Thursday, 29 December 2011

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 2

அத்தியாயம் - 2

இப்பணியைச் செய்வதன் நோக்கம் - இஃதை மேற்கொள்வதில் உள்ள திறமையின்மையும், துணிவின்மையும் - காரசார விவாதம் - குறிப்பிடக்கூடியதும் முனிவருடைய பட்டமுமான ஹேமத்பந்தை வழங்குதல் - குருவின் அவசியம்.

தம்முடைய மராத்தி மூலநூலின் கடைசி அத்தியாயத்தில் இப்பணியைச் செய்வதற்கு அடிகோலிய காரணங்கள், இதைப் படிப்பதற்குத் தகுதியுடையவர்கள் முதலிய வேறுபல அம்சங்களையும் எடுத்துச் சொன்னார்.  இந்த அத்தியாயத்திலும் அதையே குறிப்பிடத் தொடங்குகிறார்.


இதை எழுதுவதன் காரணம் 

முதலாம் அத்தியாயத்தில் கோதுமை  மாவரைத்து, அதை கிராம எல்லைகளில் தூவிவிட்டதன் மூலம் காலரா தொத்து வியாதியைத் தடுத்து அழித்ததான சாயிபாபாவின் அற்புதத்தைக் கண்டோம்.  நான் சாயிபாபாவின் மற்றும் பல அற்புத லீலைகளைப் பெரும் உள்ளக்கிளர்ச்சியுடன் கேட்டிருக்கிறேன்.  அக்கிளர்ச்சியே இவ்வழகான பணியாகப் பொங்கி உருவெடுத்து, சாயிபாபாவின் பெருமையுடைய அற்புதங்களை வரைதலானது.  அவருடைய அடியவர்களுக்கு உற்சாகமூட்டுவதாகவும் அறிவுறுத்துவதாகவும் இருப்பதுடன், அவர்களின் பாவங்களையும் நீக்குமாதலினால்தான் நான் சாயிபாபாவின் புனித வரலாற்றையும், அவருடைய போதனைகளையும் வரையத் தொடங்கினேன்.  ஞானியின் வரலாறு என்பது தர்க்க சாஸ்திரத்துக்கோ, பட்டிமன்றத்துக்கோ உரியது அன்று.  அஃது உண்மையும், பெரியதுமான வழியையே காண்பிக்கிறது.


பணியைச் செய்யத் திறமையின்மையும், துணிவின்மையும்

தாம் இப்பணியைச் செய்யத் தகுதியுடையவர் அல்ல என்று ஹேமத்பந்த் நினைத்தார்.  "எனக்கு நெருங்கிய நண்பனின் வாழ்க்கையே தெரியாது.  அப்படியே எனது மனதையும் நான் அறியேன்.  இவ்வாறிருக்கையில் வேதங்களால் கூறவியலாத ஒரு ஞானியின் வாழ்க்கையை விவரிக்கும் ஒருவனும் ஞானியாகவே இருக்கவேண்டும்.  எனவே நான் எங்ஙனம் அவர்தம் புகழை விவரிக்க இயலும்?  ஞானியின் வாழ்க்கையை வரைவதென்பது மிகக் கடினமானதாகும்.  ஒருவன் ஏழ்கடல் ஆழத்தையும் அளவிட்டு விடலாம்.  துணி ஜோடனைகளால் ஆகாயத்தையும் அலங்கரித்து விடலாம்.  இது தீரமிக்க செயலாகும் என்று நான் அறிவேன்.  இது என்னைப் பார்த்து பிறர் நகைக்க இடங்கொடுத்துவிடும்" என நான் சாயிபாபாவின் அருளை நாடினேன்.

அடியவர்கள் விரும்பும், வெற்றிகரமாய் முடிவுறும் இப்பணியை மேற்கொள்வதற்கு, ஞானியர்தம் வாழ்க்கை வரலாற்றை எழுதுவோரை கடவுள் விரும்புகிறார் என்று மஹாராஷ்ட்ரத்தைச் சேர்ந்த முன்னோடி கவியும், ஞானியுமான ஸ்ரீ ஞானேஷ்வர் மஹராஜ் என்பவர் எடுத்தியம்பியிருக்கிறார்.  இப்பணியை ஞானிகள் சங்கல்பிக்கிறார்கள்.  அடியவன், அம்முடிவை அடைய மறைமுகக் காரணமாகின்றான் அல்லது கருவியாகின்றான்.  உதாரணமாக சக வருடம் 1700ல் கவிமஹிபதி, ஞானிகள் வாழ்கையை எழுதும் உயர்நோக்கம் கொண்டார்.  ஞானிகள் அவரைச் சங்கல்பித்து பணியை நிறைவேற்றி வைத்தார்கள்.  அம்மாதிரியே சக வருடம் 1800ல் தாஸ்கணுவின் சேவையும் அங்கீரிகரிக்கப்பட்டது.  முன்னர் பக்த விஜயம், ஸந்த விஜயம், பக்த லீலாம்ருத், ஸந்த லீலாம்ருத் என்னும் நான்கு நூல்களையும் பின்னவர் நவீன ஞானியரைப் பற்றி விவரிக்கப்பட்ட பக்த லீலாம்ருத், ஸந்த கதாம்ருத் என்ற நூல்களையும் இயற்றினர்.

பக்த லீலாம்ருத்தின் 31, 32, 33 அத்தியாயங்களிலும், ஸந்த கதாம்ருத்தின் 57ம் அத்தியாயத்திலும் சாயிபாபாவின் சுவையான வாழ்க்கையும் அவரின் அறிவுரைகளும் நன்றாகச் சித்தரிகப்பட்டிருக்கின்றன.  இவை சாயிலீலா சஞ்சிகையில்  (தொகுப்பு 11, 12, & 17) தனியாக பதிப்பிக்ப்பட்டிருக்கின்றன.  படிப்பவர்கள் இவ்வத்தியாயங்களைப் படிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  அங்ஙனமே பாந்த்ராவைச் சேர்ந்த திருமதி சாவித்ரிபாய் ரகுநாத் டெண்டுல்கர் பதிப்பித்துள்ள சாயிநாத் பஜன்மாலா என்ற சிறிய அடக்கமான புத்தகத்திலும் சாயிபாபாவின் அற்புத லீலைகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.  தாஸ்கணு மஹராஜும் பல்வேறு இனிய பாடல்களை சாயிபாபா மீது எழுதியிருக்கிறார்.  குஜராத்தில் அமிதாஸ்பவானி மேதா என்னும் ஷீர்டியைச் சேர்ந்த ஓர் அடியவர் சாயிபாபாவின் சில நிகழ்ச்சிகளைப் பதிப்பித்துள்ளார்.  தஷிணபிஷா சன்ஸ்தானும் 'சாயிநாத் ப்ரபா'வை சில பதிப்புகள் செய்தனர்.  இவ்வாறு சாயிபாபாவைப் பற்றிப் பல நூல்கள் இருக்கும்போது இந்த சத்சரிதம் ஏன் எழுதப்படவேண்டும்,  அதற்கான தேவையென்ன என்றும் எதிர்ப்புக் கேள்விகள் வருகின்றன.


விடை தெளிவானதும், எளியதும் ஆகும்.  அகன்று ஆழ்ந்த எல்லையற்ற ஓர் பெருங்கடல் போன்று சாயிபாபாவின் வரலாறு உள்ளது.  அனைவரும் அதனுள் ஆழ்ந்து மூழ்கி விலைமதிப்பற்ற ஞானம், பக்தி என்ற முத்துக்களை எடுக்கலாம்.  நல்லுணர்வில் ஊறிக்கிடக்கும் மக்களுக்கு அவற்றைக் கொடுக்கலாம்.  சாயிபாபாவின் கதைகள், சிறுகதைகள், அறிவுரைகள் ஆகியவை மிகவும் அற்புதமானவை.  இவ்வுலக வாழ்க்கையினுடைய துன்பப் பெருஞ்சுமைகளைச் சுமந்து கொண்டிருப்பவர்கள், கவலையால் பீடிக்கப்பட்டோர்கள் ஆகியவர்களுக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியையும் அவை அளிக்கின்றன.  வேத அறிவையொத்த விறுவிறுப்புள்ளதும், அறிவூட்டுவதுமான சாயிபாபாவின் இப்போதனைகளெல்லாம் கேட்க்கப்பட்டு நற்சிந்தனை செய்யப்பட்டால் அடியவர்கள் கோரும் 'பிரம்மத்துடன் ஐக்கியமாதல்', 'அஷ்டாங்க யோகம்', 'தியானப் பேரின்பம்' முதலியவற்றைப் பெறுவர்.  எனவே இந்நிகழ்ச்சிகளைப் பொறுக்கி எடுக்க எண்ணம் கொண்டேன்.  அதுவே எனது சிறந்த வழிபாடு ஆகும் என்பதாலின், சாயிபாபாவின் தரிசனத்துக்கு கொடுத்து வைக்காத இவ்வெளிய ஆத்மாக்களின் கண்களுக்கு இந்நிகழ்ச்சித் தொகுப்புக்கள் பேருவையாகவிருக்கும்.  எனவே நான் சாயிபாபாவின் போதனைகளையும், இயற்கையானதும் எல்லையற்றதுமான தன்னுணர்வுக் கருத்துக்களையும் சேகரிக்க முற்பட்டேன்.  இப்பணியில் பாபாவே என் உள்ளுணர்வைக் கிளப்பிவிட்டார்.  உண்மையில் என்னுடைய அஹங்காரத்தை அவர்தம் பாதத்தடியில் சமர்ப்பித்து இம்மை, மறுமை இரண்டிலும் என்னைப் பூரண சந்தோஷமாக்குவார் என்று எண்ணினேன்.


இப்பணிக்கு நானே, எனக்கு அனுமதி அளிக்கும்படி சாயிபாபாவைக் கேட்கமுடியவில்லை.  பாபாவின் நெருங்கிய அடியவரான மாதவ்ராவ் தேஷ் பாண்டே என்ற ஷாமாவிடம், பாபாவிடம் எனக்காகக் கேட்கும்படி வேண்டிக்கொண்டேன்.  அவர் எனது எண்ணத்திற்க்காக பாபாவிடம் வாதாடினார்.  "இந்த அண்ணா சாஹேப் தங்கள் வரலாற்றை எழுத விரும்பிகிறார்.  நான் ஓர் ஏழைப் பக்கிரி என்று கூறாதீர்கள்.  ஆயின் நீங்கள் சம்மதித்து அவருக்கு உதவியளிப்பதாகக் கூறினால் அவர் எழுதுவார்.  அன்றித் தங்கள் திருவடிக் கருணையே இப்பணியை நிறைவேற்றிவிடும்.  தங்கள் அருள் துணையின்றி எதுவும் வெற்றிகரமாகச் செய்ய இயலாது." சாயிபாபா இவ்வேண்டுகோலைத் திருச்செவிமடுத்தவுடன் உருகி, உதி என்னும் திருநீறளித்து ஆசீர்வதித்துத் தன்னுடைய வரம் நல்கும் கரத்தை என் தலைமேல் வைத்து, "இவர் நிகழ்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றைத் தொகுத்து குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளட்டும்.  நான் இவருக்கு உதவி செய்வேன்.  அவர் ஒரு புறக்கருவியே ஆவார்.  என்னுடைய வரலாற்றை நானே எழுதி, என்னுடைய அடியவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யவேண்டும். அவர்தம் அஹங்காரத்தை அறவே களைந்து என் பாதங்களில் சமர்ப்பித்துவிடட்டும்.  வாழ்க்கையில் இங்ஙனம் செய்வபவனுக்கே நான் மிகவும் உதவி புரிகிறேன்.  என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றி என்ன? நான் அவருடைய வீட்டில் 'ஒல்லும் வகையெல்லாம் ஓவாதே' பணிபுரிகிறேன்.  அவருடைய அஹங்காரம் சிறுதுளியும் எஞ்சியிராமல் அறவே அழிக்கப்பட்டுவிட்டால், நானே அவருட் புகுந்து என் வாழ்க்கை நிகழ்சிகளை எழுதுவேன்.  அடியவர் தம் உள்ளங்களில் எனது நிகழ்ச்சிகள், அறிவுரைகள் நம்பிக்கையூட்டும்.  எளிதில் தன்னை உணரலாம், பேரானந்தப் பெருநிலையும் அவர்கள் எளிதில் பெறுவார்கள்.  ஆயின் ஒருவரது சொந்தக் கருத்தையே நிலைப்படுத்தல், மற்றவர் கருத்தை மறுக்கச் செய்யும் முயற்சிகள், ஒரு பொருளின் நன்மை - தீமை இவற்றைப் பற்றிய விவாதங்கள் இருத்தல் கூடாது" என்று பகர்ந்தருளினார்.

'விவாதம்' என்னும் சொல்லானது ஹேமத்பந்த் என்னும் பட்டத்தை நான் பெற்ற நிகழ்ச்சியை விவரிக்க கொடுத்து இருந்த வாக்குறுதியை ஞாபகமூட்டுகிறது.  அதையே இப்போது கூறுகிறேன்.  காகா சாஹேப் தீஷித், நானா சாஹேப் சாந்தோர்கர் ஆகியவர்களுடன் நான் நெருங்கிய நட்போடிருந்தேன்.  அவர்கள் என்னை ஷீர்டிக்குப் போய் பாபாவின் தரிசனத்தைப் பெறும்படி வலியுறுத்தினார்கள்.  ஆயின் இடையில் கிளம்பிய ஏதோ ஒன்று என்னை ஷீர்டிக்குப் போகவிடாமல் தடுத்தது.  லோனவாலாவில் உள்ள எனது நண்பனின் புதல்வன் காய்ச்சல் அடைந்தான்.  எனது நண்பன், வைத்திய முறை மற்றும் வேண்டுதல் முறைகளில் உள்ள எல்லா வழிகளிலும் முயன்றார்.  ஆயினும் காய்ச்சல் குறையவில்லை.  முடிவாகத் தனது குருவை தன் மகனின் படுக்கைக்குப் பக்கத்தில் அமரவைத்தார்.  இதுவும் கூடப் பலனளிக்கவில்லை.  இதைக் கேள்வியுற்றதும், "என் நண்பனின் பையனைக் காப்பாற்ற முடியாத குருவால் யாது பயன்?  குரு நமக்கு எதையுமே செய்ய இயலாதவரானால் நான் ஏன் ஷீர்டிக்குப் போகவேண்டும்?" என்றவாறு எண்ணமிட்டு  எனது ஷீர்டி விஜயத்தை ஒத்திப்போட்டேன்.  ஆயின் தடுக்கமுடியாதது நிறைவேறியே தீரவேண்டும்.  அஃதென் விஷயத்தில் பின்வருமாறு நடைபெற்றது.

பிராந்திய ஆபீசர் நானா சாஹேப் சந்தோர்கர் பஸ்சீனுக்கு சுற்றுலா போய்க்கொண்டிருந்தார்.  தாணேவிலிருந்து தாதருக்கு வந்து பஸ்சீனுக்குச் செல்லும் வண்டிக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.  இடையில் பாந்த்ராவுக்கு செல்லும் ஒரு வண்டி வந்தது.  அதில் அவர் ஏறியமர்ந்து பாந்த்ராவுக்கு வந்து என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.  நான் ஷீர்டி விஜயத்தைக் கைவிட்டது குறித்து என்னைக் கடிந்தார்.  எனது ஷீர்டி பயணத்தைப் பற்றி நானாவின் வாக்குவாதங்கள் திருப்தியளிக்கக்கூடியதாகவும், உற்சாகமூட்டுவதாகவும் இருந்தன.  எனவே நான் அன்றிரவே ஷீர்டி புறப்படத் திட்டமிட்டேன்.  என்னுடைய சாமான்களைக் கட்டிமுடித்து ஷீர்டிக்குப் புறப்பட்டேன்.

தாதருக்குப் போய் அங்கிருந்து மன்மாட் போகும் வண்டியைப் பிடிக்கத் திட்டமிட்டு, தாதருக்குப் பயணச் சீட்டு பெற்று வண்டியில் அமர்ந்திருதேன்.  வண்டி புறப்பட இருக்கும்போது ஒரு முஸ்லிம் பெரியவர் விரைவாக எனது பெட்டிக்கு வந்தார்.  எனது மூட்டை முடிச்சுக்களைப் பார்த்துவிட்டு "போகும் இடம் என்ன?" என்று கேட்டார்.  நான் எனது திட்டத்தைக் கூறினேன்.  பின்னர் அவர் என்னை தாதரில் நிற்காமல் போரிபந்தருக்கே நேராகப் போகும்படியும், ஏனெனில் மன்மாட் மெயில் தாதரில் நிற்காது என்றும் அறிவுறித்தினார்.  இவ்வற்புதம் நிகழ்ந்திராவிடின் ஷீர்டிக்குத் திட்டமிட்டபடி அடுத்தநாளே போய்ச் சேராதிருந்திருப்பேன்.  பல ஐயங்கள் என்னைக் கடுமையாகத் தாக்கியிருக்கக்கூடும்.  ஆயின் அடுத்தநாள் காலை 9 - 10 மணிக்குள்ளாகவே ஷீர்டியை அடைந்தேன்.  அங்கே பாவ் சாஹேப் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.  இது 1910ல் நிகழந்தது.  அப்போது யாத்ரீக அடியவர்களுக்கு ஒரே ஒரு தங்குமிடம்தான் இருந்தது.  அது சாதேனுவினுடைய வாதாவாகும்.  குதிரை வண்டியிலிருந்து இறங்கிய பின்னர் பாபாவின் தரிசனம்பெற ஆவலாய் ஏங்கியிருந்தேன்.  மசூதியினின்று திரும்பிவந்த பெரும் அடியவரான தாத்யா சாஹேப் நூல்கர், சாயிபாபா வாதாவின் மூலையில் இருக்கிறார், முதலில் ஒரு முன்னோடி தரிசனம் செய்துவிட்டு, குளித்தபின் சாவகாசமாகப் பார்க்கலாம் என்று கூறினார்.  இதைக் கேட்டவுடனே நான் பாபாவிடம் ஓடி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன்.  எனது மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.  நானா சாஹேப் சாந்தோர்கர் என்னிடம் கூறியதற்கு அதிகமாகவே கண்டேன்.  என்னுடைய புலன்களெல்லாம் திருப்தியடைந்தன.  நான் பசி தாகத்தை மறந்தேன்.  சாயிபாபாவின் பாதங்களைத் தொட்டவுடன் ஆசீர்வதிக்கப்பட்ட ஓர் புத்தம்புதிய வாழ்வையே அவர் எனக்கு அருளியதை உணர்ந்தேன்.  என்னை இச்செயலில் இடைவிடாமல் தூண்டி சாயிபாபாவின் தரிசனத்திற்கு உதவி புரிந்தவர்களுக்கு கடமைப்பட்டதைக் கருதினேன்.  அவர்களை உண்மை உறவினர்களாக நினைக்கிறேன்.  அவர்களுடைய கடனை நான் திருப்பித்தர முடியாது.  அவர்களை நினைத்து, அவர்கள் முன் வீழ்ந்து வணங்குகிறேன்.

சாயிபாபாவின் தரிசனத்திலுள்ள நூதனமானது நான் கண்டவாறு, நம்முடைய எண்ணங்கள் மாறுகின்றன, முன்னைக் கருமங்களின் வலிமை அழிக்கப்படுகின்றது, அல்லது பற்றற்ற நிலை அதிகரிக்கின்றது.  முன்னைப் பிறவிகளில் செய்த நற்கருமங்களால்  அத்தகைய சுபதரிசனம் அடையப்படுகிறது.  நீங்கள் சாயிபாபாவை கண்டுவிட்டீர்களானால் புறவுலகு எல்லாம் சாயிபபாவாகத் தோற்றமளிக்கிறது.


சூடான விவாதம்
 
 குருவின் தேவையைப்பற்றி எனக்கும், பாலா சாஹேப் பாடேக்கும் இடையில் ஓர் சூடான விவாதம் நான் ஷீர்டிக்கு வந்த தினத்தன்று நடைபெற்றது.  "நம் சுதந்திரத்தை நாம் ஏன் இழக்கவேண்டும், மற்றவர்களிடம் ஏன் சரணாகதி அடைய வேண்டும்" என்று நான் விவாதித்தேன்.  "நாம் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டியிருக்கையில் ஏன் குரு தேவைப்படுகிறார்?  ஒருவன் தன்னாலான முயற்சிகளைச் செய்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.  சோம்பேறியாகத் தூங்குவதைத் தவிர வேறெதையும் செய்யாத ஒருவனுக்கு குரு என்ன செய்துவிட முடியும்?"  இங்ஙனம் நான் சுதந்திர எண்ணத்திற்கு வாதாடினேன்.  பாடே கர்மத்துக்காக (தலைவிதி) வாதாடிக் கூறியதாவது, "நடப்பது நடந்தே தீரும்.  பெரியோர்கள் எல்லாம் தோல்வியுற்றிருக்கிறார்கள்.  மனிதன் ஒருவழியில் நினைக்க, தெய்வம் வேறுவழியில் செயல்படுகிறது.  உம்முடைய புத்தி சாதுர்யத்தைத் தள்ளிடுக.  பெருமையும் அஹங்காரமும் உமக்கு உதவாது".  கொள்கைகள், மாறுபாடுகள் இவற்றுடன் இவ்விவாதம் ஒரு மணி நேரத்திற்குமேல் நடைபெற்றும் வழக்கம்போல் ஒரு முடிவும் காணப்படாது முடிவாக களைப்படைந்துவிட்டோம்.  நானும் மன அமைதியை இழந்தேன்.  வலிவான சரீர அபிமானம், அஹங்காரம் இவை இல்லாவிடில் விவாதமே இல்லையெனக் கண்டேன்.  அஹங்காரமே விவாதத்தை வளர்க்கிறது என்று கூறலாம்.

பிறகு நாங்கள் மசூதிக்கு மற்றவர்களுடன் சென்றபோது காகா சாஹேப் தீஷித்தை, பாபா பின்வருமாறு வினவினார்.  சாதே வாதாவில் என்ன நடந்துகொண்டிருந்தது? விவாதம் எதைப் பற்றியது?  என்று கூறி என்னை உற்று நோக்கி மேலும் வினவியதாவது, "ஹேமத்பந்த் என்ன கூறுகிறார்?"  இவ்வார்த்தைகளைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.  நான் தங்கியிருந்ததும் விவாதம் நடந்ததுமான சாதே வாதாவானது மசூதியினின்று நல்ல தூரத்திலிருக்கிறது.  சர்வ வியாபியாகவும், அகத்திலிருந்து ஆட்டிவைப்பவராகவும் இல்லாவிடில் எங்களது விவாதத்தை பாபா எங்ஙனம் அறிந்திருக்க முடியும்?


முக்கியமானதும் "ஞானம்' மிளிர்வதுமான பட்டம்
 
சாயிபாபா என்னை ஏன் ஹேமத்பந்த் என்னும் பெயரால் அழைக்கவேண்டும் என்று நான் எண்ணமிட ஆரம்பித்தேன்.  இச்சொல் 'ஹேமத்ரியபந்த்' என்ற வார்த்தையிலிருந்து திருத்தப்பட்டதாகும்.  இந்த ஹேமத்ரியபந்த் யாதவ அரசவம்சத்தைச் சேர்ந்த ராமதேவ் என்ற தேவகிரி அரசர்களின் புகழ்பெற்ற மந்திரியாவார்.

கல்வி, கேள்வி நிரம்பப்பெற்று, நற்பண்புகள் நிறையப்பெற்ற அவர், ஆன்மீக விஷயங்கள் அடங்கிய 'சதுர்வர்க சிந்தாமணி' மற்றும் 'ராஜ ப்ரஷஸ்தி' போன்ற பல உயர்ந்த நூல்களின் ஆசிரியருமாவார்.  கணக்குப் பேரேடுகளில் புதியமுறைகளைக் கண்டுபிடித்துப் புகுத்தியவரும் மற்றும் மராத்தியச் சுருக்கெழுத்தின் கர்த்தாவுமாவார்.  ஆனால் நான் முற்றிலும் மாறுபட்டவன்.  அறிவற்ற, ஓட்டமற்ற நடுத்தர எண்ணத்தோன்.  எனவே அந்தப் பட்டம் எனக்கு எதற்காகச் சூட்டப்பட்டது என்பது விளங்கவில்லை.  ஆனாலும் அதைக் குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து அது என் அஹங்காரத்தை அழித்து, பணிவாகவும் , அடக்கமுடனும் இருக்கவேண்டும் என்பதற்காகவே அளிக்கப்பட்டது என நினைத்தேன்.  விவாதத்தில் எனக்குள்ள புத்தி சாதுர்யத்துக்காகவும் அது எனக்கு வழங்கப்பட்டதாகும்.

எதிர்கால நிகழ்ச்சிகளை உற்றுநோக்கில், பாபாவினது சொற்கள் (தாபோல்கரை ஹேமந்த் என் அழைத்தது) முக்கியமானதும் தீர்க்க தரிசனம் நிறைந்ததும் ஆகும்.  ஏனெனில் மிகவும் புத்திசாலித்தனமாக சாயி சமஸ்தானத்தின் நிர்வாகங்களைக் கவனித்தது, எல்லாக் கணக்குகளையும் நன்றாக வைத்திருந்தது, முக்கியமானதும் ஆத்மார்த்த விஷயங்களான ஞானம், பக்தி, அவாவின்மை, 'நான்' தன்மையை சரணமிடுதல், தன்மையுணர்தல் போன்றவற்றைக் குறிக்கும் சாயி சத்சரிதம் என்ற அத்தகைய சிறப்பான நூலின் ஆசிரியராகவும் இருந்ததைக் காண்கிறோம்.


குருவின் தேவையைப்பற்றி
 
ஹேமத்பந்த், பாபா இவ்விஷயத்தைப்பற்றி என்ன சொன்னார் என்று எவ்விதக் குறிப்பும் விட்டுவைக்கவில்லை.  ஆனால் காகா சாஹேப் தீஷித் இவ்விஷயத்தைத் தனது குறிப்புகளில் பதிப்பித்துள்ளார்.   ஹேமத்பந்தின் சாயிபாபா சந்திப்பின் அடுத்த நாளில், பாபாவிடம் காகா சாஹேப் தீஷித் சென்று தான் ஷீர்டியை விட்டுப்போக வேண்டுமா எனக்கேட்டார்.  பாபா "ஆம்" என்றார்.  பிறகு "எங்கே போவது" என யாரோ கேட்டார்.  பாபா "உயர... மேலே...!" என்று கூறினார்.  அம்மனிதர் "வழி எப்படிப்பட்டது" என பாபாவிடம் வினவினார்.  பாபா கூறினார், "அங்கே போவதற்குப் பல வழிகள் உள்ளன.  இங்கிருந்தும் (ஷீர்டியிலிருந்தும்) ஒரு வழி உள்ளது.  பாதை கடினமானது.  புலிகளும், ஓநாய்களும் வழியிலுள்ள காடுகளில் உள்ளன".  நான் (காகா சாஹேப் தீஷித்) கேட்டேன், "ஒரு வழிகாட்டியை நாம் அழைத்துச் சென்றால் என்ன?"  அதற்குப் பாபா கூறினார், "அப்போது கடினம் இல்லை.  புலி, ஓநாய், படுகுழிகள் முதலியவற்றிலிருந்து உன்னை விலக்கி, உன் குறிக்கோளை அடைய நேரடியாக அழைத்துச் செல்வார்.  வழிகாட்டி இல்லையென்றால் காடுகளில் நீ காணாமல் போகலாம் அல்லது படுகுழியில் விழும் அபாயம் இருக்கிறது."

இந்நிகழ்ச்சியின்போது தாபோல்கரும் அறை அருகே இருந்தார்.  இதுவே குரு அவசியமா என்னும் விவாதத்திற்கு பாபாவின் பதில் என்று எண்ணினார்.  ஒரு மனிதன் சுதந்திரமானவனா அல்லது கட்டுப்பட்டவனா என்னும் விவாதம் ஆன்ம விஷயங்களில் உபயோகமில்லை என்றும், இவ்வத்தியாயத்தின் மராத்தி மூலப்பதிப்பில் விளக்கப்பட்டபடி பெரிய அவதாரங்களான ராமர், கிருஷ்ணர், முதலியோர் தமது குருக்களான வசிஷ்டர், சாந்தீபனி ஆகிய முனிவர்களிடம் தன்னையறிவதற்காக சரணடைந்தார்கள் என்றும், குருவினுடைய உபதேசத்தினாலேயே பரமார்த்திகம் அடையப்படுகிறது என்றும், நம்பிக்கையும் - பொறுமையுமே அத்தகைய முன்னேற்றதிக்குத் தேவையான நற்பண்புகளாம் என்பதுமே பாபாவின் திருக்குறிப்பாகும்.


ஸ்ரீ சாயியைப் பணிக அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும் 


Thursday, 22 December 2011

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 01



அத்தியாயம் - 01





நமஸ்காரங்கள் - பாபா கோதுமை மாவு அரைத்த நிகழ்ச்சியும் அதன் தத்துவ உட்கருத்தும்

புராதனமானதும், மிக்க மரியாதையை உள்ளதுமான வழக்கத்தின்படி, ஹேமத்பந்த், இந்த சாயி சரித்திரத்தைப் பல்வேறு நமஸ்காரங்களுடன் எழுத ஆரம்பிக்கிறார்.

1.            முதலில் எல்லாவித இடையூறுகளை நீக்குதற் பொருட்டாகவும், தன் பணி வெற்றியுறவும் "ஐந்து கரத்தனை யானை முகத்தனை" மிக்கப் பணிவுடன் தலை தாழ்த்தி வணங்குகிறார்ஸ்ரீ ஷீர்டி சாயியே, கணபதி என்றும் கூறுகிறார்.

2.            பின்னர் ன் மனத்திலே உதித்த எண்ணங்களை உயர்த்தி உணர்வூட்ட தம் தாய் சரஸ்வதியை நமஸ்கரிக்கிறார்ஸ்ரீ சாயி 'அறிவின் தெய்வமே' என்றும், அவரே தன் வாழ்க்கை கீதத்தை அழகுடன் பாடுகிறார் என்றும் கூறுகிறார்.

3.            ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத் தொழிலையும் முறையே நிகழ்த்தும் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரையும் வணங்கி சாயிநாதர் அவர்களுடன் ஒன்றானவர் என்றும், சம்சாரம் என்னும் ஆற்றினை நாம் தாண்ட, நம்மைச் சுமந்து செல்வதில் மாபெரும் சத்குரு என்றும் விளம்பி,
 
4.            பின்னர் பரசுராமரால் கடலினின்று உயர்த்தப்பட்ட கொங் தேசத்தில் அவதரித்துத் தம்மைக் காக்கும் தம் குலதெய்வமான நாராயண் ஆதிநாத் மற்றும் குடும்பத்தின் ஆதிபுருஷரையும் நமஸ்கரித்து,
 
5.            பின்னர் தனது கோத்திரத்தில் அவதரித்த பரத்வாஜ முனிவரையும், பல்வேறு ரிஷிகளான யக்ஞவல்க்யர், பிருகு, பராசரர், நாரதர், வேதவியாசர், ஜனகர், ஜனந்தனர், ஜனத்குமாரர், சுகர், சௌனகர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், வால்மீகி, வாமதேவர், ஜைமினி, வைசம்பாயனர், நவயோகீந்திரர் முதலியோரையும் நவீன மகான்களாகிய நிவ்ருத்தி, ஞானதேவர், சோபான், முக்தாபாய், ஜனார்த்தனர், ஏக்நாத், நாமதேவர், துகாரம், கனகர், நரஹரி முதலானோரையும் பணிந்து தலைவணங்கி,

6.            பிறகு தனது தாத்தாவான சதாசிவரையும், தகப்பனாரான ரகுநாதரையும், தம் இளம் வயதில் மறைந்த அன்னை மற்றும் அவரை வளர்த்த அத்தை, அன்பிற்குரிய அண்ணன் ஆகியோரையும் வணங்கி,

7.            பின்னர் படிப்பவர்களை வணங்கி, தமது பணிக்கு முழு அன்பையும், சிதையாத கவனத்தையும் கொடுத்தருள வேண்டிக்கொண்டு,

8.            கடைசியாக தனது ஒரே அடைக்கலமும், பிரம்மமே மெய்ப்பொருள், பாரனைத்தும் மாயத்தோற்றம் என்று தனக்கு உணர்விக்கின்ற ஸ்ரீதத்தாத்ரேயரின் அவதாரமான சத்குரு ஸ்ரீ சாயிபாபா அவர்களை நமஸ்கரித்து, அங்னமே எம்பெருமான் வதியும் எல்லா ஜீவராசிகளையும் வணங்கித் துதிக்கின்றார்.
 

பராசரர், வியாசர், சாண்டில்யர் முதலியோரது கருத்தின்படி 'பக்தியால் பலகாலும்' துதித்தவற்றைச் சுருக்கமாகக் கூறிய பின்பு ஆசிரியர் பின்வரும் நிகழ்ச்சியை விவரிக்கிறார்.

1910 ஆம் ஆண்டிற்குப்பின், எப்போதோ ஒருநாள் நல்ல காலை நேரத்தில் மசூதிக்கு சாயிபாபாவைத் தரிசிப்பதற்காகச் சென்றிந்திருந்தேன்பின்வரும் நிகழ்ச்சியைக் கண்ட நான் ஆச்சர்யத்தால் தாக்கப்பட்டேன்தமது முகம், வாய் இவற்றைக் கழுவிய பின்பு, சாயிபாபா கோதுமை மாவு அரைக்கத் தயார்படுவதில் முனைந்தார்ஒரு சாக்கைத் தரையில் விரித்து அதன்மேல் திருகையை வைத்தார்பின்பு முறத்தில் கொஞ்சம் கோதுமையை எடுத்து தம்  கஃனியின் கைகளை மடக்கிவிட்டுக்கொண்டு கையளவு கோதுமையை திருகைக் குழியில் இட்டார்திருகையைச் சுற்றி கோதுமையை அரைக்கத் தொடங்கினார்பிச்சை எடுத்து வாழ்ந்து, எவ்வித உடைமையும் சேமிப்பும் அற்ற இவர் கோதுமை மாவு அரைக்க வேண்டிய அவசியமென்ன என்றவாறு நினைத்தேன்அங்குவந்த சிலரும் அவ்வாறே எண்ணினார்கள்ஆயின், ஒருவருக்கும் பாபா என்ன செய்கிறார் என்று கேட்கத் துணிவு வரவில்லை

பாபா மாவரைக்கும் இச்செய்தி உடனே கிராமத்தில் பரவி ஆண்களும், பெண்களும் பாபாவின் செய்கையைக் காணப் பெருந்திரளாக மசூதிக்கு வந்தனர்கூட்டத்திலிருந்த தைரியம் உள்ள நான்கு பெண்மணிகள் வலிய நுழைந்து, பாபாவை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, திருகையின் கைப்பிடியைப் பற்றி பாபாவின் லீலைகளைப் பாடியவாறு மாவரைக்கத் தொடங்கினர்.

முதலில் பாபா கடுங்கோபம் அடைந்தார்ஆயின், அந்தப் பெண்மணிகளின் அன்பையும், பக்தியையும் கண்டு மிக்க சந்தோஷம் அடைந்து புன்னகை புரியலானார்அவர்கள் அவ்வாறு அரைத்துக் கொண்டிருக்கையில் "பாபாவுக்கு வீடோ, பிள்ளைகளோ அன்றி அவரைக் கவனிக்க வேறு யாருமே இல்லையாதலாலும் அவர் பிச்சை எடுத்து வழ்ந்தவராதலாலும் அவருக்கு ரொட்டி செய்ய கோதுமை மாவு தேவையிருக்கவில்லை, எனவே இவ்வளவு மாவை என்ன செய்வார்ஒருவேளை பாபா அன்பாயிருக்கும் காரணத்தால், இம்மாவை நமக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார்." என்றவாறு எண்ணமிட்டபடி, பாடியவாறே அரைத்து முடித்து, திருகையை ஓரத்தில் நகர்த்திவிட்டு, கோதுமை மாவை நான்கு பிரிவாகப் பிரித்து ஆளுக்கு ஒவ்வொரு பகுதியாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினார்கள்.

இதுவரை அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்த பாபா கோபமடைந்து, "பெண்களே! உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாயாருடைய அப்பன் வீட்டுப் பொருளை இவ்வாறு அபகரிக்கிறீர்கள்நீங்கள் தடங்கல் இன்றி மாவை எடுத்துச் செல்வதற்கு நான் முன்னம் உங்களிடம் கடன் பட்டிருக்கிறேனா என்னதயவுசெய்து இப்போது இதைச் செய்யுங்கள், இம்மாவை எடுத்துச்சென்று கிராம எல்லைகளில் கொட்டிவிட்டு வாருங்கள்" என்றார்இதைக் கேட்டபின் அவர்கள் வெட்கமடைந்து தமக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு கிராம எல்லைக்குச் சென்று பாபா குறிப்பிட்டபடி அங்கே மாவைப் பரப்பிவிட்டார்கள்.

பாபா செய்த இவைகளெல்லாம் என்னவென்று ஷீர்டி மக்களை வினவினேன்காலரா நோய் கிராமத்தில் பரவிக்கொண்டு இருப்பதாயும், இது அதையே எதிர்க்க பாபாவின் பரிகாரமாகும் என்றும் கூறினர்கோதுமை அரைக்கப்படவில்லை, காலராவே அரைக்கப்பட்டு கிராமத்திற்கு வெளியில் கொட்டப்பட்டதுஇந்நிகழ்ச்சியின் பின்னர் காலரா மறைந்து கிராம மக்கள் மகிழ்ச்சியுற்றனர்நானும் இவற்றையெல்லாம் அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்ஆனால் அதே சமயம் எனக்கு ஆச்சரியம் விளைந்ததுகாலராவுக்கும், கோதுமை மாவுக்கும் பூவுலகில் உள்ள ஒற்றுமை யாதுசாதாரணமாக அவைகளுக்கு உள்ள உறவு என்னஅவை இரண்டையும் எங்னம் இணைக்க முடியும்இந்நிகழ்ச்சி விவரிக்க இயலாததாய் இருக்கிறதுநான் இதைப்பற்றிச் சிறிது எழுதி என் மனம் நிறைவடையும்வரை பாபாவின் இனிக்கும் லீலைகளைப் பாடுவேன்.

இந்த லீலையைப் பற்றி இவ்வாறாக எண்ணமிட்டபின் என் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்ததுஇங்ஙனம் நான் பாபாவின் வாழ்க்கை வரலாறான சத்சரிதத்தை எழுத உணர்சியூட்டப்பட்டேன்.

பாபாவின் அருளுடனும், ஆசியுடனும் இப்பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்பதையும் நாமறிவோம்




மாவரைத்ததன் தத்துவ உட்கருத்து

ஷீர்டி மக்கள் இந்நிகழ்ச்சியை ஒட்டி அமைந்த காரணத்தைத் தவிர வேறு ஒரு தத்துவ உட்கருத்தும் இருப்பதாக நாம் நினைக்கிறோம்.  சாயிபாபா ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் ஷீர்டியில் வாழ்ந்தார்இந்நீண்ட காலத்தில் அவர் பெரும்பாலும் தினசரி அரைத்தார்கோதுமையை மாத்திரமன்று பாவங்கள், உள்ளம் - உடல் ஆகியவற்றின் துன்பங்களையும், கணக்கில்லாத் தன் அடியவர்களின் துயரங்களையும் அரைத்துத் தீர்த்தார்.

கர்மம், பக்தி என்ற இரண்டு கற்கள் அவர் திருகையில் இருந்ததுமுன்னது கீழ் கல்லாகும்பின்னது மேற் கல்லாகும்பாபா பிடித்து அரைத்த கைப்பிடி ஞானமாகும்சத்துவம், ராஜசம், தாமசம் என்ற முக்குங்களைச் சேர்ந்த நமது எல்லா உணர்சிகள், ஆசைகள், பாவங்கள், அஹங்காரம் இவைகளை நிகளந்துக்களாக்கி முன்னோடி வேலையாக அரைக்கப்பட்டாலன்றி 'ஞானம்' அல்லது 'தன்னை உணர்தல்' என்பது முடியாதென்பது பாபாவின் உறுதியான தீர்ப்பாகும்இக்குத்தைத் தள்ளிவிடுவது அத்தகைய கடினமானதுஏனெனில் அவைகள் அவ்வளவு நுட்பமானவை.

கபீரின் ஒரு நிகழ்ச்சியை இது ஞாபகமூட்டுகிறதுஒரு பெண்மணி சோளத்தை அரைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு அவர் தன் குரு நிபத்னிரன்ஜனிரிடம், "திருகையில் இடப்பட்ட சோளத்தைப் போன்று இவ்வுலக வாழ்க்கை என்னும் திருகையாலே நசுக்கப்படும்போது நான் அஞ்சுவதனால் அழுகிறேன்" என்று கூறினார்.   நிபத்னிரன்ஜனர் "பயப்படாதே, நான் செய்வது போல் இத்திருகையில் உள்ள ஞானமென்னும் பிடியைப் பிடித்துகொள்அதிலிருந்து நெடுந்தூரம் சென்று திரியாதேஆயின் உட்புறமாகத் திரும்பு அப்போது நீ காப்பாற்றப்படுவது நிச்சயம்" என்று பதிலளித்தாராம்.

ஸ்ரீ சாயியைப் பணிக அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்