Thursday, 25 October 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 36

(1 )  இரண்டு கோவா கனவான்கள்
(2 )  திருமதி
ஔரந்காபாத்கர்
       ஆகியோரின் அற்புதக் கதைகள்

இந்த அத்தியாயம் கோவாவிலிருந்து வந்த இரண்டு கனவான்கள், சோலாபூரின் திருமதி ஔரந்காபாத்கர் ஆகியோரின் அற்புதக் கதைகளைப் பற்றிக்கூறுகிறது.



இரண்டு கோவா கனவான்கள்

ஒருமுறை சாயிபாபாவின் தரிசனத்தைப் பெறுவதற்காக கோவாவிலிருந்து இருவர் வந்து, அவர்முன் வீழ்ந்து பணிந்தனர். 

இருவரும் ஒன்றாக வந்தபோதும் அவர்களில் ஒருவரிடம் மட்டுமே, பாபா தஷிணையாக ரூ.15 கேட்டார்.  அதுவும் விருப்பமுடன் கொடுக்கப்பட்டது.  மற்றொருவர் தாமாகவே முன்வந்து ரூ.35 அளித்தார்.  மற்றெல்லோரும் ஆச்சரியப்படும்படியாக பாபா அதைப் பெற்றுக்கொள்ளவில்லை.  அங்கிருந்த ஷாமா பாபாவிடம், "என்ன பாபா! இருவரும் ஒன்றாக வந்தனர்.  ஒருவரின் தஷிணையை நீங்கள் கேட்டுப் பெறுகிறீர்கள்.  மற்றொன்றைத் தாமாகவே அளித்தபோதும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்கள்.  ஏன் இந்த வேறுபாடு?" என்றார்.

அதற்கு பாபா, "ஷாமா உனக்கு ஒன்றுமே தெரியாது.  நான் ஒருவரிடமிருந்தும் ஒன்றும் எடுத்துக்கொள்வதில்லை.  இம்மசூதியின் ஆளும் தெய்வமான மசூதிமாயி குறிக்கப்பட்ட கடன் தொகையைக் கேட்டாள்.  அதை அவர் அளித்துக் கடனிலிருந்து விடுபடுகிறார்.  கவனிக்கும்படியாக எனக்கு எவ்வித வீடோ, சொத்தோ, குடும்பமோ இருக்கிறதா?  எனக்கு எதுவுமே தேவையில்லை.  எப்போதும் சுதந்திரமாகவே இருக்கிறேன்.  கடன், பகைமை, கொலை ஆகியவைகளுக்குப் பரிகாரம் தேடப்பட்டே ஆகவேண்டும்.  தப்ப வழியே இல்லை"  என்று கூறிவிட்டுப் பின் தமக்கே உரித்தான பாணியில் பின்வருமாறு கூறத்தொடங்கினார்.

முதலில் அவர் எழையாயிருந்ததாகவும், அவருக்கு ஒரு வேலை கிடைத்தால் முதல் மாதச் சம்பளத்தை காணிக்கையாகச் செலுத்துவதாகவும் வேண்டிக்கொண்டார்.  மாதம் ரூ.15 சம்பளமுள்ள ஒரு வேலை அவருக்குக் கிடைத்தது.  பின்னர் சம்பளம் படிப்படியாக உயர்ந்து ரூ.700ஐ அடைந்தது.  ஆனால் அவரின் சுபிட்சத்தில் அவர் வேண்டிக்கொண்டதை முழுமையுமாக மறந்துவிட்டார்.  கர்மவினை அவரை இவ்விடம் தள்ளிவிட்டிருக்கிறது.  அதனால் அத்தொகையை நான் அவரிடமிருந்து தஷிணையாகப் பெற்றேன்.


மற்றொரு கதை, கடற்கரை ஓரமாக நான் உலவித் திரிந்துகொண்டிருந்தபோது ஒரு பிரமாண்டமான மாளிகையை வந்தடைந்தேன்.  அதன் தாழ்வாரத்தில் அமர்ந்தேன்.  வீட்டுக்காரர் எனக்கு நல்ல வரவேற்ப்பளித்து, வயிறார உணவளித்தார்.  உறங்குவதற்காக அலமாரிக்கு அருகிலுள்ள தூய சுத்தமான இடத்தை எனக்குக் காண்பித்தார்.  அங்கு உறங்கினேன்.  நான் ஆழ்ந்த துயில் கொண்டிருக்கும்போது அம்மனிதன் சுவற்றைக் கன்னம் வைத்து உள்நுழைந்து என் பையிலிருந்த பணத்தையெல்லாம் கத்தரித்து எடுத்துக்கொண்டான்.  கண்விழித்தபோது எனது ரூ.30,000மும் திருடப்பட்டுவிட்டதை அறிந்தேன்.  பெரிதும் கவலையுற்று புலம்பிக்கொண்டிருந்தேன்.

பணம் கரன்ஸி நோட்டாக இருந்தது.  அப்பிராமணன் அதைத் திருடிவிட்டான் என நான் நினைத்தேன்.  உணவிலும், பானத்திலும் எனது விருப்பத்தையெல்லாம் இழந்து அந்தத் தாழ்வாரத்திலேயே பதினைந்து நாட்கள் புலம்பி அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தேன்.  பதினைந்து நாட்கள் கழிந்ததும் வழிப்போக்கரான ஒரு பக்கிரி நான் அழுதுகொண்டிருப்பதைக் கண்டு எனது துன்பத்திற்கான காரணத்தை விசாரித்தார்.  நான் அவரிடம் எல்லாவற்றையும் கூறினேன்.  அதற்கு அவர் "நான் சொல்லுகிறபடி செய்தீரானால் உமக்குப் பணம் திரும்பக் கிடைக்கும்.

ஒரு பக்கிரியிடம் செல்லும்.  நான் அவரைப் பற்றிய விபரம் தருகிறேன்.  அவரிடம் உம்மை முழுவதும் சமர்ப்பித்துவிடும்.  அவர் உமது பணத்தை மீட்டுத் தருவார்.  இந்த இடைப்பட்ட வேளையில் பணம் திரும்பக் கிடைக்கும்வரை உமக்குப் பிடித்தமான உணவை விட்டுவிடவும்" என்றார்.  அப்பக்கிரியின் அறிவுரைப்படி நடந்து எனது பணத்தைத் திரும்பப்பெற்றேன்.  பின்னர் வாதாவி விட்டு நீங்கி கடற்கரையை அடைந்தேன்.  அங்கு ஒரு நீராவிக் கப்பல் நின்றுகொண்டிருந்தது.  அதில் கூட்டமாக இருந்ததால் ஏற முடியவில்லை.  ஆனால் அங்கிருந்த நல்ல குணமுடைய பியூன் ஒருவன் எனக்காகக் குறுக்கிட்டதால் அதிர்ஷ்டவசமாக உள்ளே ஏறினேன்.  கப்பல் என்னை அக்க
ரை கொண்டுசேர்த்தது.  அங்கிருந்து ரயில் ஏறி மசூதிமாயிடம் (மசூதி தெய்வத்திடம்) வந்தேன்.

கதை முடிந்தது.  பாபா ஷாமாவிடம் அவ்விருந்தாளிகளை அழைத்துச்சென்று அவர்களின் உணவுக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.  பின்னர் ஷாமா அவர்களை வீட்டிற்கு அழைத்துச்சென்று உணவளித்தார்.  உணவின்போது ஷாமா அவர்களிடம் பாபாவின் கதை விளங்காத புதிராக இருப்பதாகவும், ஏனெனில் அவர் கடற்கரைப் பக்கமே சென்றது கிடையாதென்றும், ரூ.30,000 போன்ற எவ்வித பணத்தையும் அவர் வைத்திருக்கவில்லையென்றும், பயணம் செய்ததேயில்லை, பணத்தைத் தொலைத்ததேயில்லை மீண்டும் அதைத் திரும்பப் பெற்றதேயில்லையென்றும் கூறி அதை அவர்கள் புரிந்துகொண்
டு அதன் குறிப்பு நுட்பத்தை அறிந்துகொண்டார்களா என்று கேட்டார்.

விருந்தினர் ஆழ்ந்து மனமுருகி கண்ணீர் சிந்தினார்.  தொண்டை அடைக்கும் குரலில் அவர்கள், "பாபா நிறைபேரறிவுடையவர், எல்லையற்றவர், தன்நிகர் இல்லாத முழுமுதற்பொருள் (பரப்பிரம்மம்).  அவர் உரைத்த கதை சரிநுட்பமாக எங்களது கதையேயாகும்.  அவர் பேசியது யாவும் எங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே நடந்துவிட்டன.  இதையெல்லாம் அவர் எங்ஙனம் அறிந்தாரென்பது ஆச்சரியத்துள் எல்லாம் ஆச்சரியம்!  எல்லாத் தகவல்களையும் நாங்கள் உணவுக்குப்பின் உரைக்கின்றோம்.

உணவுக்குப்பின் அவர்கள் வெற்றிலை போட்டுக்கொண்டிருக்கும்போது  விருந்தினர் தங்கள் கதையைச் சொல்ல ஆரம்பித்தனர்.  அவர்களுள் ஒருவர் கூறுகிறார்.

மலைத்தொடரின் மீதுள்ள ஒரு
கோடைவாசஸ்தலமே எனது சொந்த ஊர்.  ஒரு வேலைதேடிப் பணம் சம்பாதிக்கும்பொருட்டு கோவாவுக்குச் சென்றேன்.  தத்தர் தெய்வத்திடம் எனக்கு வேலை கிடைத்தால் முதல் மாத ஊதியத்தைச் சமப்பிப்பதாக வேண்டிக்கொண்டேன்.  அவரது அருளால் ரூ.15 சம்பளமுள்ள ஒரு வேலை கிடைத்தது.  பாபா குறிப்பிட்டபடியே எனக்கு உத்தியோக உயர்வும் கிடைத்தது.  எனது வேண்டுதலைப் பற்றியெல்லாம் அதன்பிறகு நிச்சயமாக மறந்தேவிட்டேன்.  இவ்வகையாக பாபா அதை நினைவுபடுத்தி ரூ.15 என்னிடமிருந்து மீட்டுப் பெற்றுக்கொண்டார்.  ஒருவர் நினைக்கும்படியாக அது தஷிணையன்று, பழைய கடன் ஒன்றை அடைத்தலும், நீண்ட நாள் மறந்துபோன வேண்டுதலை நிறைவேற்றுதலும் ஆகும்.



நீதி

உண்மையில் ஒருபோதும் பாபா எந்தப்
பணத்தையும் யாசிக்கவில்லை.  தமது அடியவர்களையும் யாசிக்க அனுமதிக்கவில்லை.  ஆன்மிக முன்னேற்றத்துக்குப் பணத்தை ஒரு அபாயமாக, தடையாக அவர் கருதினார்.  தமது பக்தர்களை அதன் பிடியில் விழ அனுமதிப்பதில்லை.  இது விஷயத்தில் பகத் மஹல்ஸாபதி ஓர் உதாரணம் ஆவார்.  அவர் பரம ஏழை.  வரவையும் செலவையும் ஒன்றாக்க அவரால் இயலவில்லை.  பாபா அவரை ஒருபோதும் எந்தப் பணத்தையும் சம்பாதிக்க அனுமதிக்கவில்லை.  தமது தஷிணைப் பணத்தினின்றும் ஏதும் கொடுக்கவுமில்லை.  ஒருமுறை ஹம்ஸ்ராஜ் என்ற தயாளமும், தாராள குணமும் உள்ள ஒரு வியாபாரி பாபாவின் முன்னால் மஹல்ஸாபதிக்கு ஒரு பெருந்தொகை அளித்தார்.  ஆனால் பாபா அதை ஏற்றுக்கொள்ள அவரை அனுமதிக்கவில்லை.

பின்னர் இரண்டாவது விருந்தினர் தனது கதையைக் கூறினார்.  எனது பிராமண சமையல்காரன் எனக்கு 35 ஆண்டுகள் விசுவாசத்துடன் பணிவிடை செய்துவந்தான்.  துரதிர்ஷ்டவசமாக தீய வழிகளில் இறங்கினான்.  அவன் மனம் மாறி என்னுடைய செல்வத்தையே கொள்ளையடித்தான்.  நாங்களெல்லாம் தூங்கிக்கொண்டிருக்கும்போது உள்ளே வந்து எனது அலமாரி வைக்கப்பட்டுள்ள அறையின் சுவற்றை கன்னம் வைத்து கரன்சி நோட்டுக்களாக நான் சேகரித்திருந்த ரூ.30,000 முழுவதையும் கொண்டுபோய்விட்டான்.  பாபா அதே தொகையை எங்ஙனம் குறிப்பிட்டார் என்பது எப்படி என்று எனக்குத் தெரியாது.  இரவும், பகலும் நான் அழுதுகொண்டிருந்தேன்.

எனது விசாரணைகளின் பலன் ஒன்றுமில்லை.  ஆழ்ந்த கவலையில் அரைமாதத்தைக் கழித்தேன்.  தாழ்வாரத்தில் நான் அமர்ந்திருந்தபோது அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு பக்கிரி, வருத்தப்பட்டு நொந்துபோயிருக்கும் எனது நிலையைக் கவனித்துவிட்டு அதன் காரணத்தை விசாரித்தார்.  அனைத்தைப் பற்றியும் அவரிடம் கூறினேன்.  கோபர்காவன் தாலூக்கா, ஷீர்டியில் சாயி என்ற பெயருடைய அவலியா ஒருவர் இருப்பதாக அவர் கூறினார்.  அவரிடம் ஒரு வேண்டுதல் செய்துகொள், உனக்கு மிகவும் பிடிக்கும் உணவு ஒன்றை மனதில் நினைத்து உமது தரிசனம் பெறும்வரை அவ்வுணவு உண்பதை நீக்கிவிட்டேன் என்று கூறிக்கொள் என்றார்.  பின்னர் அவ்வாறே நான் பிரார்த்தனை செய்துகொண்டேன்.  அரிசிச்சோறு சாப்பிடுவதை விட்டுவிட்டேன்.  "பாபா, அதை எனது சொத்து மீண்டபிறகும், நான் உமது தரிசனத்தைப் பெற்றான பிறகும் உண்பேன்" என்று உறுதி கூறிக்கொண்டேன்.


இதன்பின் பதினைந்து நாட்கள் கழிந்தன.  அந்தப் பிராமணன் தானாகவே என்னிடம் திரும்பிவந்து எனது பணத்தைத் திருப்பிக் கொடுத்துத் தன் செயலுக்காக வருந்தி, "எனக்குப் பைத்தியம் பிடித்து இவ்வாறு நடந்துகொண்டேன்.  இப்போது உமது காலடிகளில் என் தலையை வைக்கிறேன்.  தயவு செய்து மன்னித்தருளும்" என்றான்.  இவ்வாறு எல்லாமே நலமாகவே முடிவடைந்தன.  என்னைச் சந்தித்து எனக்கு உதவிய பக்கிரி மீண்டும் காணப்படவில்லை.  அப்பக்கிரி எனக்குக் கூறிய சாயிபாபாவை காணவேண்டுமென்றே ஒரு தீவிர ஆர்வம் என்னுள் எழுந்தது.  எனது வீடுவரை வந்த அப்பக்கிரி சாயிபாபாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் நினைத்தேன்.  என்னைக் காணவந்து எனது தொலைந்துபோன பணத்தை மீண்டும் பெற்றுத் தருவதற்காக எனக்கு உதவி புரிந்த அவரா 35 ரூபாய் பெறுவதற்காக ஆர்வமாயிருப்பார்?  மாறாக எங்களிடமிருந்து எதையும் எதிபார்த்துக்கொண்டிராது எங்களை ஆன்மிக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதில் அவர் தம்மாலான முழு முயற்சியை எப்போதுமே செய்கிறார்.

திருடப்பட்ட எனது சொத்து மீண்டும் கிடைத்தவுடன் நான் பெருமகிழ்வுற்றேன்.  அந்த மயக்கத்தில் எனது வேண்டுதலையெல்லாம் மறந்துவிட்டேன்.  பின்னர் நான் கொலாபாவில் இருந்தபோது ஒருநாள் இரவு கனவில் சாயிபாபாவைக் கண்டேன்.  இது நான் ஷீர்டிக்கு வருகிறேன் என்று எடுத்திருந்த பிரார்த்தனையை எனக்கு நினைவூட்டியது.  அதனால் கோவாவுக்குச் சென்று அங்கிருந்து கப்பலில் பம்பாய் வழியாக ஷீர்டிக்குச் செல்ல விரும்பினேன்.  ஆனால் துறைமுகத்துக்கு வந்தபோது அக்கப்பல் ஏற்கனவே கூட்டமாயிருப்பதையும், இடமில்லாததையும் அறிந்தேன்.  கப்பல் தளபதி என்னை அனுமதிக்கவில்லை.  நல்ல குணமுடைய எனக்கு பழக்கமில்லாத ஒரு பியூன் குறுக்கிட்டதால் எனக்கு கப்பலில் இடம் அனுமதிக்கப்பட்டு பம்பாய் வந்து சேர்ந்தேன்.  பின்னர் ரயில் மூலமாக இவ்விடம் வந்தேன்.  பாபா எவ்விடத்தும் வியாபித்து இருப்பவர் என்றும் எல்லாமறிந்தவர் என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன்.  நாங்கள் யார்?  எங்கள் வீடு எங்கே இருக்கிறது?  பாபா எங்களது பணத்தை மீட்டுக்கொடுத்து, தாமே எங்களை ஈர்த்து இழுத்ததான எங்களது நல்ல அதிர்ஷ்டம் தான் எவ்வளவு பெரியது?  ஷீர்டியைச் சேர்ந்த மக்களாகிய நீங்கள் நிச்சயமாக எங்களைக் காட்டிலும் எல்லையற்ற அளவு மேலானவர்களாகவும், மிகுந்த அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.பாபா விளையாடி, சிரித்து, உரையாடி இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்துகொண்டிருப்பதும் உங்களுடனேயே அல்லவா?  உங்களுடைய பூர்வபுண்ணிய பலன் அளவிடற்கரியதாக இருக்கவேண்டும்.  ஏனெனில் அதுவே பாபாவை ஷீர்டிக்கு இழுத்துவிட்டிருக்கிறது.  சாயியே எங்களது தத்தர்.  அவரே வேண்டுதலுக்குக் கட்டளையிட்டார்.  கப்பலில் ஓர் இடமும் அளித்து என்னை இவ்விடம் சேர்ப்பித்தார்.  இவ்விதமாக அவரது எங்கும்நிறை பேரறிவிற்கும், எல்லாம்வல்ல பேராற்றலுக்கும் நிரூபணத்தை அளித்தார்.



திருமதி. ஔரங்கபாத்கர்

ஸோலாபூரைச் சேர்ந்த சகாராம்
ஔரங்கபாத்கர் என்பாரின் மனைவிக்கு 27 ஆண்டு காலமாகக் குழந்தையேயில்லை.  கணக்கற்ற பிரார்த்தனைகளை அவள் கடவுளர்களிடமும், அம்மன்களிடமும் செய்துகொண்டாள்.  ஆனால் வெற்றிபெறவில்லை.  பின்னர் அவள் பெருமளவு நம்பிக்கை இழந்தவளாக ஆனாள்.  இவ்விஷயத்தில் இறுதியான முயற்சியாகத் தனது சகோதரியின் புதல்வனான விஸ்வநாத்துடன் ஷீர்டி வந்து பாபாவுக்குச் சேவை செய்துகொண்டு இரண்டு மாதங்கள் தங்கியிருந்தாள்.  மசூதிக்கு அவள் சென்றபோதெல்லாம் கூட்டத்தால் மசூதி நிரம்பி இருப்பதையும், பாபா பக்தர்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்டாள்.

அவள் அவரைத் தனியாகக்கண்டு வீழ்ந்து வணங்கித் தனது இதயத்தைத் திறந்து பிள்ளை வரம் வேண்ட விரும்பினாள்.
   ஆனால் உரிய சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை.  முடிவாக அவள் பாபாவிடம் அவர் தனியாக இருக்கும்போது தனக்காகப் பேசும்படி ஷாமாவிடம் கேட்டுக்கொண்டாள்.  ஷாமா அவளிடம் பாபாவின் தர்பார் வெளிப்படையானது என்றும், எனினும் அவளுக்காகத் தான் முயற்சிப்பதாகவும், கடவுள் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் கூறினார்.  தேங்காயுடனும், ஊதுபத்தியுடனும் முன்னிருக்கும் திறந்தவெளியில் பாபாவின் உணவு நேரத்தில் தயாராக இருக்கும்படியும், அவர் அவளுக்கு ஜாடை காண்பித்ததும் வரவேண்டும் என்றும் கூறினார்.  ஒருநாள் உணவுக்குப்பின் பாபாவின் ஈரக்கையை ஷாமா துண்டால் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தார்.  பாபா அப்போது அவர் கன்னத்தைக் கிள்ளிவிட்டார்.

ஷாமா: (பொய்க்கோபத்துடன்) தேவா இந்த மாதிரி என்னைக் கிள்ளுவது சரியா?  இந்த மாதிரி கிள்ளிக் குறும்பு செய்யும் கடவுள் எங்களுக்குத் தேவையில்லை.  நாங்கள் உங்களையே சார்ந்து இருப்போரல்லவா?  இதுதான் எங்களது நெருக்கமான உறவின் பலனா?

பாபா: ஓ! ஷாமா, கடந்த 72 தலைமுறைகளாக நீ என்னுடன் இருக்கிறாய்.  இதுவரை உன்னை நான் கிள்ளியதில்லை.  இப்போது நான் உன்னைத் தொட்டதைக் குற்றமாகக்கொண்டு கோபித்துக் கொள்கிறாயே?

ஷாமா:  எங்களுக்கு எப்போதும் முத்தங்களையும், உண்பதற்கு இனிப்புக்களையும் கொடுக்கும் ஒரு கடவுளையே நாங்கள் விரும்புகிறோம்.  தங்களிடமிருந்து எந்த மரியாதையையோ, மோக்ஷத்தையோ, புஷ்பக விமானம் முதலானவற்றையோ நாங்கள் வேண்டவில்லை.  தங்கள் பாதாம்புயத்தின்பால் எங்களது நம்பிக்கை எப்போதும் மிக நன்றாக தெளிந்த விழிப்பு நிலையில் இருக்கவேண்டும், அதற்கு ஆசீர்வதியுங்கள்.
 

பாபா:  ஆம் உண்மையில் அதற்காகவேதான் நான் வந்திருக்கிறேன்.  நான் உங்களுக்கு உணவூட்டிப் பேணி வளர்த்து வருகிறேன்.  உங்கள் மீது அன்பும், பாசமும் பூண்டிருக்கிறேன்.

இதன் பின்னர் பாபா தமது இருக்கையில் போய் அமர்ந்தார். 
ஷாமா அப்பெண்மணிக்கு ஜாடை செய்தார்.  அவள் மேலே வந்து வணங்கி தேங்காய், ஊதுபத்தி இவைகளை பாபாவிடம் அளித்தாள்.  பாபா அந்த முற்றல் தேங்காயை ஆட்டினார்.  அதனுள்ளிருந்த பருப்பு உருண்டு சப்தம் செய்தது. 

பாபா: ஷாமா இது உருளுகிறதே, என்ன சொல்கிதென்பதைக் கவனி. 

ஷாமா:  இப்பெண்மணி, அம்மதிரியாகவே ஒரு குழந்தையும் தனது வயிற்றில் உருண்டு உயிர்ப்புற வேண்டுமென்று வேண்டுகிறாள்.  எனவே அத்தேங்காயைத் தங்களது ஆசீர்வாதத்துடன் கொடுங்கள். 

பாபா: இத்தேங்காய் அவளுக்கு மதலையளிக்குமா?  இம்மாதிரி விஷயங்களில் எல்லாம் ஜனங்கள் எவ்வளவு முட்டாள்தனமாகவும், போலி நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.

ஷாமா: 
தங்களது மொழி, ஆசி இவைகளின் சக்தியை நானறிவேன்.  தங்கது சொல் அவளுக்கு குழந்தைகளின் தொடரையே அளிக்கும்.  நீங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர உண்மையான ஆசியை அளிக்கவில்லை.

விவாதம் கொஞ்சநேரம் நடந்துகொண்டு இருந்தது.  பாபா தேங்காயை உடைக்கும்படி மீண்டும் மீண்டும் ஆணையிட்டுக்கொண்டிருதார்.  ஷாமாவோ முழுத் தேங்காயையும் அப்பெண்மணிக்கே அளிக்கும்படி விவாதித்துக்கொண்டிருந்தார்.  முடிவாக பாபா சம்மதித்தார். 

பாபா: அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும்

ஷாமா:  எப்போது?

பாபா:  12 மாதங்களில்

இதன்பேரில் தேங்காய் இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பகுதியை இருவரும் உண்டனர்.  மறுபகுதி அவளிடம் அளிக்கப்பட்டது. 

பின்னர் ஷாமா அப்பெண்மணியின் பக்கம் திரும்பி "அன்புள்ள அம்மையே! நீ எனது மொழிகளுக்கு ஒரு சாட்சி.  பன்னிரண்டு மாதங்களுக்குள் உனக்குக் குழந்தை ஏதும் பிறக்காவிட்டால் ஒரு தேங்காயை இந்த தெய்வத்தின் (சாயிபாபாவின்) தலையின்மீது அடித்து அவரை மசூதியிலிருந்து வெளியே விரட்டிவிடுவேன்.  இதை நான் செய்யத் தவறுவேனாயின் என்னை மாதவ் என்று நானே அழைத்துக்கொள்ள மாட்டேன்.  நான் கூறுவதை நீ விரைவில் உணர்வாய்" என்று சூளுரைத்தார்.

அவள் ஓராண்டுக்குள் ஒரு புதல்வனைப் பெற்றெடுத்தாள்.  புதல்வனது ஐந்தாவது மாதத்தில் அவனை மசூதிக்கு எடுத்துவந்தாள்.  கணவன், மனைவி இருவரும் பாபாவின் முன்னால் வீழ்ந்து வணங்கினார்கள்.  நன்றியுள்ள அத்தகப்பனார் ரூ.500ஐ அன்பளிப்பாகச் சமர்ப்பித்தார்.  ஷ்யாம் கர்ணா என்ற பாபாவின் குதிரைக்கு ஒரு கொட்டகை கட்டுவதற்காக அத்தொகை செலவிடப்பட்டது.


ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
 

Thursday, 18 October 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 35

•  சோதிக்கப்பட்டுப் போதாக்குறை
   ஏதுமில்லை எனக் கண்டுணர்தல்

•  காகா மஹாஜனியின் நண்பரும்,

   எஜமானரும்

•  பாந்த்ராகாரரின் தூக்கமின்மை வியாதி


•  பாலாஜி பாடீல் நெவாஸ்கர்




இந்த அத்தியாயமும் உதியின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் செய்திகளைத் தொடர்கிறது.  பாபா சோதிக்கப்பட்டுப் போதாக்குறை ஏதுமில்லை எனக் கண்டுணரப்பட்ட இரண்டு நிகழ்சிகளையும் அது உரைக்கிறது.  இந்நிகழ்சிகளை முதலில் காண்போம். 



முன்னுரை

ஆன்மிக விஷயங்களில் அல்லது முயற்சிகளில் சமயப்பிரிவு உணர்ச்சி நமது முன்னேற்றத்துக்குப் பெருந்தடையாய் இருக்கிறது.  கடவுள் உருவமற்றவர் என நம்புவோர்கள், "கடவுள் உருவமுள்ளவர் என நம்புவது மாயத் தோற்றமே.  ஞானிகளும் மனிதர்களே" என்று கூறுவது நமது காதில் விழுகிறது.  பின்னர் ஏன் அவர்கள் ஞானிகளின்முன் தலைவணங்கி தஷிணை கொடுக்கிறார்கள்?  இதர சமயப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஆட்சேபணைகள் எழுப்பி தங்களது சத்குருக்களை விட்டுவிட்டு, மற்ற ஞானிகள்முன் தலைவணங்கி ஏன் தங்கள் உறுதியான கடப்பாட்டினைச் செலுத்தவேண்டும்?" என்று கூறுகின்றனர்.  முன்னால் இதைப்போன்ற ஆட்சேபணைகள் சாயிபாபாவைப் பற்றியும் சொல்லப்பட்டன.

இப்போதும்கூட அவைகள் செவியில் விழுகின்றன.  சிலர் தாங்கள் ஷீர்டிக்குச் சென்றபோது பாபா அவர்களிடம் தஷிணை கேட்டதாகவும், இம்முறையில் ஞானிகள் பணம் சேர்ப்பது நல்லதா என்றும் இம்மாதிரி அவர்கள் செயல் புரி
வார்களாயின் அவர்கள் ஞானம் எல்லாம் எங்கே போயிற்று என்றும் வினவினர்.  ஆனால் இம்மாதிரி ஏளனம் உரைக்க ஷீர்டிக்குச் சென்றவர்களெல்லாம் அங்கு பிரார்த்தனைக்குத் தங்கிவிட்டனர்.  அத்தகைய இரண்டு விஷயங்கள் கீழே தரப்படுகின்றன. 



காகா மகாஜனியின் நண்பர் 
 


காகா மகாஜனியின் நண்பரொருவர் கடவுளை உருவமற்ற நிலையில் வழிபடுபவர்.  உருவ ஆராதனைக்கு எதிர்ப்பாளர்.  வேடிக்கையாக அவர் ஷீர்டிக்கு காகா மகாஜனியுடன் இரண்டு நிபந்தனைகளின் பேரில் வந்தார்.  அவையாவன தாம் பாபாஜியின்முன் பணியவோ, தஷிணை கேட்டால் கொடுக்கவோ இயலாது.  காகா இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டார்.  அவ்விருவரும் ஒரு சனிக்கிழமை இரவு பம்பாயை விட்டுப் புறப்பட்டு ஷீர்டிக்கு அடுத்தநாள் சென்றனர். 

மசூதிப்படிகளில் அவர்கள் காலடி எடுத்து வைத்தவுடனேயே பாபா அந்த நண்பரைத் தூரத்திலேயே பார்த்துக் கீழ்கண்ட இனிமையான சொற்களால் அழைத்தார்:  "காம் யாவேன் ஜி" (ஏன் வந்தீர் ஐயா!)  இச்சொற்களை அவர் உதிர்த்த குரல் வெகுபுதிய விதமாக இருந்தது.  அந்நண்பனின் தகப்பனார் குரல் போலவே அச்சாக இருந்தது.  அது மறைந்த தனது தந்தையைப்பற்றி அவருக்கு நினைவூட்டி சந்தோஷத்தால் புல்லரிப்பை ஏற்படுத்தியது.  அவரது குரலுக்குத்தான் எத்தகைய வியத்தகு சக்தி.  ஆச்சரியப்பட்டு "இது எனது தந்தையின் குரல்தான் என்பதில் ஐயமில்லை" என்று கூறிவிட்டு உடனே மேலே சென்று பாபாவின் பாதங்களில் தனது தலையை வைத்து வணங்கினார்.

பின்னர் பாபா இரண்டுமுறை தஷிணை கேட்டார்.  காலை ஒருமுறையும், அவர்கள் விடைபெறும்போது மாலை ஒருமுறையும்.  ஆனால் அதை காகாவிடமிருந்து மட்டுமே கேட்டார்.  அவரது நண்பரைக் கேட்கவில்லை.  நண்பர் காகாவிடம் கிசுகிசுத்தார்.  "இருமுறை பாபா உம்மிடமிருந்து தஷிணை கேட்டார்.  நான் உம்முடனே இருந்தும் அவர் ஏன் என்னைப் புறக்கணிக்க வேண்டும்?" என்றார்.  அதற்கு காகா "பாபாவையே கேளும்" என்றார்.  பாபா, காகாவிடம் அவர் நண்பர் என்ன முணுமுணுக்கிறார் என்று கேட்டார்.  அப்போது அந்த நண்பரே தாம் ஏதும் தஷிணை கொடுக்கலாமா என்று கேட்டார்.  பாபாவும் "உமக்குக் கொடுக்கப் பிரியமில்லை எனவே உம்மைக் கேட்கவில்லை, கொடுக்க இப்போது பிரியப்பட்டால் கொடுக்கலாம்" என்று பதிலளித்தார்.

அவர் காகா அளித்த அதே தொகையான பதினேழு ரூபாயை தஷிணையாக அளித்தார்.  பின்னர் அவரிடம் பாபா பின்வரும் மொழிகளை உரைத்தார்.  "தேலியின் (கோட்டையின் சுவர் - வேற்றுமை உணர்வு) சுவற்றை இடித்தால் தான் நாம் ஒருவரை ஒருவர்
முகத்திற்கு முகம் பார்க்கலாம், சந்திக்கலாம்".  பின்னர் பாபா, அவர்கள் புறப்படுவதற்கு அனுமதியளித்தார்.  வானிலை மப்பாகவும், பயமுறுத்துவதாகவும் இருந்தபோதும், பாபா அவர்களுக்கு பத்திரமான பிரயாணத்திற்கு உறுதி அளித்தார்.  இருவரும் சௌக்கியமாக பம்பாய் வந்தடைந்தனர். 

அவர்கள் வீட்டுக்குச்சென்று வீட்டின் கதவு, ஜன்னல்களைத் திறந்தபோது இரண்டு பக்ஷிகள் தரையில் விழுந்து இறந்து கிடப்பதையும், ஒன்று அப்போதுதான் ஜன்னல் வழியே பறந்து சென்றதையும் கண்டனர்.  ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டுப் போயிருந்தால் இரண்டு
பக்ஷிகளும் காப்பாற்றப்பட்டிருக்கும்.  ஆனால் அவைகள் தங்களது விதியை எய்தின
என்றும்,  மூன்றாவது பக்ஷியைக் காக்கவே பாபா தம்மை அனுப்பியிருப்பதாகவும் அவர் நினைத்தார்.



காகா மஹாஜனியின் எஜமானர்

டக்கர் தரம்ஸி
ஜேடாபாஜி என்ற பம்பாய் வக்கீலின் கம்பெனியில் காகா மேலாளராகப் பணியாற்றி வந்தார்.  முதலாளியும், மேலாளரும் நெருக்கமான பழக்கத்தில் இருந்தனர்.  காகா அடிக்கடி ஷீர்டி போய்க்கொண்டிருப்பதும் அங்கு சில நாட்கள் தங்குவதும் பாபா அனுமதியளித்ததும், திரும்புவதும் டக்கருக்குத் தெரியும்.  வேடிக்கையாகவும் பாபாவைச் சோதிப்பதற்காகவுமே, டக்கர் காகாவுடன் ஷிம்கா விடுமுறையின்போது ஷீர்டி போக முடிவுசெய்தார்.  காகா உடனே திரும்புவது நிச்சயமில்லையாதலால் அவர் தன்னுடன் துணையாக வேறொருவரையும் அழைத்துக்கொண்டார்.  மூவரும் புறப்பட்டனர்.  காகா இரண்டு சேர் காய்ந்த திராட்சையை பாபாவுக்கு அன்பளிப்பாக வாங்கினார்.

அவர்கள் உரிய தருணத்தில் ஷீர்டிக்குப் போய் மசூதிக்கு பாபாவின் தரிசனத்தைப் பெறுவதற்காகச் சென்றனர்.  பாபா சாஹேப் தர்கட் அங்கு இருந்தார்.  டக்கர் அவரை ஏன் அவ்விடம் வந்தாரென்று விசாரித்தார்.

தர்கட்:  தரிசனத்துக்கு
டக்கர்:  ஏதாவது அற்புதங்கள் இங்கு நிகழ்கின்றனவா?

தர்கட்:  எனது நோக்கம் அதுவல்ல(அற்புதத்தைப் பார்த்தல்).  ஆனால் பக்தர்களின் ஆர்வமிக்க பிரார்த்தனைகள் இவ்விடத்தில் திருப்திப்படுத்தப்படுகின்றன.

பின்னர்   காகா பாபாவின்முன் விழுந்து நமஸ்கரித்து திராட்சையைச் சமர்ப்பித்தார்.  பாபா அவைகளை வினியோகிக்கக் கட்டளையிட்டார்.  டக்கருக்கும் சில கிடைத்தது.  அவருக்குத் திராட்சை பிடிக்கவில்லை.  மேலும் நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்தாமல் அவைகளைச் சாப்பிடவேண்டாம் என்று டாக்டர்கள் அவருக்குக் கூறியிருந்தனர்.  எனவே அவர் திகைத்தார்.  அதை அவர் விரும்பவில்லை.  ஒதுக்கித் தள்ளவும் முடியவில்லை.  சம்பிரதாயத்துக்காக அவைகளை வாயிலிட்டுக்கொண்டார்.  ஆனால் விதைகளை என்ன செய்வதென்று தெரியவில்லை.  மசூதித் தரையில் அவைகளைத் துப்ப அவரால் இயலவில்லை.  எனவே அவரது விருப்பத்துக்கு மாறாக அவைகளைத் தனது சட்டைப் பையில் போட்டுக்கொண்டார். 

பாபா ஒரு ஞானியாயிருந்தால் திராட்சையின் மீது தமக்குள்ள வெறுப்பை அவர் எங்ஙனம் அறியாமலிருந்து அதை உண்ணச்சொல்லி அவரை வற்புறுத்த முடியும் என்று
தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.  இவ்வெண்ணம் அவர் மனதில் எழும்பியதும், பாபா அவருக்கு மீண்டும் சில திராட்சைகளைக் கொடுத்தார்.  அதை அவரால் உண்ண இயலாமல் கைகளில் வைத்துக்கொண்டிருந்தார்.  அப்போது பாபா அதை உண்ணும்படி அவரைக் கேட்டார்.  அவரும் கீழ்ப்படிந்தார்.  அவரது ஆச்சரியத்திற்கேற்ப அவைகளெல்லாம் விதையற்ற திரட்சைகளாயிருந்தன.  அற்புதங்களை அவர் காண விரும்பினார்.  இதோ ஒன்று!  பாபா, தனது எண்ணத்தை அறிந்து அவரது விருப்பத்திற்கேற்ப விதையுள்ள திராட்சைகளை விதையற்றவைகளாக மாற்றிவிட்டார் என்பதை அவர் அறிவார்.

எத்தகைய வியத்தகு சக்தி!  மேலும் சோதிக்க விரும்பி பக்கத்திலிருந்து தர்கட்டை அவர் எவ்வகைத் திராட்சை வைத்திருக்கிறார் எனக் கேட்டார்.  அவர் "விதையுள்ள திராட்சை" என்றார்.  டக்கருக்கு இதைக்கேட்க இன்னும் அதிக வியப்பாயிற்று.  தமது வளர்ந்துவரும் நம்பிக்கையை உறுதிப்படுத்த பாபா ஒரு உண்மையான ஞானியானால் திராட்சை காகாவுக்கு முதலில் கொடுக்கப்பட வேண்டுமென நினைத்தார்.  இவ்வெண்ணத்தையும் படித்தறிந்த பாபா, காகாவிலிருந்து தொடங்கி வினியோகம் செய்யப்படவேண்டுமென ஆணையிட்டார்.  இந்த நிரூபணங்களெல்லாம் தக்கருக்குப் போதுமானவைகளாய் இருந்தன. 

பின்னர் ஷாமா, டக்கரை பாபாவிடம் காகாவின் எஜமானர் என்று அறிமுகப்படுத்தினார்.

பாபா:  அவரது எஜமானராக இவர் எங்ஙனம் இருக்க முடியும்?  அவருக்கு முழுமையும் வேறொரு எஜமானர் இருக்கிறார். 

காகா இப்பதிலைப் பாராட்டினார்.  தனது தீர்மானத்தை மறந்துவிட்டு டக்கர் பாபாவை வணங்கிய பின்னர் வாதாவுக்குத் திரும்பினார்.

மத்தியான ஆரத்தி முடிந்ததும் அவர்களெல்லாம் புறப்படுவதற்கு பாபாவின் அனுமதி பெறுவதற்காக மசூதிக்குச் சென்றனர்.  ஷாமா அவர்களுக்காகப் பேசினார்.  பின்னர் பாபா இவ்விதமாக உரைத்தார். 



"நிலையற்ற புத்தியுள்ள ஒரு மனிதன் இருந்தான்.  அவன் செல்வம், ஆரோக்கியம் முதலியை வாய்க்கப் பெற்றிருந்தான்.  மனோ வேதனைகளிலிருந்து விடுபட்டவனாக இருந்தான்.  எனினும் தேவையற்ற கவலைகளையும், பாரங்களையும் தன்மீது போட்டுக்கொண்டு, மன அமைதியை இழந்து இங்குமங்கும் சுற்றித் திரிந்தான்.  சில சமயம் பாரத்தையெல்லாம் இறக்கிவிட்டும், சில சமயம் அவற்றை மீண்டும் சுமந்தவனாயும் இருந்தான்.  அவனது மனம் ஒரு உறுதிப்பாட்டையே அறிந்ததில்லை.  அவனது நிலைகண்டு நான் இரக்கம் கொண்டேன்.  அவனிடம் "இப்போது நீ விரும்பும் ஏதாவது ஒரு இடத்தின் (குறிக்கோள்) மீது உனது நம்பிக்கையைத் தயவுசெய்து வைப்பாயாக, ஏன் இவ்வாறு சுற்ற வேண்டும்?  அமைதியாக ஏதாவதொரு இடத்தைப் பற்றிக்கொள்" என்று கூறினேன்.

உடனே டக்கர் அப்பொருத்தமான வர்ணனை தமக்குரியதே என அறிந்தார்.  காக்காவும் தம்முடன் திரும்பவேண்டுமென அவர் நினைத்தார்.  காகா அவ்வளவு சீக்கிரம் அனுமதிக்கப்படுவார் என்று ஒருவரும் எண்ணவில்லை.  பாபா அவரின் இந்த எண்ணத்தையும் படித்தறிந்து காகாவை அவருடைய எஜமானருடனேயே திரும்ப அனுமதியளித்தார்.  மற்றொருவரின் மனதில் இருக்கும் எண்ணத்தையறியும் பாபாவின் திறமைக்கு மேலுமொரு நிரூபணம் அவருக்குக் கிடைத்தது.

பின்னர் பாபா, காகாவிடமிருந்து ரூ.15 தஷிணையாகக் கேட்டுப்பெற்றார்.  அவர் காகாவிடம் பின்வருமாறு கூறினார்.  "எவரிடமிருந்தாவது ஒரு ரூபாய் தஷிணையாகப் பெற்றுக்கொண்டேன் என்றால் அவர்களுக்குப் பத்து மடங்காகத் திருப்பித்தர வேண்டியிருக்கிறது.  நான் ஒருபோதும் எதையும் விலை இல்லாமல் இலவசமாகப் பெறுவது கிடையாது.  சீர்தூக்கிப் பாராது நான் யாரிடமிருந்தும் தஷிணை பெறுவதில்லை.

யாரை பக்கிரி (என் குரு) சுட்டிக் காண்பிக்கிறாரோ அவரிடமிருந்து மட்டுமே நான் கேட்கிறேன்.  யாரேனும் பக்கிரிக்கு முன்பே கடன்பட்டிருந்தால் அவரிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது.  எதிர்காலத்தில் கணிசமான அறுவடை செய்வதற்கே அவர்கள் இப்போது கொடுப்பதன் மூலம் விதைக்கிறார்கள்.  தர்மத்தைச் செயல்படுத்துவதில் செல்வம் ஒருவழியாக இருக்கவேண்டும்.  இது சுய இன்பத்துக்காகப் பயன்
படுத்தப்பட்டால் அது வீணாக்கப்படுகிறது.

நீ அதை ஏற்கனவே கொடுத்திருந்தாலொழிய தற்போது அதைப் பெறமுடியாது.  எனவே பெறுவதற்கு மிகச்சிறந்த வழி கொடுத்தலேயாம்.  தஷிணை கொடுத்தல் வைராக்கியத்தை (பற்றின்மை) வளர்க்கிறது.  அதன் மூலம் பக்தி, ஞானம் இவற்றை விருத்தி செய்கிறது.  ஒன்றைக் கொடுத்துப் பத்தாகத் திரும்பப் பெறுங்கள்".

இம்மொழிகளைக் கேட்டுத் தமது தீர்மானத்தை மறந்தவராய் டக்கர் தாமாகவே ரூ.15ஐ பாபாவின் கைகளில் கொடுத்தார்.  அவரது எல்லா ஐயங்களும் தீர்க்கப்பட்டு பலவற்றைக் கற்றுக்கொண்டார்.  ஆதலால் ஷீர்டிக்குத் தாம் வந்தது நன்மையானது என்று அவர் எண்ணினார்.

இத்தகைய விஷயங்களைக் கையாளுவதில் பாபாவின் திறமை தனித்தன்மை வாய்ந்தது.  இவைகள் யாவற்றையும் அவர் செய்தபோதும் மொத்தத்தில் இவைகளின் மேல் சாராதவராகவே இருந்தார்.  யாராவது அவரை வணங்குவதோ,அல்லது வணங்காமலிருப்பதோ, அவருக்குத் தஷிணை கொடுப்பதோ, கொடுக்காமல் இருப்பதோ, இவைகள் எல்லாம் அவருக்கு ஒன்றே.  அவர் ஒருவரையும் அவமதிக்கவில்லை.  தாம் வணங்கப்படுவதால் அவர் மகிழ்ச்சியடைந்ததில்லை.  அன்றி தாம் மதிக்கப்படாததால் அவர் துன்புற்றதுமில்லை.  மாறுபட்ட இருமைக
ளை (சுகம், துக்கம் போன்றவற்றை) அவர் கடந்து நின்றார்.



தூக்கமின்மை வியாதி

பாந்த்ராவில் காயஸ்த பிரபு ஜாதியைச் சேர்ந்த ஒருவர் நெடுநாள் தூக்கமின்மை நோயால் அல்லலுற்றார்.  அவர் படுக்கையில் படுத்தவுடனே அவரது இறந்துபோன தந்தையார் கனவில் தோன்றி அவரைக் கடுமையாகத் திட்டினார்.  இது அவரது தூக்கத்தைக் கலைத்து இரவு முழுவதும் அவரை இருப்புக்கொள்ளாமல் செய்தது.   ஒவ்வொருநாள் இரவும் இது நடந்தது.  அம்மனிதருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.  ஒருநாள் பாபாவின் பக்தரொருவரை அவர் இவ்விஷயத்தில் கலந்தாலோசித்தார்.  பிழையாத
நிவாரண சஞ்சீவினியாக பாபாவின் உதி ஒன்றையே அவர் அறிவார். 

அவருக்குச் சிறிது உதி கொடுத்து அவர் படுக்கைக்குப் போகும்முன்னர், அதைச் சிறிது
நெற்றியிலிட்டுக் கொள்ளும்படியும், அவ்வுதிப் பொட்டலத்தை தலையணைக்கடியில் வைத்துக் கொள்ளும்படியும் கூறினார்.  இந்த சிகிச்சையை அவர் முயன்று பார்த்தார்.  அவரது பெரும் வியப்புக்கும், மகிழ்வுக்கும் ஏற்ப அவருக்கு நல்ல உறக்கம் ஏற்பட்டது.  எவ்விதத் தொந்தரவும் இல்லை.  இந்தச் சிகிச்சையையே அவர் தொடர்ந்து பின்பற்றி எப்போதும் சாயியையே நினைவு கூர்ந்தார்.  பின்னர் சாயிபாபாவின் படம் ஒன்றை பெற்று தனது தலையணைக்கருகில் அதைத் தொங்கவிட்டு அதனை தினந்தோறும் வழிபடத் தொடங்கி வியாழக்கிழமைகளில் பூமாலை, நைவேத்தியம் முதலியவற்றைச் சமர்ப்பித்தார்.  பின்னர் அவர் சௌக்கியமாகி முந்தைய தொந்தரவையே முழுவதும் மறந்துவிட்டார்.



பாலாஜி பாடீல் நெவாஸ்கர்

இம்மனிதர் பாபாவின் ஒரு பெரும் பக்தர்.  மிகமிகச் சிறப்பான பற்றற்ற பணியைப் பாபாவுக்கு அவர் செய்தார்.  ஒவ்வொரு நாளும் ஷீர்டியில் பாபா தமது தினசரி நியமமாக நடந்துவரும் தெருக்கள், பாதைகள் எல்லாவற்றையும் பெருக்கி சுத்தமாக்கினார்.  அவருக்குப் பின்னர், இப்பணியானது ராதாகிருஷ்ணமாயி என்ற பக்த மாதுவாலும், அதற்குப்பின் அப்துலாலும் அதே அளவு சிறப்புடன் செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பாலாஜி கோதுமை அறுவடை செய்தபோது அனைத்தையும் பாபாவுக்குக் கொண்டுவந்து சமர்ப்பித்துவிடுவார்.  மீதமாக பாபா எதைக் கொடுத்தாரோ அதைப் பெற்றுக்கொண்டு தமது குடும்ப சம்ரக்ஷணத்தை செய்தார்.  இந்நடைமுறையானது அவரால் பல ஆண்டுகள் செய்யப்பட்டு அவருக்குப்பின் அவரது மகனாலும் செய்யப்பட்டது.



உதியின் சக்தியும் செயல் திறமையும்

ஒருமுறை பாலாஜியின் திவசத்தின்போது சில விருந்தினர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது.  ஆனால் சாப்பாட்டு நேரத்தில் அழைக்கப்பட்டதைப் போல் மூன்று மடங்குபேர் வந்துவிட்டனர்.  பாலாஜியின் மனைவி திகைத்துப் போய்விட்டாள்.  குழுமியிருந்த மக்களுக்கு உணவு பற்றாது என்றும், அது பற்றாது போகுமானால் குடும்பத்தின் கௌரவம் பாதிக்கப்படும் என்றும் அவள் நினைத்தாள்.

அவளது மாமியார் "பயப்படாதே, அது நம்முடைய உணவல்ல, சாயியினுடையது.  ஒவ்வொரு பாத்திரத்திலும் கொஞ்சம் உதியைப்போட்டு ஒரு துணியால் மூடி அதைத் திறக்காமலே அவர்களுக்குப் பரிமாறு!  சாயி நம்மை இந்த அவமானத்திலிருந்து காப்பார்" என்று கூறித் தேற்றினாள்.  அவள் கூறியபடியே செய்தாள்.  தங்களது வியப்புக்கும், மகிழ்வுக்கும் ஏற்ப பரிமாறப்பட்ட உணவு எல்லோருக்கும் போதுமானதாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ஏராளமாக மீதமும் இருந்ததைக் கண்டார்கள்.  "ஒருவன் எவ்வளவு அதிகம் மனமார்ந்த அக்கறையுடன் உணர்கிறானோ அவ்வளவு அதிகமாக அவன் செயலுருவாக்கிக் காண்கிறான்" என்னும் மொழி இவ்விஷயத்தில் நிரூபணமாக்கப்பட்டது.**

** என்னுடைய நண்பரும் பாபாவின் பெரிய பக்தருமான B.A.Soukul (First Class Sub-Magistrate) இதைப்போன்ற ஒரு விஷயத்தை என்னிடம் அறிவித்தார்.  1943ஆம் ஆண்டு மாசி மாதம், அஹமத்நகர் ஜில்லாவிலுள்ள கர்ஜத்தில் பூஜைத் திருவிழாவும், பொதுஜன விருந்தும் நடந்தது.  பின்னைய நிகழ்ச்சிக்கு, விருந்துக்கு அழைக்கப்பட்டதைப் போல் ஐந்து மடங்குபேர் வந்துவிட்டனர்.  அவர்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது.  பாபாவின் அருளால் அனைவரும் வியக்கும் வண்ணம் எவ்வித உணவுக்குறைவும் உணரப்படவில்லை.



சாயிபாபா நாகமாத் தோன்றுதல்

ஒருமுறை ஷீர்டியைச் சேர்ந்த ரகு பாடீல் என்பவர் நெவாசைச் சேர்ந்த பாலாஜி பாடீல் என்பாரிடம் சென்றார்.  அன்று மாலை மாட்டுத் தொழுவத்தில் ஒரு பாம்பு சீறிக்கொண்டு உள் நுழைவதைக் கண்டார்.  எல்லா மாடுகளும் பீதியடைந்து நகரத் தொடங்கின.  வீட்டினரும் திகிலடைந்தனர்.  ஆனால் பாலாஜி தனது வீட்டில் சாயியே பாம்பாகத் தோன்றியிருக்கிறார் என எண்ணினார்.  துளிகூட பயப்படாமல் ஒரு கிண்ணத்தில் பாலை கொண்டுவந்து பாம்பின் முன்வைத்து, "பாபா! ஏன் சீறி சப்தப்படுத்துகிறீர்கள்?  ஏன் எங்களைப் பயமுறுத்த விரும்புகிறீர்கள்?  இந்தக் கிண்ணத்திலுள்ள பாலை அமைதியான மனதுடன் அருந்துங்கள்" என்று கூறிக்கொண்டே அதனருகில் குழப்பமுறாமல் அமர்ந்தார்.  மற்றவர்கள் பீதியடைந்தனர்.  என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.  சிறிது நேரத்தில் பாம்பு தானாகவே மறைந்து போய்விட்டது.  யாருக்கும் அது எங்கு சென்றதெனத் தெரியாது.  மாட்டுத் தொழுவத்தில் தேடியும் அது காணப்படவில்லை.**

பாலாஜிக்கு இரண்டு மனைவிகளும், சில குழந்தைகளும் இருந்தனர்.  அவர்கள் சில சமயம் நெவாஸில் இருந்து பாபாவின் தரிசனத்துக்காக ஷீர்டிக்கு வருவர்.  அப்போது பாபா சேலையும் மற்ற உடைகளும் வாங்கி அவைகளைத் தமது ஆசியுடன் அவர்களுக்கு அளிப்பார்.

(** கோயம்புத்தூரில் இதே மாதிரியாக 1943 தை 7ஆம் தேதி வியாழன் மாலை 3:30 மணிக்கு பாபா பாம்பாகத் தோன்றிய விவரம் சாயிசுதா சஞ்சிகையில் (தொகுப்பு 3 , எண் 7&8 , ஜனவரி 1943 , பக்கம் 26) பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.  அங்கு அப்பாம்பு பஜனையைக் கேட்டது. மலரையும், பாலையும் ஏற்றுக்கொண்டது.  ஆயிரக்கணக்கான மக்கள் தன்னைக் காணவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதித்தது.  போட்டோ எடுப்பதற்காக பாபாவின் படம் அதன் அருகில் வைக்கப்பட்டது.  படமும், பாம்பும் போட்டோவில் மிகச்சிறப்பாக பதிந்திருக்கிறது.  விவரங்களுக்கும், போட்டோவுக்கும் வாசகர்கள் மேற்குறித்த சாயிசுதாவை காண்க.)


ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்