Thursday, 26 April 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 21

•   திரு. V.H.டாகூர்
•   அனந்தராவ் பாடண்கர்
•   பண்டாரீபுரத்து வக்கீல் 
ஆகியோரின் கதைகள்.

இவத்தியாயத்தில் விநாயக் ஹரிச்சந்திர டாகூர், புனேவைச் சேர்ந்த அனந்தராவ் பாடண்கர், பண்டரீபுரத்தைச் சேர்ந்த ஒரு வக்கீல் ஆகியோரின் கதைகளை ஹேமத்பந்த் விவரிக்கிறார்.  இந்தக் கதைகளெல்லாம் நிறைந்த சுவையானவை.  அவைகளை மிகுந்த கவனத்துடன் கற்றுக் கிரகித்துக் கொண்டால் வாசகர்களை அது ஆன்மீகப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.



முன்னுரை

முற்பிறவிகளில் சேகரித்த நல்வினைகள் என்ற ரூபத்திலுள்ள நமது நல்ல அதிஷ்டமே முனிவர்களின் கூட்டுறவை நாம் பெறுவதற்கு அடிகோலி, அதனால் பயன் எய்தும்படி செய்கிறது என்பது பொதுவான நியதியாகும்.  இந்நியதியின் விளக்கமாக ஹேமத்பந்த் தமது சொந்த நிகழ்ச்சியை எடுத்துக் காண்பிக்கிறார்.  பம்பாயின் புறநகர்ப்பகுதியான பாந்த்ராவில் பல ஆண்டுகளாக அவர் ரெஸிடெண்ட் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தார்.  

பீர் மௌலானா என்னும் பெயருடைய புகழ்பெற்ற முஹமதிய முனிவர் ஒருவர் அங்கு வசித்து வந்தார்.  பல இந்துக்கள், பார்ஸியர்கள், மற்றும் பல மதத்தினரும் அவரிடம் சென்று தரிசனம் பெறுவது வழக்கம்.  இனூஸ் என்ற பெயர்கொண்ட அவருடைய முஜாவர்(பூசாரி) இரவும், பகலும் பலமுறை அவரைச் சென்று தரிசிக்கும்படி ஹேமத்பந்தை வற்புறுத்தி வந்தார்.  ஆனால் என்ன காரணத்தாலோ அவரால் பீர் மௌலானாவைத் தரிசிக்க முடியவில்லை.  பல ஆண்டுகட்குப் பிறகு அவருடைய முறை வந்தது.  ஷீர்டிக்கு அவர் அழைக்கப்பட்டார்.  அவர் அங்கேயே சாயிபாபாவின் தர்பாரில் நிரந்தரமாகச் சேர்க்கப்பட்டார்.  துரதிஷ்டம் உள்ளவர்கள், முனிவர்களின் தொடர்பை இப்படிப் பெறுவதில்லை.  அதிஷ்டசாலிகள் மட்டுமே அதைப் பெறுகிறார்கள்.



முனிவர்களின் நிறுவனங்கள்

நினைவுக்கும் எட்டாத பழங்காலத்திலிருந்து இவ்வுலகில் முனிவர்களுடைய நிறுவனங்கள் (ஆச்சிரமங்கள்) இருந்துவருகின்றன.  வெவ்வேறு முனிவர்கள் வெவ்வேறு இடங்களில் தம்மைத் தாம் தோற்றுவித்துக்கொண்டு (அவதரித்து) தங்களுக்காக ஒதுக்கபட்ட பணித்திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.  வெவ்வேறு இடங்களில் செயலாற்றியபோதும் அவர்கள் அனைவரும் ஒருவரேயாவர்.  

அனைத்தும் வல்ல பரம்பொருள் என்கின்ற பொதுவான ஆணையுரிமையின் கீழ் அவர்கள் அனைவரும் ஒத்தியையுடன் செயல்படுகிறார்கள்.  அவர்கள் ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் தத்தம் இடங்களில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும்.  தேவைகள் ஏற்படும்போது பிறிதொருவரின் வேலையை நிறைவு செய்கிறார்கள்.  இதை விளக்கும் ஒரு நிகழ்ச்சி கீழே தரப்பட்டிருக்கிறது. 



திரு. டாகூர் 

V.H.டாகூர் B.A., என்பவர் வருவாய்த்துறை அலுவலகத்தில் ஒரு குமாஸ்தா.  அவர் ஒருமுறை ஒரு சர்வே கோஷ்டியுடன் பெல்காமுக்கு (தெற்கு மஹாராஷ்ட்ரம்) அருகிலுள்ள வட்காவனுக்கு வந்தார்.  அங்கு அவர் கன்னட முனிவர் ஒருவரைக் கண்டு அவர் முன் வணக்கம் செலுத்தினார்.  நிச்சலதாஸின் 'விசார சாகரம்' என்ற நூலின் (வேதாந்தத்தைப் பற்றிய இயன்மதிப்பார்ந்த இலக்கியப் படைப்பு) ஒரு பகுதியை அவையோரின்முன் எடுத்து விளக்கிக் கொண்டிருந்தார்.  டாகூர் புறப்படுவதற்காக முனிவரிடம் விடை பெறும்போது அவர், "நீ இந்தப் புத்தகத்தைக் கற்கவேண்டும்.  அங்ஙனம் செய்வாயேயாகில் உனது விருப்பங்கள் நிறைவேற்றப்படும்.  எதிர்காலத்தில் உனது அலுவலகக் கடமைகளின் நிமித்தமாக நீ வடக்கே செல்லும்போது உனது நல்ல அதிஷ்டத்தினால் ஒரு பெரிய முனிவரைக் காண்பாய்.  அவர் உனக்கு எதிர் காலத்திற்குரிய வழியைக் காண்பிப்பார்.  உனது மனதுக்கு ஓய்வுகொடுத்து உன்னை மகிழச் செய்வார்" என்று கூறினார்.  

பின்னர் அவர் ஜுன்னருக்கு மாற்றப்பட்டார்.  நாணேகாட் என்ற  நாணே மலைத்தொடரை அவர் கடந்து செல்லவேண்டியதாய் இருந்தது.  மலைத்தொடர் மிகவும் செங்குத்தாகவும், கடப்பதற்கு இயலாததாகவும் இருந்தது.  அதனைக் கடக்க ஒரு எருமை மாட்டைத் தவிர வேறு எவ்விதப் போக்குவரத்து வசதியும் இல்லை.  எனவே மலைத்தொடரின் மீது செல்வதற்கு அவர் எருமையின் மீது சவாரி செய்யவேண்டியதாயிற்று.  அது அவரை மிகுந்த அசௌகரியத்திற்கும், வலிக்கும் உட்படுத்தியது.  

பின்னர் அவர் கல்யாணுக்கு உயர்ந்த பதவியில் மாற்றப்பட்டார்.  அங்கு அவருக்கு நானா சாஹேப் சாந்தோர்கரின் பழக்கம் ஏற்பட்டது.  சாயிபாபாவைப் பற்றி அவரிடமிருந்து நிரம்பக் கேள்விப்பட்டிருந்தார்.  அவரைப் பார்க்க விரும்பினார்.  அடுத்தநாள் நானா சாஹேப் ஷீர்டிக்குச் செல்வதாக இருந்தார், போகும்போது டாகூரையும் தன்னுடன் கூடவரும்படி அழைத்தார்.  டாகூரால் அவருடன் செல்ல இயலவில்லை.  ஏனெனில், ஒரு சிவில் வழக்கு விஷயமாக அவர் தாணே சிவில் கோட்டில் ஆஜராக வேண்டியிருந்தது.  எனவே, நானா சாஹேப் தனியாகச் சென்றார்.  டாகூர் தாணேவுக்குச் சென்றார்.  அனால், அங்கு விசாரணை ஒத்திப்போடப்பட்டது.  பின்னர், அவர் தாம் நானா சாஹேபுடன் செல்லாததற்கு பச்சாதாபப்பட்டார்.  எனினும் அவர் ஷீர்டிக்குச் சென்றார்.  அங்கு சென்றபோது அதற்கு முதல் தினமே நானா சாஹேப் ஷீர்டியை விட்டுச் சென்றதாக அறிந்தார்.  அவ்விடத்தில் சந்தித்த அவருடைய மற்ற நண்பர்கள் அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றார்கள்.  அவர் பாபாவைத் தரிசித்து அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.  அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தார்.  அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது.  அவர் உடம்பு புல்லரித்தது.  சிறிது நேரத்திற்குப் பின்னர் எங்கும் நிறை பேரறிவாளராகிய பாபா அவரைநோக்கி, "இவ்விடத்தினுடைய வழியானது கன்னடதேச முனிவரான அப்பாவின் உபதேசங்களைப் போன்றோ, நாணேகாட்டின் எருமைச் சவாரியைப் போன்றோ அவ்வளவு எளிதானதன்று.  இவ்வாத்மிக வழியில், அது மிகவும் கடினமானதாகையால் நீர் உமது மிகச்சிறந்த முயற்சியைக் கைக்கொள்ளுதல் அவசியமாகும்" என்று கூறினார்.  தாம் மட்டுமே அறிந்த இத்தகைய உட்கருத்து வளஞ்செறிந்த அடையாளங்களையும், சொற்களையும் கேட்டு டாகூர் ஆனந்தக் களிப்பில் மூழ்கினார்.  கன்னடதேச முனிவரின் மொழிகள் உண்மையானதைத் தெரிந்துகொண்டார்.  பின்னர் அவர் தனது இருகரங்களையும் கூப்பி வணங்கித் தன சென்னியை பாபாவின் பாதங்களில் வைத்து, தாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்று வேண்டினார்.  பின்னர் பாபா கூறினார், "அப்பா உன்னிடம் சொன்னது சரியானதே.  ஆனால், இவைகள் பயிலப்பட்டு வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.  வெறும் கல்வியினால் பயனேதும் இல்லை.  நீங்கள் சிந்தித்து, கற்றபடி நெறியில் நிற்றல் வேண்டும்.  இல்லாவிடில் அவைகளால் ஒரு பலனும் இல்லை.  குருவின் அனுக்கிரஹமின்மையும், ஆத்மானுபூதியின்றியும் உள்ள வெறும் ஏட்டுப் படிப்பால் பயனில்லை".  விசார சாகரம் என்ற நூலின் கோட்பாட்டியல் பகுதி டாகூரினால் படிக்கப்பட்டு வந்தது.  ஆனால் ஷீர்டியில் அவருக்கு நடைமுறையிலான வழி காண்பிக்கப்பட்டது.  பின்னால் கொடுக்கப்பட்ட்ட மற்றொரு நிகழ்ச்சியும், இவ்வுண்மையை இன்னும் அதிக வன்மையுடன் வெளிக்கொணர்கிறது.  



அனந்தராவ் பாடண்கர்

புனேவைச் சேர்ந்த  அனந்தராவ் பாடண்கர் என்னும் பெருந்தகை ஒருவர் பாபாவைக் காணவிரும்பினார்.  அவர் ஷீர்டிக்கு வந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றார்.  அவரது கண்களில் ஆவல் நிறைவேறின.  அவர் மிகவும் ஆனந்தமடைந்தார்.  பாபாவின் பாதங்களில் வீழ்ந்து  உரிய வழிபாட்டை நிகழ்த்தியபின்பு, பாபாவிடம் "நான் ஏராளமாகப் படித்திருக்கிறேன்.  வேதங்கள், வேதாந்தங்கள், உபநிஷதங்கள் இவைகளைப் பயின்றும், புராணங்களைக் கேட்டும் இருக்கிறேன்.  என்றாலும் எனக்கு மன அமைதி ஏற்படவில்லை.  

எனவே, எனது கல்வியறிவு யாவும் பயனற்றவை என நினைக்கிறேன்.  எளிய, ஒன்றும் அறியாத பக்தியுள்ள மக்கள் என்னைவிடச் சிறந்தவர்கள்.  மனம் அடங்கினாலன்றி எந்த நூலறிவும் பயனில்லை.  தங்கள் திருநோக்கினாலும், விளையாட்டான மொழிகளாலும் தாங்கள் எளிதாக எவ்வளவோ மக்களுக்கு மனச்சாந்தி வழங்குகிறீர்கள் என்று நான் பலரிடம் இருந்து கேட்டிருக்கிறேன்.  எனவே, நான் இங்கு வந்திருக்கிறேன்.  தயவுசெய்து என்மேல் இரக்கம் காண்பித்து, என்னை ஆசீர்வதியுங்கள்" என்று கூறினார்.  இதற்கு பாபா அவருக்கு ஒரு உருவகக் கதை சொன்னார்.



ஒன்பது லத்தி உருண்டைகளின் கதை (நவவித பக்தி)                       

ஒருமுறை ஒரு வணிகன் இவ்விடம் வந்தான்.  அவன் முன்னால் ஒரு குதிரை லத்தி (சாணம்) இட்டது.  (ஒன்பது உருண்டை லத்தி) வணிகன் மனமார்ந்த அக்கறையுடன் தனது வேட்டியின் முனையை விரித்து அந்த ஒன்பது உருண்டைகளையும் அதில் சேகரித்தான்.  அதன் மூலம் அவன் மன ஒருமைப்பாட்டை (மன அமைதி) அடைந்தான்.  

பாடண்கருக்கு இக்கதையின் உட்பொருள் விளங்கவில்லை.  எனவே, அவர் கணேஷ் தாமோதர் என்ற தாதா கேல்கரிடம் பாபா இதன்மூலம் என்ன போருல்கொல்கிறார் என்று கேட்டார்.  அவர் "எனக்கும் பாபா பொருள்கொள்வது, சொல்லுவது அனைத்தும் தெரியாது என்றாலும், அவருடைய தெய்வீக அகத்தூண்டுதலால் நான் தெரிந்துகொண்டதைக் கூறுகிறேன்.  குதிரையே கடவுளின் அருள்.  வெளிப்பட்ட ஒன்பது உருண்டைகள் பக்தியின் ரூபங்கள் அல்லது வகைகள்.  அவையாவன:
(1)  ஸ்ரணவம் - கேட்டல்
(2)  கீர்த்தனை - வேண்டுதல்
(3)  ஸ்மரணம் - நினைவுறுத்திக்கொள்ளுதல்
(4)  பாத சேவனம் - பாதங்களைத் தஞ்சமடைதல்
(5)  அர்ச்சனை - பூஜை
(6)  நமஸ்காரம் - வணங்குதல் 
(7)  தாஸ்யா - சேவை
(8)  சக்யத்வா - நட்பு 
(9)  ஆத்மா நிவேதனம் - தன்னையே இறைவனுக்குச் சமர்ப்பித்தல்

இவைகள் பக்தியின் ஒன்பது விதங்கள்.  இவைகளில் ஏதாகிலும் நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டால் பரமாத்மாவாகிய ஹரி மகிழ்வெய்தி பக்தனின் வீட்டில் தாமே வெளிப்படுவார்.  எல்லாச் சாதனைகளும் அதாவது ஜபம், தபம், யோகப்பயிற்சி, வேதபாராயணம் அவைகளின் வியாக்கியானப் பேச்சு ஆகியவை யாவும் பக்தியுடன் சேர்ந்திருந்தாலன்றி முழுவதுமாகப் பயனற்றவையே ஆகும்.  வேதஞானம் அல்லது பெரும் ஞானி என்ற புகழ், வெறும் சம்பிரதாய பஜனை இவற்றால் பயனில்லை.  அன்பான பக்தியே தேவைப்படுவதாகும்.  வணிகனைப் போன்றோ அல்லது உண்மையைத் தேடும் ஒருவனைப் போன்றோ உங்களைக் கருதிக்கொள்ளுங்கள்.  ஒன்பதுவகை பக்தியை விளைவிப்பதில் அல்லது ஒன்பதுவகை சேகரிப்பதில் அவன் கொண்டதைப் போன்ற கவலையுடனும், ஆர்வத்துடனும் இருங்கள்.  அப்போது நீங்கள் நிலையுறுதியையும், மனச்சாந்தியையும் எய்துவீர்கள்".

அடுத்தநாள் பாடண்கர் பாபாவை வணங்கச் சென்றபோது பாபா அவரை ஒன்பது லத்தி உருண்டைகளையும் சேகரித்தீரா எனக் கேட்டார்.  அதற்கு அவர் தான் ஒரு எளியவனாக இருப்பதால் பாபா அவருக்கு முதலில் அருள்செய்ய வேண்டுமென்றும், பின்னர் அவைகளை எளிதாகச் சேர்க்கலாம் என்றும் தெரிவித்தார்.  அதன் பின் பாபா அவரை ஆசீவதித்து அவர் மன அமைதியையும், நமையும் அடைவார் என்று கூறி ஆறுதல் அளித்தார்.  இதைக்கேட்டு பாடண்கர் அளவுகடந்த இன்பமும், மகிழ்ச்சியும் அடைந்தார்.



பண்டரீபுரத்து வக்கீல்      

பாபாவின் எங்கும்நிறை பேரறிவையும், மக்களைத் திருத்துவதையும், சரியான பாதையில் அவர்களை நேரிப்படுத்துவதையும் கூறி இவ்வத்தியாயத்தை முடிப்போம்.  ஒருமுறை பண்டரீபுரத்திலிருந்து ஒரு வக்கீல் ஷீர்டிக்கு வந்து மசூதிக்குச் சென்றார்.  சாயிபாபாவைக் கண்டார்.  அவர்தம் பாதத்தடியில் வீழ்ந்தார்.  கேட்காமலேயே சிறிது தட்ஷணை அளித்தார்.  ஒரு மூலையில் அமர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் உரையாடலைக் கேட்க ஆர்வமுள்ளவராக இருந்தார்.

பின்னர் பாபா, தமது முகத்தை அவர் பக்கம் திருப்பி, "மக்கள் தாம் எவ்வளவு வஞ்சனை உடையவர்களாக இருக்கிறார்கள்!  அவர்கள், பாதங்களில் விழுகிறார்கள், தட்ஷணை அளிக்கிறார்கள், ஆனால் அந்தரங்கமாக, காணாவிடத்தில் திட்டுகிறார்கள்.  இது அற்புதமாக இல்லையா? என்று கூறினார்.  இக்குல்லாய் (குறிப்பு) வக்கீலுக்குப் பொருத்தமாக இருந்தது.  ஒருவருக்கும் இக்குறிப்பு விளங்கவில்லை.  வக்கீல் இதைக் கிரகித்தார்.  ஆனால் அவர் அமைதியாய் இருந்தார்.      

அவர் வாதாவுக்குத் திரும்பியபோது, வக்கீல் காகா சாஹேப் தீஷித்திடம் சொன்னதாவது, "பாபா குறிப்பிட்டது சரிநுட்பமாக உண்மையே ஆகும்.  இக்கணை என்மேலேயே எய்யப்படடது.  அதாவது மற்றவர்களைத் திட்டுவதிலோ, அவதூறு பேசுவதிலோ, நான் மனம்போன போக்கில் போகக்கூடாது என்ற எனக்குரிய குறிப்பேயாகும்.  பண்டாரீபுரத்தின் முன்சீஃப் அல்லது சப்-ஜட்ஜ் (நூல்கர்) தமது உடல்நல முன்னேற்றத்தை முன்னிட்டு இவ்விடம் வந்து தங்கியிருந்தபோது, பண்டரீபுரத்தின் பார்-ரூமில் (வக்கீல்கள் அறை) இந்த விஷயத்தைப் பற்றிய விவாதம் (மற்ற பார் அறைகளில் நடப்பதுபோன்று) நடந்தது.

துன்புற்று வந்த நோய்கள் யாவும் சாயிபாபாவின் பின்னால் போவதால் மட்டுமே மருந்துகள் இன்றி குணப்படுத்தப்படும் வாய்ப்பு சிறிதேனும் உள்ளதா என்றும், சப்-ஜட்ஜைப் போன்ற படித்தவர்கள் இதைப்போன்ற முறைகளை அனுசரிப்பது சரியா என்றும் சொல்லப்பட்டது அல்லது விவாதிக்கப்பட்டது.  அதாவது மறைமுகமாக சாயிபாபா அவதூறு பேசப்பட்டார் அல்லது குறைகூறப்பட்டார்.  நானும் இந்த விஷயத்தில் கொஞ்சம் பங்கு கொண்டேன்.  இப்போது சாயிபாபா எனது ஒழுங்கீனத்தை எடுத்துக் காட்டினார்.  இது எனக்குரிய கண்டனமாகாது, ஆனால் ஓர் சகாயமாகும்.  ஓர் உபதேசமாகும்.  அதாவது நான் பிறரைத் தூற்றுவது, துஷ்பிரசாரம் செய்வது இவற்றில் தன்னிச்சையுடன் செயல்படக்கூடாது என்பது பற்றியும் அனாவசியமாகப் பிறர் காரியங்களில் தலையிடக்கூடாது என்பது பற்றியுமாகும்".

ஷீர்டி, பண்டாரீபுரத்திலிருந்து முந்நூறு (300) மைல் தூரத்தில் இருக்கிறது.  எனினும் அங்குள்ள பார் அறையில் என்ன நிகழ்ந்தது என்பதை பாபா தமது எங்கும் நிறை பேரறிவால் அறிந்திருந்தார்.  இடையில் உள்ள இடங்கள், ஆறுகள், காடுகள், மலைகள் யாவும் அவர்தம் அனைத்தையும் உணரும் பார்வைக்குத் தடை செய்வன அல்ல.  அவர் எல்லோருடைய இதயங்களையும் பார்க்க முடியும்,  படிக்க முடியும்.  எதுவும் அவருக்கு இரகசியமோ, மறைக்கப்பட்டதோ அன்று.  அண்மையிலோ, சேய்மையிலோ உள்ள ஒவ்வொன்றும் பட்டப் பகலொளியைப் போன்று தெட்டத் தெளிவாகவும், சுத்தமாகவும் அவருக்குத் தெரியும்.

ஒரு மனிதன் பக்கத்தில் இருந்தாலும் அவன் சாயிபாபாவின் எங்கும்நிறை கூர்ந்த பார்வையினின்று தப்ப முடியாது.  இதிலிருந்து மற்றவர்களைப் பற்றித் தூஷணையாகப் பேசக்கூடாது என்றும், தேவையில்லாமல் மற்றவரைக் குறைகூறக் கூடாது என்றும் வக்கீல் அறிந்துகொண்டார்.  இவ்வாறாக அவர்தம் கெட்டகுணம் முழுவதுமாக மறைந்து நல்வழிக்குத் திருப்பபட்டார்.  இக்கதை வக்கீலுக்கே என்றாலும், அனைவருக்கும் இது பொருந்துவதேயாகும்.  அனைவரும் இந்நியதியை உள்ளத்தில்கொண்டு, அதனால் வரும் பயனை அடையவேண்டும்.

சாயிபாபாவின் பெருமை ஆழங்காண இயலாதது.  அவ்வாறே அவர்தம் அற்புதமான லீலைகளுமாகும்.  அவர்தம் வாழ்க்கையும் அங்ஙனமேயாகும்.  ஏனெனில் அவரே பரப்பிரம்ம அவதாரம் ஆவார்.

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

  

Thursday, 19 April 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 20

தாஸ்கணுவின் பிரச்சனை காகாவின் வேலைக்காரப் பெண்ணால் தீர்ந்தது.

இவ்வத்தியாயத்தில் காகா சாஹேப் தீஷித்தின் வேலைக்கரப் பெண்ணால் எங்ஙனம் தாஸ்கணுவின் பிரச்சனைக்கு விடை காணப்பட்டது என்பதை ஹேமத்பந்த் விவரிக்கிறார்.



முன்னுரை

சாயி (கடவுள்) முதலில் அருவமாய் இருந்தார்.  பக்தர்களுக்காக ஒரு ரூபத்தை அவர் புனைந்து கொண்டார்.  பிரபஞ்சம் என்னும் பெரும் நாடகத்தில் மாயை என்ற நடிகையின் உதவியுடன் அவர் நடிகரின் பாத்திரத்தை ஏற்று நடித்தார்.  நாம் சாயியை(கடவுளை) ஞாபகப்படுத்திக் கொள்வோம்.  அகக்காட்சியாக உருவாக்கிக் காண்போம்.  ஷீர்டிக்குச் சென்று மதிய ஆரத்திக்குப் பின் உள்ள நிகழ்ச்சிகளைக் கவனத்துடன் நோக்குவோம்.  ஆரத்திச் சடங்கு முடிந்த பின்னர் சாயிபாபா மசூதிக்கு வெளியில் வந்து அதன் விளிம்பில் நின்றுகொண்டு, மிகுந்த பட்சமும் அன்பும் கூடிய பார்வைகளுடன் பக்தர்களுக்கு உத்தியை வினியோகிப்பது வழக்கம்.  பக்தர்களும் அதேயளவு உணர்ச்சிவேகத்துடன் அவருடைய பாதங்களைப் பற்றிப் பிடித்துக்கொண்டனர்.  நின்றுகொண்டும், அவரை உற்று நோக்கிக்கொண்டும் உதிமழையை மகிழ்ந்தனுபவித்தார்கள்.  பாபா கைநிறைய உதியை பக்தர்களின் கைகளில் கொடுத்து அவர்களது நெற்றியில் தமது கைவிரல்களால் பூசிவிட்டார்.  அவர் தம்முடைய இதயத்தில் அவர்களுக்காகக் கொண்டிருந்த அன்பு எல்லையற்றது.  

பிறகு அவர் பக்தர்களை நோக்கிப் பின்வருமாறு அளவளாவினார்.  "ஓ! பாவ் சாப்பிடச் செல்லும், அண்ணா நீர் உமது இருப்பிடத்திற்குச் செல்லும்.  ஓ! பாபு உமது உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடும்".  இவ்வாறாகவே ஒவ்வொரு பக்தரையும் அழைத்துப் பேசி அவர்களை வீட்டிற்கு அனுப்பினார்.  இப்போதும்கூட இக்காட்சிகளை உங்களது கற்பனையைத் தட்டிவிடுவதன் மூலம் நீங்கள் மகிழ்ந்து அனுபவிக்கலாம்.  நீங்கள் அவைகளைக் கண்டு இன்புறலாம்.  இப்போது சாயியை அவரது பாதங்களிலிருந்து முகம்வரை நமது மனத்தில் உருவகப்படுத்தித் தியானிப்போம்.  அவர் முன்னிலையில் தாழ்மையுடனும், அன்புடனும், மரியாதையுடனும் வீழ்ந்து பணிந்துவிட்டு இவ்வத்தியாயத்தின் கதைக்குத் திரும்புவோம்.  



ஈசா உபநிஷதம் 

தாஸ்கணு ஒருமுறை ஈசா உபநிஷதத்துக்கு மராத்திய விளக்க உரை எழுத ஆரம்பித்தார்.  முதலில் இவ்வுபநிஷதத்தைப் பற்றிய சுருக்கமான கருத்து ஒன்றை மேற்கொண்டு தொடரும்முன் கூறுவோம்.  வேதசம்ஹிதையின் மந்திரங்களில் அது உள்ளடக்கப்பட்டிருப்பதால் அது மந்திரோபனிஷத் என்று அழைக்கப்படுகிறது.  வாஜஸனேய சம்ஹிதையின் (யஜூர் வேதம்) இறுதியான அல்லது நாற்பதாவது அத்தியாயத்தை இணைத்து உருவாக்குவதால் வாஜஸனேய சம்ஹிதோபனிஷத் என்று அழைக்கப்படுகிறது.  பிராம்மணங்களிலும், ஆரண்யங்களிலும் (மந்திரங்கள், வைதீகச் சடங்குகள் பற்றி விளக்கும் விக்கியானங்கள்) காணப்படும் வேதசம்ஹிதைகளில் உள்ளடக்கப்பட்டிருப்பதால், இதுவே மற்ற எல்லா உபநிஷதங்களையும் விடச் சிறப்பானது என்று கருதப்படுகிறது.  இது மட்டுமன்று, மற்ற உபநிஷதங்கள் எல்லாம் ஈசா உபநிஷத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கும் உண்மைகளைப் பற்றிய வியாக்கியானங்களேயாகும் என்று எண்ணப்படுகிறது.  உதாரணமாக உபநிஷதங்களிலேயே பெரிதான பிருஹதாரண்யக உபநிஷதமாவது ஈசா உபநிஷத மூலத்தோடு இணைந்த விளக்கவுரை என்று பண்டிட் சத்வலேகர் கருதுகிறார்.  

பேராசிரியர் R.D.ரானடே கூறுகிறார், "ஈசா உபநிஷதம் ஒரு சிறிய உபநிஷதமேயாகும்.  இருப்பினும் அசாதாரணமாகத் துளைத்து உட்செல்லும் ஆழ்ந்த நுண்ணறிவுத் திறத்தைக் காட்டுகின்ற பல குறிப்புக்களையும் அது பெற்றிருக்கின்றது.  பதினெட்டே செய்யுட்களுள்ள குறுகிய வட்டப்பரப்பில், ஆத்மாவைக் குறித்து மதிப்பு மிகப்பெற்ற அகநிலை உணர்வு சார்ந்த வர்ணனையை, தீயன செய்யத்தூண்டும் மயக்கங்களுக்கும், கவலைகளுக்கும் இடையில் கலக்கமுறாத முழுநலம் வாய்க்கப்பட்ட கர்மயோகம் என்னும் போதனைத் தொகுப்பிற்கு முன்னோடியான அறிவிப்பையும், இறுதியாக ஞானம் - கர்மம் இவைகளின் தகுதிகளைப் பற்றிய கருத்து முரண்பாடு நீக்கத்திற்குரிய ஒரு விளக்கத்தையும் அளிக்கிறது.  ஞானம் - கர்மம் என்ற எதிரிடைகளின் வாதப் பொருத்தமுடைய கூட்டிணைப்பே உபநிஷத்தின் ஆணிவேரில் உறைந்திருக்கும் மிகமிக மதிப்புள்ள கருத்தாகும்.  உயர்நிலை இணைப்பாக்கத்தின்போது பேதம் துடைதழிக்கப்படுகிறது.  (Book: Constructive Survey of the Upanishadic Philosophy, Page: 24) அவர் மற்றுமோர் இடத்தில் நீதி, மறை மெய்மை, நுண்பொருள் கோட்பாட்டியல் இவைகளின் ஒருமித்த கலவையே ஈசா உபநிஷதத்தின் பாடல்கள் என்றும் கூறுகிறார்.   

மேலே தரப்பட்ட இவ்வுபநிஷதத்தைப் பற்றிய சுருக்கமான விளக்கங்களால், வட்டாரப் பேச்சு மொழியில் இதனை மொழி பெயர்ப்பது என்பதும் சரிநுட்பமான அதே அர்த்தத்தைக் கொணர முற்படுவதும் எவ்வளவு கடினமானது என்று எவரொருவரும் அறிய இயலும்.  தாஸ்கணு இதைச் செய்யுள் - செய்யுளாக மராத்திய 'ஒவி' யாப்பு வகையில் மொழிபெயர்த்தார்.  ஆயினும் உபநிஷதத்தின் சாராம்சத்தை அவர் புரிந்துகொள்ளாததால் தமது செயல்நிறைவு பற்றி அவர் திருப்தி கொள்ளவில்லை.  மன நிறைவடையாதவராய் சில அறிஞர்களைத் தமது சந்தேகங்கள் பற்றியும், கஷ்டங்களைப் பற்றியும் கலந்து ஆலோசித்து அவர்களுடன் அதைப்பற்றி மிகவும் விரிவாக விவாதித்தார்.  அவர்கள் அவைகளுக்கு விடைகாணவும் இல்லை, அறிவாராய்ச்சி முறை சார்ந்தோ, திருப்தியுடையதோவாகிய விளக்கமும் அளிக்கவில்லை.  எனவே தாஸ்கணு இதனைப் பற்றிச் சிறிது மன உளைச்சலுடன் இருந்தார்.



சத்குரு ஒருவரே விளக்கமளிக்க உரிமையும் தகுதியும் உடையவர்

நாம் பார்த்தவிதமாக இவ்வுபநிஷதம் வேதங்களின் சாராம்சமாகும்.  அது ஆத்மானுபூதியின் விஞ்ஞானமுமாகும்.  அது பிறப்பு, இறப்பு என்னும் கட்டுக்களை அறுத்தெறியக்கூடிய, நம்மை விடுவிக்கின்ற அரிவாள் அல்லது ஆயுதமாகும்.  எனவே, தாமே ஆத்மானுபூதி அடையப்பெற்ற ஒருவரே உபநிஷதத்திற்கு உண்மையான, சரியான விளக்கம் அளிக்கமுடியும் என்று அவர் நினைத்தார்.  தாஸ்கணுவை ஒருவரும் திருப்திப்படுத்த இயலாதபோது, சாயிபாபாவை இது விஷயமாக அவர் கலந்து ஆலோசிக்க முடிவுசெய்தார்.  ஷீர்டிக்குப் போக அவருக்கு ஒரு சந்தர்ப்பம் நேரிட்டபோது சாயிபாபாவை அவர் கண்டார்.  அவர்முன் வீழ்ந்து பணிந்தார்.  ஈசா உபநிஷத்தைப் பற்றிய தனது கஷ்டங்களைத் தெரிவித்து, அதைப் பற்றிய சரியான தீர்வு தரும்படி அவரை வேண்டிக்கொண்டார்.  சாயிபாபா அவரை ஆசீர்வதித்துக் கூறியதாவது, "நீ கவலைப்பட வேண்டியதில்லை.  இவ்விஷயத்தைப் பற்றி எவ்விதக் கஷ்டமும் இல்லை.  நீ வீட்டிற்குத் திரும்பிப் போகும்வழியில், விலேபார்லேயில் காகாவின் (காகா சாஹேப் தீஷித்தின்) வேலைக்காரி உனது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பாள்".

பாபா இதைச் சொல்லும்போது அங்கிருந்து இதனைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் பாபா வேடிக்கை செய்கிறார் என்றும், "கல்வி அறிவற்ற வேலைக்காரி ஒருத்தி இவ்வாறான சிக்கல்களை எங்ஙனம் தீர்த்துவைக்க முடியும்?" என்றும் சொல்லிக்கொண்டனர்.  ஆனால் தாஸ்கணுவோ வேறுவிதமாக எண்ணினார்.  பாபா எதைப் பேசியபோதும் அவை உண்மையில் நிறைவேறியே தீரும்.  பாபாவின் சொல்லே பிரம்மத்தின் (ஆண்டவரின்) ஆணைப்பத்திரமாகும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.  



காகாவின் வேலைக்காரி

பாபாவின் மொழிகளில் முழுமையான நம்பிக்கைகொண்டு ஷீர்டியை விட்டு அவர் விலேபார்லேவிற்கு (பம்பாயின் புறநகர்ப்பகுதி) வந்து காகா சாஹேப் தீஷித்துடன் தங்கினார்.  அடுத்தநாள் காலை தாஸ்கணு மகிழ்வாக ஒரு சிறுதுயில் கொண்டிருக்கும்போது (சிலர் அவர் வழிபாடு செய்துகொண்டிருக்கும்போது என்று கூறுகின்றனர்) ஒரு ஏழைப் பெண் அழகான பாடல் ஒன்றை இனிமையான குரலில் பாடிக்கொண்டிருந்தாள்.  பாடலின் உட்பொருளாவது:

"கருஞ்சிவப்புக் கலர் உடை, அது எவ்வளவு நன்றாய் இருக்கிறது.  அதன் எம்ராய்டரி வேலை எவ்வளவு நேர்த்தியாய் இருக்கிறது.  அதன் முந்தாணையும், பார்டரும் எவ்வளவு அழகாய் இருக்கிறது" என்பதாக..!

அவரை வெளியே ஈர்க்கும் அந்த அளவிற்கு அப்பாடலை அவர் விரும்பினார்.  வெளியே வந்து பார்த்தபோது, காகா சாஹேபின் வேலைக்காரனான நாம்யாவின் சகோதரியான ஒரு சிறுமியால் அது பாடப்பெற்றதைக் கண்டார்.  அப்போது அச்சிறுமி பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தாள்.  அவளது மேனியில் கிழிந்த உடை ஒன்றே இருந்தது.  அவளது வறுமையான நிலையையும், அவளது களிப்பான உளப்பாங்கையும் கண்டு தாஸ்கணு அவளுக்காகப் பரிதாபப்பட்டார்.  அடுத்தநாள் ராவ்பகதூர், M.V.ப்ரதான் என்பவருக்கு ஒரு ஜதை வேஷ்டி கொடுத்தபோது, அவரை தாஸ்கணு அந்த ஏழைச் சிறுமிக்கு புதிய உடை வங்கி அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.  ராவ் பகதூரும் அழகிய பாவாடைத் தாவணி ஒன்றை வாங்கிவந்து அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.  

பசியால் வாடும் ஒருவனுக்கு, அதிஷ்டவசமாக உண்பதற்கு நல்ல விருந்து கிடைக்கப்பெற்றதைப் போன்றே, அவளது களிப்பு கரைகாணாது போயிற்று.  மறுநாள் புத்தாடையை அவள் அணிந்துகொண்டாள்.  பெருமகிழ்ச்சியுடனும், கொண்டாட்டத்துடனும் சுற்றிச்சுற்றி ஓடினாள்.  சுழன்று நடனம் ஆடினாள்.  மற்றச் சிறுமிகளுடன் ஃபுகடி (கோலாட்டம்)  விளையாடி அவர்களை எல்லாம் வென்றாள்.  அதற்கடுத்த நாள் அதை வீட்டிலேயே வைத்துவிட்டுத் தனது பழைய கந்தலையே அணிந்து வந்தாள்.  ஆனால் முன்தினம் காணப்பெற்ற மாதிரியே அதேயளவு ஆனந்தத்துடன் காணப்பட்டாள்.  இதைக் கண்ணுற்ற தாஸ்கணுவின் இரக்கவுணர்ச்சி, புகழ்ச்சியாக மாறியது.  அச்சிறுமி ஏழையானதால் கந்தலையே அணியவேண்டும்.  ஆனால் தற்போது அவளிடம் ஒரு புதிய உடை இருக்கிறது.  அதை அவள் பத்திரப்படுத்தி இருக்கிறாள்.  பழைய கந்தலையே உடுத்தியும், எவ்வளவு துன்பமோ, மனச்சோர்வோ இல்லாதபடி அவற்றை அவள் தாங்கிக் கொண்டாள்.

இவ்வாறாக நமது மனத்தின் இன்ப, துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நமது மனத்தின் பாங்கைப் பொறுத்தே இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்தார்.  இந்நிகழ்ச்சியைப் பற்றியே அவர் ஆழ்ந்து, ஆராய்ந்து கடவுள் முன்னும், பின்னும், எல்லாத் திசைகளிலும், எல்லாப் பொருட்களிலும் சூழ்ந்து ஊடுருவி இருக்கிறார் என்றும், கடவுளால் அவனுக்கு வழங்கப்பட்டவை அனைத்தும், உறுதியாக அவனது நன்மைக்கேயாகும் என்னும் மறக்கவியலாத திட நம்பிக்கையுடன் கடவுளால் தனக்கு அருளப்படவைகள் அனைத்தையும் மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உணர்ந்தார்.  

இக்குறிப்பிட்ட சம்பவத்தில் ஏழைச் சிறுமியின் வறுமை நிலை, அவளது கந்தல் உடை, புதுப்பாவாடைத் தாவணி, அதை அன்பளிப்பாகக் கொடுத்தவர், அன்பளிப்பைப் பெற்றவள், அதனை ஏற்றுக்கொள்ளுதல் எல்லாம் கடவுளின் கூறுகளே.  அவரே எல்லாவற்றிலும் ஊடுருவிப் பார்த்து இருக்கிறார் என்று தாஸ்கணு உபநிஷதப் பாடத்தின், நடைமுறைச் சான்று விளக்கத்தினை இவ்விடத்தில் பெற்றார்.  எது நேரினும் அது கடவுளின் ஆணையே என்றும், கடைமுடிவாக அது நமக்கு நன்மை அளிக்கும் என்று தமக்குரியதானவைகளிடம் திருப்தி கொள்ளுதல் என்பதுமாகும்.



தந்நேரில்லா போதனைமுறை 

மேற்கூறிய நிகழ்ச்சியிலிருந்து பாபாவின் வழிகள் தனித்தன்மை வாய்ந்தவை, மற்றவற்றிநின்றும் மாறுபாடானவை என்பதை வாசகர்கள் காண்பார்கள்.  பாபா ஒருபோதும் ஷீர்டியை விட்டுச் சென்றதில்லையாயினும் அவர் சிலரை மச்சிந்த்ரகட்டுக்கும், சிலரை கோலாப்பூர் அல்லது ரேலாப்பூருக்கும் சாதனைகள் பயில்வதற்கு அனுப்பினார்.  சிலருக்குத் தமது வழக்கமான ரூபத்தில் தோன்றினார்.  சிலருக்கு விழிப்பு நிலையிலோ அல்லது கனவிலோ, இரவிலோ அன்றிப் பகலிலோ தோன்றி அடியவர்களுக்கு பாபா உபதேசிக்கக் கையாண்ட எல்லா வழிகளையும் விவரிப்பதென்பது இயல்லாத காரியம்.

இக்குறிப்பிட்ட விஷயத்தில் அவர் தாஸ்கணுவை விலேபார்லேக்கு அனுப்பினார்.  அங்கே வேலைக்காரியின் மூலம் அவரது பிரச்னையை பாபா தீர்த்து வைத்தார்.  தாஸ்கணுவை வெளியே அனுப்பியிருக்க வேண்டியதில்லை.  நேரிடையாகவே பாபா அதை அவருக்குக் கற்பித்து இருக்கலாம் என்று கூறுவோர்க்கு பாபா சரியான அல்லது மிகச்சிறந்த வழியையே பின்பற்றினார் என்று நாம் கூறுகிறோம்.  அல்லாவிடில் ஏழைச் சிறுமியும், அவளது புடவையும் கடவுளால் வியாபிக்கப்பட்டு இருக்கிறது என்னும் பெரியதோர் பாடத்தினை தாஸ்கணு எவ்வாறுதான் கற்றிருக்க முடியும்!  இவ்வுபநிஷத்தைப் பற்றிய மற்றொரு உயர்ந்த பகுதியைக் கூறி இவ்வத்தியாயத்தை முடிக்கிறேன்.  



ஈசாவின் நீதி

ஈசா உபநிஷதத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று அது அளிக்கும் நீதிபோதனைகள்.

நுண்பொருள் கோட்பாட்டியல் நிலைகளைக் குறித்து உபநிஷதங்களில் காணும் முன்னேற்றத்தை அடிப்படையாகக்கொண்டே நிச்சயமாக உபநிஷதத்தின் நீதியும் அமைக்கப்பட்டுள்ளது.  உபநிஷதத்தின் ஆரம்ப மொழிகளே கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார் என்பதை நமக்கு அறிவிக்கின்றன.  இந்த நுண்பொருள் கோட்பாட்டியல் நிலையென்று தெளியப்பட்ட முடிவிலிருந்து கிளைத்தெழும் பிறிதோர் முடிவாக அது அளிக்கும் நீதிபோதனையாவது, அவரே யாண்டும் நிலவியுள்ளார்.  தனக்குக் கடவுளால் அருளப்பட்ட யாவையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையில் கடவுள் தனக்கு அருளியவற்றை மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்பதாகும்.  

பிறர் பொருளைக் கண்டு பேராசைப்படுவதை உபநிஷதம் தடுக்கிறது என்பது இயல்பாகவே தொடர்ந்து அறியப்படுகிறது.  யாதாகினும் கடவுளின் ஆணையே என்றும் எனவே, அது நமக்கு நன்மையளிக்கும் என்ற நம்பிக்கையில் நமக்குள்ளவைகளைக் கொண்டு நாம் திருப்தியடையவேண்டும் என்று நாம் பொருத்தமாகவே அறிவுறுத்தப்படுகிறோம்.

மற்றுமொரு நீதிபோதனை யாதெனின், சாஸ்திரங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த கர்மங்களை ஆண்டவரது சங்கல்பம் என்று அமைவடக்கத்துடன் ஏற்றுக்கொண்டு, அந்த நம்பிக்கை உள்ள மனப்பாங்குடன் மனிதன் தனது வாழ்நாளை எப்போதும் கர்மம் செய்துகொண்டிருப்பதிலேயே கழிக்கவேண்டும் என்பதேயாகும்.  செயலின்மை என்பது இவ்உபநிஷதத்தின்படி, நமது ஆன்மாவை அரிக்கும் புழுவாகும்.  மனிதன் இம்முறைப்படி கர்மங்கள் புரிவதில் தனது வாழ்நாளைக் கழிக்கும்போது மட்டுமே நிஷ்காம்யம் என்கிற நிலையை எய்துவதை எண்ண இயலும்.

முடிவாக அதன் வாசகங்கள் கூறுவதாவது "ஆத்மாவினுள் அனைத்து ஜீவராசிகளையும், அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் ஆத்மாவையும் காண்பவன் - உண்மையில் அனைத்து ஜீவராசிகளும், மற்றும் உளதாய் இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஆத்மாவாகவே ஆகிவிட்ட அப்பேர்ப்பட்ட மனிதன் எங்ஙனம் மயக்க நிலைக்கு ஆட்பட இயலும்?  ஆழ்ந்த மனத்துயரமடைவதற்கு அவனுக்கு அடிப்படைக் காரணம் யாதாக இருக்க முடியும்?

வெறுப்புணர்ச்சி, சித்தத்தின் மயக்கம், ஆழ்ந்த மனத்துயரம், யாவும் ஆத்மாவை யாண்டும் தரிசிக்க இயலாத நமது பண்பிலிருந்தே கிளம்புகின்றன.  ஆயின் எவனொருவன் அனைத்துப் பொருட்களிலும் ஏகத்தையே (ஒருமையையே) தெளிவாக உணர்கிறானோ, எவனுக்கு ஒவ்வொரு பொருளும் ஆத்மாவாகிவிட்டதோ, அதே உண்மையின் காரணமாக மனித இனத்தின் குறைபாடுகளினால், இனி ஒருபோதும் பாதிக்கப்படாதவனாகின்றான்" (Page 169-170 of the Creative Period by M/s. Belvalkar and Ranade).

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
    
 

Thursday, 12 April 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 18/19

•  ஹேமத்பந்த் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்
•  திருவாளர் சாதே, திருமதி தேஷ்முக்கின் கதைகள்
•  நல்ல எண்ணங்களின் அவா நிறைவேற்றத்தை ஊக்குவித்தல் 
•  உபதேச வகைகள்
•  அவதூறு பேசுவது பற்றியும், உழைப்புக்கு ஊதியம் கொடுப்பது பற்றியும் போதனைகள்


முந்தைய இரு அத்தியாயங்களில் துரித பிரம்மஞானத்தை பெறவிழைந்த பணக்காரர் பாபாவால் எவ்வாறு நடாத்தப்பட்டார் என்பதை ஹேமத்பந்த் விவரித்தார்.  இந்த இரண்டு அத்தியாயங்களிலும் அவர் தாமே பாபாவால் எவ்வாறு ஏற்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார் எனவும், எங்ஙனம் நல்ல எண்ணங்களை பாபா ஊக்குவித்து அவைகளைப் பலனளிக்கச் செய்தார் எனவும் விவரித்து, ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றியும், அவதூறு பேசுவது குறித்தும், உழைப்புக்குரிய ஊதியத்தைப் பற்றியும் உள்ள பாபாவின் போதனைகளையும் அளிக்கிறார்.



முன்னுரை

தமது அடியவர்களின் தகுதிகளை முதலில் சத்குரு கவனிக்கிறார் என்பதும் பின்னர் அவர்கள் மனத்தை எவ்வளவும் குழம்பச் செய்யாமல், பொருத்தமான செயல்துறைக் கட்டளைகளை அளித்து ஆத்மானுபூதி என்ற இலட்சியத்திற்கு, தொடர்ந்து அவர்களை இட்டுச்செல்கிறார் என்பது நன்றாக அறியப்பட்ட உண்மை ஆகும்.  இவ்வகையில் சத்குரு எவைகளை உபதேசிக்கிறாரோ, அல்லது கட்டளையிடுகிராரோ அவைகள் பலரறிய வெளியிடப்படக்கூடாது என்று சிலர் கூறுகிறார்கள்.  அவர்களுடைய உபதேசங்கள் பிரசுரிக்கப்பட்டால், அவை பயனற்றதாகிவிடுகின்றன என்று சிலர் நினைக்கிறார்கள்.  இக்கருத்து சரியானதன்று.

சத்குருவானவர் ஒரு பருவமேகம் போன்றவர்.  தமது அமிர்தத்தினை நிகர்மொழிகளைத் தங்குதடையின்றி விரிவாக அனைத்து இடங்களிலும் பரவும்படி கருதரிய ஆனந்தமழை பொழிகிறார்கள்.  இவைகளை நாம் மகிழ்ந்தனுபவித்து நமது உள்ளம் நிறைவெய்தும்வரை ஜீரணித்துக்கொண்டு, அதன்பின் தனிப்பயன் கருதி ஷேம ஒதுக்கீடு ஏதுமின்றி மற்றவர்களுக்கும் பரிமாறவேண்டும்.  நமது விழிப்பு நிலையில் அவர் போதிப்பவைகளுக்கு இந்நியதி பொருந்துவதுடன் நில்லாது, கனவு நிலையில் அவர் நமக்கு அளிக்கும் காட்சிகளுக்கும் இது பொருந்துவதேயாம்.  உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியைக் கூறுமிடத்து புதகௌசிக ரிஷி, தாம் கனவில் கண்டத்தான புகழ்பெற்ற ராமரக்ஷ       ஸ்தோத்திரத்தைப் பதிப்பித்தார். (ஸ்ரீ ராமரைப் புகழ்ந்து இரக்ஷணையை வேண்டி பாடப்பெறும் இரட்டை வரி செய்யுட்களான ஸ்லோகம்)        

தனது குழந்தைகள் உடல் நலம் பெறுதற்பொருட்டாக கசப்பான ஆனால் ஆரோக்கியமான மருந்துகளை அவைகளின் தொண்டைக்குள் வலிந்து புகட்டும், பாசமுள்ள தாயைப் போன்றே, சாயிபாபா தமது அடியவர்களுக்கு ஆன்மீக செயல்துறைக் கட்டளைகளைத் தெரிவித்தார்.  அவரது முறைமை திரையிடப்பட்டதோ, இரகசியமானதோ அல்ல.  ஆனால் முற்றிலும் வெளிப்படையானவை.  அவருடைய கட்டளைகளைப் பின்பற்றிய அடியவர்கள் தங்களின் குறிக்கோளை எய்தினார்கள்.

சாயிபாபாவைப் போன்ற சத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு, ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்படுத்துகிறார்கள்.  இது செய்யப்படும்போது புலனுணர்வுப் பொருட்களில் நமக்குள்ள ஆசை மறைந்துவிடுகிறது.  விவேகம்(பகுத்துணர்தல்), வைராக்கியம்(பற்றறுத்தல்) என்னும் இரட்டை கனிகள் நமது கைகளுக்குக் கிட்டுகின்றன.  ஞானமென்பது தூக்கத்தில் கூடத் துளிர்விடுகின்றது.

முனிவர்களின் (சத்குரு) தொடர்பைப் பெறும்போதும், அவர்களுக்குச் சேவை செய்யும்போதும், அவர்களின் அன்பைப் பெறும்போதும், இவைகள் அனைத்தினையும் நாம் எய்துகிறோம்.

தமது அடியவர்களின் அவாக்களைப் பூர்த்தி செய்யும் ஆண்டவன், நமது உதவிக்கு வருகிறார்.  நமது தொல்லைகளையும், கஷ்டங்களையும் நீக்கி மகிழ்வெய்தச் செய்கிறார்.  ஆண்டவனாகவே கருதப்படும் சத்குருவின் உதவியே இம்முன்னேற்றத்திற்கு முழுவதுமான காரணமாகும்.  எனவே நாம் எப்போதும் சத்குருவையே பின்பற்றி இருந்து, அவர்தம் கதைகளைச் செவிமடுத்து அவரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி அவருக்கே சேவை செய்யவேண்டும்.  இப்போது பிரதானமான கதைக்கு வருவோம்.



திருவாளர் சாதே 

பல ஆண்டுகளுக்கு முன் பம்பாயின் கவர்னர் ரே பிரபுவால் அடக்கப்பட்ட க்ராஃபோர்ட் நடப்பாட்சியின்போது, சிறிதளவு பிரசித்தி பெற்றிருந்த சாதே என்னும் பெருந்தகை ஒருவர் இருந்தார்.  அவர் வணிகத்தில் கடுமையான நஷ்டமடைந்தார்.  மற்றுமுள்ள பிரதிகூலமான சூழ்நிலைகளும் அவருக்குப் பெருமளவு தொல்லையளித்து கவலையடையவும், உள்ளம் சோர்வுறவும் செய்தது.  இருப்புக்கொள்ளாமல் இருந்துகொண்டிருந்த அவர் வீட்டை விடுத்துத் தொலை தூரத்திற்கு வெளியேறிப் போய்விட எண்ணினார்.  

பொதுவாக மனிதன் கடவுளை நினைப்பதில்லை.  ஆனால் இடர்பாடுகளும், பேராபத்துக்களும் அவனைச் சூழும்போது அவன் ஆண்டவரை நோக்கித் திரும்பி நிவாரணத்திற்காக வேண்டுகிறான்.  அவனுடைய தீய கர்மங்கள் யாவும் முடிவுற்றதென்றால், முனிவர் ஒருவரை அவன் சந்திக்கும் வாய்ப்பினைக் கடவுள் ஏற்பாடு செய்கிறார்.  அம்முனிவரும் அவனுக்கு நலமளிக்கக்கூடிய வழிமுறைகளை உபதேசிக்கிறார்.  சாதேவுக்கும் அத்தகைய அனுபவமே ஏற்பட்டது.  தத்தம் தேவைகள் பூர்த்தி செய்யப்படவும், மனச்சாந்தியை அடைவதற்கும் ஏதுவாக சாயிபாபா தரிசனத்தைப் பெற ஏராளமான மக்கள் திரளாகச் சென்றுகொண்டிருக்கும் ஷீர்டிக்குப் போகும்படி அவருக்கு அவரது நண்பர்கள் அறிவுரை கூறினார்கள்.  அவருக்கு இக்கருத்து பிடித்திருந்தது.  உடனே ஷீர்டிக்கு 1917ல் வந்தார்.

பரப்பிரம்மமாகவும், சுஜஞ்ஜோதியாகவும், களங்கமற்றதாயும், தூயதாகவுமுள்ள சாயிபாபாவின் ரூபத்தைக் கண்ணுற்று அவரது மனம் பதைபதைப்பை விடுத்துச் சாந்தமுற்றது.  தமது முற்பிறவிகளில் ஏற்பட்ட நல்வினைகளின் குவியலே தம்மை பாபாவின் புனிதத் திருவடிகளுக்குக் கொணர்ந்தது என அவர் நினைத்தார்.  அவர் உறுதியான மனதிட்டம் வாய்க்கப்பெற்ற மனிதர்.  உடனேயே அவர் குருசரித்திரம் (ஸ்ரீ தத்தாத்ரேயர் மற்றும் அவரது மறுஅவதாரங்களான ஸ்ரீபாத, ஸ்ரீவல்லபர், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஆகியோரின் புனித சரித்திரம்) செய்யத் தொடங்கினார்.  ஸப்தாகத்தில் (ஏழு நாட்களில்) பாராயணம் பூர்த்தியானதும் அன்று இரவு பாபா அவருக்கு ஒரு காட்சி அளித்தார். அது இவ்வாறானது:

பாபா குருசரித்திரத்தை தமது கரங்களில் வைத்துக்கொண்டு அதன் உட்பொருளை, முன்னால் அமர்ந்து கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சாதேவிற்கு விவரித்துக்கொண்டிருந்தார்.  அவர் விழித்தெழுந்து பின்னர் தமது கனவினை நினைவுகூர்ந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.  அறியாமையில் குறட்டைவிடும் தம்மைப் போன்ற ஆத்மாக்களை பாபாவின் எல்லையற்ற கருணையே எழுப்பிவிட்டு குருசரித்திர அமுதத்தினைச் சுவைக்கும்படி செய்கிறது என்று அவர் நினைத்தார்.  

மறுநாள் காகா சாஹேப் தீஷித்திடம் இக்காட்சியைப்பற்றி அவர் தெரிவித்து சாயிபாவிடம் அதன் பொருளைப்பற்றிய நுட்பக்குறிப்பினைக் குறித்துக் கேட்கும்படி வேண்டிக்கொண்டார்.  அதாவது ஒருவாரம் பராயணம் செய்தது போதுமா?  அல்லது மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமா என்பதாக.  காகா சாஹேப் தீஷித்தும் தமக்குக் கிடைத்த ஓர் உரிய சந்தர்ப்பத்தில் பாபாவை நோக்கி, "தேவா (ஓ! தெய்வமே) இந்தக் காட்சியால் சாதேவுக்கு எதனைக் குறிப்பிடுகிறீர்கள்?  அவர் சப்தாஹத்தை நிறுத்திவிடலாமா?  தொடர வேண்டுமா?  அவர் ஓர் எளிய அடியவர்.  அவரது அவா நிறைவேற்றப்படுதல் வேண்டும்.  அவருக்கு காட்சியின் பொருள் விளக்கப்பட்டு, அவர் ஆசீவதிக்கப்படவேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.  பாபாவும் "அவர் மற்றுமொரு சகாப்தம் பாராயணம் செய்யவேண்டும்.  அதை அவர் கவனமாகக் கற்பாராயின் அவர் தூயவராகி நன்மை பெறுவார்.  பரமாத்மாவும் மகிழ்வடைந்து, இச்சம்சார வாழ்க்கையின் பந்தங்களினின்று அவரை விடுவிப்பார்" எனப் பதிலளித்தார்.  

இச்சமயத்தில் ஹேமத்பந்த் அங்கே இருந்தார்.  அவர் பாபாவின் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார்.  பாபாவின் சொற்களைக் கேட்டதும், அவர் தன் மனதில் பின்வருமாறு சிந்திக்கலானார்.  "என்ன! சாதே ஒரு வாரமே படித்துப் பரிசைப் பெற்றுக்கொண்டார்.  நாற்பது ஆண்டுகளாக ஒரு பயனுமின்றி நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இந்த இடத்தில் அவரது எழுநாள் வாசம் பலனளிக்க நேரிட்டு எனது ஏழுவருட வாசம் (1910-1917) பலனேதுமின்றிப் போகின்றது?!  தம் அறிவுரையால் என்னை ஆசீர்வதிக்க வேண்டும் எனவும், தமது அமுதத்தை என்மீது பொழியவேண்டும் எனவும் கருணை மேகத்திற்காக (பாபாவிற்காக) காத்துக் கொண்டிருக்கும் சாதகப் பறவையைப் போல எப்போதும் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்".  இந்த எண்ணம் அவர் மனதில் குறுக்கிட்ட அத்தருணமே, பாபா அதனை அறிந்துகொண்டார்.

பாபா பக்தர்களின் எண்ணங்களையும் படித்துப் புரிந்துகொண்டு தீய எண்ணங்களைக் கீழடக்கி, நல்ல எண்ணங்களை ஊக்குவித்தார் என்பது அடியவர்களின் அனுபவமாகும்.  ஹேமத்தின் உள்ளத்தைப் படித்தறிந்துகொண்ட பாபா, உடனே அவரை எழுந்து ஷாமாவிடம் (மாதவ்ராவ் தேஷ்பாண்டே) சென்று ரூ. 15ஐ தட்ஷணையாகப் பெற்றுக்கொண்டு, அங்கு சிறிது நேரம் அவருடன் உரையாடியபின்னர் திரும்பிவரும்படி கேட்டார்.  பாபாவின் மனத்தில் கருணை உதயமாகியது.  எனவேதான் அவர் இக்கட்டளையை இட்டார்.  யார்தான் பாபாவின் ஆணையை மீற முடியும்?

ஹேமத்பந்த் உடனே மசூதியைவிட்டு, ஷாமாவின் வீட்டிற்கு வந்தார்.  அவர் அப்போதுதான் குளித்துவிட்டு வேட்டியை உடுத்திக் கொண்டிருந்தார்.  அவர் வெளியே வந்து ஹேமத்பந்த்ஐ நோக்கி, "தங்கள் இப்போது இங்கே இருப்பது எங்கனம்?  மசூதியிலிருந்து தாங்கள் வந்துள்ளதாகத் தோன்றுகிறதே?  இருப்புக் கொள்ளாதவரைப் போன்றும், உளச்சோர்வுடையவராகவும் ஏன் காணப்படுகிறீர்கள்? ஏன் தாங்கள் தனித்து இருக்கிறீர்கள்?  தயவுசெய்து அமர்ந்து சிறிதுநேரம் இளைப்பாறுங்கள்.  நான் எனது வழிபாட்டை உடனே முடித்துவிட்டுத் திரும்புகிறேன்.  அதுவரை வெற்றிலை - பாக்கு போட்டுக் கொள்ளுங்கள்.  பின்னர் மகிழ்ச்சியுடன் உரையாடலாம்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.

ஹேமத்பந்த் முன் திண்ணையில் அமர்ந்திருந்தார்.  ஜன்னலில் 'நாதபாகவதம்' என்ற பிரசித்திபெற்ற மராத்தி நூலை அவர் கண்டார்.  பெரிய சமஸ்கிருத நூலான பாகவதத்தின் பதினோராவது ஸ்கந்தத்தைப் (அத்தியாயம்) பற்றிய ஏக்நாத் முனிவரின் விளக்கவுரையாகும்.  சாயிபாபாவின் யோசனையின் பேரில் அல்லது சிபாரிசின் பேரில் திருவாளர்கள் பாபு சாஹேப் ஜோகும், காகா சாஹேப் தீஷித்தும் ஷீர்டியில் தினந்தோறும் பகவத்கீதையையும் (கிருஷ்ணருக்கும் அவரது தோழரும் பக்தருமான அர்ஜுனனுக்குமிடையே நிகழ்ந்த உரையாடலை அதன் மராத்திய விளக்க உரையான பாவார்த்த தீபிகா அல்லது ஞானேஷ்வரியுடன்), நாதபாவதத்தையும் (கிருஷ்ணருக்கும் அவரது சேவகரும் பக்தருமான உத்வருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்) மற்றும் மற்றைய பெரிய நூலான ஏக்நாத்தின் பாவார்த்த ராமாயணத்தையும் படித்தார்கள்.

பாபாவிடம் அடியவர்கள் வந்து சில குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டபோது சிலசமயங்களில் அதில் ஒரு பகுதிக்கு விடையளித்துவிட்டு பாகவத தர்மத்தின் முக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளான மேட்குறிப்பிட்ட நூல்களைப் பராயணம் செய்வதைச் சென்று கேட்கும்படி கூறுவார்.  அடியவர்கள் சென்று அவற்றைக் கேட்கும்போது தங்கள் வினாக்களுக்குப் பூரண திருப்தியான பதில்களைப் பெறுவார்கள்.  நாதபாகவதம் என்ற நூலின் சில பகுதிகளை ஹேமத்பந்தும் படிப்பது வழக்கம்.  அன்று மசூதிக்குச் சென்றுகொண்டிருந்த சில அடியவர்களுடன் சேர்ந்து செல்வதற்காக தினந்தோறும் தாம் படிக்கும் பகுதியை அவர் பூர்த்தி செய்யவில்லை.  

ஷாமாவின் ஜன்னலிலிருந்து அந்த புத்தகத்தினை எடுத்து, தற்செயலாக அதைப் புரட்டியபோது, அவரது ஆச்சரியத்திற்கேட்ப முடிக்கப்படாத பகுதி வந்தது.  தமது நித்ய பாராயணத்தைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக பாபா தன்னை வெகு அன்புடன் ஷாமாவின் வீட்டிற்கு அனுப்பி இருப்பதாக அவர் எண்ணினார்.  எனவே முடிக்கப்படாத பகுதியைப் படித்து பூர்த்தி செய்தார்.  இது முடிவடைந்த உடனேயே ஷாமா வழிபாட்டை முடித்துவிட்டு வந்தார்.  அவர்களிடையே பின்வரும் உரையாடல் நிகழ்ந்தது.  

ஹேமத்பந்த்: பாபாவிடமிருந்து ஒரு தூதுக் குறிப்புடன் நான் வந்துள்ளேன்.  தங்களிடமிருந்து தட்ஷிணையாக ரூ.15 பெற்றுக்கொண்டு, சிறிது நேரம் தங்களுடன் அமர்ந்து மகிழ்ச்சியாக உரையாடிவிட்டு, பின்னர் தங்களுடன் மசூதிக்குத் திரும்பும்படி என்னை அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.  

ஷாமா: (ஆச்சரியத்துடன்) என்னிடம் கொடுக்கப் பணம் ஏதுமில்லை.  ரூபாய்களுக்குப் பதிலாக என்னுடைய பதினைந்து நமஸ்காரங்களை பாபாவிடம் எடுத்துச் செல்லுங்கள்.  

ஹேமத்பந்த்:  மிக நல்லது.  தங்களுடைய வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.  இப்போது நாம் சிறிது உரையாடுவோம்.  நமது பாவங்களை அழிக்கும் பாபாவின் கதைகளையும், லீலைகளையும் கூறுங்கள்.  

ஷாமா:  அப்படியென்றால் சற்றே இங்கே அமருங்கள்.  இக்கடவுளின் (பாபா) விளையாட்டு (லீலை) வியக்கத்தக்கது.  அது தங்களுக்கு முன்னமே தெரியும்.  நான் ஒரு கிராமத்துக் குடியானவன்.  ஆனால் தாங்களோ அறிவுடைய குடிமகன்.  தாங்களே இங்கு வந்துற்றது முதலாகச் சிறிது அதிகமாகவே லீலைகளைக் கண்டுகொண்டிருக்கிறீர்கள்.  அவற்றை எங்ஙனம் நான் தங்கள் முன் விவரிப்பேன்?!  நன்று இந்தாருங்கள் வெற்றிலை-பாக்கு சேர்த்து தாம்பூலம் போட்டுக்கொள்ளுங்கள்.  நான் உள்ளே சென்று உடுத்திக்கொண்டு வந்துவிடுகிறேன்.  

சில நிமிடங்களில் ஷாமா வெளியே வந்து ஹேமத்பந்த்துடன் பேசத்தொடங்கினார்.  அவர் சொன்னார்.  "இந்த ஆண்டவனின் (பாபா) லீலைகள் அறிந்த்கொள்ள இயலாதவை.  அவர் தம் லீலைகட்கு முடிவில்லை.  யாரே அவற்றைக் கண்டுகொள்ள இயலும்?  தமது லீலைகளினால் அவர் விளையாடுகிறார் என்றாலும், அவைகளுக்குப் புறம்பாகவே (அதனால் பாதிக்கபடாதவராகவே) இருக்கிறார்.  நாகரீகமற்றவர்களாகிய நமக்கு என்னதான் தெரியும்?  பாபா தாமே ஏன் கதைகள் சொல்லவில்லை.  தங்களைப் போன்ற கற்றறிந்தோரை என்போன்ற அறிவிலிகளிடம் அவர் ஏன் அனுப்புகிறார்?  அவர்தம் வழிகள் கருதுதற்கு இயலாதவை.  அவைகள் மனிதத் தன்மை வாய்ந்தவையல்ல என்று மட்டுமே என்னால் கூறு இயலும்."

இந்த முன்னுரையுடன் ஷாமா தொடர்ந்தார்.  "இப்போது என் நினைவில் இருக்கும் ஒரு கதையை நான் தங்களுக்கு விவரிக்கிறேன்.  அதை நானே நேரிடையாக அறிவேன்.  ஓர் பக்தன் எவ்வளவுதூரம் நெஞ்சுரங்கொண்டவனாகவும், தீர்மானமுள்ளவனாகவும் இருக்கிறானோ, அங்ஙனமே பாபாவின் உடனடியான பிரதிச்செயலும் இருக்கிறது.  சில சமயம் பாபா தனது பக்தர்களைத் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்திப் பின்னர் அவர்களுக்கு உபதேசம் (செயல்துறைக் கட்டளைகள்) அளிக்கிறார்.  உபதேசம் என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே, ஹேமத்பந்த்திற்கு தனது மனதில் ஏதோ ஒரு மின்னலைப் போன்ற ஒளி பாய்ந்தது போன்றிருந்தது.  

அவர் உடனே சாதேவின் குருசரித்திரப் பாராயணக் கதையை நினைவுகூர்ந்து தமது பதைபதைப்பான மனதிற்கு அமைதியளிக்கவே நிச்சயமாக பாபா தம்மை ஷாமாவிடம் அனுப்பியிருக்கவேண்டும் என்று எண்ணினார், என்றாலும் இந்த உணர்வை அடக்கிக் கட்டுப்படுத்திக்கொண்டு ஷாமாவின் கதைகளைக் கேட்கத் தொடங்கினார்.  அவை அனைத்தும் பாபா தமது பக்தர்களிடம் எவ்வளவு அன்புடனும், பாசமுடனும் இருக்கிறார் என்பதைத் தெரிவிக்கின்றன.  இவைகளை எல்லாம் கேட்ட ஹேமத்பந்த் ஒருவித மகிழ்ச்சியை எய்தலானார்.  பிறகு பின்வரும் கதையை ஷாமா கூறத் தொடங்கினார்.



திருமதி ராதாபாய் தேஷ்முக் 

ராதாபாய் என்ற பெயருடைய கிழவி ஒருத்தி இருந்தாள்.  அவள் காஷாபா தேஷ்முக் என்பாரின் தாயாராவாள்.  பாபாவின் புகழைக் கேள்விப்பட்டு சங்கம்னேர் நகர மக்களுடன் அவள் ஷீர்டிக்கு வந்தாள்.  

பாபாவின் தரிசனத்தைப் பெற்று மிகவும் திருப்தியடைந்தாள்.  பாபாவை மிகவும் உள்ளார்ந்த அன்புடன் அவள் நேசித்தாள்.  தான் பாபாவைக் குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடமிருந்து ஏதேனும் உபதேசம் பெறவேண்டும் என்று தீர்மானித்தாள்.  அதைத்தவிர அவளுக்கு வேறு ஒன்றும் தெரியாது.  பாபா அவளை ஏற்றுக்கொண்டு மந்திரமோ, உபதேசமோ அளிக்காத வரையில் தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக உறுதிபூண்டாள்.  தனது இருப்பிடத்தில் தங்கி, மூன்று நாட்களாக உணவையும், நீரையும் விட்டொழித்தாள்.  

கிழவியின் இந்த மிகக் கடுமையான பரீட்சையைக் கண்டு நான் திகிலடைந்தேன்.  அவரல் சார்பில் பாபாவிடம் இடையிட்டுப் பரிந்து பேசினேன்.  நான் கூறினேன், "தேவா, தாங்கள் இவ்வாறாகத் தொடங்கியிருப்பது என்ன?  தாங்கள் ஏராளமானவர்களை இவ்விடம் ஈர்த்து இழுக்கிறீர்கள்.  தங்களுக்கு அக்கிழவியைத் தெரியும்.  அவள் மிகவும் பிடிவாதமுடையவளாகவும், தங்களையே முழுவதுமாகச் சாய்ந்தும் இருக்கிறாள்.  தாங்கள் அவளை ஏற்றுக்கொள்ளும்படி உபதேசம் தந்தாலொழிய சாகும்வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாகத் தீமானித்து இருக்கிறாள்.  ஏதாவது மோசமாக நிகழ்ந்துவிட்டால் மக்கள் தங்கள்மீது பழி சுமத்துவார்கள்.  பாபா அவளுக்கு உபதேசிக்கவில்லை.  அதன் விளைவாக அவள் மரணமடைந்தாள் என்று கூறுவார்கள்.  எனவே அவள்மீது கருணைகூர்ந்து அவளை ஆசீர்வதியுங்கள், அவளுக்கு அறிவுறுத்துங்கள்".  அவளது தீர்மான உறுதியைக் கண்டு பாபா அவளைக் கூப்பிட்டு அனுப்பினார்.  பின்வருமாறு அவளிடம் உரையாற்றி அவளது மனப்போக்கை மாற்றினார்.  

"ஓ! அம்மா, (பாபா எப்போதும் பெண்களை அம்மா என்றும், ஆண்களை காகா, பாபா, பாவ் என்றும் அன்புடன் அழைப்பார்)  ஏன் தேவையற்ற சித்திரவதைக்குத் தங்களைத் தாங்களே உட்படுத்திக்கொண்டு சாவை எதிர்நோக்குகிறீர்கள்?  தாங்கள் உண்மையிலேயே எனது தாய்.  நான் தங்களது குழந்தை.  என்மேல் இரக்கம்கொண்டு நான் சொல்வதை முழுவதும் கேட்பீர்களாக.  எனது சொந்தக் கதையிலேயே சொல்கிறேன்.  அதைக் கவனமாகக் கேட்பீர்களானால், தங்களுக்கு அதனால் நன்மை விளையும்.  எனக்கு ஒரு குரு இருந்தார்.  அவர் ஒரு மாபெரும் முனிவர்.  மிக்க கருணையுள்ளவர்.  

நான் அவருக்கு நெடுங்காலம் சேவை செய்தேன்.  பன்னெடுங்காலம்.  எனினும், அவர் ஏன் காதுகளில் எவ்வித மந்திரத்தையும் ஓதவில்லை.  அவரை ஒருபோதும் விட்டுப் பிரியாமல் இருக்கவும், அவருடனேயே தங்கியிருந்து அவருக்குச் சேவை செய்யவும், எப்பாடுபட்டாவது அவரிடமிருந்து சிறிது உபதேசம் பெறவும் எனக்குக் கூரிய ஆர்வம் இருந்தது.  ஆனால் அவருக்குத் தமக்கே உரிய வழிமுறை இருந்தது.  அவர் ஏன் தலையை மொட்டை அடிக்கச்செய்து, இரண்டு பைசாக்களைத் தட்ஷிணையாகக் கேட்டார்.  நான் அவைகளை உடனே அளித்தேன்.  எனது குரு முழு நிறைவானவராய் இருப்பதால் அவர் ஏன் பணத்தைக் கேட்கவேண்டும்?  அப்படியாயின் அவரை எங்ஙனம் பற்றற்றவர் என்று கூற இயலும்?  என்று தாங்கள் கேட்பீர்கள் என்றால், காசுகளை அவர் இலட்சியம் செய்யவில்லை என்று நான் ஒளிவு மறைவின்றி பதில் கூறுவேன்.  அவைகளைக்கொண்டு அவருக்கு ஆகவேண்டியது என்ன?

அவர்தம் இரண்டு பைசாக்களாவன:
(1)  உறுதியான நம்பிக்கை (நிஷ்டா)
(2)  பொறுமை அல்லது விடாமுயற்சி (சபூரி)    

இந்த இரண்டு பைசாக்களை நான் அவருக்கு அளித்தேன்.  அவர் பெரிதும் மனம் மகிழ்ந்தார்.  எனது குருவிடம் தஞ்சமாக நான் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்தேன்.  அவர் என்னை வளர்த்தார்.  உணவுக்கும், உடைக்கும் பஞ்சமில்லை.  அவர் முழுமையும் அன்புடையவராக இருந்தார்.  ஆம், அவர் அன்பின் அவதாரமே ஆவார்.  எங்ஙனம் நான் அதை விவரிக்க இயலும்?  அவர் என்னை மிகமிக அதிகமாக விரும்பினார்.  அவரைப்போன்ற குரு அபூர்வம்.  நான், அவரை நோக்கும்போது ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாகக் காணப்பட்டார்.  பின்னர் நாங்கள் இருவரும் பேரின்பத்தில் நிரம்பிவிடுவோம்.  இரவும், பகலும் நான் பசி தாகத்தை மரத்து, அவரையே ஆழ்ந்து நோக்கிக்கொண்டு இருப்பேன்.  அவரின்றி நான் இருப்புக்கொள்ளாதவன் ஆனேன்.  எனக்கு, எனது தியானதிற்கு அவரைத்தவிர வேறெவ்விதப் பொருளும் இல்லை.  அன்றி அவருக்குப் பணிவிடை செய்வதைத் தவிர எனக்கு வேறெவ்வித வேலையும் இல்லை.  அவரே எனது ஒரே அடைக்கலம்.  எனது மனம் எப்போதும் அவர்மீதே உறுதிப்பட்டுக்கொண்டிருந்தது.

இந்த நிஷ்டா (உறுதியான நம்பிக்கை) ஒரு பைசா தட்ஷிணையாகும்.  சபூரி (பொறுமை அல்லது விடாமுயற்சி) என்பது மற்றொரு பைசாவாகும்.  குருவிடம் நான் பொறுமையுடன் மிக நீண்டகாலம்வரை சேவை செய்தேன்.  இந்த சபூரியானது உங்களை இவ்வுலக வாழ்க்கை என்னும் பெருங்கடலைக் கடப்பதற்குரிய தோணியிலேற்றி அக்கரை சேர்ப்பிக்கும்.  மனிதனிடத்தில் உள்ள ஆண்மையே சபூரி.  அது பாவங்களையும், வேதனைகளையும் நீக்குகிறது.  பல்வேறு வகைகளில் பேராபத்துக்களை விலக்குகிறது.  எல்லா அச்சம்களையும் அப்பால் அகற்றுகிறது.  கடைமுடிவாக உங்களுக்கு வெற்றியளிக்கிறது.  சபூரி நற்பண்புகளின் சுரங்கம்.  நல்லெண்ணங்களின் கூட்டாளி.  நிஷ்டாவும் (நம்பிக்கை), சபூரியும் (பொறுமை) ஒருவரையொருவர் மிக நெருக்கமாக நேசிக்கும் இரட்டைச் சகோதரிகளை நிகர்த்தவை.

என்னுடைய குரு ஒருபோதும் வேறெதையும் என்னிடமிருந்து எதிர்பார்த்ததில்லை.  அவர் என்னை ஒருபோதும் புறக்கணித்ததும் இல்லை.  எப்போதும் என்னைப் பாதுகாத்தார்.  நான் அவருடன் தங்கி வாழ்ந்தேன்.  சிலசமயம் அவரைவிட்டுப் பிரிந்து வாழ்ந்தேன்.  எனினும் நான் ஒருபோதும் அவர்தம் அன்புடைமைக்குத் தேவையையோ, அன்பின்மையையோ கண்டதில்லை.  தாய் ஆமையானது தனது இளங்குட்டிகள் தன்னருகில் இருப்பினும், தன்னை விட்டு நீங்கி ஆற்றின் அக்கரையில் இருப்பினும் தனது அன்புப் பார்வையால் பேணிவளர்க்கும்.  அதேவிதமாக, அவர்தம்முடைய கண்ணோட்டத்தினாலேயே எப்போதும் என்னைப் பாதுகாத்தார்.  ஓ! அன்னையே, எனது குரு எனக்கு எவ்வித மந்திரத்தையும் போதிக்கவில்லை.  பின்னர் நான் எங்ஙனம் தங்கள் காதுகளில் மந்திரத்தை ஓதமுடியும்?  குருவின், ஆமையினத்தை நிகர்த்த அன்புக் கண்ணோட்டம் ஒன்றே நமக்கு மகிழ்ச்சியை நல்குகிறது.  எவரிடமிருந்தும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலாதீர்கள்.  என்னையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள்.  சந்தேகம் ஏதுமின்றி நீங்கள் நிச்சயம் பரமார்த்திகத்தை (வாழ்வின் ஆன்மீகக் குறிக்கோளை) எய்துவீர்கள்.  என்னை உங்களது முழுமனத்தோடு நோக்குங்கள்.  பதிலாக நானும் அங்ஙனமே தங்களை நோக்குவேன்.

இம்மசூதியில் அமர்ந்துகொண்டு நான் உண்மையே பேசுகிறேன்.  உண்மையைத் தவிர வேறெதையும் பேசவில்லை.  சாதனைகள் ஏதும், ஆறு சாஸ்திரங்களில் கைதேர்ந்த அறிவு ஏதும் தேவை இல்லை.  உங்களது குருவினிடத்தில் நம்பிக்கையும், பற்றுறுதியும் கொள்ளுங்கள்.  குருவே தனி ஒருவராக நடத்துனர், இயக்குனர் என நம்புங்கள்.  தனது குருவின் பெருமையை அறிபவன், அவரையே ஹரிஹர பிரம்மமென்ற திருமூர்த்தி அவதாரமென்று கருதுபவன், ஆசீர்வதிக்கப்பட்டவன்."  இவ்வாறாக அறிவுறுத்தப்பட்டு, கிழவி உடன்பட்டாள்.  அவள் பாபாவை வணங்கி உண்ணாவிரதத்தைக் கைவிட்டாள்.

இக்கதையைக் கவனத்துடனும், கருத்துடனும் கேட்டுக்கொண்டிருந்த ஹேமத்பந்த் அதன் குறிப்பு நுட்பத்தையும், பொருத்தத்தையும் குறித்துப் பெருமளவு ஆச்சரியத்தில் மூழ்கினார்.  பாபாவின் இவ்வதிசய லீலையைக் கண்டுகொண்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர் உருகினார்.  மகிழ்ச்சிப் பெருக்கால் பொங்கி வழியலானார்.  அவர்தம் தொண்டை அடைத்தது.  ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியவில்லை.  ஷாமா இந்நிலையில் அவரைநோக்கி, "தங்களுக்கு என்ன நேர்ந்தது?  ஏன் மௌனமாகி விட்டீர்கள்? பாபாவின் கணக்கற்ற லீலைகள் இன்னும் எவ்வளவை நான் விவரிக்க வேண்டும்?" என்று கேட்டார்.

இத்தருணம் மத்தியான வழிபாடும், ஆரத்தி சடங்கும், மசூதியில் ஆரம்பமாகிவிட்டன என்பதை அறிவிக்கும் வகையில் மசூதியில் இருக்கும் மணி அடிக்கத் தொடங்கியது.  எனவே ஷாமாவும், ஹேமத்பந்த்தும் மசூதியை நோக்கி விரைந்தனர்.  பாபு சாஹேப் ஜோக் அப்போதுதான் வழிபாட்டைத் துவக்கி இருந்தார்.  பெண்கள் மசூதியினுள்ளே மேல்தளத்திலும், ஆண்கள் கீழே உள்ள திறந்த வெளித் தாழ்வாரத்திலும் ஆராத்தியைக் கோஷத்துடன் பலமாக மேளங்கள் முழங்கப் பாடிக்கொண்டிருந்தனர்.  ஷாமா தன் கூடவே ஹேமத்பந்த்தையும் இழுத்துக்கொண்டு மேலே சென்றார்.  பாபாவுக்கு வலதுபுறம் அவரும், ஹேமத்பந்த் முன்னாலும் அமர்ந்தனர்.  அவர்களைக் கண்டு ஷாமாவிடமிருந்து கொண்டுவந்த தட்ஷிணையைக் கொடுக்கும்படி ஹேமத்பந்த்திடம் பாபா கேட்டார்.  

ஹேமத்பந்த் அவ்விடம் நேரே சென்றிருந்ததாகவும் ஷாமா ரூபாய்க்குப் பதிலாக நமஸ்காரங்களை அளித்ததாகவும் அவர் அங்கேயே நேரில் இருப்பதாகவும் கூறினார்.  பாபா அதற்கு, "நன்று, தாங்கள் இருவரும் சம்பாஷித்தீர்களா?  அப்படி என்றால் நீங்கள் பேசியவை அனைத்தையும் குறித்து எனக்குச் சொல்லுங்கள்" என்றார்.  மணியோசை, மேளம், கோஷ்டிகானம் இவற்றைப் பொருட்படுத்தாது ஹேமத்பந்த் அவர்கள் பேசியதைக் கூற ஆவலாய் இருந்தார்.  அதை எடுத்துரைக்கவும் ஆரம்பித்தார்.  பாபாவும் அதைக் கேட்பதற்கு ஆவலாய் இருந்தார்.  எனவே அவர் தமது திண்டைவிட்டு நீங்கி முன்னால் சாய்ந்து கொண்டார்.  தாம் உரையாடியவை எல்லாம் மிகவும் மகிழ்வழிக்கின்றவை.  குறிப்பாக கிழவியின் கதை மிகமிக அற்புதமானது என்றும், அதைச் செவிமடுத்ததன் பொருட்டு அவர் பாபாவின் லீலை விவரிக்க இயலாதது என்றும், கதை என்ற புறத்தோற்றத்தில் பாபா தம்மையே உண்மையில் ஆசீவதித்திருப்பதாகத் தாம் நினைப்பதாகக் கூறினார்.  பின்னர் பாபா "கதை அற்புதமானது, எங்ஙனம் நீங்கள் ஆசீவதிக்கப்பட்டீர்கள்? நான் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.  எனவே அவை அனைத்தையும் குறித்து இப்போது சொல்லுங்கள்" என்றார்.  ஹேமத்பந்த் தாம் சற்றுமுன்னர் கேட்ட தனது உள்ளத்தில் நிலையான முத்திரையை ஏற்படுத்திய கதையை முழுக்க விவரித்தார்.  இதைக் கேட்டு பாபா மிகவும் மகிழ்ச்சியுற்றார்.  மேலும் அவரை நோக்கி, "இக்கதை உமதுள்ளத்தில் பதிவுற்றதா?  அதன் குறிப்பு நுட்பத்தைப் பிடித்துக் கொண்டீரா?!" என்றார்.  அவர் "ஆம் பாபா! எனது மனத்தின் பதைபதைப்பு மறைந்தொழிந்தது.  எனக்கு உண்மையான சாந்தியும், அமைதியும் கிடைத்தன.  நான் உண்மையான வழியை அறியப்பெற்றேன்" என்றார்.

பாபா பின்வருமாறு உரைத்தார்.  "எனது நிகழ்முறை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.  இக்கதையை நன்றாக ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.  அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  ஆத்மாவின் ஞானத்தை (அனுபூதி) அடைவதற்குத் தியானம் இன்றியமையாதது.  அதை இடையறாது பயிற்சித்தீர்களானால் விருத்திகள் (எண்ணங்கள்) அமைதிப்படுத்தப்படும்.  ஆசைகள் அற்ற நிலையில் இருந்துகொண்டு, நீங்கள் அனைத்துயிர்களிலும் இருக்கின்ற ஆண்டவரைத் தியானியுங்கள்.  மனது ஒருமுகப்படுத்தப்பட்ட பின்பு நமது குறிக்கோள் எய்தப்பட்டுவிடும்.  ஞானமெனும் (சத்து) பண்பே திருவுருக்கொண்டது எனவும், உணர்வுத் திரளும் பேரானந்தமுமாகிய எனது உருவமற்ற இயல்பை எப்போதும் தியானம் செய்யுங்கள்.  இதைச் செய்ய தங்களால் இயலாவிடின் இங்கே இரவும், பகலும் காண்பதைப் போன்று, உச்சி முதல் உள்ளங்கால் வரையுள்ள எனது ரூபத்தைத் தியானம் செய்யுங்கள்.  இதைத் தாங்கள் செய்துகொண்டே போகும்போது, தங்களின் விருத்திகள் (எண்ணங்கள்) ஒரே இல்லக்கில் குவிக்கப்படும்.  தியானம் செய்பவர், தியானம், தியானிக்கப்படும் பொருள் இவைகளிலுள்ள வேறுபாடு மறைந்துவிடும்.  தியானம் புரிபவர் உச்ச உணர்ச்சித்திரளுடன் ஒன்றி, பிரம்மத்துடன் கலந்து ஐக்கியமாய் விடுவார்.

தாய் ஆமை, நதியின் ஒரு கரையிலும் அதன் குட்டிகள் மறுகரையிலும் இருக்கின்றன.  அவைகளுக்கு அது பாலோ, உஷ்ணமோ அளிப்பதில்லை.  அதனுடைய கண்ணோட்டம் ஒன்றே அவைகளைப் போஷிக்கிறது.  குட்டிகள் தமது தாயாரை ஞாபகத்தில் கொள்ளுதலைத் (தியானிப்பதை) தவிர வேறொன்றும் செய்வதில்லை.  தாய் ஆமைகளின் கண்ணோட்டம் குட்டிகளுக்கு, காலூன்றிப் பெய்யும் அமுதமழையாகவும், ஊட்டப்பண்பிற்கும், மகிழ்ச்சிக்கும் உள்ள ஒரே தோற்றுவாயாகவும் இருக்கிறது.  குருவுக்கும், சீடர்களுக்கும் இடையிலுள்ள  உறவும் அத்தகையதேயாகும்".

பாபா இம்மொழிகளை உதிர்த்து முடித்தபின்பு ஆரத்தி கோஷ்டிகானம் முடிவுற்றது.  அனைவரும் உரக்க ஒரே குரலில் "சச்சிதானந்த சொரூபியாய் இருக்கிற சத்குரு சாயிநாத் மஹராஜுக்கு ஜெய்" என்று கூவினார்கள்.

அன்பானத வாசகர்களே! நாமும் இந்த நேரம் மசூதியில் கூட்டத்துடன் நின்றுகொண்டிருப்பதாக நினைத்துக் கொள்வோம்.  ஜய ஜய கோஷத்தில் நாமும் அவர்களுடன் பங்கு கொள்வோம்.

ஆரத்திச் சடங்கு முடிவடைந்த பின்னர் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.  வழக்கம்போல் பாபா சாஹேப் ஜோக் முன்னே வந்து பாபாவை வணங்கியபின் அவரின் உள்ளங்கை நிறையக் கற்கண்டை அளித்தார்.  பாபா இவை முழுவதையும் ஹேமத்பந்த்தின் கைகளில் திணித்து அவரிடம், "இக்கதையை உள்ளத்தில் இருத்தி நன்றாக நினைவில் வைத்துக் கொள்வீர்களேயானால், தங்களது நிலையும் கற்கண்டைப் போலவே சுவையுள்ளதாகும்.  உங்களது எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்படும்.  நீங்களும் சந்தோஷமாய் இருப்பீர்கள்" என்று கூறினார்.  ஹேமத்பந்த் பாபாவின் முன்னால் பணிந்து வணங்கி "இவ்வாறே எனக்கு அனுகூலம் செய்யுங்கள்.  என்னை எப்போதும் ஆசீர்வதித்துக் காப்பாற்றுங்கள்" என்று கெஞ்சிக் கேட்டுகொண்டார்.  பாபா அதற்கு "இக்கதையைக் கேட்டு, அதனைக் குறித்துத் தியானித்து, அதன் மெய்க்கருத்தை ஜீரணித்துக் கொள்ளுங்கள்.  அப்போது உங்களிடமிருந்து தாமே உருவெளிப்படுத்திக் காட்டுகின்ற ஆண்டவரை எப்போதும் ஞாபகமூட்டித் தியானித்துக் கொண்டிருப்பீர்கள்" என்று பதிலளித்தார்.  

அன்பான பக்தர்களே! அப்போது ஹேமத்பந்த் கற்கண்டுப் பிரசாதத்தைப் பெற்றார்.  நாமும் இப்போது கற்கண்டுப் பிரசாதம் அல்லது இக்கதையின் அமிர்தத்தைப் பெறுவோம்.  அதை நாம் உளநிறைவடையும்வரை பருகுவோம்.  அதைத் தியானிப்போம்.  அதை ஜீரணித்துக்கொள்வோம்.  பாபாவின் அருளினால் வலிமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்போம்.  ஆமென்.  பத்தொன்பதாம் அத்தியாயத்தின் இறுதியில் ஹேமத்பந்த் மற்றும் சில விஷயங்களைப் பற்றிக் கூறியிருக்கிறார்.  அவைகள் கீழே தரப்பட்டுள்ளன.  



நமது குணத்தைப்பற்றி பாபாவின் அறிவுரை

பின்வரும் பாபாவின் மொழிகள் பொதுவானவை.  விலைமதிக்க முடியாதவை.  அவைகள் மனதில் இருத்தப்பட்டு அதற்கேற்பச் செயல்படுத்தப்பட்டால் எப்போதும் உங்களுக்கு நன்மை அளிக்கும்.  "ஏதேனும் உறவோ, தொடர்போ இல்லாவிடில் இருவரும் எங்கும் செல்வதில்லை, ஏதேனும் ஜீவராசிகளோ, மனிதர்களோ உங்களிடம் வரநேர்ந்தால், அவர்களைப் பண்பின்றி விரட்டிவிட வேண்டாம்.  அவர்களை நன்றாக வரவேற்று உரியமரியாதையுடன் நடத்துங்கள்.  தாகமாய் இருப்போர்க்குத் தண்ணீர் கொடுத்தபோதும், பசியாய் இருப்போர்க்கு உணவு அளித்தபோதும், ஆடையற்றவர்களுக்கு ஆடையளித்தபோதும், உட்காருவதற்கும், இளைப்பாறுவதற்கும் உங்களது திண்ணையை மற்றொருவர் அளித்தபோதும் ஸ்ரீஹரி நிச்சயம் மகிழ்வெய்துகிறார்.  

யாராவது உங்களிடம் பணம் கேட்டு உங்களுக்கு கொடுக்க மனதில்லாமல் இருந்தால், கொடுக்காதீர்கள்.  ஆனால் அவரைப் பார்த்து நாய் போன்று குறைக்க வேண்டாம்.  யாரேனும் நூற்றுக்கணக்கான விஷயங்களை உங்களுக்கு எதிராகக் கூறட்டும்,  ஆனால் கசப்பாக எவ்விதத்திலும் அவர்களுக்குப் பதிலளிக்கும்படியாக சீற்றங்கொள்ளாதீர்கள்.

இவ்வாறான விஷயங்களை எப்போதும் சகித்துக் கொண்டிருப்பீர்களேயானால், நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.  உலகம் தலைகீழாக மாறட்டும்.  நீங்கள் இருந்த இடத்திலே இருங்கள்.  உங்கள் இருப்பிடத்தில் நின்றுகொண்டோ, வசித்துக்கொண்டோ அனைத்து விஷயங்களையும் உங்கள் முன்னர் கடந்து செல்லும் காட்சியாக அமைதியுடன் பார்த்துக்கொண்டிருப்பீர்களாக!  உங்களிடமிருந்து என்னைப் பிரிக்கும் வேற்றுமைச் சுவரை இடித்து விடுங்கள்.  பின்னர் நமது சந்திப்பிற்குரிய சாலையானது தடங்கலின்றியும், திறந்தும் இருக்கும்.  'நான்', 'நீ' என்ற வேறுபாட்டுணர்வே குருவிடமிருந்து சீடனைப் பிரிக்கும் தடையரணாகும்.  அது அழிக்கப்பட்டாலன்றி இரண்டறக் கலத்தல் அல்லது ஐக்கியமாதல் இயலாது.  

கடவுளே சகலத்திற்கும் ஒரே உரிமையாளர்.  'அல்லா மாலிக்' வேறோருவரும் நமது பாதுகாவலரல்ல.  அவர் வேலைசெய்யும் முறைமை அசாதாரணமானது, விலை மதிக்கமுடியாதது.  அறிவாலறிய முடியாதது.  அவரது சங்கல்பமே ஈடேறும்.  அவர் நமக்கு வழிகாட்டுவார்.  நமது உள்ளத்தின் ஆசைகளைப் பூர்த்தி செய்வார்.  ருணானுபந்தத்தின் (முன்ஜென்மத்தின் உறவு) மூலமாகவே நாம் இணைந்துள்ளோம்.  ஒருவருக்கொருவர் அன்பாயிருந்தும், செவைசெய்தும் நாம் மகிழ்ச்சியுடனிருப்போம்.  எவன் வாழ்க்கையில் மிகமிக உயர்ந்த குறிக்கோளை எய்துகிறானோ அவன் இறவாப் புகழுடையவன், மகிழ்ச்சியுடையவன்.  மற்றவர் எல்லாம் வெறுமனே உளதாயிருக்கிறார்கள் அல்லது மூச்சு விடும்வரை வாழ்ந்திருக்கிறார்கள்.  



நல்ல எண்ணங்களின் அவா நிறைவேற்றத்தை ஊக்குவித்தல் 

நல்ல எண்ணங்களை சாயிபாபா எங்ஙனம் ஊக்குவித்தார் என்பதை அறிவது சுவாரசியமானது.  அன்புடனும், பக்தியுடனும் முழுமையாக உங்களை நீங்கள் அவரிடம் சரணாகதியாக்கிக்கொள்ள வேண்டும்.  பின்னர் எவ்வளவோ விஷயங்களில் அடிக்கடி அவர் உங்களுக்கு உதவி செய்வதைக் காண்பீர்கள்.  தூக்கத்திலிருந்து எழுந்த உடனே உங்களுக்கு ஏதாகிலும் ஒரு நல்ல எண்ணம் உதிக்கின்ற போது அதையே பின்னர் பகற்பொழுதில் அனுசரித்தால் உங்களது புத்தியின் திறம் மலர்ந்து வெளிப்பட்டு மனது சாந்தியடையும் என்று ஒரு முனிவர் கூறியிருந்தார்.

ஹேமத்பந்த் இதை முயற்சிக்க விரும்பினார்.  ஒரு புதன்கிழமை இரவு படுக்கும்முன் அவர் சிந்தித்தார்.  "நாளை வியாழக்கிழமை ஒரு புனிதமான நாள், ஷீர்டியும் மிகவும் புனிதமான இடம்.  எனவே நான் நாளை முழுவதும் ராமநாமத்தை நினைவூட்டிக் கொள்வதிலும், போற்றுவதிலும் கழிப்பேன்" என்றவாறு அவர் உறங்கினார்.  அடுத்தநாள் காலை அவர் துயில் நீங்கி எழுந்தபோது, எவ்வித முயற்சியும் இன்றி ராமநாமத்தை நினைவு கூர்ந்தார்.  தமது காலைக் கடமைகளை முடித்துக்கொண்டபின், மலர்களுடன் பாபாவைக் காணச் சென்றார்.  தீஷித் வாதாவிலிருந்து புறப்பட்டு, பூட்டி வாதாவை (தற்போதைய சமாதி மந்திர்) கடந்து கொண்டிருக்கும் அதே தருணத்தில் பாபாவுக்கு முன்னால், மசூதியில் ஔரந்காபாத்கர் என்னும் இனிமையாகப் பாடப்படுகின்ற ஓர் அழகிய பாடலைக் கேட்டார்.  

அது ஏக்நாத்தின் 'குரு கிருபாஞ்ஜன் பாயோ மேரே பாயி.. !'  என்ற பாடல், அப்பாடலில் குருவின் கடாஷம் என்னும் ரூபத்தில் அஞ்சனம் அவருக்குக் கிடைத்தது என்றும், அது அவரின் பார்வையைத் திறந்துவிட்டு அவருக்கு ராமரை அகத்தும், புறத்தும், உறக்கத்திலும், கனவிலும், விழிப்பு நிலையிலும், எவ்விடத்தும் காணும்படி செய்தது என்றும் கூறினார்.  எவ்வளவோ பாடல்கள் இருக்கின்றன.  பின்னர் ஏன் இக்குறிப்பிட்ட பாட்டு, பாபாவின் பக்தரான ஔரந்காபாத்கரினால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  பகற்பொழுதில் ராமநாமத்தை இடைவிடாமல் பாடவேண்டும் என்ற ஹேமத்பந்த்தின் தீமானத்திற்கு ஊட்டமளிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டதல்லவா தனித்திறம் வாய்ந்த இந்நிகழ்வுப் பொருத்தம்!



உபதேஷங்களின் விதங்கள் 
- அவதூறு பேசுவோர் (புறங்கூறுவோர்) கண்டிக்கபடுதல் 

அறிவுரை வழங்குவதற்கு, சாயிபாபாவிற்கு எத்தகைய சிறப்பான இடமோ, குறிப்பிட்ட நேரமோ தேவை இருக்கவில்லை.  சந்தர்ப்பம் நேரிட்ட போதெல்லாம் தாராளமாக அவற்றை அவர் வழங்கினார்.  ஒருமுறை பாபாவின் பக்தனொருவன் வேறொருவரை அவர் அறியாதபடி மற்ற ஜனங்களின் முன்னிலையில் திட்டினான்.  தனது சகோதரரின் நன்மைகளையெல்லாம் புறத்தொதுக்கி, அவரின் குறைபாடுகள் குறித்து கேட்போர்கள் அருவருப்படையும்படியாக பழித்துப் பேசினான்.  

அவசியமின்றி மற்றவர்களைப் புறங்கூறுவது மக்களுக்குரிய ஒரு மனப்பாங்காக இருப்பதைப் பொதுவாக நாம் காண்கிறோம்.  முனிவர்கள் இந்தப் புறங்கூறுதலை வேறொரு கோணத்தில் இருந்து நோக்குகிறார்கள்.  அழுக்கை நீக்குவதற்குப் பல வழிகள் இருக்கின்றன.  மண், நீர், சோப்பு முதலானவை.  ஆனால் புறங்கூறுபவனுக்கோ அவனுக்கே உரித்தான வழி இருக்கிறது.  அவன் மற்றவர்களது அழுக்கை (குறைபாடுகளை) தனது நாவினால் அகற்றி நீக்குகிறான்.  ஒருவகையில் அவன் தன்னால் திட்டப்படுபவனுக்கே உதவுகிறான்.  இதற்காக அவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.  புறங்கூறுபவனைத் திருத்துவதற்கு சாயிபாபாவுக்கு அவருக்கே உரியதான வழி இருக்கிறது.  

அவர் தமது நிறைபேரறிவினால் அந்த புறம் கூறுவான் செயலை அறிந்திருந்தார்.  மதியம் அவர் அவனை லெண்டித் தோட்டத்துக்கருகில் பார்த்தபோது, வேலிக்கருகில் இருந்த மலத்தை உண்ணும் பன்றியை அவனுக்குச் சுட்டிக்காண்பித்து, "பார், அது எத்தகைய சுவைமணச் சிறப்புடன் மலத்தைப் பேராவலுடன் விழுங்குகின்றது, உனது நடத்தையும் அத்தகையதே.  உனது தோழர்களை நீ மனதாரத் திட்டித்தீர்த்துகொண்டே இருக்கிறாய்.  பல்வேறு நல்வினைகளைச் செய்ததன் பலனாக நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய்.  இவ்வாறு நீ நடந்துகொண்டால், ஷீர்டி உனக்கு எவ்விதத்திலாவது உதவி செய்யுமா?" என்று கேட்டு அவனுக்கு அறிவுரை வழங்கினார்.  அப்பக்தன் இப்பாடத்தை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு சென்றான் என்று சொல்லத் தேவையில்லை.

இவ்விதமாக பாபா அவசியம் நேரிட்டபோதெல்லாம் அறிவுரைகளை வழங்கிக்கொண்டே இருந்தார்.  இவைகள் நமது மனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்படி செயலாற்றப்பட்டால், ஆன்மீக இலட்சியம் (அனுபூதி) வெகுதொலைவில் இல்லை.  ஏன் ஹரி (கடவுள்) இருந்தால் அவர் எனது கட்டிலிலேயே உணவளிப்பார் என்னும் ஒரு பழமொழி இருக்கிறது.  உணவு, உடை விஷயத்தில் மட்டுமே இப்பழமொழி உண்மை.  ஆனால் இதை நம்பி எவனாகிலும் அமைதியாக அமர்ந்துகொண்டு, ஆன்மீக விஷயங்களில் ஒன்றும் செய்யாமல் இருந்தால் அவன் படு வீழ்ச்சி எய்துவான்.  ஆன்ம உணர்வடைய தன்னைத்தானே தனக்கு இயலும், உச்ச அளவு செயலில் முனைவித்துக் கொள்ளவேண்டும்.  எவ்வளவு அதிகம் அவன் பெருமுயற்சி கொள்கிறானோ, அவ்வளவு அதிகம் அவனுக்கு நல்லது.  

பாபா தாம் நிலம், காற்று, நாடு, உலகம், ஒளி, மோஷம் ஆகியவை எங்கணும் நிறைந்திருக்கும் சர்வவியாபி என்றும் தாம் ஒரு வரையறை உடையவரல்ல என்றும் கூறினார்.  பாபா மூன்றரை முழ உயரமுள்ள அவரின் உடம்பே என்று எண்ணுபவர்களின் தவறான கருத்தை நீக்குதற்பொருட்டாக அவர் இந்த ரூபத்தில் தாமே அவதரித்துக் கொண்டார்.  இரவும் பகலும் எந்த பக்தனாவது பூர்ண ஆத்மசரணாகதியுடன் அவர்மீதே தியானம் புரிவானாயின், அவன் அவருடன் இரண்டற இனிப்பும் - சர்க்கரையும் போன்றும், அலையும் - கடலும் போன்றும், கண்ணும் - ஒளியும் போன்றும் முழுமையான ஐக்கியத்தைத் துய்த்துணர்வான்.  பிறப்பு - இறப்பு என்னும் சுழலை ஒழித்து அமைதியுற வேண்டியவன், நேர்மையான வாழ்க்கை நடத்த வேண்டும்.  அமைதியாகவும், கட்டுப்பட்ட மனத்துடனும் இருக்க வேண்டும்.  யாரையும் புண்படுத்தும் படியாக வெடுக்கென்று பேசக்கூடாது.  எப்போதும் நல்வினைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.  தனது கடமைகளைச் செய்யவேண்டும்.  தானே உள்ளத்தாலும், உயிராலும் அவரிடம் சரணாகதி அடையவேண்டும்.  அதன் பின்னர் அவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.  அவரையே முழுமையாக நம்புபவனும், அவரது லீலைகளைக் கேட்டு அதையே விவரமாக எடுத்துக் கூறுபவனும், வேறெதைப் பற்றியும் சிந்திக்காதவனும் ஆத்மானுபூதியை அடைவது உறுதி. 

பாபா தமது பெயரையே நினைவில் வைக்கும்படியும் தம்மிடமே சரணாகதி அடையும்படியும் பலரைக் கேட்டுக்கொண்டார்.  ஆனால் தாங்கள் யார்? என்று (நான் யார் விசாரணை) அறிய விரும்பியவர்களுக்கு ஸ்வரணத்தையும்(கற்றல்), மனனத்தையும்(தியானம்) அறிவுறுத்தினார்.  சிலரைக் கடவுள் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளும்படியும், சிலரை அவரது லீலைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்படியும், சிலரைத் தமது பாதபூஜை செய்யும்படியும், சிலரை அத்மாத்ய ராமாயணம், ஞானேஸ்வரி, மற்றும் பிற திருமுறை நூல்களைப் படிக்கும்படியும் அறிவுறுத்தினார்.  சிலரைத் தமது பாதத்தடியில் அமரும்படி இருத்தி வைத்தார்.  சிலரைக் கண்டோபா கோவிலுக்கு அனுப்பினார்.  சிலரை விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை ஜெபம் செய்யும்படியும், மற்றும் சிலரை சாந்தோக்ய உபநிஷதம், கீதையைக் கற்கும்படியாகவும் கூறினார்.  அவர்தம் உபதேஷங்களுக்கு எவ்வித வரையறையோ, கட்டுப்பாடோ கிடையாது.  சிலருக்கு அதை நேரிடையாகவே கொடுத்தார்.  மற்றும் சிலருக்கு கனவில் காட்சிகள் மூலம் அளித்தார்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையாய் இருந்த ஒருவரின் கனவில் தோன்றி அவரது மார்பில் உட்கார்ந்து அழுத்தி, மதுவைத் தொடுவதில்லை என்று அவர் சத்தியம் செய்துகொடுத்தபின்பு அவரை விட்டகன்றார்.  சிலருக்கு கனவில் 'குரு பிரம்மா... குரு விஷ்ணு....' போன்ற மந்திரங்களை விளக்கினார்.  ஹடயோகம் பழகிக்கொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு ஹடயோகப் பயிற்ச்சியை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும், அமைதியுடன் அமர்ந்து பொறுமையாய் (சபூரி) இருக்கவேண்டும் என்றும் சொல்லியனுப்பினார்.  அவரது எல்லா வழிகளையும், செயல் முறைகளையும் விவரிக்க இயலாது.  சாதாரண உலக விவகாரங்களில் தமது செயல்களால் முன் உதாரணகள் அமைத்தார்.  அவைகளில் ஒன்று கீழே தரப்பட்டிருக்கிறது.



உழைப்புக்குக் கூலி

ஒருநாள் மத்தியான வேளையில் ராதாகிருஷ்ணமாயின் வீட்டிற்கு அருகில் பாபா வந்து, "எனக்கு ஒரு ஏணி கொண்டுவாருங்கள்" என்று கூறினார்.  சிலர் அதைக் கொண்டுவந்து பாபா குறிப்பிட்டபடி அதை ஒரு வீட்டுச் சுவரில் சாய்த்து  வைத்தனர்.  வாமன் கோந்த்கருடைய வீட்டுக் கூரையின் மீது ஏறி, ராதாகிருஷ்ணமாயின் கூரையின் மீது நடந்து சென்று, மற்றொரு மூலையில் இருந்து கீழே இறங்கினார்.  பாபா எந்தக் குறிக்கோளுடன் இறந்தார் என்பதை ஒருவராலும் அறிய இயலவில்லை.  மலேரியா காய்ச்சலால் ராதாகிருஷ்ணமாயி நடுங்கிக் கொண்டிருந்தாள்.  அதை ஒட்டி விரட்டுதற்பொருட்டே அவர் மேலே ஏறியிருக்கலாம்.  கீழே இறங்கியவுடனே ஏணியைக் கொண்டுவந்தவர்களுக்கு பாபா இரண்டு ரூபாய் கொடுத்தார்.  சிலர் தைரியத்துடன் பாபாவை ஏன் அவர் அவ்வளவு அதிகம் பணம் கொடுத்தார் எனக் கேட்டனர்.  அதற்கு அவர் ஒருவரும் மற்றவர்களின் உழைப்பை வெறுமையாகக் கொள்ளக்கூடாது என்று கூறினார்.  உழைப்பவனுக்கு அவனுக்கு உரியவைகள் ஒழுங்காகவும், தாராளமாகவும் கொடுக்கப்பட வேண்டும்.  பாபா அறிவுறுத்திய இக்கொள்கை பின்பற்றப்பட்டால், அதாவது உழைப்பிற்கான கூலி ஒழுங்காகவும், திருப்திகரமாகவும் அளிக்கப்பட்டால் தொழிலாளர்கள் இன்னும் சிறப்பாக வேலை செய்வார்கள்.  தொழிலாளர்களும், முதலாளிகளும் இலாபம் அடைவார்கள்.  இழுத்து மூடுவதற்கோ (lock-out) வேலை நிறுத்தங்களுக்கோ இடமேயில்லை.  தொழிலாளி, முதலாளி மனஸ்தாபமும் இல்லை.

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

       
          
    

Thursday, 5 April 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 16/17

துரித பிரம்மஞானம் 

இவ்விரண்டு அத்தியாயங்களும் சாயிபாபாவிடமிருந்து துரிதமாக பிரம்மஞானத்தைப் பெறவிழைந்த ஒரு செல்வந்தரின் கதையைப் பற்றிக் கூறுவதாகும்.  



முன்னுரை

முன் அத்தியாயத்தில் சோல்கரின் சிறிய அளவிலான சமர்ப்பண விரதம் எவ்விதம் நிறைவேற்றப்பட்டு ஏற்கப்பட்டதென விளக்கப்பெற்றது.  அன்புடனும், பக்தியுடனும் அளிக்கப்படும் எத்தகைய சிறிய பொருளையும், பாராட்டுதல்களுடன் ஏற்றுக்கொள்வார் என்று அக்கதையின் வாயிலாக சாயிபாபா அறிவுறுத்தினார்.  ஆனால் அதுவே பெருமையுடனும், இறுமாப்புடனும் அளிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்.  தாமே சச்சிதானந்தத்தினால் (சத்து - சித்து - ஆனந்தம்) முழுமையும் நிரம்பப் பெற்றிருந்தமையால், வெறும் புறச்சம்பிரதாயங்களை அவர் பெருமளவு இலட்சியம் செய்வதில்லை.  அடக்கவொடுக்கத்துடனும், பணிவான உணர்வுடனும் ஒன்று சமர்ப்பிக்கப்படுமானால், அதை அவர் வரவேற்று பேரார்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்வார்.

உண்மையில் சாயிபாபாவைப் போன்ற சத்குருவைக் காட்டிலும், மிகுதியான தாராளம், தயை முதலான பண்புகள் அமையப்பெற்ற பிறிதொருவர் எவரும் இல்லை.  அவரை சிந்தாமணிக் கல்லுக்கோ(நினைத்தவை அனைத்தையும் தரும் ஓர் அரும் பொன்மணி), கற்பக தருவிற்கோ(விருப்பங்களை ஈடேற்றும் தெய்வீக மரம்), காமதேனுவிற்கோ(விருப்பங்களை ஈடேற்றும் தெய்வீகப்பசு) ஒப்பிடமுடியாது.  ஏனெனில் நாம் விரும்பியவற்றை மட்டுமே அவை அளிக்கின்றன.  ஆனால் சத்குருவோ, கருதுதற்கியலாத, ஆராய்ந்து அறிதற்கியலாத, மெய்ப்பொருளாம் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை நமக்கு நல்கிறார்.

இப்போது சாயிபாபாவிடம் வந்து தனக்கு பிரம்மஞானம் அளிக்க வேண்டுமென்று மன்றாடி வேண்டிக்கொண்ட ஒரு பணக்காரரைச் சமாளித்து, எப்படி அனுப்பி வைத்தார் என்னும் கதையைக் கேட்போம்.  தனது வாழ்க்கையில் மிகவும் சுபிட்சத்துடன் விளங்கிய பணக்காரர் ஒருவர் இருந்தார்.  (துரதிஷ்ட வசமாக அவர் பெயர், இருப்பிடம் முதலியன குறிக்கப்படவில்லை)

அவர் ஏராளமாக செல்வம், வீடுகள், வயல்கள், நிலங்கள் முதலியவற்றைப் பெருந்திரளாகக் குவித்திருந்தார்.  பல வேலையாட்களும், சார்ந்து வாழ்வோரும் வாய்க்கப்பட்டவராக இருந்தார்.  பாபாவினது புகழ் அவர் செவிகளை எட்டியபோது, அவர் தனது நண்பர் ஒருவரிடம், தனக்கு எவ்விதமான பொருளும் தேவையிருக்கவில்லை என்றும், எனவே அவர் ஷீர்டிக்குச் சென்று, பாபாவிடம், பிரம்ம ஞானத்தை அருளும்படி வேண்டப்போவதாகவும், அங்ஙனம் அதை அவர் பெற்றால், அது நிச்சயம் தன்னை இன்னும் அதிக மகிழ்ச்சியுடையவராக்கும் என்றும் கூறினார்.  அவருடைய நண்பர் பின்வருமாறு உரைத்து, அவர் கருத்தை மாற்ற முயன்றார்.  "பிரம்மத்தை அறிவதென்பது அவ்வளவு எளிதல்ல.  அதிலும் குறிப்பாக மனைவி, மக்கள், செல்வம் என்னும் கவனங்களிலேயே முழுவதுமாகக் கவரப்பட்டிருக்கும் பேராசைக்காரருக்கு அது எளிதே அல்ல.  ஒரு பைசாவும் தர்மத்திற்காக ஈயா மனிதராகிய உம்முடைய பிரம்மஞான நாட்டத்தை யாரே திருப்தி செய்ய இயலும்?"

இப்பேர்வழி, தமது நண்பரின் அறிவுரையைப் பொருட்படுத்தாது போய்வர குதிரைவண்டியைப் பேசியமர்த்தி ஷீர்டிக்கு வந்தார்.  மசூதிக்குச் சென்று சாயிபாபாவைப் பார்த்தார்.  அவர் பாதங்களில் வீழ்ந்து, "பாபா, இங்கு வருவோர் அனைவர்க்கும் எவ்விதத் தாமதமுமின்றித் தாங்கள் பிரம்மத்தைக் காண்பிக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டு தொலைவிலுள்ள இடத்தில் இருந்து நான் இங்கு வந்திருக்கிறேன்.  எனது பிரயாணத்தால் மிகவும் களைப்படைந்து உள்ளேன்.  நான் தங்களிடமிருந்து பிரம்மத்தைப் பெறுவேனாகில் எனது கடின முயற்சிகளெல்லாம் நன்றாக ஊதியம் அளிக்கப்பட்டு, பரிசு நல்கப்பட்டவையாகும்" என்றார்.  

பாபா அப்போது கூறியதாவது, "ஓ! எனதருமை நண்பனே, ஏங்கிக் கவலையுறாதே.  நான் உடனேயே உனக்குப் பிரம்மத்தைக் காண்பிக்கிறேன்.  எனது நடைமுறைத் தொடர்புகள் அனைத்தும் ரொக்கத்திலேதான்.  கடனில் அல்ல.  எனவே பலர் என்னிடம் வந்து, செல்வம், தேக ஆரோக்கியம், ஆற்றல், புகழ், பதவி, நோய் தீர்த்தல் போன்ற இவ்வுலகப் பொருட்களையே கேட்கின்றனர்.  இங்கு வந்து பிரம்ம ஞானத்தைக் கேட்டவர் மிகவும் அரிது.  இவ்வுலகப் பொருள்களைக் கேட்டவர்களுக்குப் பஞ்சமே இல்லை.  ஆத்மார்த்த விஷயங்களில் ஆர்வமுடைய மனிதர்களைக் காண்பது மிகவும் அரிதாகையால், உம்மைப்போன்ற மனிதர்கள் வந்து என்னைப் பிரம்மஞானம் தரச்சொல்லி வற்புறுத்தும்போது அத்தருணத்தை யான் அதிஷ்டமும், புனிதமும் வாய்ந்ததாகக் கருதுகிறேன்.  எனவே, உடனே மகிழ்ச்சியுடன் உனக்கு பிரம்மத்தின் சுற்றுச்சூழலையும், அதை அடைவதில் உள்ள சிக்கல்களையும், தெரிவித்துத் தெளிவிப்பேன்" என்றார்.

இதைப் புகன்ற பின்னர், பாபா பிரம்மத்தைப் புலப்படுத்த ஆரம்பித்தார்.  அவரை அங்கே அமரும்படி செய்து, பிறிதோர் உரையாடலிலோ, விவகாரத்திலோ அவர் ஈடுபடும்படியாகச் செய்தார்.  இவ்வாறாகத் தற்காலிகமாக அவரைத் தம் வினாவினை மறக்கச் செய்தார்.  பிறகு ஒரு பையனைக் கூப்பிட்டு, அவனை நந்து மார்வாடியிடம் சென்று ஐந்து ரூபாய் கைமாற்று வாங்கி வரும்படி கூறினார்.  பையன் சென்று உடனே திரும்பிவந்து, இல்லையென்றும் அவர் வீடு பூட்டி இருப்பதாயும் கூறினான்.  பின்னர் பாபா அவனை, மளிகைக் கடைக்காரர் பாலாவிடம் சென்று அவரிடமிருந்து குறிப்பிட்ட கைமாற்றை வாங்கிவரும்படி கூறினார்.  இம்முறையும் பையன் வெற்றிபெறாமல் திரும்பி வந்தான்.  இந்தப் பரிசோதனை இரண்டு, மூன்று முறை அதே விளைவுடன் நடத்தப்பட்டது.  

நாம் அனைவரும் அறிந்தவாறு சாயிபாபா வாழ்ந்து கொண்டிருக்கின்ற, இயங்கிக் கொண்டிருக்கின்ற அவதாரமாகும்.  பின்னர் அற்பத் தொகையான ஐந்து ரூபாய் அவருக்கு ஏன் தேவைப்படுகிறது?  அதனைக் கைமாற்றாகப் பெறுவதற்கு அவர் ஏன் அரிதில் முயலவேண்டும் என்று சிலர் வினவக்கூடும்.  உண்மையில் அவருக்கு இத்தொகை தேவையிருக்கவில்லை.  நந்துவும், பாலாவும் அவரவர் இடங்களில் இல்லை என்பதை பாபா நிச்சயமாக முழுமையும் தெரிந்துகொண்டே இருந்தார்.  இவ்வழிமுறையை பிரம்மத்தினை எய்த நினைக்கின்றவருக்கு ஒரு சோதனையாக மேற்கொண்டார் போலும்.  அப்பெருந்தகை கரன்சி நோட்டுக்களின் கற்றை ஒன்றைத் தம் பையில் வைத்திருந்தார்.  அங்ஙனம் அவர் உண்மையிலேயே ஆர்வமுள்ளவராக இருந்திருப்பின், ஐந்து ரூபாயைப் பெறுவதற்காக பாபா தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கும் அத்தருணம், அங்கே அமைதியாக உட்கார்ந்துகொண்டு, நிகழ்வனவற்றின் வெறும் மேலோட்டப் பார்வையாளராக இருந்திருக்க மாட்டார்.  பாபா தமது மொழிகளைக் காப்பாற்றுவார் என்றும், கடனைத் திருப்பிக் கொடுத்துவிடுவார் என்றும், தேவையான பணமும் ஓர் அற்பத் தொகையே என்றும் அவர் அறிந்தே இருந்தார்.  எனினும் அவருக்கு ஓர் உறுதியான தீர்மானத்துக்கு வரவோ, தொகையை முன்வந்து அளிக்கவோ இயலவில்லை.  அத்தகைய மனிதர் உலகிலேயே மிகமிகப் பெரிய பொருளான பிரம்மஞானத்தை பாபாவிடமிருந்து பெற விரும்பினார்.  

பாபாவிடம் அன்பு பூண்ட வேறெந்த மனிதனும் சும்மா பார்த்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக உடனடியாக பாபாவுக்கு ஐந்து ரூபாயை அளித்திருப்பான்.  இம்மனிதரின் இயல்போ வேறானதாக இருந்தது.  அவர் எவ்விதப் பணமும் கொடுக்கவில்லை, அமைதியாகவும் அமர்ந்திருக்கவில்லை.  திரும்பிச் செல்வதற்குப் பதட்டமாக இருந்தமையால், பொறுமை இழக்கத் தொடங்கினார்.  பாபாவிடம் மன்றாடி, "ஓ! பாபா, தயவு செய்து சீக்கிரம் எனக்கு பிரம்மத்தைக் காண்பியுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.  

பாபாவும், "ஓ! எனதருமை நண்பனே, நீ பிரம்மத்தைக் கண்ணுறும் பொருட்டாகவே இவ்விடத்தில் அமர்ந்துகொண்டு நான் நுணுக்க விபரமாக ஆய்ந்த வழிமுறைகளையெல்லாம் நீ புரிந்து கொள்ளவில்லையா?  சுருக்கமாக அவை இவ்வாறானதாகும்.

பிரம்மத்தினைக் கண்டுணர்வதற்கு ஒருவன் ஐந்து பொருட்களைக் கொடுக்கவேண்டும்.  அதாவது ஐந்து பொருட்களைச் சமர்ப்பிக்கவேண்டும்.  அவையாவன:
(1)  ஐந்து பிராணன்கள் (முக்கிய சக்திகள்)
(2)  ஐந்து உணர்வுகள் (செயலில் ஐந்து, பார்வையில் ஐந்து)
(3)  மனது
(4)  புத்தி
(5)  அஹங்காரம் 

பிரம்மஞானம் அல்லது ஆத்மானுபூதி என்னும் வழியானது கத்தி முனையில் நடப்பதனை நிகர்த்த கடினமான ஒன்றாகும்" என்று ஆரம்பித்து இப்பொருளினைப்பற்றி சாயிபாபா நீண்ட போதனை அளித்தார்.  அதனுடைய கருத்துரை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.  

பிரம்மஞானம் அல்லது ஆத்மானுபூதியைப் பெறுவதற்கு வேண்டிய முன்னீட்டான வரையறைகள் (தகுதிகள்).

எல்லோரும் தத்தமது வாழ்நாட்களிலேயே பிரம்மத்தைப் பார்க்கவோ, தெளிவாக உணரவோ மாட்டார்கள்.  அதற்காக சில தகுதிகள் முழுமையாகத் தேவைப்படுகின்றன.

1.  முமுக்ஷை - விடுதலையடைய செறிந்த விருப்பம்
தான் கட்டுப்படிருப்பதாக நினைத்து, தடைகளினின்று விடுபட வேண்டும் என்ற அந்த இலட்சியத்திற்கே ஊக்கத்துடனும், தீர்மானத்துடனும் உழைப்பவன், மற்றெதைப் பற்றியும் கவலையுறாதவன் ஆத்மீக வாழ்க்கைக்குத் தகுதியுடையவன் ஆகின்றான்.  

2 .  விரக்தி - இவ்வுலக, மறுஉலகப் பொருட்களின் மீதுள்ள வெறுப்புணர்ச்சி 
இகபரங்களில் தனது செய்கையால் விளையும் பொருட்கள், ஆதாயங்கள், கௌரவங்கள் இவைகளை ஒருவன் வெறுத்தாலன்றி ஆத்மீக ராஜ்ஜத்தின் எல்லைக்குள் நுழைய உரிமை இல்லை.

3.  அந்தர் முகதா - உண்முக சிந்தனை
கடவுளால் நமது உணர்வுகளனைத்தையும் புறத்தே செல்லும் போக்குடையவைகளாய் படைக்கப்பட்டிருக்கின்றன.  எனவே, மனிதன் எப்போதும் தனக்குப் புறத்தே உள்ளனவற்றையே நோக்கி அகத்தைப் பாராதிருக்கிறான்.  ஆத்மானுபூதியையும், இறவாப் புகழுடைய பெருவாழ்வையும் விரும்புபவன், தனது கூர்ந்த நோக்கை உண்முகமாகத் திருப்பி உள்ளிருக்கும் ஆத்மாவைப் பார்க்கவேண்டும்.

4.  தீவினைகள் கசடறக் கழிபடுதல் 
ஒருவன் கொடுந்தன்மைகளிருந்து மாறினாலன்றியும், தவறுகள் செய்வதை நிறுத்தினாலன்றியும், தன்னைத் தான் ஒருங்கிணைத்து அமைதியுற்றாலன்றியும், மனம் சாந்தமுற்றாலன்றியும், தத்துவ ஞானத்தின் மூலமாக மட்டும் ஆத்மானுபூதியை எய்துவிட இயலாது.

5.  ஒழுங்கான நடத்தை 
உண்மையுடைய, தவமுடைய, உள்தரிசனத்துடன் கூடிய பிரம்மச்சர்ய வாழ்க்கையை நடத்தினாலன்றி, ஒருவன் இறையனுபூதியை எய்த இயலாது.

6.  புலனுணர்வு மகிழ்ச்சி - நலம் பயப்பவை                     
பொருட்கள் இரண்டு படித்தரமானவை.  அதாவது நன்மையானவைகளும், மனமகிழ்ச்சிக்குரியவையுமாகும்.  முன்னவை ஆன்மீகச் செயல் தொடர்புடையவை.  பின்னவை இகலோகப் பொருட்களின் செயல் தொடர்புடையவை.  தம்மை ஏற்றுக்கொள்ளும்படி இவை இரண்டுமே மனிதனை அணுகுகின்றன.  ஆலோசித்து அவற்றினுள் ஒன்றை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும்.  விவேகமுள்ளவன் மகிழ்வைவிட நன்மையைத் தேர்ந்தெடுக்கிறான்.  அவிவேகியோ, பேராசையாலும், பற்றாலும், மகிழ்ச்சியையே தேர்ந்தெடுக்கிறான்.

7.  மனத்தையும் மற்ற உணர்வுகளையும் அடக்கியாளுதல் 
உடம்பே தேர்,  ஆத்மாவே எஜமானர்,  புத்தியே தேரோட்டி, மனதே கடிவாளம், உணர்வுகளே குதிரைகள், உணர்விற்குரிய பொருட்களே அவைகளின் பாதைகள்.  எவனொருவனுக்கு பற்றுணர்வு மிக்கத்திறமில்லையோ, எவனுடைய மனம் கட்டுப்பாட்டுடன் தடுக்கப்பட இயலாததோ, எவனுடைய உணர்வுகள் அடக்கியாளப்பட முடியாதவைகளோ, தேரோட்டியின் குறும்புச் சூழ்ச்சியுடைய பொல்லாத குதிரையின் செயலை நிகர்ப்ப, அவன் தன் பயண இலக்கை (ஆத்மானுபூதியை) சென்றடையாமல் பிறப்பு-இறப்பு என்னும் சுழலுக்கு ஆட்படுகிறான்.

ஆனால், எவனொருவனுக்குப் பற்றுணர்வுத்திறம் உள்ளதோ, அவனது மனம் அடக்கியாளப்படுகிறதோ, எவனது உணர்வுகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ, அவன் சாரதியின் குதிரையின் செயலை நிகர்ப்ப, சேரும் இடத்தையடைகிறான்.  அதாவது, ஆத்மானுபூதியென்ற நிலைய எய்துகிறான்.  அங்கே அவன் மீண்டும் பிறப்பதில்லை.  தனது சாரதியை (வழிகாட்டியை) போன்ற பற்றுணர்வுத் திறம் உள்ளவனும், தன்  மனத்தைக் கடிவாளத்தினால் கட்டுப்படுத்தக் கூடியவனும், பிரயாணத்தின் இலக்கான எவற்றினும் மேம்பட்ட எங்கும்நிறை விஷ்ணுவின் (கடவுள்) வாசஸ்தலத்தை எய்துகிறான்.

8.  மனத்தூய்மை
ஒருவன் தனது பணித்துறைக் கடைமைகளை மனநிறைவுடனும், பற்றின்றியும் செய்தாலொழிய மனம் தூய்மைப்படாது.  மனம் தூயதாக்கப்படாவிடில் அவன் ஆத்மானுபூதியைப் பெற இயலாது.  தூய்மையான மனம் ஒன்றினாலேயே விவேகமும் (நித்ய - அநித்ய வஸ்துக்களைப் பரிந்துணரும் ஆற்றல்), வைராக்கியமும் முளைத்து மேல் எழும்பி ஆத்மானுபூதிக்கு இட்டுச் செல்கின்றன.

9.  குருவின் இன்றியமையாமை     
ஆத்ம ஞானமானது, எவரொருவரும் தன்னுடைய சுய முயற்சியால் அடைவோம் என்று ஒருகாலும் நினைக்கக்கூட முடியாத அளவுக்கு, சூட்சுமமாகவும், அறிவுநிலை கடந்ததாகவும் இருக்கிறது.  ஆகவே தாமே ஆத்மானுபூதி எய்தப்பெற்ற மற்றொருவர் - அதாவது, குருவின் உதவி முழுமையாகத் தீராது வேண்டப்படுகிறது.  பெரும் உழைப்பாலும், பாடுகளாலும் பிறர் அளிக்க இயலாதவைகளை அத்தகைய குருவின் உதவியால் எளிதில் ஈட்டலாம்.  ஏனெனில், அவர், தாமே அப்பாதையில் நடந்திருப்பதால் தன் சீரடர்களை ஆன்மீக முனேற்றத்தின் ஏணியில், பட்ப்படியாக எளிதில் அழைத்துச் செல்ல முடியும்.

10.  இறுதியாக கடவுள் அனுக்ரகம் 
மிகமிக முக்கியமான பொருளாகும்.  கடவுள் எவர்மீதாவது மகிழ்ச்சியுற்றவராயின், அவருக்கு விவேகம், வைராக்கியத்தை அளித்து, இகவாழ்வென்னும் பெருங்கடலைத் தாண்டி பத்திரமாக அவரை அழைத்துச் செல்கிறார்.  "ஆத்மாவானது வேதங்களைக் கற்பதாலோ, புத்தியாலோ, மிகுதியான புலமையினாலோ பெறப்படுவதன்று.  ஆத்மா எவனைத் தேர்ந்தெடுக்கின்றதோ, அவனாலேயே அது பெறப்படுகின்றது.  அவனுக்கே, அது தனது பண்பை வெளிப்படுத்துகின்றது" என்று கடோபநிஷதம் பகர்கின்றது.

இவ்வாறாக விளக்கவுரையை முடித்ததும், பாபா, அப்பெருந்தகையிடம் திரும்பி, "நல்லதையா, உனது பையில் ஐந்து ரூபாயைப் போன்று ஐம்பது மடங்குள்ள உருவில் (ரூ. 250) பிரம்மம் (பணத்தெய்வம்) இருக்கிறது.  அவற்றைத் தயவுசெய்து வெளியே எடு" என்றார்.  அப்பெருந்தகையும் நோட்டுக்களின் கற்றையைத் தமது பையினின்று வெளியே எடுத்தார்.  அவற்றை அவர் எண்ணியபோது அவரது பெருவியப்பிற்குரிய வகையில், ஒவ்வொன்றும் பத்து ரூபாயான இருபத்தைந்து நோட்டுக்கள் இருப்பதைக் கண்டார்.  பாபாவின் எங்கும்நிறை பேரறிவைக் கண்ணுற்று, அவர் மனதுருகி, பாபாவின் ஆசீவாதங்களுக்காக ஏங்கி அவர் பாதத்தடியில் வீழ்ந்தார்.

அப்போது பாபா அவரிடம், "உனது கட்டுப்பிரம்மதைச் சுருட்டிக்கொள்க.(அதாவது கரன்சி நோட்டுக்கள்)  உன் பேராசையை முழுமையாக விட்டொழித்தாலன்றி, மெய்யான பிரம்மத்தை நீ அடையமுடியாது.  செல்வம், மக்கள், சுபிட்சம் என்னும் கவனங்களால் முழுமையுமாய் கவரப்பட்டிருக்கும் மனதை உடைய மனிதன், அவைகளுக்கான அவனது பற்றுக்களையெல்லாம் விட்டொழித்தாலன்றி, எங்கனம் பிரம்மத்தை அறிவதை எதிர்பார்க்கமுடியும்.  பற்றென்னும் மாயத்தோற்றம் அல்லது பணத்தாசை என்னும் இறுமாப்பு, பொறாமை என்னும் முதலைகள் நிறைந்த துன்பப் பெருநீர்ச்சுழி ஆகும்.  ஆசைகளை நீந்துவனுக்கே சுழியைக் கடத்தல் இயலுவதாம்.  பேராசையும், பிரம்மமும் எதிர் எதிர் துருவங்கள்.  அவைகள் நிரந்தரமாக ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.  எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே பிரம்மத்தைப்பற்றிய எண்ணத்திற்கோ, தியானத்திற்கோ இடமில்லை.  பின்னர் எங்கனம் ஒரு பேராசைக்காரன் சாந்தத்தையும், பரகதியையும் பெற்றிடமுடியும்.  பேராசைக்காரனுக்கு அமைதியில்லை, திருப்தியுமில்லை, நிலையுறிதிப்பாடுமில்லை.

எவ்வளவு பேராசை மனத்தகத்திருப்பினும் கூட, சாதனைகள் (ஆன்மீக முயற்சிகள்) அனைத்தும் பயனற்றவையேயாம்.  தனது கர்மங்களின் விளைவால் அடையவிருக்கும் பழத்தின் அல்லது பயனின் ஆசையினின்று விடுபடாமலும், அவைகளின்மேல் வெறுப்புறாமலும் உள்ள நன்றாகக் கற்றறிந்தவனுடைய ஞானமும் கூடப் பயனில்லை.  அது அவனுக்கு ஆத்மானுபூதியைப் பெறுவதில் உதவ இயலாது.  அஹங்காரம் முழுமையும் நிரம்பப்பெற்று புலனுணர்வுப் பொருட்களையே சிந்தித்துக்கொண்டு இருப்பவனுக்குக் குருவின் போதனைகள் கூடப் பயனற்றவையே.  மனத்தூய்மையே அறவே தேவைப்படுகிறது.  அஃதின்றி நமது ஆன்மீக சாதனைகள் யாவும் பயனற்ற வெளித்தோற்றமும், பகட்டு ஆரவாரமுமேயன்றிப் பிறிதில்லை.  எனவே, ஒருவனால் ஜீரணிக்க முடிந்த, கிரகிக்க இயன்றவற்றை மட்டுமே எடுத்துக் கொள்வது நலமாகும்.  எனது கருவூலம் நிறைந்திருக்கிறது.  எவனுக்கும் அவன் விரும்புவதை நான் அளிக்க முடியும்.  ஆனால் நான் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளும் தகுதி அவனுக்கு இருக்கிறதா என்பதை நான் கவனிக்க வேண்டும்.  என்னைக் கவனத்துடன் கேட்பீர்களானால், நீங்கள் உண்மையிலேயே நன்மை அடைவீர்கள்.  இம்மசூதியில் அமர்ந்துகொண்டு நான் உண்மையைத் தவிர வேறெதையும் பேசவில்லை" என்று உரைத்தார்.

ஒரு வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் அழைக்கப்பட்டிருக்கும்போது, வீட்டைச் சேர்ந்தவர்களும், அங்கிருக்க நேரிடும் மற்ற நண்பர்களும், உறவினர்களும், விருந்தாளியுடன் உபசரிக்கப்பட்டு மகிழ்வெய்துவார்கள்.  அவ்வாறே மசூதியில் அப்போது இருந்த அனைவரும், பாபாவினால் பணக்காரப் பெருந்தகைக்குப் பரிமாறப்பட்ட ஆன்மீக விருந்தில் பங்குகொண்டனர்.  பணக்காரப் பெருந்தகை உள்ளிட்ட அனைவரும், பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற்ற பின்னர், மிகவும் திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் அந்த இடத்தைவிட்டுச் சென்றனர்.  



பாபாவின் சிறப்பான குணாதிசயங்கள் 

தங்களது வீட்டைத் துறந்து காடுகளில், குகைகளில், துறவி மடங்களில் தனிமையில் இருந்துகொண்டு, தங்களுக்கே விடுதலை அல்லது பரகதி தேட முயற்சிக்கும் பல முனிவர்கள் உள்ளனர்.  மற்றவர்களைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை.  எப்போதும் அந்தராத்மாவிலேயே தம்மை மறந்து மூழ்கி இருப்பார்கள்.  சாயிபாபா அவ்வகையைச் சார்ந்தவர் அல்ல.  அவருக்கு வீடில்லை,  மனைவி இல்லை,  மக்களில்லை, சேய்மை அண்மைய உறவினர்கள் யாருமே இல்லை.  எனினும் அவர் இவ்வுலகில் (சமூகத்தில்) வாழ்ந்தார்.  நாலைந்து வீடுகளிலிருந்து தமது உணவை அவர் இரண்டு உண்டு, எப்போதும் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்தார்.  

உலக விவகாரங்களை நடத்திக்கொண்டு, மக்களுக்கு உலகில் எங்ஙனம் நடக்கப் பழகவேண்டுமெனப் போதித்தார்.  கடவுள் காட்சியைப் பெற்றபின் மக்களின் சுபிட்சத்துக்காகப் பாடுபடும் முனிவர்களையோ, சாதுக்களையோ காண்பதரிது.  சாயிபாபா இவர்களிலெல்லாம் தலையாயவர்.  எனவே ஹேமத்பந்த் பின்வருமாறு கூறுகிறார்.

"இத்தகைய அசாதாரணமான, அறிவெல்லைகடந்த, விலைமதிப்பற்ற, தூய்மையான மாணிக்கக்கல் (சாயிபாபா) அவதரித்த நாடு ஆசீர்வதிக்கப்பட்டது.  குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டது.  தூயவர்களாகிய அவரின் பெற்றோர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்."

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்