு மனைவியும் சம்மதித்தாள்.  இந்நிலமும் அவனுடையது அல்ல.  டுபகி என்ற ஏழைப் பெண்மணி ஒருத்தி அதை அவனிடம் ரூ.200க்கு அடமானம் வைத்து நெடுநாளாக அதை மீட்க முடியாமல் இருந்தாள்.  எனவே கபடமான அக்கஞ்சன் தனது மனைவி, டுபகி மற்றும் கடவுள் அனைவரையும் ஏமாற்றினான்.  நிலமோ தரிசு, ஒன்றுக்கும் பயனற்றது.  சிறந்த பருவகாலங்களில் கூட விளைச்சல் ஏதும் கொடுக்காது.


இவ்விதமாக இந்த வாணிப நடவடிக்கை முடிவுபெற்றது.  ஒரு ஏழைப் பூசாரியின் பொறுப்பில் நிலம் விடப்பட்டது.  அவனும் இத்தர்மத்தால் மகிழ்ச்சியடைந்தான்.  சில நாட்களுக்குப் பிறகு வினோதமான நிகழ்சிகள் நடைபெற்றன.  பயங்கர புயலும், பேய்மழையும் வந்தது.  கஞ்சன் வீட்டில் இடிவிழுந்து கணவனும், மனைவியும் இறந்தனர்.  டுபகியும் மரணமடைந்தாள்.

அடுத்த பிறவியில் அப்பணக்காரக் கஞ்சன் மதுராவில் ஒரு அந்தணக் குடும்பத்தில் பிறந்து வீரபத்ரப்பா என்று பெயரிடப்பட்டான்.  அவளுடைய பக்தியுள்ள மனைவி கோவில் பூசாரியின் மகளாகப் பிறந்து கௌரி என்று பெயரிடப்பட்டாள்.  டுபகி கோவில் பணி செய்பவர் ஒருவரின் குடும்பத்தில் ஆணாகப் பிறந்து சனபஸப்பா என்று பெயரிடப்பட்டாள்.  அப்பூசாரி எனது நண்பன்.  அப்பூசாரி எனது நண்பன்.  அவன் அடிக்கடி என்னிடம் வந்து உரையாடி புகைபிடிப்பான்.  அவனது மகளான கௌரியும் என்னிடம் பக்தி பூண்டவள்.  அவள் வேகமாக வளர்ந்தாள்.  அவளது தகப்பனார் நல்ல வரன் ஒன்றை அவளுக்குத் தேடினார்.

அவனிடம் நான் இதைப்பற்றிக் கவலையுற வேண்டாமென்றும், மாப்பிள்ளையே அவளைத் தேடிக்கொண்டு வருவானென்றும் கூறினேன்.  அவர்கள் ஜாதியில் உள்ள வீரபத்ரப்பா என்ற ஏழைப்பையன் ஊரூராகத் திரிந்துகொண்டும், பிச்சையெடுத்துக்கொண்டும் அப்பூசாரியின் வீட்டுக்கு வந்தான்.  என்னுடைய சம்மதத்தின்பேரில் பூசாரி கௌரியை அவனுக்கு மணம்செய்து வைத்தான்.  அவனுடைய திருமணத்திற்கு நான் சிபாரிசு செய்ததால் வீரபத்ரப்பாவும்  முதலில் என்பால் பக்தி பூண்டவனாக இருந்தான்.  இப்புது ஜன்மத்திலும் அவன் பணத்தாசை பிடித்தவனாக இருந்தான்.  தான் சம்சாரியாக இருப்பதால் பணம் சம்பாதிக்க என்னை உதவி செய்யச் சொன்னான். 


அதன்பின் விசித்திரமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  விலைவாசிகளில் ஒரு திடீர் ஏற்றம் கண்டது.  கௌரியின் நல்லதிர்ஷ்டத்தினால் நிலத்துக்குப் பெரும் கிராக்கி ஏற்பட்டு அந்தத் தர்ம நிலம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.  (அவளது ஆபரணத்தின் மதிப்பைப்போல் நூறு மடங்கு) பாதித்தொகை பணமாகவும், மீதித்தொகை ரூ.2000 வீதமாக இருபத்தைந்து தவணைகளில் கொடுக்கப்படவும் இருந்தது.  இந்த விவகாரத்தை அனைவரும் ஒப்புக்கொண்டனர்.  ஆனால் பணத்துக்காகச் சண்டை பிடித்துக்கொண்டனர்.  எனது யோசனைக்காக அவர்கள் என்னிடம் வந்தனர்.  கடவுளுக்குரிய அந்த சொத்து பூசாரியின் பாதுகாப்பில் இருந்தது.

கௌரியே அதன் பிதுரார்ஜித சொத்துக்கு வாரிசுக்காரி, உரிமைக்காரி.  அவளது சம்மதமின்றி எந்தப் பணமும் செலவழிக்கப்படக்கூடாது.  அவளது கணவனுக்கு அதில் எவ்வித உரிமையில்லை என்று நான் கூறினேன்.  என்னுடைய கருத்தைக்கேட்டு வீரபத்ரப்பா என்மீது கடுமையான கோபமடைந்தான்.  நான் கௌரியின் உரிமையைப் பலப்படுத்தி அவளது சொத்தைக் கவர விரும்புவதாக அவன் கூறினான்.  அவன் கூற்றைக்கேட்டு நான் கடவுளை நினைவுகூர்ந்து அமைதியாய் இருந்தேன்.  வீரபத்ரப்பா அவனது மனைவியைத் திட்டினான்.  மதியம் அவள் என்னிடம் வந்து பிறர் மொழிகளைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும், எனது மகளாயிருப்பதால் அவளைக் கைவிடவேண்டாம் என்றும் கூறினாள்.  இவ்வாறாக அவள் எனது பாதுகாப்பை வேண்டியதனால் அவளைக் காப்பதற்காக நான்
ழ்கடலையும் கடப்பேன் என்று அவளுக்கு வரம் கொடுத்தேன். 

பின்னர் அன்றிரவு கௌரி ஒரு கனவு கண்டாள்.  மஹாதேவ் அவளது கனவில் தோன்றி, "பணம் முழுவதும் உன்னுடையது.  அதை யாரிடமும் கொடுக்காதே, கொஞ்சம் பணத்தை கோவில் வேலைக்காக சனபஸப்பாவிடம் கலந்து ஆலோசித்துச் செலவிடு.  வேறெதற்காவது அதை நீ செலவிட விரும்பினால் மசூதியிலுள்ள பாபாவிடம் கலந்தாலோசி" என்று சொன்னார்.  கௌரி என்னிடம் அக்கனவைக் கூறினாள்.  இவ்விஷயத்தில் அவளுக்கு நான் உரிய ஆலோசனை கூறினேன்.  அசல் தொகையை அவளே எடுத்துக்கொள்ளவும், வட்டியில் பாதியை சனபஸப்பாவுக்குக் கொடுக்கவும், இவ்விஷயத்தில் வீரபத்ரப்பாவுக்கு ஒன்றுமில்லையென்றும் கூறினேன்.  இவ்வாறு நான் பேசிக்கொண்டிருக்கும்போது வீரபத்ரப்பாவும்,  சனபஸப்பாவும் சண்டை போட்டுக்கொண்டே வந்தனர்.  அவர்களைச் சாந்தப்படுத்த என்னாலான முழு முயற்சியைச் செய்து அவர்களுக்குக் கௌரியின் கனவைக் கூறினேன்.  வீரபத்ரப்பா மூர்க்கனாகிக் கோபமடைந்து சனபஸப்பாவை கண்டதுண்டமாக வெட்டப்போவதாக பயமுறுத்தினான்.  பின்னவன் பீதியடைந்து என் கால்களைப் பிடித்துக்கொண்டு எனது அடைக்கலத்தை வேண்டினான்.  அவனது எதிரியின் கொண்டுங்கோபத்திலிருந்து அவனைக் காப்பதாக நான் என்னுடையதான வாக்குறுதியைக் கொடுத்தேன்.

சில காலத்திற்குப்பின் வீரபத்ரப்பாவும், சனபஸப்பாவும் காலமாகி முறையே பாம்பாகவும், தவளையாகவும் பிறந்தனர். சனபஸப்பாவின் ஓலத்தைக் கேட்டதும் எனது வாக்குறதியை நினைவுகூர்ந்து இங்குவந்து அவனைப் பாதுகாத்து என் வார்த்தையைக் காப்பாற்றினேன்.  தமது அடியவர்களின் அபாயகாலத்தில் கடவுள் ஓடிச்சென்று உதவுகிறார்.  அவர் என்னை இங்கு அனுப்பியதன் மூலம் சனபஸப்பாவைக் காத்தார்.  இவைகளெல்லாம் கடவுளின் லீலை அல்லது திருவிளையாடல்.

 


நீதி

ஒருவன் விதைப்பதை அவனே அறுவடைசெய்து தீரவேண்டும் என்றும், மற்றவர்களிடம்பட்ட பழைய கடனையும், விவகாரங்களையும் கஷ்டத்துடன் அனுபவித்து தீர்த்தாலன்றி வேறு விமோசனம் இல்லையென்றும், பணத்தின் மீதுள்ள பேராசையானது அப்பேராசைக்காரனைக் கீழான நிலைக்கு இழுத்துச்சென்று கடைசியில் அவனுக்கும், பிறருக்கும் அழிவைக் கொணர்கிறந்து என்பதுமே இக்கதையின் நீதியாகும். 




ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்