Thursday, 23 February 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 10

•  சாயிபாபாவின்  வாழ்க்கை நடைமுறை
•  அவர் படுக்கும் பலகை
•  ஷீர்டியில் அவரின் வாசம்
•  அவரின் அறிவுரைகள்
•  அவரின் பணிவு
•  மிகவும் எளிய வழி

அன்புடன் எப்போதும் அவரையே (சாயிபாபா) நினைவூட்டிக்கொள்ளுங்கள்.  ஏனெனில் அனைவருக்கும் நன்மை செய்யும் கவனத்தால் கவரப்பட்டு, ஆத்மாவிலேயே உறைந்து நின்றார்.  வாழ்வு, சாவு என்னும் புதிரை விடுவிக்கும் வழி, அவரை நினைவுபடுத்திக்கொள்வது மட்டுமே.  சாதனைகளிலேயே இதுதான் மிகமிக எளியதும், சிறந்ததுமான சாதனையாகும்.  ஏனெனில் அது எவ்விதச் செலவையும் உள்ளடக்காதது.  இங்கு ஒரு சிறு முயற்சி பெரும் பரிசுகளைக் கொணர்கிறது.  நமது புலன்கள் எல்லாம் நல்லமுறையில் இருக்குந்தோறும் நிமிடத்திற்கு நிமிடம், இந்த சாதனையைப் பழகவேண்டும்.  மற்ற எல்லாத் தேவைகளும் வெற்றுத் தோற்றமே.  குருவே ஒரே கடவுள்.  சத்குருவின் புனிதத் திருவடிகளை நினைவு கூர்வோமானால், அவர் மேலும் சிறப்பான நிலைக்கு நமது அதிஷ்டத்தை மாற்றிவிட இயலும்.  அவருக்கு சிறப்பாகச் சேவை செய்வோமானால், நாம் நமது சம்சாரத்தினின்று விடுபடுகிறோம்.  நியாயம், மீமாம்ஸம் போன்ற தத்துவங்களை நாம் பயிலத் தேவையில்லை. 

அவரை நமது வழிகாட்டியாக நாம் அமைத்துக்கொள்வோமானால், நமது அனைத்துத் துன்பங்கள், கவலைகள் என்னும் கடலை எளிதாகக் கடந்து செல்லலாம்.  ஆற்றையும், கடலையும் கடப்பதில் நாம் மாலுமியை நம்பியிருப்பதைப் போன்றே, இவ்வுலக வாழ்வெனும் கடலைக் கடப்பதில், நமது சத்குருவை நாம் நம்பவேண்டும்.  தமது அடியவர்களின் தீவிரமான உணர்வையும், பக்தியையும் அவர் நோக்கி ஞானத்தையும், சாஸ்வதமான கழிபேருவகையையும் அவர்களுக்கு உரித்தாக்குகிறார்.  

கடந்த அத்தியாயத்தில் பாபாவின் பிச்சையைப் பற்றியும், பக்தர்களின் அனுபவங்களைப்பற்றியும், மற்ற விஷயங்களைப்பற்றியும் கூறப்பட்டது.  பாபா எவ்வாறு வாழ்ந்தார், எவ்வாறு தூங்கினார், எவ்வாறு கற்பித்தார் என்று வாசகர்கள் தற்போது கேட்பார்களாக!



பாபாவின் அற்புதமான படுக்கும் பலகை

பாபா எங்கு, எவ்வாறு தூங்கினார் என்பதைக் காண்போம்.  நான்கு முழம் நீளமும், ஒரு முழம் அகலமும் உள்ள பலகையை பாபா படுத்து உறங்குவதற்காக நானா சாஹேப் டேங்க்லே கொணர்ந்தார்.  அதனைத் தரையில் போட்டு அதன்மீது உறங்குவதற்குப் பதிலாக, மசூதியின் உத்தரங்களில் இற்றுப்போன கந்தல் துணிகளால் அதை ஒரு ஊஞ்சல்போல் கட்டி, அதன்மீது படுத்துறங்க ஆரம்பித்தார்.  எப்படி பாபாவின் உடலை அது தங்குகிறது என்பது ஒருபுறமிருக்க, தனியாகப் படுக்கையையே தாங்குவது பிரச்சனையாகவுள்ள அளவுக்கு மெல்லியதாகவும், இற்றுப்போயும் அக்கந்தல் துணி இருந்தது.  ஆனால் எவ்விதமாகவோ பாபாவின் லீலையால் மட்டுமே அக்கந்தல் துணி பாபாவின் கனத்துடனும், பலகையையும் தாங்கவே செய்தது.  பலகையின் நான்கு மூலைகளிலும், மூலைக்கொரு மண்விளக்கு வீதம் ஏற்றி, இரவு முழுவதும் எரிந்துகொண்டிருக்கும்படியாக வைப்பார்.

இப்பலகையின்மீது பாபா அமர்ந்து கொண்டிருப்பதையோ, துயின்றுகொண்டிருப்பதையோ கண்ணுறும் தரிசனமானது தேவர்களுக்கும் கிடைப்பதற்கு அரியதொன்றாகும்!  அதில் பாபா எங்ஙனம் ஏறி இறங்கினார் என்பது அனைவருக்கும் வியப்பை விளைவிப்பதாய் இருந்தது.  இதனை அறியும் ஆர்வத்துடன் பாபா ஏறுவதையும், இறங்குவதையும் காண்பதற்காகப் பல கவனமுள்ள பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதிலும் ஒருவரும் அதனைக் காண்பதில் வெற்றிபெறவில்லை.  இவ்விசித்திரமான அருஞ்செயலை நுணுகிக் காண்பதற்காக கூட்டம் அதிரிக்கவே, ஒருநாள் பாபா பலகையைத் துண்டுதுண்டாக உடைத்து எறிந்துவிட்டார்.  எட்டுவிதமான மஹாசித்திகளும் (அஷ்டமா சித்திகள்) பாபாவின் ஆணையில் இருந்தன.  அவர் அவைகளை ஒருபோதும் பயிற்சிக்கவோ அவைகளுக்காக ஏங்கவோ இல்லை.  அவைகள் பாபாவின் முழுமையினால் தாமாகவே அவரை வந்தெய்தின.  



பிரமத்தின் உருவ வெளிப்பாடு

ஐந்தடி மூன்று அங்குல உயரமுள்ள மனிதனைப்போல் பாபா தோற்றமளித்தாலும், அனைவரின் இதயத்திலும் அவர் வாழ்வார்.  அந்தரங்கமாக அவர் பந்தமற்றவராகவும், அக்கறையற்றவராகவும் இருந்தாலும், பகிரங்கத்தில் பொதுமக்களின் நலத்தை விரும்பினார்.  அகத்திலே மிகவும் ஆர்வமற்றவராக இருப்பினும், புறத்தில் தமது பக்தர்களுக்காக ஆசைகள் நிரம்பப்பெற்றவராக இருந்தார்.  உள்ளே சாந்தத்தின் இருப்பிடமாக அவர் இருப்பினும், வெளியில் இருப்புக் கொள்ளாதவராய் இருந்தார்.  அந்தரங்கமாய் பிரமானந்த நிலையை எய்தியவராய் அவர் இருந்தார்.  பகிரங்கமாய் பிசாசைப்போன்று நடந்துகொண்டார்.  அந்தரங்கமாய் அவர் அத்வைதத்தை விரும்பினார்.  பகிரங்கமாய் உலகோடு கட்டுப்பட்டவராய் இருந்தார்.  சில நேரங்களில் அனைவரையும் பாசம் ததும்ப நோக்கினார்.  சில சந்தர்ப்பங்களில் அவர்கள்மீது கற்களை விட்டெறிந்தார்.  சிலசமயம் அவர்களைக் கடிந்துகொண்டார்.  சில சந்தர்ப்பங்களில் அவர்களை அன்புடன் அரவணைத்தார்.  அமைதியாகவும், பதட்டமற்றவராகவும், பொறுமையுள்ளவராகவும், நல்ல சமநிலையுள்ளவராகவும் இருந்தார்.  ஆத்மாவிலேயே உறைந்து அதனாலேயே கவரப்பட்டு அதன் வயமாக ஆனார்.  தமது பக்தர்களுக்காகச் செய்யவேண்டியவற்றை நன்கு செய்துமுடித்தார்.  எப்போதும் அவர் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.  ஒருபோதும் பிரயாணம் செய்யவில்லை.

அவரது தண்டம் (சந்நியாசிகள், துறவின் அடையாளமாகத் தங்களுடன் வைத்திருக்கவேண்டிய நீளமான மூங்கில் கோல்) சிறு குச்சியேயாகும்.  சாந்தமாகவும், எண்ணங்களிலிருந்து விடுபட்டவராகவும் இருந்தார்.  செல்வத்தையும், புகழையும் அவர் இலட்சியம் செய்யாது, பிச்சை எடுத்தே வாழ்ந்தார்.  இத்தகைய வாழ்க்கையையே அவர் நடத்தினார்.  'அல்லா மாலிக்' (இறைவனே எஜமான்) என்று அவர் எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தார்.  அடியவர்களிடம் அவர் கொண்டிருந்த அன்பு ஏராளமானதும், தடையற்றதுமாகும்.  ஆத்மஞானச் சுரங்கமாகவும், பரமானந்தம் முழுமையும் நிரம்பப்பெற்றவராகவும் இருந்தார்.

சாயிபாபாவின் தெயவீகரூபம் இத்தகையது.  அத்தகைய எல்லையற்ற, முடிவற்ற, பாகுபாடற்ற புல்-பூண்டிலிருந்து பிரம்மா வரையுள்ள பிரபஞ்சமனைத்தையும் அரவணைக்கும் ஏகதத்துவமே சாயிபாபாவாக அவதரித்தது.  உண்மையில் தகைமையும், நல்ல அதிஷ்டமும் பெற்ற பெற்ற மக்கள் சாயிபாபா என்ற பொக்கிஷப் புதையலைப் பெற்றனர்.  உண்மையான மதிப்பை அறியாதவர்கள், அவரை ஒரு மனிதனாக, சாதாரண மானிடப் பிறவியாகக் கருதினார்கள், கருதுகிறார்கள்?!  அவர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.


 
பாபாவின் ஷீர்டி வாசமும், 
பிறந்த ஆண்டு பற்றிய அனுமானமும்

சாயிபாபாவின் சரியான பிறந்தநாளையும், அவரது பெற்றோரையும் ஒருவரும் அறியார்கள்.  அவரது ஷீர்டி வாசத்தில் இருந்து அதை ஏறக்குறையத் தீர்மானிக்கலாம்.  அவர் பதினாறு வயதுப் பாலகனாக இருக்கும்போது முதலில் ஷீர்டிக்கு வந்தார்.  மூன்றாண்டுகள் அங்கு தங்கியிருந்தார்.  பின்னர் திடீரென்று சிலகாலம் மறைந்துவிட்டார்.  சிறிது காலத்திற்குப்பின் நைஜாம் ளரங்கபாத்துக்கு அருகில் இருபது வயது நிரம்பி இருக்கும்போது தோன்றினார்.  மீண்டும் ஷீர்டிக்கு சாந்த் பாடீலின் கல்யாண கோஷ்டியுடன் திரும்பினார்.  பின்னர் தொடர்ந்து அறுபது ஆண்டுகள் அவர் ஷீர்டியில் வாழ்ந்தார்.  அதற்குப் பின்னர் 1918ஆம் ஆண்டில் மஹாசமாதி அடைந்தார்.  இதில் இருந்து பாபாவின் பிறந்த வருடம் ஏறக்குறைய 1838ஆக இருக்கலாம் என்று கூற இயலும்.



பாபா மேற்கொண்ட பணியும், உபதேசமும் 

முனிவர் ராம்தாஸ் (1608 - 1681) பதினேழாம் நூற்றாண்டில் செழித்தோங்கி விளங்கினார்.  பசுக்களையும், அந்தணர்களையும், யவனர்களிடமிருந்து (மொஹலாயர்களிடமிருந்து) காப்பாற்றுதல் என்னும் தாம் மேற்கொண்ட குறிக்கோளை பெருமளவிற்கு நிறைவு செய்தார்.  ஆனால் அவருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இரு வகுப்பினர்களுக்குள்ளும் மீண்டும் (இந்து - முஸ்லிம்கள்) வேற்றுமை அதிகரித்தது.  அந்தப் பாதாளப் பள்ளத்தினை இணைக்கும் பாலமாக சாயிபாபா விஜயம் செய்தார்.  

அனைவருக்கும் அவர்தம் நிரந்தரமான உபதேசத்தின் உட்கருத்து இவ்வாறனதாகும்.  "ராமரும் (இந்துக்களின் தெய்வம்) - ரஹீமும் (முஸ்லிம்களின் தெய்வம்) ஒன்றே ஒன்றுதான்.  அவர்களுக்குள் எள்ளளவும் வேற்றமை இல்லை.  பின்னர் ஏன் அவர்களின் அடியவர்கள் சச்சரவு புரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்கின்றனர்?  கள்ளங்கபடு அறியாத மக்களாக கைகோர்த்து இரு வகுப்பினரும் ஒன்றாயிணைந்து விவேகத்துடன் நடந்துகொள்ளுங்கள்.  இங்ஙனமாக உங்களது குறிக்கோளாகிய தேசீய ஒற்றுமையை ஈட்டப்பெறுவீர்கள்.  போராடி வாதாடுதல் நன்றன்று.  எனவே விவாதிக்க வேண்டாம்.  மற்றவர்களுடன் போட்டிபோட வேண்டாம்.  எப்போதும் உங்களது அக்கறையினையும், நலத்தினையுமே கருத்தில் கொள்வீர்களாக.  

கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்.  யோகம், தியாகம், தவம், ஞானம் என்பன கடவுளையறியும் நெறிகள்.  இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றன் மூலம் நீங்கள் இதில் வெற்றிபெற இயலாவிடின், உங்கள் பிறப்பு வீணேயாகும்.  யாரேனும் ஏதாவது தீமையை உங்களுக்குச் செயவாரேயாகில், அதற்க்காகப் பழிக்குப் பழி வாங்காதீர்கள்.  நீங்கள் ஏதேனும் செய்ய இயலுமானால், பிறருக்குச் சிறிது நன்மையைச் செய்வீராக!"  இது அனைவருக்கும் சாயிபாபா அளித்த உபதேசத்தின் சுருக்கம்.  இது லௌகிக, ஆன்மிக விஷயங்கள் இரண்டிலுமே நலம் பயப்பதாகும்.  



சத்குருவாக சாயிபாபா

ஏராளமான குருக்கள் இருக்கின்றனர்.  தங்கள் கரங்களில் ஜால்ரா, தாளக்கருவி, வீணை சகிதம் வீடுதோறும் சென்று ஆத்மீகத்தைப் படாடோபம் செய்துகொள்ளும் குருக்கள் உண்டு.  அவர்கள் மந்திரங்களைத் தமது சீடர்களின் காதில் ஓதி அவர்களிடமிருந்து பணத்தைக் கறப்பர்.  தமது சீடர்களுக்கு கடவுள் பற்றையும், கடவுள் நம்பிக்கையையும் உபதேசிப்பதாக உணர்ச்சி வகையில் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வர்.  ஆனால் அவர்களே இறையனுபவம் அற்றவராக இருப்பர்.  ஆனால் சாயிபாபா தமது தகைமையையும் (கடவுள்பற்று), மெய்யுணர்வையும் காண்பிப்பதற்கு எவ்வித சிறிய முயற்சியையும் எடுக்கவேயில்லை.  அடியவர்களிடம் பெருமளவு அன்பு கொண்டிருந்தார்.  இரண்டு விதமான குருக்கள் இருக்கின்றனர்.  
(1)  நியத் - நியமிக்கப்படவர், குறிக்கப்பட்டவர்
(2) அநியத் - நியமிக்கப்படாதவர், பொதுவானவர்
பின்னவர்கள் தங்கள் உபதேசங்களால் நம்மிடத்தில் உள்ள நற்பண்புகளை அபிவிருத்தி செய்கின்றனர்.  நமது இதயத்தைத் தூய்மைப்படுத்துகின்றனர்.  நம்மை வீடுபேற்றை அடையும் பாதையில் செல்லத்தூண்டுகின்றனர்.  இதற்கு மாறுபாடாக முன்னவர்களாகிய குருக்களோ நமது தனி இயல்பை (பேத உணர்வை) அழித்து, 'நீயே அது!' என்று உணரச் செய்து, நம்மை ஏகத்வத்தில் ஸ்தாபிக்கின்றனர்.  பல்வேறு வகையான உலக ஞானத்தை அளிக்கும் பல திறத்தான குருக்கள் இருக்கின்றனர்.  ஆனால் நம்மை நமது இயற்கையில் (ஆத்மாவில்) நிலைப்படுத்தி உலகவாழ்வெனும் சாகரத்துக்கு அப்பால் நம்மைச் சுமந்து செல்பவரே சத்குரு எனப்படுவார்.  

சாயிபாபா அத்தகைய ஒரு சத்குரு ஆவார்.  அவருடைய பெருமையை விவரிக்க இயலாது.  யாரேனும் பாபாவின் தரிசனத்தைப் பெறச்சென்றால், கேட்கப்படாமலேயே அவரது கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களின் ஒவ்வொரு விவரத்தையும் உரைப்பார்.  எல்லா ஜீவராசிகளிடமும் அவர் தெய்வீகத்தைக் கண்டார்.  நண்பர்களும், பகைவர்களும் அவருக்கு ஒன்றே.  அவாவற்றவராகவும், சமன் செய்யப்பட்டவராகவும் இருந்த அவர் தீயோருக்கும் கட்டுப்பட்டுச் செவி சாய்த்தார்.  சுபிட்சத்திலும், எதிரிடையான சூழ்நிலையிலும் அவர் ஒரே மாதிரியாய் இருந்தார்.  எப்போதும், எவ்வித ஐயமும் அவரைத் தீண்டவில்லை.  இவ்வுடம்பில் அவர் இயங்கினாரெனினும் எள்ளளவும் தமது உடம்பிலேயோ, வீட்டிலேயோ பற்றற்றவராகவே இருந்தார்.  உடலுருக்கொண்டு அவர் தோற்றமளித்தாலும் உண்மையில் அருவமானவர்.  அதாவது இந்த வாழ்க்கையிலிருந்தே விடுதலையானவர்.  

அத்தகைய சாயியை தங்கள் கடவுளாக வழிபட்ட ஷீர்டி மக்கள் ஆசீர்வதிக்கபட்டவர்கள்.  அவர்கள் உண்ணும்போதும், அருந்தும்போதும், பழக்கடையிலும், வயலிலும் மற்றபிற இல்லற தர்மங்களைச் செய்யும்போதும் சாயியை நினைவு கூர்ந்தார்கள்.  அவர்தம் புகழைப் பாடினார்கள்.  சாயியைத் தவிர பிறிதொரு கடவுளை அவர்களுக்குத் தெரியாது.  ஷீர்டியில் வசித்த பெண்களின் அன்பின் இனிமையை எங்ஙனம் விவரிக்கமுடியும்!  அறியாதவர்களாக இருப்பினும் அவர்களின் தூயஅன்பு எளிய கிராமியமொழியில் பாபாவின் புகழை கவிதையாகவும், தெம்மாங்குப் பாடலாகவும் பாட உணர்வூட்டியது.  எழுத்தறிவு அவர்களிடம் இல்லையாயினும் உண்மைக் கவித்துவத்தை அவர்களின் எளிமையான பாடல்களில் தெளிவாக உணரமுடியும்.  படிப்பறிவு அன்று! ஆழ்ந்த அன்பே அத்தகைய பொருள்செறிந்த பாடல்களை வெளிக்கொணர்ந்தது.  அப்பாடல்கள் ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடே.  சற்றே அறிவுக்கூர்மையுள்ள ஆர்வலரால் அவற்றை உணர்ந்து இன்புறமுடியும்.

இந்த கிராமியப் பாடல்களை சேகரித்து தொகுப்பது மிகவும் அவசியமான ஒன்று.  பாபாவின் விருப்பத்தால் அதிஷ்டமுடைய பக்தர் எவரேனும் இப்பணியை மேற்கொண்டு சாயிலீலா சஞ்சிகையிலோ அல்லது தனிப்புத்தகமாகவோ பிரசுரிக்கலாம்.



பாபாவின் பணிவுடைமை

பரமாத்மா அல்லது கடவுள் ஆறு குணாதிசயங்களை உடையவராகக் கூறப்படுகிறது.  அதாவது புகழ், செல்வம், பற்றின்மை, ஞானம், பேராற்றல், வள்ளன்மை ஆகியவையாகும்.  பாபா இவை அனைத்தையும் தன்னிடத்துடையவராக விளங்கினார்.  இவ்வுடம்பில் அடியவர்களுக்காக அவதரித்தார்.  அவரது அருளும், அன்பும் அதிசயிக்கத்தக்கவை.  ஏனெனில் தமது அடியவர்களைத் தம்மிடம் ஈர்த்து இழுத்தார்.  இல்லாவிடில் யார்தான் அவரை அறிந்திருக்க இயலும்!  அவர் தமது பக்தர்களின் பொருட்டாக வாக்கின் தெய்வம் (சரஸ்வதிதேவி) கூட உரைக்கத் துணியாத அத்தகைய சொற்களை அவர் கூறினார்.  அதற்கு இதோ ஓர் உதாரணம், மிகவும் எளிமையுடன் அவர் கூறியது பின்வர்மாறு.  "நான் அடிமைகளுள் அடிமை.  உங்கள்ளுக்குக் கட்டுப்பட்டவன்.  உங்களது தரிசனத்திலே திருப்தியடைகிறேன்.  தங்களது திருவடிகளைத் தரிசிக்கும் பெரும் பாக்கியம் பெற்றேன்.  நான் தங்களது மலத்திலுள்ள ஒரு புழு.  அங்கனமாகவே என்னை நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாகக் கருதுகிறேன்".

எத்தகைய பணிவுடைமை?!  இதைப் பிரசுரிப்பதன் மூலம் சாயிக்கு எத்தகைய அவமரியாதையாவது செய்யப்பட்டது என்று எவரேனும் நினைப்பாராகில், அவர்களிடம் மன்னிப்பை வேண்டிக்கொள்கிறோம்.  இதற்குப் பிராயச்சித்தமாக பாபாவின் நாமத்தைப் பாடி ஜபிப்போமாக!

பாபா வெளிப்படையாக உணர்ச்சி நுகர்வுக்கூறு மற்றும் பொருட்களால் மகிழ்பவர்போல் தோன்றினாலும், அவருக்கு அவைகளில் எள்ளளவும் தனிச்சுவைத் திறமோ அவைகளை மகிழ்ந்து அனுபவிக்கும் பிரக்ஞையோ இருந்ததில்லை.  அவர் உண்டார் எனினும், சுவை அறியவில்லை.  பார்த்தார் எனினும், பார்த்தவைகளில் அவர் எவ்வித விருப்பையும் உணர்ந்திருக்கவில்லை.  காம உணர்வுகளைப்பற்றிக் கருதும்கால் அவர் ஹனுமானைப் போன்ற பூரண பிரம்மச்சாரியாவார் என்பதாலும் பற்றற்றவராக இருந்தார்.  அவரே தூய உணர்வுகளின் திரளாகவும், ஆசை, கோபம், மற்ற உணர்ச்சிகள் அடங்கி அமைதியுறும் இடமாகவும் திகழ்ந்தார்.  சுருக்கமாக அவர் அவாவற்றவர், கட்டற்றவர், முழு நிறைவானவர்.  இக்கூற்றைச் சித்தரிக்கும் வகையில் ஒரு அதிசய நிகழ்ச்சியைக் கூறலாம்.  



நானாவலி

ஷீர்டியில் நானாவலி என்ற பெயரில் தனிப்போக்குள்ள விசித்திரமான மனிதன் ஒருவன் இருந்தான்.  அவன் பாபாவின் வேலைகளையும், காரியங்களையும் கவனித்துவந்தான்.  ஒருமுறை அவன், ஆசனத்தில் அமர்ந்திருந்த பாபாவிடம் சென்று, தான் அதில் உட்கார வேண்டியிருப்பதால் பாபாவை எழுந்திருக்கும்படி கூறினான்.  பாபா உடனடியாக எழுந்திருந்து, தாம் அமர்ந்திருந்த ஆசனத்தைக் காலி செய்தார்.  அதில் அவன் அமர்ந்துகொண்டான்.  சிறிது நேரம் அமர்ந்திருந்த பின்னர் அவன் எழுந்திருந்து, பாபாவை அமர்ந்துகொள்ளச் சொன்னான்.  பாபா ஆசனத்தில் அமர்ந்தார்.  பிறகு அவன் பாபாவின் பாதங்களில் வீழ்ந்து நமச்கரித்துவிட்டுச் சென்றுவிட்டான்.  

தாம் அதிகாரம் செலுத்தப்பட்டதிலும், வெளியேற்றப்படதிலும், பாபா எவ்வளவும் வருத்தம் அடையவில்லை.  இந்த நானாவலி, பாபாவை மிகவும் நேசித்தான்.  பாபா மஹாசமாதி எய்திய பதிமூன்றாவது நாள் தாமும் சமாதி அடைந்தான்.  



மிகவும் எளிய வழி

முனிவர்களுடைய கதைகளைக் கேட்பதும், அவர்களின் சத்சங்கத்தில் இருப்பதும்.  புறத்தில் சாயிபாபா சாதாரண மனிதர் போன்று நடித்தாலும், அவரது செய்கைகள் அவரது அசாதாரண புத்தி சாதுர்யத்தையும், திறமையையும் காண்பித்தன.  அவர் எதைச் செய்தபோதிலும் அவைகள் அடியவர்களின் நன்மை கருதியே செய்யப்பட்டன.  தமது அடியவர்களுக்காக, சுவாச நியமத்தையோ, அல்லது எத்தகைய வழிபாட்டுமுறையையோ, அவர் வகுத்துரைக்கவில்லை.  அல்லது எவ்வித மந்திரத்தையும், எவர் காதிலும் அவர் ஓதவில்லை.  எல்லாவித புத்திசாலித்தனத்தையும் விட்டொழித்துவிட்டு எப்போதும் 'சாயி சாயி' என்று ஞாபகமூட்டிக்கொள்ளும்படி அவர்களிடம் கூறினார்.  இதைச் செய்வீர்களானால் உங்களது கட்டுக்களெல்லாம் விடுபட்டு விடுதலை அடைவீர்கள் என்று உரைத்தார்.  ஐந்து நெருப்புக்களிடையே அமர்தலும், யாகங்களும், பராயணங்களும், அஷ்டாங்க யோகங்களும் அந்தணர்களால் மட்டுமே இயலுவதாகும்.  மற்றைய வகுப்பினருக்கு அவைகளால் எவ்விதப் பலனும் இல்லை.  மனதின் தொழில், நினைப்பதாகவும்.  எண்ணமின்றி அது ஒரு நிமிடமும் இருக்கமுடியாது.  புலன் உணர்விற்குச் சார்பான பொருளை மனதிற்கு நீங்கள் அளித்தால் அதைப்பற்றி நினைக்கும்.  அதற்கு குருவை அளித்தால் அது குருவைப்பற்றி எண்ணமிடும்.  

நீங்கள் மிக்க கவனத்துடன் சாயியின் பெருமையையும், பேராற்றலையும் கேட்டீர்கள்.  இதுவே சாயியை இயற்கையாக நினைவூட்டிக்கொள்ளுதலும், வழிபடுவதும், கீர்த்தனை செய்வதும் ஆகும்.  மேலே கூறப்பட்ட மற்ற சாதனைகளைப்போன்று இக்கதைகளைக் கேட்பது என்பது அவ்வளவு கடினமானது அல்ல.  இக்கதைகள் சம்சாரமென்னும் (உலக வாழ்க்கை) பயத்தை அழித்து, உங்களை ஆத்மீகப் பாதையில் அழைத்துச் செல்கின்றன.  எனவே இக்கதைகளைக் கவனத்துடன் கேளுங்கள்.  அவைகளைத் தியானியுங்கள்.  அவைகளை ஜீரணித்துக்கொள்ளுங்கள்.  இம்முறை பின்பற்றப்பட்டால் அந்தணர்கள் மட்டுமன்று பெண்ணினமும், கீழ்குலத்தோரும் தூய்மை அடைந்து புனிதமடைவர்.  

நீங்கள் உங்களது உலகக் கடமைகளைச் செய்துகொண்டோ, கவனித்துக்கொண்டோ இருக்கலாம்.  ஆனால் உங்களது மனத்தை சாயிக்கும் அவரின் கதைகளுக்கும் அளித்துவிடுங்கள்.  பின்னர் அவர் உங்களை ஆசீர்வதிப்பது நிச்சயமாகும்.  இதுவே மிகவும் எளிமையான வழியாகும்.  எனினும் அனைவரும் ஏன் அதைப் பின்பற்றவில்லை?  காரணம் என்னவென்றால் கடவுள் அருளின்றி முனிவர்களின் கதைகளைக் கேட்கும் ஆர்வம் நமக்கு வருவதில்லை.  கடவுள் அருளால் எல்லாம் தட்டுத்தடங்கல்கள் இன்றியும், எளிதாகவும் நடந்தேறுகிறது.  

முனிவர்களின் கதைகளைக் கேட்பது என்பது ஒருவழியில் அவர்களின் சத்சங்கதைப் பெறுதலை நிகர்ப்பதாகும்.  முனிவர்களின் கூட்டுறவின் முக்கியத்துவமானது மிகவும் பெரியது.  நமது உடல் உணர்வையும், அஹங்காரத்தையும் அகற்றி, பிறப்பு - இறப்பு என்னும் சங்கிலித் தொடர்ச்சியை அறவே அழிக்கிறது.  இதய முடிச்சுக்களையெல்லாம் துண்டாக அறுத்துவிட்டு தூய உணர்வான கடவுளிடத்திலேயே நம்மை அழைத்துச் செல்கிறது.  புலன் உணர்வு விஷயங்களைப் பற்றி நமது அவாவின்மையை நிச்சயம் அதிகரித்து, இன்ப-துன்பங்களை நாம் முழுவதும் இலட்சியம் செயாதவராக்கி, ஆத்மீகப் பாதையில் மேன்மேலும் நம்மை அழைத்துச் செல்கிறது.  நாமஸ்மரணம், வழிபாடு அல்லது பக்தி போன்ற சாதனைகள் உங்களிடம் இல்லையாயினும், ஞானிகளிடம் உங்கள் முழு இதயத்தோடு சரணாகதியடைவீர்களானால், இவ்வுலக வாழ்வெனும் பெருங்கடலுக்கு அப்பால் அவர்கள் நம்மைப் பத்திரமாக இட்டுச் செல்வார்கள்.

இக்காரணத்துக்காகவே முனிவர்கள் உலகில் அவதரிக்கிறார்கள்.  உலகத்தின் பாவங்களை அடித்துச் செல்லும் கங்கை, கோதாவாரி, கிருஷ்ணா, காவேரி முதலிய புனித ஆறுகள்கூட முனிவர்கள் ஸ்நானத்திற்காகத் தங்களிடம் வரவேண்டுமென்றும், தங்களைப் புனிதப்படுத்த வேண்டுமென்றும் விரும்புகின்றன.  முனிவரின் பேராற்றல் அத்தகையது.  முந்தைய பிறவிகளில் நாம் செய்த நற்கருமங்களின் சேமிப்புக் குவியல்களால் நாம் சாயிபாபாவினுடைய திருவடிகளை அடையப்பெற்றோம்.  சாயியின் ரூப தியானத்துடன், இந்த அத்தியாயத்தை நாம் முடிக்கிறோம்.

அத்தகைய சுந்தரமான அழகுபடைத்த சாயி, மசூதியின் விளிம்பில் நின்றுகொண்டு 'உதி'யை ஒவ்வொரு பக்தருக்கும், அவரவர் நன்மையைக் கருத்திற்கொண்டு விநியோகித்துக் கொண்டிருக்கிறார்.  இவ்வுலகை வெறுமையாய்க் கருதி பரமானந்தத்திலேயே எப்போதும் திளைத்துக்கொண்டிருக்கும் அவர் முன்னால் வீழ்ந்து வணங்குவோம்.

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்
                             
 

 

Thursday, 16 February 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 9

•  விடைபெறும்போது சாயிபாபாவின்
   ஆணைகளுக்குக் கீழ்ப்படிதல்
•  கீழ்ப்படியாதிருத்தலின் விளைவு
•  சில நிகழ்ச்சிகள் 
•  பிச்சை எடுப்பதும் அதன் அவசியமும்
•  பக்தரின்(தர்கட்) குடும்ப அனுபவம்
•  பாபா எவ்வாறு திருப்தியுடன் 
   உண்பிக்கப்பட்டார்

முந்தைய அத்தியாயத்தின் முடிவில், விடைபெறும்போது பாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்கள் நன்மையடைந்தனர் என்றும், அவைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் பல துர்ச்சம்பவங்களுக்கு ஆளானார்கள் என்றும் மட்டுமே கூறப்பட்டது.  சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளாலும் மற்றும் சம்பவங்களாலும் இக்கூற்று விவரமாக இந்த அத்தியாயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.  


ஷீர்டி புனித யாத்திரையின் குணாதிசயம்

ஷீர்டி புனித யாத்திரையின் ஒரு சிறப்பான வினோதம் என்னவென்றால் எவரும் ஷீர்டியை விட்டு பாபாவின் அனுமதியின்றி அகன்று செல்லமுடியாது.  அப்படிச் செல்வாரேயானால், அவர் சொல்லற்கரிய தொல்லைகளை வரவேற்கிறார்.  ஆனால் எவரேனும் ஷீர்டியைவிட்டு  வெளியேறிச் செல்லும்படி பாபாவால் கேட்டுக்கொள்ளப்பட்டால் அவர் அங்கு அதற்குமேல் தங்கியிருக்கமுடியாது.  பக்தர்கள் பாபாவிடம் சென்று வந்தனம் செய்து விடைபெற்றுச் செல்லப்போகும்போது அவர் சில யோசனைகளை அல்லது குறிப்புக்கள் வழங்குவார்.  இந்த யோசனைகளை பின்பற்றப்பட வேண்டும்.  இவைகள் பின்பற்றப்படாவிட்டாலும் அல்லது விலக்கப்பட்டு இந்தாலும், அங்ஙனம் தூண்டுரைகளுக்கு மாறாக நடந்தவர்களுக்கு விபத்துக்கள் நேரிடுவது உறுதி.  இதைப்பற்றிச் சில நிகழ்ச்சிகளைக் கீழே குறிப்பிடுகிறோம்.  



தாத்யா கோதே பாடீல் 

தாத்யா கோதே பாடீல், ஒருமுறை கோபர்காவன் கடைவீதிக்குக் குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்தார்.  அவர் மசூதிக்கு அவசரமாகத் திரும்பிவந்து பாபாவை வணங்கி,தான் கோபர்காவன் கடைவீதிக்குச் செல்லப்போவதாகக் கூறினார்.  பாபாவோ, "அவசரப்படாதே.  சிறிது தாமதித்துக் கடைவீதிக்குச் செல், கிராமத்தை விட்டு வெளியே செல்லாதே" என்றார்.  ஆனால் போவதற்கு அவருடைய வேகத்தைக்கண்ட பாபா, ஷாமாவையாவது (மாதவராவ் தேஷ்பாண்டே) உடன் அழைத்துச் செல்லுமாறு கூறினார்.  இவ்வுத்தரவைப் பொருட்படுத்தாது தாத்யா கோதே, உடனே குதிரை வண்டியை ஓட்டிச் சென்றார்.  இரண்டு குதிரைகளில், ரூ.300 விலையுள்ள குதிரை மிகவும் சுறுசுறுப்பாகவும், இருப்புக்கொள்ளாமலும் இருந்தது.  ஸாவ்லிவிஹீர் கிராமத்தைத் தாண்டியபிறகு, அது தாறுமாறாக ஓடத் தொடங்கியது.  இடுப்பில் சுளுக்கு ஏற்பட்டுக் கீழே விழுந்துவிட்டது.  தாத்யா அதிகமாகக் காயப்படவில்லை.  ஆனால் சாயிபாபாவின் உத்தரவை நினைவிற்கொண்டார்.  மற்றொரு சந்தர்ப்பத்தில் கோல்ஹார் கிராமத்துக்குச் செல்லும்போது, பாபாவின் நெறிமுறையை மதிக்காமல் குதிரை வண்டியில் சென்றபோது அதுவும் இதே கதிக்கு இலக்காகியது.  



ஐரோப்பிய பெருந்தகை

ஷீர்டிக்கு ஒருமுறை ஒரு ஐரோப்பியப் பெருந்தகை, ஏதோ ஒரு குறிக்கோளுடன், நானா சாஹேபின் அறிமுகக் குறிப்புடன் வந்தார்.  ஒரு கூடாரத்தில் சௌகரியமாகத் தங்கவைக்கப்பட்டார்.  அவர் பாபாவின் முன் மண்டியிட்டு பாபாவின் கையை முத்தமிட விரும்பினார்.  எனவே அவர் மூன்றுமுறை மசூதிக்குள் நுழைய முயன்றார்.  ஆனால் அவர் அப்படிச் செய்வதை பாபா தடுத்துவிட்டார்.  கீழேயுள்ள திறந்தவெளி முற்றத்தில் அமர்ந்து, பாபாவின் தரிசனத்தைச் செய்யும்படி கேட்கப்பட்டார்.  தமக்கு அழிக்கப்பட்ட வரவேற்பைக்கண்டு மகிழாத ஐரோப்பியர், ஷீர்டியைவிட்டு உடனே புறப்படவிரும்பி விடைபெறுவதற்காக வந்தார்.  பாபா அவரை அடுத்தநாள் போகும்படியும், அவசரப்பட வேண்டாம் என்றும் கூறினார்.  மக்களும் அவரை பாபாவின் அறிவுரையின்படியே செய்ய வேண்டிக்கொண்டனர்.

இவற்றையெல்லாம் செவிமடுக்காது, அவர் ஒரு குதிரை வண்டியில் ஷீர்டியைவிட்டுப் புறப்பட்டார்.  முதலில் குதிரைகள் ஒழுங்காக ஓடின.  ஆனால்  ஸாவ்லிவிஹீர் கிராமத்தைத் தாண்டியதும், எதிரில் ஒரு சைக்கிள் வந்தது.  இதைக்கண்டு குதிரைகள் மிரண்டு வேகமாக ஓடின.  குதிரைவண்டி தலைகீழாகக் கவிழ்ந்து, அந்தப் பெருந்தகை கீழே விழுந்து சிறிது தூரம் தரையில் இழுத்துச் செல்லப்பட்டார்.  உடனேயே அவர் காப்பாற்றப்பட்டார் என்றாலும், தனக்கு ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்துவதற்காக கோபர்காவன் மருத்துவமனைக்குச் சென்று படுக்க வேண்டியதாயிற்று.  இத்தகைய அனுபவங்கள் கணக்கில் அடங்கா.  பாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் ஏதோ ஒரு விதத்தில் விபத்துக்குள்ளானார்கள் என்றும் அவைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களோ பத்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தனர் என்றும் எல்லா மக்களும் பாடம் கற்றுக்கொண்டனர்.



பிச்சை எடுப்பதன் தேவை

பிச்சை எடுப்பதைப்பற்றிய கேளிவிக்குத் தற்போது திரும்புவோம்.  பாபா உண்மையிலேயே அத்தகைய பெரிய சிறப்புடையவராக, கடவுளாக இருந்தால் தமது வாழ்நாள் முழுக்கப் பிச்சையெடுக்கும் வழக்கத்தைப் ஏன் அவர் மேற்கொண்டவராய் இருத்தல் வேண்டும்? என்னும் கேள்வி சிலரது உள்ளத்தில் எழக்கூடும்.  இக்கேள்வி, இரண்டு நோக்கு நிலைகளில் கருதப்பட்டு விடையிறுக்கப்படலாம்.  

(1) பிச்சையெடுத்து வாழ்வதற்கு உரிமையுள்ள தகுதியான மக்கள் யார்?  வம்சாவிருத்தி, செல்வம், புகழ் இம்மூன்று முக்கிய ஆசைகளையும் துறந்து, துறவை மேற்கொள்வோரே பிச்சையெடுத்து வாழத் தகுதியுடையோராவர் என்று நமது சாத்திரங்கள் பகருகின்றன.  இவர்கள் சமைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து வீட்டில் உண்ணமுடியாது.  அவர்களை உண்பிக்கவேண்டிய கடமை இல்லறத்தாரின் தோள்களில் விழுகிறது.

சாயிபாபா இல்லறத்தாருமல்ல, வானப்பிரஸ்தருமல்ல.  அவர் பிரம்மச்சர்யம் அனுஷ்டித்த ஒரு துறவி, அதாவது சிறுபருவம் முதற்கொண்டே துறவியாவார்.  இப்பிரபஞ்சமே தமது வீடு என்பதும், தாமே பிரபஞ்ச ஆதாரமும், அழிவற்ற பிரம்மமுமாகிய பகவான் வாசுதேவர் என்பதும் அவருடைய உறுதியான அபிப்பிராயமுமாகும்.  எனவே அவருக்கு இறந்து உண்ணும் வழக்கத்திற்கு முழு உரிமை இருக்கிறது.

(2) மற்றவை கீழ்கண்ட நிலையின்படி, பஞ்ச்ஸுனா - ஐந்து பாவங்களும் அவைகளின் பிராயச்சித்தமும், உணவுப்பொருட்களும், சாப்பாடும் தயாரிப்பதற்காக இல்லறத்தார் ஐந்து செயல்கள் அல்லது நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டியதாய் இருக்கிறது.  அதாவது,
1.  கண்டணீ - பொடியாக்குதல் 
2.  பேஷணீ - அரைத்தல்  
3.  உதக்கும்பி - பானைகளைக் கழுவுதல் 
4.  மார்ஜனீ  - பெருக்கிச் சுத்தப்படுத்துதல்
5.  சுள்ளீ  - அடுப்பு பற்றவைத்தல்

இச்செயல்முறைகள் எல்லாம் ஏராளமான சிறிய கிருமிகளையும், ஜந்துக்களையும் கொல்வதற்கு ஏதுவாகிறது.

இவ்வாறாக இல்லறத்தார்கள்  ஓரளவு பாவத்தைச் செய்தவர்களாகிறார்கள்.  இப்பாவத்துக்குப் பரிகாரமாக நமது சாத்திரங்கள் ஆறுவகையான தியாகங்களைச் செய்யப் பகர்கின்றன.
1.  பிரம்மயக்ஞம் அல்லது பிரம்மதுக்குச் சமர்ப்பித்தல்
2.  வேத அத்யயனம்  அல்லது வேத பராயணம்
3.  பித்ரு யக்ஞம் - மூதாதையர்களுக்குச் சமர்ப்பித்தல்
4.  தேவ யக்ஞம் - தேவதைகளுக்குச் சமர்ப்பித்தல்
5.  பூத யக்ஞம் - ஜந்துக்களுக்குச் சமர்ப்பித்தல் 
6.  மனுஷ்ய அதிதி யக்ஞம் - மனிதர்களுக்கும்
     அழைக்கப்படாத விருதாளிகளுக்கும் சமர்ப்பித்தல்

சாஸ்திரப்படி இந்தத் தியாகங்களை முறையாக அனுசரித்தால் மனத்தூய்மை பெற்று, ஞானமும், தன்னையுணர்தலையும் பெற உதவும்.  பாபா வீட்டுக்கு வீடு சென்றதன் மூலம் இல்லறத்தார்க்கு அவர்களின் புனிதக்கடமையை ஞாபகப்படுத்தினார்.  பாபாவால் தங்கள் வீட்டிலேயே இங்ஙனம் பாடம் கற்பிக்கப்பட்டவர்கள் பேறுபெற்ற மக்கள் ஆவார்கள்.



பக்தர்களின் அனுபவங்கள்

இன்னும் அதிக விருவிருப்புள்ள விஷயத்துக்குத் தற்போது திரும்புவோம்.  கிருஷ்ண பரமாத்மா, பகவத்கீதையில் "அன்புடனும், பக்தியுடனும் யாரொருவர் எனக்கு ஓர் இலை, மலர், பழம், அல்லது நீரை சமர்ப்பிக்கிறாரோ, அந்தத் தூய்மையான தன்னடக்கமுடைய அன்புக்காணிக்கையானது ஆர்வத்துடனும், தாமதமின்றியும் என்னால் ஏற்றுக்கொள்ளபடுகிறது" என்று கூறியிருக்கின்றார்.

சாயிபாபாவின் விஷயத்தில் ஓர் பக்தர் உண்மையிலேயே எதையாவது சமர்ப்பிக்க விரும்பியிருந்து, பின்னால் அதையே சமர்ப்பிக்க அவர் மறைந்துவிட்டாரெனினும், பாபா அவருக்கு அல்லது அவரது நண்பருக்கு அந்தக் காணிக்கையை ஞாபகப்படுத்தி, அவரை அளிக்கச்செய்து, அதை ஏற்றுக்கொண்டு பக்தரை ஆசீர்வதிக்கிறார்.  இதுபோன்ற சில நிகழ்சிகள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.  



தர்கட் குடும்பம் (தந்தையும் மகனும்)

முன்னர், பிரார்த்தனா சமாஜத்தைச் சேர்ந்த ராமச்சந்திர ஆத்மாராம் என்னும் பாபா சாஹேப் தர்கட் சாயிபாபாவின் ஓர் உறுதியான பக்தர் ஆவார்.  அவருடைய மனைவியும், மகனும் சாயிபாவிடம் அதற்கு இணையாகவே அல்லது இன்னும் சற்று அதிகமாகவே கூட அன்பு செலுத்தினர்.  ஒருமுறை திருமதி தர்கட்டும், அவர்களது மகன் தர்கட்டும் மே மாத விடுமுறைக்கு ஷீர்டிக்குப் போவது எனத் தீர்மானிக்கப்பட்டது.  ஆனால் மகன் போக விரும்பவில்லை.  காரணம் அவன் பாந்த்ரா வீட்டைவிட்டுப் போவானாகில் வீட்டில் சாயிபாபாவின் பூஜை முறையாகக் கவனிக்கப்படமாட்டாது என்று அவன் கருதியதேயாகும்.  ஏனெனில், அவனது தகப்பனார் பிரார்த்தனா சமாஜத்தைச் சேர்ந்தவராதலால் சாயிபாபாவின் பெரிய படத்தைப் பூஜை செய்வதை அவர் இலட்சியம் செய்யமாட்டார் என்று அவன் கருதினான்.  எனினும் தனது மகன் செய்வதைப்போன்று அதே விதமாக, தான் பூஜா கர்மங்களைச் செய்வதாக அவர் உறுதியாக வாக்களித்த பின்பு ஒரு வெள்ளிக்கிழமை இரவு தாயும், மகனும் ஷீர்டிக்குப் புறப்பட்டனர். 

அடுத்த நாள் (சனிக்கிழமை) தர்கட் அதிகாலையில் எழுந்திருந்து பூஜை செய்வதற்குமுன் நீராடிவிட்டுப் பூஜை அறையில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, "பாபா, எனது மகன் செய்த அதேமாதிரியாக நான் பூஜை செய்யப்போகிறேன்.  ஆனால் தயவுசெய்து அதை ஒரு இயந்திரகதியான பயிற்சியாக ஆக்கிவிடாதீர்கள்", என்று கூறிக்கொண்டே பூஜை செய்து, சில கற்கண்டுகளை நைவேத்தியமாகச் சமர்ப்பித்தார்.  அக்கற்கண்டு பகல் உணவின்போது பகிர்ந்தளிக்கப்பட்டது.  

அந்நாள் மாலையும், அதன்பின்னர் ஞாயிற்றுக்கிழமையும் எல்லாம் நலமாகவே நடந்தேறின.  தொடர்ந்து வேலைநாளான திங்கட்கிழமையும் நன்றாகவே கழிந்தது.  தனது வாழ்நாளிலேயே இம்மாதிரியாகப் பூஜை செய்தறியாத தர்கட் தன மகனுக்கு வாக்களித்தபடி எல்லாம் மிகவும் திருப்திகரமானமுறையிலேயே நடந்தேறிக்கொண்டிருப்பதில் தனக்குள்ளேயே பெருமளவு நம்பிக்கை பெற்றார்.  அடுத்த நாளான செவ்வாயன்று வழக்கம்போல் காலையில் பூஜை நிகழ்த்தியபின் தனது வேலைக்குச் சென்றார்.  மதியம் வீட்டுக்கு வந்து உணவு பரிமாறப்பட்டபோது, பகிர்ந்துகொள்ள கற்கண்டு பிரசாதம் இல்லாததைக் கண்டார்.  அவர் தமது சமையல்காரனை விசாரித்ததில், காலையில் எவ்வித நைவேத்யமும் செய்யப்படவில்லை என்று அறிந்தார்.  பூஜையின் அந்த அம்சத்தை நிகழ்த்த அவர் அடியோடு மறந்துவிட்டிருந்தார்.  இதுகுறித்து தனது இருக்கையைவிட்டு எழுந்திருந்து பூஜையறையில் விழுந்து வணங்கி, தமது தவறுதலுக்காக வருத்தம் தெரிவித்து, அதே நேரத்தில் இத்தகைய ஒரு சாதாரணமான நடைமுறை விஷயத்தில் வழிகாட்டாததற்காக பாபாவை அவர் கடிந்துகொண்டார்.  பின்பு தனது மகனுக்கு உண்மைகளைக்கூறி ஒரு கடிதம் எழுதி அதை பாபாவின் பாதத்தடியில் வைத்து புறக்கணிப்பிற்காகத் தம்மைப் பொறுத்தருளவும் வேண்டுமாறு எழுதியிருந்தார்.  செவ்வாய்க்கிழமை மதியத்தில் பாந்த்ராவில் இது நிகழ்ந்தது.  

ஏறக்குறைய இதே நேரத்தில் ஷீர்டியில் மத்தியான தீபாராதனை நிகழ்வதற்குச் சிறிது முன்பாக பாபா திருமதி கர்கட்டை நோக்கி, "அம்மா, பாந்த்ராவில் உள்ள உனது வீட்டிற்கு ஏதேனும் உண்ணலாம் என்ற எண்ணத்துடன் சென்றிருந்தேன்.  கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டேன்.  எப்படியோ உள்ளே நுழைந்து, பாவ் (தர்கட்), நான் உண்பதற்கு ஏதும் விட்டுவைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் அறிந்தேன்.  எனவே பசி தணிக்கப்படாமலேயே திரும்பிவிட்டேன்", என்று கூறினார்.

அப்பெண்மணிக்கு இது ஒன்றும் புரியவில்லை.  அருகிலிருந்த மகனோ அதாவது பாந்த்ராவில் பூஜைஜில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்று அனைத்தையும் புரிந்துகொண்டு, வீடு திரும்ப பாபாவின் அனுமதியை வேண்டினான்.  பாபா இதை மறுத்தார்.  எனினும் அங்கேயே அப்பையனைப் பூஜைசெய்ய அனுமதித்தார்.  அப்போது ஷீர்டியில் நிகழ்ந்த விபரங்களையெல்லாம் பற்றி பையன், தகப்பனாருக்கு ஒரு கடிதம் எழுதி, வீட்டில் பூஜையை அலட்சியம் செய்யவேண்டாமென்று மன்றாடி வேண்டியிருந்தான்.  இரண்டு கடிதங்களும் ஒன்றையொன்று தாண்டிப்போய் இருவருக்குமே அடுத்தநாள் கிடைத்தன.  இது ஓர் அற்புதமல்லவா?



திருமதி தர்கட்

தற்போது திருமதி தர்கட்டின் நிகழ்ச்சியை எடுத்துக்கொள்வோம்.  அவள் மூன்று பொருட்களைச் சமர்ப்பித்தாள்.  அதாவது, (1) பரீத் (கத்தரிக்காய் தயிர் பச்சடி), (2) காச்சர்யா (முழு கத்தரிக்காய் பொரியல்), (3) பேடா (பால் கேக்).  இவற்றை பாபா எங்கனம் ஏற்றுக்கொண்டார் என்பதைப் பார்ப்போம்.

ஒருமுறை பாபாவின் பெரும் பக்தரான, பாந்த்ராவைச் சேர்ந்த ரகுவீர் பாஸ்கர் புரந்தரே என்பவர் ஷீர்டிக்கு தன் குடும்பத்துடன் புறப்பட்டார்.  பாந்த்ராவில் திருமதி புரந்தரேயிடம், திருமதி தர்கட் சென்று, அவளுக்கு இரண்டு கத்தரிக்காய்கள் அளித்து, ஷீர்டியில் ஒரு கத்தரிக்காயில் பரீத்தும், மற்றதில் காச்சர்யாவும் செய்து, பாபாவுக்கு அவற்றைப் பரிமாறும்படி கூறியிருந்தாள்.  ஷீர்டியை அடைந்தபின்னர், திருமதி புரந்தரே தனது பரீத்துடன் மசூதிக்குச் சென்ற அதே தருணத்தில், பாபா தமது சாப்பாட்டிற்காக அமர்ந்து கொண்டிருந்தார்.  பாபா, பரீத் மிகவும் ருசியாக இருப்பதைக் கண்டார்.  எனவே அதை அவர் அனைவருக்கும் பகிர்ந்தளித்துத் தனக்கு இப்போது காச்சர்யா வேண்டுமெனக் கூறினார்.

ராதாகிருஷ்ணமாயிக்கு, பாபா காச்சர்யாக்கள் வேண்டுகிறார் என்ற செய்தி அனுப்பப்பட்டது.  அது கத்தரிக்காய் சீசன் இல்லையாதலால் அவள் குழப்பமடைந்தாள்.  கத்தரிக்காயை எப்படிப் பெறுவது என்பதே தற்போதைய பிரச்சினை.  பரீத்தை யார் கொண்டுவந்தார் என்று விசாரித்ததில் காச்சர்யா பரிமாறும் பணியிலும் திருமதி புரந்தரே ஒப்புவிக்கப்பட்டிருந்தாள் என அறியப்பட்டது.  காச்சர்யாவைப் பற்றியா பாபாவின் வேண்டுதலின் உட்குறிப்பை அனைவரும் புரிந்துகொண்டனர்.  எங்கும் வியாபித்திருக்கும் அவர்தம் ஞானத்தைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் செயலிழந்தனர்.

1915ஆம் வருடம் மார்கழி மாதத்தில் கோவிந்த் பாலாராம் மாநகர் என்பவன் தனது தந்தையின் திவசங்களையெல்லாம் செய்வதற்காக, ஷீர்டிக்குச் செல்ல விரும்பினான்.  புறப்படுவதற்குமுன் திருமதி தர்கட்டைப் பார்க்க வந்தான்.

அப்போது பாபாவுக்கு ஏதேனும் கொடுத்தனுப்ப வேண்டுமென்று திருமதி தர்கட் நினைத்தாள்.  வீடு அனைத்திலும் தேடியும் முன்னமே நைவேத்தியமாக அளிக்கப்பட்டிருந்த பேடா ஒன்றைத் தவிர வேறெதையும் அவள் காணவில்லை.  பையன் கோவிந்த் மிகவும் துயர் கொண்ட நிலையில் இருந்தான்.  எனினும் பாபாவிடம் கொண்டுள்ள பெரும் பக்தியின் காரணமாக அவனிடம் பேடாவைக் கொடுத்து அனுப்பினாள்.  பாபா அதனை ஏற்றுக்கொள்வார் என நம்பினாள்.  

கோவிந்த் ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் கண்டான்.  ஆனால் பேடாவைத் தன்னுடன் எடுத்துச் செல்ல மறந்துவிட்டான்.  பாபா பொறுத்திருந்தார்.  மறுபடியும் மாலையில் சென்றபோதும் பேடாவைக் கொண்டுசெல்லாமல் வெறுங்கையுடன் சென்றான்.  பாபா இதற்குமேல் பொறுக்க இயலாதவராய், "எனக்கு நீ என்ன கொண்டுவந்திருக்கிறாய்", என்று கேட்டார்.  "ஒன்றுமில்லை" என்று பதில் வந்தது.   மீண்டும் பாபா அவனைக் கேட்டார்.  அதே பதில்தான் அளிக்கப்பட்டது.  பின்னர் பாபா, "நீ புறப்படும்போது அம்மா உன்னிடம் எனக்காக இனிப்புப் பலகாரம் கொடுக்கவில்லையா?", என்ற குறிப்பான வினாவொன்று கேட்டார்.  உடனே பையனுக்கு எல்லாம் நினைவு வந்தது.  வெட்கமடைந்து பாபாவிடம் தன்னை மன்னிக்க வேண்டிக்கொண்டு தான் பாபாவிடம் இருந்த இடத்திற்கு ஓடிப்போய் பேடாவைக் கொண்டுவந்து பாபாவிடம் கொடுத்தான்.  கையில் அதைப் பெற்றவுடனேயே, பாபா வாயிலிட்டுப் பேராவலுடன் விழுங்கிவிட்டார்.  இவ்வாறாகத் திருமதி தர்கட்டின் பக்தி கண்டுணரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.  "மனிதர் எவ்விதம் என்னை நம்புகிறார்களோ, அவ்விதமே நான் அவர்களை ஏற்றுக்கொள்கிறேன்" (கீதை அத். 4, ஸ்லோகம் 11) என்பது இந்நிகழ்ச்சியால் நிரூபிக்கப்பட்டது. 



பாபா எவ்வாறு திருப்தியுடன் உண்பிக்கப்பட்டார்?

ஒருமுறை திருமதி தர்கட் ஷீர்டியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்தார்.  மதியஉணவு தயாராகி பதார்த்தங்கள் எல்லாம் பரிமாறப்படும்போது பசியுள்ள ஒரு நாய் அங்குவந்து குரைக்கத் தொடங்கியது.  திருமதி தர்கட் உடனே எழுந்திருந்து ஒரு ரொட்டித்துண்டை விட்டெறியவும், அது மிகுந்த சுவையுணர்வோடு அதைக்கவ்வி விரைவாக விழுங்கிவிட்டது.  பிற்பகல் அவள் மசூதிக்குச் சென்று சிறிது தூரத்தில் அமர்ந்தபோது சாயிபாபா அவளிடம், "அம்மா நான் பெருமளவு திருப்தியுறும் வகையில் எனது பிராணன்கள் யாவும் நிறைவுபெற்றன.  இவ்விதமாக எப்போதுமே நடப்பாயாக.  இது உன்னை நன்னிலையில் வைக்கும்.  இம்மசூதியில் அமர்ந்துகொண்டு பொய் பேசவே மாட்டேன்.  என்னிடம் இவ்விதமாக இரக்கங்கொள்வாய்.

முதலில் பசியாய் இருப்போர்க்கு உணவு கொடுத்து, பின் நீ உண்பாயாக.  இதை நன்றாகக் கவனித்துக்கொள்", என்று கூறினார்.  முதலில் அவளால் அதன் பொருளை உணர இயலவில்லை.  எனவே அவள், "எங்ஙனம் நான் தங்களுக்கு உணவு அளித்திருக்க முடியும்?  நானே உணவுக்கு மற்றவர்களைச் சார்ந்து பணம் கொடுத்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்", எனக் கூறினாள்.  இதற்கு பாபா, "அந்த கவர்ச்சிமிகு ரொட்டியை உண்டு நான் மனப்பூர்வமாகத் திருப்தியடைந்தேன்.  நான் இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன்.  உணவு வேலைக்கு முன்னர் நீ பார்த்து ரொட்டி அளித்த நாயானது என்னுடன் ஒன்றியதாகும்.  இவ்வாறாகவே மற்ற உயிரினங்களும் (பூனைகள், பன்றிகள், ஈக்கள், பசுக்கள் முதலியன) என்னுடன் ஒன்றானவைகளாகும்.  நான் அவைகளின் உருவத்தில் உலாவிக் கொண்டிருக்கிறேன்.  என்னை இவ்வனைத்துப் படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு உகந்தவன்.  எனவே த்வைதத்தையும், பேதத்தையும் ஒழித்து இன்று செய்ததைப்போல் எனக்குச் சேவை செய்", என்று கூறினார்.  இவ்வமிர்தத்தினை நிகர் மொழிகளைக் கேட்டு அவள் உருகி, அவளது கண்கள் பனித்து, தொண்டை அடைத்து அவளது மகிழ்ச்சி எல்லையற்றதாக ஆகியது.



நீதி

'கடவுளை எல்லாப் படைப்புயிர்களிலும் காண்பாயாக' என்பதே இவ்வத்தியாயத்தின் நீதியாகும்.  உபநிஷதங்கள், பகவத்கீதை, பாகவதம் இவைகளெல்லாம் ஜீவராசிகள் அனைத்திலும் கடவுள் அல்லது தெய்வீகத்தைக் காணும்படியாகவே வற்புறுத்தி அறிவுறுத்துகின்றன.  இவ்வத்தியாயத்தின் முடிவில் சொல்லப்பட்ட நிகழ்சியாலும் இன்னும் பல சந்தர்ப்பங்களிலும், உபநிஷத போதனைகளை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது என்று சாயிபாபா விளக்கிக் காட்டியிருக்கிறார்.  இவ்வாறாக சாயிபாபா உபநிஷத்தின் விரிவுரையாளராக அல்லது குருவாக இருந்தருளினார்.  

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்
 

Thursday, 9 February 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 8

•  மானிடப் பிறவியின் சிறப்பு 
•  சாயிபாபா உணவுப் பிச்சையெடுத்தல்
•  பாயஜாபாயின் சேவை
•  சாயிபாபாவின் படுக்கை
•  குஷால்சந்திடம் அவருக்கு உள்ள பிரேமை 


இப்போது முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளபடியே மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தைப்பற்றி ஹேமத்பந்த் பலப்படக் கூறிய பின்பு, சாயிபாபா அவரது உணவை எங்கனம் இரந்தார்,  எவ்வாறு   பாயஜாபாயி அவருக்குச் சேவை செய்தார்,  எவ்வாறு அவர் மசூதியில் தாத்யா கோதே பாடீலுடனும், மகல்ஸாபதியுடனும் உறங்கினார்,  எவ்வாறு ராஹாதாவைச் சேர்ந்த குஷால்சந்த்தை விரும்பினார் என்பவைகளை விளக்கிச் சொல்லுகிறார்.


மானிடப் பிறவியின் சிறப்பு

இவ்வியத்தகு பிரபஞ்சத்தில் கடவுள் பல கோடிக்கணக்கான (இந்து சாஸ்திர கணக்குப்படி 84  இலட்சம் விதமான) மோட்சம், நரகம், நிலம், கடல், வானம், இடைப்பகுதிகள் ஆகியவைகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் ஜீவராசிகளை (மனிதர்கள், மிருகங்கள், பூச்சிகள், தேவர்கள், உபதேவதைகள் உட்பட) சிருஷ்டி செய்திருக்கிறார்.  எவருடைய புண்ணியங்கள் மேம்படுகிறதோ அவர்கள், தங்களின் செய்கைகளின் பலன்களை மகிழ்ந்து அனுபவிக்கும்தோறும் மோட்சத்திற்கு சென்று வாழ்கிறார்கள்.  அது முடிந்தபிறகு அவர்கள் கீழேயிறங்கி வருகிறார்கள்.

தீமைகள், பாவங்கள் அதிகமுள்ள ஆத்மாக்களோ நரகத்திற்குச் சென்று, தாங்கள் துகுதியுள்ளதோறும், தங்கள் தீவினைகளின் பலன்களை அனுபவித்து அவதியுறுகிறார்கள்.  நல்வினை, தீவினை இரண்டும் சம அளவாய் இருப்பின், அவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறக்கின்றனர்.  தங்களது சுயமான முக்திக்கு உழைக்கும் முயற்சிக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தரப்படுகிறார்கள்.  முடிவாகத் தமது நல்வினை, தீவினை இரண்டுமே முழுமையாக அகற்றப்படும்போது அவர்கள் சுதந்திரமடைந்து விடுவிக்கப்பட்டவர்களாகிறார்கள்.  இரத்தினச் சுருக்கமாக உரைத்தால், அவரவர்களின் செய்கைககளுக்கும், நுண்ணறிவு, மனப்பண்பாட்டிற்கேற்பப் பிறவிகளைப் பெறுகிறார்கள்.  



மானிட உடம்பின் தனிச்சிறப்பு

நாமனைவரும் அறிந்தபடியாக சர்வஜீவராசிகளுக்கும் நான்கு விஷயங்கள் பொதுவானதாகும்.  அதாவது உணவு, உடை, பயம், புணர்ச்சி முதலியவை ஆகும்.  மனிதனுடைய விஷயத்தில் அவன் ஒரு சிறப்பான சாமர்த்தியத்துடன் இயற்கையாகவே ஆக்கப்பட்டிருக்கிறான்.  அதாவது மற்றெல்லாப் பிறப்பாலும் அடையப்பட இயலாத ஞானத்தின் மூலம் அவன் கடவுளின் காட்சியைப் பெறலாம்.  இக்காரணத்திற்காகவே தேவர்கள், மனிதனது உரிமையை (நிலைமையை) குறித்துப் பொறாமைப்படுகிறார்கள்.  தாங்கள் முடிவான விடுதலையைப் பெறுவதற்காக, மானுடர்களாய்ப் பிறப்பதற்கு ஆவல்கொள்கிறார்கள்

கேவலமான அழுக்கு, சளி, கோழை, அசுத்தம், இவைகளால் நிரம்பியதும் தேய்வு, நோய், மரணம் ஆகியவற்றிற்குக் காரணமாய் உள்ளதுமான இம்மனித உடம்பைவிடக் கேவலமானது எதுவும் இல்லை என்று சிலர் கூறுகின்றனர்.  இது ஓரளவிற்கு உண்மை என்பதில் ஐயமில்லை.  இவ்வாறான குற்றம், குறைகள் இருப்பினும், இம்மனித உடம்பின் சிறப்பான மதிப்பு யாதெனில், ஞானத்தை அடைய மனிதனுக்கு ஆற்றல் இருக்கிறது என்பதேயாம்.

மனித உடம்பினால் மட்டுமே அல்லது அதன்பொருட்டே அழியக்கூடிய நிலையில்லாத உடம்பின் தன்மையைப்பற்றியும், இவ்வுலகத்தைப் பற்றியும், புலன் இன்பங்களின்மீது வெறுப்பையும், நித்ய-அநித்ய வஸ்துக்களைப் பகுத்தறியும் விவேகத்தையும், இங்ஙனமாக அதன் மூலம் கடவுள் காட்சியையும் ஒருவன் எய்த இயலுகிறது.  அதன் அசுத்தத் தன்மைக்காக நாம் உடம்பைப் புறக்கணித்தோமானால், கடவுள் காட்சியைப் பெறும் வாய்ப்பை இழக்கிறோம்.  அதையே சீராட்டி புலன் இன்பங்களின் பின்னால் ஓடுவோமானால் அது விலை மதிப்பற்றதாகையால் நாம் நரகிடை வீழ்வோம்.  எனவே, நாம் பின்பற்றவேண்டிய ஒழுங்கான நெறிமுறையானது பின்வருமாறு:

"உடம்பைப் புறக்கணிக்கவோ, விரும்பிச் செல்லமாக பராமரிக்கவோ கூடாது.  ஆனால் முறையாகப் பராமரிக்க வேண்டும்.  குதிரையில் சவாரி செய்யும் ஓர் வழிப்பயணி, தான் போகுமிடத்தை அடைந்து வீடு திரும்பும்வரைக்கும் தனது குதிரையை எவ்வாறு பராமரிக்கிறானோ, அதையொப்ப இவ்வுடம்பைப் பராமரிக்கவேண்டும்.  இவ்வுடம்பு இவ்விதமாக எப்போதும் வாழ்க்கையின் உச்ச உயர் நோக்கமான கடவுள்-காட்சி அல்லது ஆத்மானுபூதியை அடையவே உபயோகப்படுத்தப்பட வேண்டும்".

பல்வேறு ஜீவராசிகளையும் கடவுள் படைத்தார்.  எனினும், அவைகளில் எதுவும் அவர்தம் வேலையை அறிந்து பாராட்ட இயலாததனால் அவர் திருப்தியடையவில்லை.

எனவே அவர் ஒரு சிறப்பான சாமர்த்தியமுள்ள ஜந்துவாக மனிதனைப் படைக்கவேண்டியதாயிற்று.  'ஞானம்' என்னும் சிறந்த வரத்தையும் அளித்தார்.  அவரின் லீலையையும், அற்புதமான வேலையையும், சாதுர்யத்தையும் மனிதன் பாராட்ட இயன்றபோது அவர் பெரிதும் மகிழ்ந்து திருப்தியடைந்தார்.  (ஸ்ரீமத் பாகவதம் 11:9:28)  இம்மானிட தேகம் எடுத்தது உண்மையிலேயே நல்ல அதிஷ்டமாகும்.  அந்தணர் குலத்தில் உதிப்பது அதைக் காட்டிலும் நற்பேறுடையது.  அதைக் காட்டிலும் மிகச்சிறப்பான அதிஷ்டமானது சாயிபாபாவின் பாதங்களில் தஞ்சமடைந்து, சரணாகதி அடையும் வாய்ப்பைப் பெற்றதேயாகும்.


மனிதனின் முயற்சி 

மனித வாழ்க்கை எவ்வளவு அருமையானதென்று உணர்ந்து, மரணம் உறுதி என்றறிந்து, அது எத்தருணத்திலும் நம்மைப் பற்றும் என்றறிந்து, நமது வாழ்க்கையின் குறிக்கோளை அடைய கூடியவரை விரைவாகச் செயல்படவேண்டும்.  அதாவது மனைவியை இழந்தவன் மறுமணம் புரிந்துகொள்ளக் கொண்டுள்ள மிகுதியான அக்கறை போன்றும், காணாமற்போன தன் மகனை, அரசன் சல்லடை போட்டுத் தேடுவது போன்றும் இருக்கவேண்டும்.  எனவே நமது இலக்கை எய்த நம்மிடத்திலுள்ள முழு ஊக்கத்துடனும், வேகத்துடனும் நாம் பாடுபட வேண்டும்.  அதாவது 'தன்னை உணர்தல்'.  நமது சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு தூக்கத்தைக் களைந்து அல்லும், பகலும் ஆத்மஞானம் செய்தல் வேண்டும்.  இதைச் செய்ய நாம் தவறுவோமானால் நம்மை நாமே மிருக நிலைக்குத் தாழ்த்திக் கொண்டவர்களாவோம்.


எவ்வாறு செல்வது

கடவுள்-காட்சியைத் தாமே எய்திய தகைமையுள்ள ஞானி, முனிவர் அல்லது சத்குரு ஆகிய இவர்களை அணுகுவதே, நமது குறிக்கோளை அடைய மிகச்சிறந்த பயன் அளிக்கக்கூடியதும், துரிதமுமான வழியாகும்.  மதப் பிரசங்கங்களைக் கேட்டும், மத நூல்களைக் கற்றும் அடைய முடியாதவைகளை அம்மதிப்புமிக்க ஆன்மாக்களின் கூட்டுறவால் பெறலாம்.  சூரியன் மட்டுமே கொடுக்கும் ஒளியை, மற்றெல்லா நட்ச்சந்திரங்களும் சேர்ந்தாலும் கொடுக்க இயலாததைப் போன்றே, புனித நூல்கள் அனைத்தும், மதப்பிரசங்கங்கள் அனைத்தும் சேர்ந்து கொடுக்க இயலாத ஆத்மா விவேகத்தை சத்குரு நமக்கு அளிக்கிறார்.

அவரின் அசைவுகளும் சாதாரணப் பேச்சும் நமக்கு மௌன உபதேசத்தை நல்குகின்றது.  மன்னித்தல், அடக்கம் உடைமை, அவாவின்மை, தர்மம், உதாரணகுணம், மனம் - மெய் இவற்றின் கட்டுப்பாடு, அஹங்காரமற்ற தன்மை முதலிய நற்பண்புகளெல்லாம் அத்தகைய தூய புனிதமான கூட்டுறவால் பயிற்சிக்கப்பட்டு அடியவர்களால் அனுசரிக்கப்படுகின்றன.  இது அவர்களது மனதை ஒளிப்படுத்தி, ஞானத்தை நல்கி, தன்னையுணரச்செய்கிறது.  சாயிபாபா அத்தகைய முன்னேற்றத்தை அருளும் 'ஞானி' அல்லது 'சத்குரு' ஆவார்.  பக்கிரியைப் (இரவலர்) போன்று அவர் நடித்தாலும், எப்போதும் ஆத்மாவிலேயே முற்றிலும் தன்வயப்பட்டிருந்தார்.  கடவுள் அல்லது தெய்வத்தன்மையை சர்வ ஜீவராசிகளும் கண்டு, அவைகளை அவர் எப்போதும் அன்பு செய்தார்.  இன்பங்களால் அவர் உயரவுமில்லை, துரதிஷ்டங்களால் தாழ்ச்சியுறவுமில்லை.  அரசனும், ஆண்டியும் அவருக்கு ஒன்றே.  எவருடைய கடைக்கண் பார்வை, பிச்சைக்காரனையும் அரசனாக்க வல்லதோ, அவர் ஷீர்டியில் வீட்டுக்கு வீடு சென்று உணவை யாசிப்பது வழக்கம்.  அதை அவர் எப்படிச் செய்தார் என்று இப்போது கவனிப்போம்.  


பாபா உணவை இரத்தல்

பாபா, எந்த ஷீர்டி மக்களின் வீடுகள் முன்னர் ஒரு பிச்சைக்காரனைப் போல் நின்று, "ஓ! லாசி(அம்மா), ஒரு ரொட்டித்துண்டு கொடு" என்று கூவி அப்பிச்சையை ஏற்கத் தம் திருக்கரங்களை நீட்டி அருளினாரோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

அவர் ஒரு கையில் தகரக் குவளையும், மற்றொன்றில் ஸோலி என்ற சதுரத் துண்டும் வைத்திருந்தார்.  தினந்தோறும் சில குறிப்பிட்ட வீடுகளுக்கும், ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கும் பிச்சையெடுக்கச் சென்றார்.  திரவ ஆகாரமான சூப், காய்கறிகள், பால், மோர் முதலியவற்றை தகரக் குவளையிலும், சோறு, ரொட்டி முதலிய திடப் பொருட்களை துண்டிலும் வாங்கிக்கொண்டார்.  பாபாவுக்கு தம் நாவுமேல் கட்டுப்பாடு உண்டாதலால் அது சுவையறிவதில்லை.  எனவே பல்வேறு பொருட்களை ஒன்றுகூட்டிய ருசியை எங்ஙனம் அவர் பொருட்படுத்த முடியும்.  துண்டிலும், தகரக் குவளையிலும் கொண்டுவரப்பட்ட எல்லா உணவுப் பொருட்களும் ஒன்று கலக்கப்பட்டு பாபாவால் அவர் மனம் நிறைவெய்தும் வண்ணம் பகிர்ந்து உட்கொள்ளப்பட்டது.  சில குறிப்பிட்ட பதார்த்தங்கள் சுவையானவையாகவோ, மாறாகவோ இருப்பினும், பாபா தமது நாக்கு முழுதும் சுவையுணர்வையே இழந்துவிட்டதைப் போலக் கவனிப்பதே இல்லை.

பாபா மதியம்வரை பிச்சையெடுத்தார்.  ஆனால் பிச்சையெடுப்பது மிகவும் நியதியில்லாதிருந்தது.  சில நாட்களில் சில சுற்றுக்களே சென்றார்.  சில நாட்களில் பகல் பன்னிரண்டு மணிவரையும் எடுத்தார்.  இவ்வாறு சேர்க்கப்பட்ட உணவு, ஒரு சட்டியில் கொட்டப்பட்டது.  நாய்களும், காக்கைகளும், பூனைகளும் அதிலிருந்து தாராளமாக சாப்பிட்டன.  பாபா அவைகளை விரட்டியதே இல்லை.  மசூதியைப் பெருக்கிய பெண்மணி பத்து அல்லது பன்னிரண்டு ரொட்டித் துண்டுகளைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள்.  அவள் அங்ஙனம் செய்வதை யாரும் தடை செய்யவில்லை.  கனவில் கூடப் பூனைகளையும், நாய்களையும் கடுஞ்சொற்களாலோ, ஜாடைகளாலோ விரட்டியறியாத அவர், எங்ஙனம் ஏழ்மையான திக்கற்ற மக்களுக்கு உணவை மறுக்க இயலும்?  அத்தகைய உயர் குணமுடையவரின் வாழ்க்கை உண்மையிலேயே ஆசிகள் நிரம்பப்பெற்றதாகும்.

ஷீர்டி மக்கள் அவரை ஆரம்ப காலத்தில் ஒரு கேனைப் பக்கிரியாகக் கருதினர்.  இப்பெயராலேயே அவர் அறியப்பட்டார்.  இரந்த பிச்சையான சில ரொட்டித்துண்டுகளை உண்டு வாழ்ந்த அவர் எங்ஙனம் மதிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட முடியும்.  ஆனால் இந்தப் பக்கிரியோ உள்ளத்திலும், கையிலும் மிகவும் தாராளமானவராகவும், அவாவற்றவராகவும், தர்ம சிந்தையுடையவராகவும் இருந்தார்.  ஸ்திரமில்லாதவராயும், இருப்புக்கொள்ளாதவராயும் புறத்தில் தோன்றினாலும் அகத்தில் உறுதியுள்ளவராயும், நிதானம் உள்ளவராயும் இருந்தார்.  அவருடைய வழியோ அறிவுக்கெட்டாதது.  எனினும் அச்சிறு கிராமத்தில்கூட அன்பும், ஆசீர்வாதமும் உள்ள சிலர் பாபாவை பரமாத்மா என்றே உணர்ந்து மதித்தனர்.  அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி கீழே தரப்பட்டுள்ளது.


பாயஜாபாயின் உன்னத சேவை

தாத்யா கோதே பாடீலின் தாயார் பாயஜாபாயி ஆவார்.  அவர் தினந்தோறும் மதியம் ரொட்டியும், காய்கறிகளும் அடங்கிய கூடையை தன் தலையில் வைத்துக்கொண்டு காடுகளுக்குப் போவது வழக்கம்.  புதர், பூண்டுகளில் பல மைல் கணக்கில் அவ்வம்மையார் அலைந்து திரிந்து கேனைப் பக்கிரியைக் கண்டுபிடித்து, அவர் பாதத்தில் வீழ்ந்து, அடக்கமாகவும், அசைவில்லாமலும் தியானத்தில் அமர்ந்திருக்கும் அவர் முன்னர் இலையை விரித்து ரொட்டி, காய்கறிகள் மற்ற உணவுப் பொருட்கள் முதலியவற்றை அதன்மேல் வைத்து அவரை பலவந்தமாக உண்பித்தார்.  பாயஜாபாயின் நம்பிக்கையும், சேவையும் வியக்கத்தக்கதாகும்.  ஒவ்வொரு நாளும் அவர் காட்டில் மதிய வேளைகளில் அலைந்து திரிந்து, உணவை உண்ணும்படி பாபாவை வற்புறுத்தினார்.

அவருடைய சேவை, உபாசனை, தவம் என்று எவ்விதப் பெயரிட்டு அதை நாம் அழைத்தாலும், இறுதி மூச்சு வரையிலும் பாபா அதனை மறக்கவில்லை.  அவர் செய்த சேவையை முழுமையும் ஞாபகத்தில்கொண்ட பாபா, அவரது மகனுக்கு அபாரமான அளவிற்கு உதவிசெய்தார்.  தாய்க்கும், மகனுக்கும் அவர்களது கடவுளான பக்கிரியின் மீது பெருமளவிற்கு நம்பிக்கை இருந்தது.  பாபா அவர்களிடம் அடிக்கடி, "ஆண்டித்தனமே உண்மையான பிரபுத் தன்மையாகும்.  ஏனெனில், அது எப்போதும் நிலைத்திருக்கிறது.  புகழ்பெற்ற பிரபுத்தனமெல்லாம் (செல்வமெல்லாம்) நிலையற்றவை" என்று கூறுவார்.   சில ஆண்டுகளுக்குப் பின்னால் பாபா காட்டுக்குப் போவதை விட்டுவிட்டு கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார்.  தமது உணவை மசூதியிலேயே உட்கொள்ளத் தொடங்கினார்.  அதிலிருந்து பாயஜாபாஜின் காடுகளில் சுற்றி அலையும் தொந்தரவுகள் முற்றுப்பெற்றன.


மூவரின் படுக்கையிடம்

எவர்களின் உள்ளத்தில் வாசுதேவர் உறைகிறாரோ, அந்த ஞானிகள் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  அத்தகைய ஞானிகளின் கூட்டுறவைப் பெறும் அதிஷ்டமுடைய பக்தர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  தாத்யா கோதே பாடீல், பகத் மஹல்ஸாபதி என்ற அத்தகையான இரு அதிஷ்டசாலிகள் சாயிபாபாவின் கூட்டுறவைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர்.  பாபாவும் அவர்கள் இருவரையும் சமமாக நேசித்தார்.  இம்மூவரும் தங்கள் தலைகள் எல்லாம் கிழக்கு, மேற்கு, வடக்கு நோக்கி இருக்கும்படியும், தங்கள் கால்கள் எல்லாம் சந்திக்கும்படியும் மசூதியில் தூங்கினர்.  தங்களது படுக்கையை விரித்து அதன்மீது படுத்துக்கொண்டு பல விஷயங்களைப்பற்றி அரட்டையடித்துக்கொண்டும், வம்பு பேசிக்கொண்டும் நள்ளிரவு நெடுநேரம்வரை படுத்திருப்பர்.  

அவர்களுள் யாருக்காவது தூக்க அடையாளம் தென்பட்டால் மற்றவர்கள் அவரை எழுப்பிவிடவேண்டும்.  உதாரணமாகத் தாத்யா குறட்டைவிடத் தொடங்கினால் பாபா உடனே எழுந்திருந்து பக்கவாட்டில் அவரை அசைத்து, தலையை அழுத்தியும், மஹல்ஸாபதி அவ்வாறு தூங்கினால் அவரை நெருங்கிக் கட்டியணைத்தும், அவரது முதுகைப் பிடித்துவிட்டும், கால்களை உதைத்தும் எழுப்பிவிடுவார்.  இவ்விதமாகப் பதினான்கு முழு ஆண்டுகளும், பாபாவின் மீதுள்ள அன்பால் தனது வீட்டிலுள்ள பெற்றோரை விட்டுவிட்டுத் தாத்யா மசூதியில் தூங்கினார்.  எத்துணை மகிழ்ச்சியும், மறக்க இயலாததுமான அத்தகைய நாட்கள்!  அவ்வன்பை எவ்வாறு அளப்பது?!  பாபாவின் ஆசியை எங்ஙனம் மதிப்பிடுவது?!  தனது தந்தை காலமானதும் தாத்யா குடும்பப் பொறுப்பை ஏற்றார்.  பின்பு தமது வீட்டிலேயே தூங்க ஆரம்பித்தார்.  


ராஹதாவைச் சேர்ந்த குஷால்சந்த்

ஷீர்டியைச் சேர்ந்த கண்பத் கோதே பாடீலை பாபா விரும்பினார்.  அதற்குச் சமமாக ராஹதாவைச் சேர்ந்த சந்த்ரபன்சேட் மார்வாடியையும் விரும்பினார்.  இந்த சேட் காலமான பின்பு அவர் சகோதரர் புத்திரரான குஷால்சந்த்தை அதற்குச் சமமாக அல்லது அதற்கு அதிகமாகவே கூட அன்பு செலுத்தி, அல்லும்-பகலும் அவர் நலத்தில் கண்ணாய் இருந்தார்.  சில சமயங்களில் மாட்டு வண்டியிலோ அல்லது குதிரை வண்டியிலோ நண்பர்களுடன் பாபா ராஹாதாவிற்குச் செல்வார்.  அக்கிராமத்து மக்கள் பேண்ட் வாத்திய இசையுடன் வந்து, கிராமத்தின் நுழைவாயிலில் பாபாவை வரவேற்று, அவர் முன்னால் வீழ்ந்து வணங்குவார்கள்.  பெரும் வியப்பொலியுடனும், விழாக்கோலத்துடனும் அவர் கிராமத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.  குஷால்சந்த் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று வசதியாக ஆசனத்தில் அமர்த்தி நல்ல உணவளிப்பார்.  பின்னர் அவர்கள் சரளமாகவும், மகிழ்ச்சியுடனும் சிறிது நேரம் உரையாடியபின் அனைவர்க்கும் மகிழ்ச்சியையும், ஆசியையும் நல்கிவிட்டு பாபா ஷீர்டிக்குத் திரும்புவார்.

தெற்கே ராஹாதாவுக்கும், வடக்கே நீம்காவனுக்கும் இடையே சரியான மையப்பகுதியில் ஷீர்டி அமைந்துள்ளது.  இந்த இடங்களுக்கு அப்பால், பாபா தமது வாழ்நாளில் சென்றதில்லை.  அவர் எவ்வித ரயில் வண்டியையும் பார்த்ததோ, பிரயாணம் செய்ததோ கிடையாது.  எனினும் எல்லா வண்டிகள் வரும், புறப்படும் நேரங்கள் எல்லாம் மிகச் சரியாகவே பாபாவுக்குத் தெரியும்.  தாங்கள் பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டபோது அவரின் அறிவுரைகளின்படி நடந்தவர்கள் நன்மையடைந்தனர்.  அதை மதிக்காதவர்கள் பலவித துர்ச்சம்பவங்களுக்கும், விபத்திற்கும் உள்ளானார்கள்.  இதைப்பற்றியும் இன்னும் பல நிகழ்ச்சிகள் குறித்தும் அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

குறிப்பு: இவ்வத்தியாயத்தின் முடிவில் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி குஷால்சந்த்  மீது பாபா செலுத்திய அன்பையும், அவர் ஒருநாள் மாலை காகா சாஹேப் தீஷித்தை ராஹாதாவுக்குச் சென்று குஷால்சந்தை அழைத்து வரும்படி கூறியதும், அத்தருணத்திலேயே குஷால்சந்தின் மதியத் தூக்கத்தில் கனவில் தோன்றி ஷீர்டிக்கு வரும்படி கூறியதும், இங்கு விவரிக்கப்படவில்லை.  காரணம் பின்வரும் 30ஆம் அத்தியாயத்தில் அது விவரிக்கப்பட்டிருக்கிறது. 

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

Thursday, 2 February 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 7

•  வியத்தகு அவதாரம்
•  சாயிபாபாவின் குணாதிசயங்கள்
•  அவரின் யோகா சாதனைகள்
•  அவரின் எங்கும் நிறை தன்மை
•  குஷ்டரோக அடியவனின் சேவை
•  குழந்தை கபர்டேயின் பிளேக் வியாதி
•  பண்டரிபுரத்துக்குச் செல்லல் 


வியத்தகு அவதாரம்

சாயிபாபா எல்லாவித யோகப்பயிற்சிகளையும் அறிந்திருந்தார்.  அவர் தவ்தி (22½ அடி நீளமும், 3 அங்குல அகலமும் உள்ள நனைக்கப்பட்ட ஒரு லினன்(சணல்நார்) துணியினால் வயிறு சுத்தம் செய்தல்), கண்ட யோகம் (உடல் உறுப்புகளைத் தனியாகக் கழற்றி பின்னர் சேர்த்தல்), சமாதி உள்ளிட்ட ஆறு முறைகளிலும் கைதேர்ந்தவராக இருந்தார்.  அவரை ஒரு இந்து என்று நீங்கள் கருதுவீர்களானால், ஒரு யவனரைப் போன்று தோற்றமளித்தார்.  நீங்கள் அவரை ஒரு யவனர் என்று கருதுவீர்களானால், ஒரு சமயாசாரமுள்ள இந்துவாகத் தோற்றமளித்தார்.  அவர் ஒரு இந்துவா, முஹமதியரா என்று ஒருவரும் திட்டமாக அறிந்திருக்கவில்லை.  
இந்துக்களின் விழாவான ராமநவமியை உரிய சகல மரியாதைகளுடனும் கொண்டாடி, அதேநேரத்தில் முஹமதியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்தையும் அனுமதித்தார்.  திருவிழாக்களில் குத்துச்சண்டையை ஊக்குவித்து, வெற்றிபெற்றோர்க்குப் பரிசுகள் வழங்கினார்.  கோகுலாஷ்டமி வந்தபோது, 'கோபால்காலா' திருவிழாவை (கிருஷ்ணர் மேனியைக் கருமை நிறமாக்கும் வைபவம்) உரியமுறைப்படி செய்வித்தார்.  ஈத் திருவிழாவின்போது முஹமதியர்களைத் தங்கள் தொழுகையை (நமாஸ்) தமது மசூதியில் செய்ய அனுமதித்தார்.  ஒருமுறை மொஹரம் திருவிழாவின்போது சில முஹமதியர்கள், மசூதியில் ஒரு 'தாஸியா' அல்லது 'தாபூத்' (முஸ்லிம் ஞானியரின் பாடை உருவகம்) செய்யவும்,  அதைச் சிலநாட்கள் மசூதியில் வைத்திருந்து, கிராமத்தின் வழியாக ஊர்வலமாக எடுத்துச்சென்று புதைக்கவும் தீர்மானித்தனர்.  நான்கு நாட்களுக்கு தாபூத்தை மசூதியில் வைத்திருக்க சாயிபாபா சம்மதித்தார்.  ஐந்தாவது நாள் சிறிதளவும் தமது செயல்லுக்காக வருந்தும் தன்மையேயின்றி, மசூதியில் இருந்து அதை அப்புறப்படுத்தினார்.  நீங்கள் அவரை ஒரு முஹமதியர் என்று கூறுவீர்களானால், (இந்து மத வழக்கப்படி) காது குத்தப்படிருந்தார்.  நீங்கள் அவரை ஒரு இந்து என்று கருதுவீர்களானால், அவர் சுன்னத் கல்யாணம் செய்கிற வழக்கத்தை ஆதரித்தார்.  ஆனால் பாபாவை நெருங்கிய நானா சாஹேப் சாந்தோர்கர் கருத்துப்படி பாபாவுக்கே சுன்னத் செய்யப்படவில்லை.  

B.V. தேவ் எழுதிய 'பாபா ஹிந்து கி யவன்?' என்ற கட்டுரையை சாயிலீலா சஞ்சிகையில் (பக்கம் 562) பார்க்க.  நீங்கள் அவரை இந்து என்று அழைத்தால் எப்போதும் மசூதியில் வாழ்ந்தார்.  முஹமதியர் என்றால் துனி என்னும் அகண்ட நெருப்பை அவர் எப்போதும் மசூதியில் வைத்திருந்தார்.  மற்றும் முஹமதிய மதத்திற்கு விரோதமான பின்வரும் மூன்று பழக்கங்களையும் கொண்டிருந்தார்.  அதாவது திருக்கையில் அரைப்பது, சங்கு ஊதுவது, மணியடிப்பது, தீயில் ஆகுதி செய்தல், பஜனை, தண்ணீரால் சாயிபாபாவின் பாதத்தை அர்க்கிய வழிபாடு செய்தல் முதலியன எப்போதும் அங்கு அனுமதிக்கப்பட்டன.  நீங்கள் அவரை முஹமதியர் என்று நினைத்தால் பிராமண ஸ்ரேஷ்டர்களும், அக்னிஹோத்ரிகளும், தங்கள் வைதீகச் சம்பிரதாயத்தை விட்டிவிட்டு அவர் பாதங்களில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து பணிந்தனர்.  அவரது தேசம் முதலியவற்றை விசாரிக்கப் போனவர்கள் அவரது தரிசனத்தால், கவரப்பட்டுத் திகைத்து வாயடைத்து ஊமையானார்கள்.  

எனவே அவர் ஒரு முஹமதியரா, இந்துவா* என்பது ஒருவராலும் நிச்சயமாகத் தீர்க்க இயலாததாய் இருந்தது.  இது அதிசயம் அல்ல.  அஹங்காரத்தையும், உடல் உணர்வையும் ஒழிப்பதன் மூலம் பரமாத்மாவுடன் தன்னை முழுவதும் அர்ப்பணித்து, சரணாகதியடைந்து அவருடன் ஒன்றிவிடுபவனுக்கு ஜாதி, தேசம் என்னும் கேள்விகள் குறித்துக் கருத்திற்கொள்வதற்கு ஏதுமில்லை.  சாயிபாபாவைப் போன்ற அத்தகைய ஒருவர் ஜாதிக்குள்ளேயும், ஜந்துக்குள்ளேயும் எவ்வித வேறுபாட்டையும் காணவில்லை.  பக்கிரிகளுடன் மாமிசமும், மீனும் அவர் உண்டார்.  நாய்கள் அவைகளின் வாயால் அவ்வுணவைத் தீண்டியபோதும், அவர் அருவருப்புக் காட்டவில்லை.  

சாயிபாபா அத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த வியத்தகு அவதாரமாவார்.  முன்னர் செய்த நல்வினைகளின் காரணமாகவே நான் அவர் பாதத்தடியில் உட்காருவதற்கும், அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட நட்பை மகிழ்ந்து அனுபவிப்பதற்கும், நல்ல அதிஷ்டத்தைப் பெற்றேன்.  அதிலிருந்து நான் பெற்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும் தன்நிகர் இல்லாதவை.  உண்மையில் சாயிபாபா பரிபூரண ஆனந்தமும், உணர்வும் ஆவார்.  அவரின் உயர்வையும், தனித்தன்மைச் சிறப்பையும் போதுமான அளவிற்கு நான் விளக்க இயலாது.  அவரின் பாதாரவிந்தங்களில் ஆனந்தத்தை நுகர்பவன் அவருடையதேயான ஆத்மாவிலேயே ஸ்தாபிக்கப்படுகிறான்.  முக்தியில் ஆர்வமுள்ள பல சந்நியாசிகள், சாதகர்கள் மற்றும் எல்லாவித மக்களும் சாயிபாபாவிடம் வந்தனர்.  எப்போதும் அவர் நடந்தார், பேசினார், அவர்களுடன் சேர்ந்து சிரித்தார்.  எப்போதும் தம் நாவினால், 'அல்லா மாலிக்' (இறைவனே எஜமானர்) என மொழிந்தார்.  அவர் விவாதத்தையோ, கலகத்தையோ விரும்பவில்லை.

அவர் சிலநேரங்களில் கடுமையாக இருப்பினும் எப்போதும் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் இருந்தார்.  எப்போதும் முழு வேதாந்தத்தையும் போதித்தார்.  கடைசிவரை பாபா யார் என்பது ஒருவருக்கும் தெரியாது.  அரசர்களும், ஏழைகளும் அவர் முன் சமமாக நடத்தப்பட்டனர்.  அனைவருடைய ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிவார்.  அதை அவர் மொழிகளால் வெளியிட்டபோது அனைவரும் வியந்தனர்.  சர்வ விஞ்ஞானிகளின் கருவூலம் அவரே, எனினும் அறியாதவர்போல் நடித்தார்.  புகழை அவர் விரும்பவில்லை.  இவைகளே சாயிபாபாவின் குணாதிசயங்கள்.  அவர் மானிட உருவத்தில் இருப்பினும், அவரின் செய்கைகள் அவரது கடவுள் தன்மையை எடுத்துக்காட்டியது.  அனைவரும் அவரை ஷீர்டியில் இருக்கும் பரமாத்மா என்றே நம்பினர்.


சாயிபாபாவின் குணாதிசயங்கள்

பாபாவின் அற்புதங்களை விளக்கத் தெரியாத அறிவிலி நான்.  ஷீர்டியிலுள்ள ஏறக்குறைய எல்லாக் கோவில்களையும் அவர் பழுதுபார்க்கச் செய்தார்.  சனி, கணபதி, சங்கரர், சரஸ்வதி, கிராமதேவதை, மாருதி முதலிய எல்லாக் கோவில்களையும் தாத்யா பாடீல் மூலமாக ஒழுங்குபடுத்தச் செய்தார்.  அவருடைய தர்மமும் குறிப்பிடும்படியானது.  தட்சணை என்ற பெயரில் அவர் வழக்கமாக வாங்கிவந்த பணமும் தாராளமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டது.  ரூ.20 சிலருக்கும், ரூ.15 அல்லது ரூ.50 மற்றவர்களுக்கும் தினந்தோறும் அளிக்கப்பட்டது.  இது தூய தர்மப்பணம் என்றும், அதை உபயோகமாகப் பயன்படுத்தவும் பாபா விரும்பினார்.  பாபாவின் தரிசனத்தைப் பெற்றால்,  மக்கள் மிகப்பெரும் அளவில் பயனடைந்தார்கள்.  சிலர் ஆரோக்கியமும், நலமும் பெற்றனர்.  கொடியவர்கள் நல்லவர்களாகத் திருந்தினார்கள்.  சில சந்தர்ப்பத்தில் குஷ்டம் குணமாக்கப்பட்டது.  பலர் தங்களின் மனோபீஷ்டங்களில் பூர்த்தி எய்தினர்.  குருடர்கள் தமது கண்களில் எவ்வித மருந்தோ, சாறோ விடப்படாமல் பார்வையை அடைந்தார்கள்.  சில முடவர்கள் கால்களை அடைந்தார்கள்.  

அவரின் அசாதாரணப் பெருந்தன்மைக்கு ஒரு எல்லையை ஒருவராலும் காண இயலாது.  அவரது புகழ் நெடுந்தூரம் பரவி, எல்லா திசைகளிலிருந்தும் யாத்ரீகர்கள் ஷீர்டியை நோக்கித் திரண்டனர்.  பாபா எப்போதும் துனி அருகிலேயே அமர்ந்திருந்தார்.  அங்கு தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.  எப்போதும் தியானத்தில் அமர்ந்திருந்தார்.  சில சமயங்களில் குளித்தும், மற்றநேரங்களில் குளிக்காமலும் இருந்தார்.  தமது தலையில் ஒரு வெள்ளை டர்பனும்(தலைப்பாகை), இடுப்பில் சுத்தமான வேஷ்டியும், தமது உடம்பில் ஒரு சட்டையும் அணிவது வழக்கம்.  ஆரம்பத்தில் இதுவே அவரது உடையாகும்.  அவர் கிராமத்தில் முதலில் வைத்தியம் செய்தார்.  நோயாளிகளைக் கவனித்து மருந்து கொடுத்தார்.  அவர் எப்போதும் வெற்றிபெற்று ஹகீமைப் (வைத்தியர்) போன்று புகழடைந்தார்.  

ஒரு வினோதமான விஷயத்தை இங்கு கூறலாம்.  ஓர் அடியவரது கண்கள் சிவந்தும், வீங்கியும் இருந்தது.  ஷீர்டியில் ஒரு வைத்தியவரும் கிடைக்கவில்லை.  மற்ற அடியவர்கள் அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றனர்.  அதைப்போன்ற வியாதிக்கு மற்ற டாக்டர்கள் களிம்பு, அஞ்சனம், பசும்பால், கற்பூராதி மருந்துகள் முதலியன உபயோகிப்பர்.  ஆனால் பாபாவின் சிகிச்சையோ முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது.  சிறிது பிப்பாவை (சலவை செய்பவர் குறியிடும் செங்கோட்டைக் காயின் பசை) கைகளால் இரண்டு உருண்டைசெய்து, நோயாளியின் ஒவ்வொரு கண்களிலும் அவ்வுருண்டையைத் திணித்துவிட்டு துணியால் கண்களைச் சுற்றிக் கட்டுப்போட்டுவிட்டார்.  மறுநாள் கட்டு அவிழ்க்கப்பட்டுத் தண்ணீரால் சுத்தப்படுத்தப்படது.  எரிச்சல் மறைந்து கண்மணி வெண்மையாய் சுத்தமாகிவிட்டது.  கண்கள் நுண்ணிய உறுப்பானபோதும் செங்கோட்டை பசை அவற்றுக்கு எவ்விதத் தீங்கையும் அளிக்கவில்லை.  இம்மாதிரிப் பல வியாதிகளைக் குறிப்பிடலாம்.  ஆனால் இந்நிகழ்ச்சியே குறிப்பில் உள்ளது.


பாபாவின் யோகப் பயிற்சிகள்

பாபா யோகத்தின் எல்லாப் பயிற்சிமுறைகளையும் அறிவார்.  அவைகளில் இரண்டை இங்கே குறிப்பிடுவோம்.  


1. தவ்தி அல்லது சுத்த விருத்தி

ஒவ்வொரு மூன்றாவது நாளும் பாபா, மசூதியிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள ஆலமரத்துக்கு அருகில் இருக்கும் கிணற்றுக்குச் சென்று தமது வாயைக்கழுவி குளிப்பார்.  ஒரு சந்தர்ப்பத்தில் தமது குடல், கும்பி முதலியவற்றை அவர் வாந்தியெடுத்து, அவைகளின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் சுத்தம் செய்து பக்கத்திலுள்ள நாவல் மரத்தில் உலர்வதற்காக வைத்தது கவனிக்கப்பட்டது.  இதனைப் பார்த்தவர்கள் ஷீர்டியில் உள்ளனர்.  அவர்கள் இவ்வுண்மையைச் சோதனை செய்து பார்த்துவிட்டனர்.  3 அங்குல அகலமும், 22½ அடி நீளமும் உள்ள நனைக்கப்பட்ட லினன் துணியால் தவ்தி செய்யப்படுகிறது.  இது தொண்டைக்குள் விழுங்கபட்டு ஏறக்குறைய அரைமணி நேரத்திற்கு வயிற்றுக்குள்ளேயே கிரியைகள் நடத்த வைத்திருக்கப்பட்டுப் பிறகு வெளியே எடுக்கப்படுவதே சாதாரண தவ்தியாகும்.  ஆனால் பாபாவின் தவ்தியோ மிகவும் தனிச்சிறப்பானதும், அசாதாரணமானதும் ஆகும்.


2. கண்ட யோகம்

பாபா, தமது உடம்பிலிருந்து வெவ்வேறு உறுப்புக்களைப் பிய்த்தெடுத்து, மசூதியில் அவற்றைப் பல இடங்களிலும் தனியாக வைத்திருத்தார்.  ஒருமுறை, ஒரு பெருந்தகை மசூதிக்குச் சென்று பாபாவின் உடல் உறுப்புக்கள் தனித்தனியாக மசூதியின் பல இடங்களிலும் கிடப்பதைக் கண்டார்.  அவர் மிகவும் பீதியடைந்து, முதலில் கிராம அதிகாரிகளிடம் சென்று, பாபா கண்டதுண்டங்களாக வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டதை அறிவிக்க எண்ணினார்.  அவரே முதல் தகவல் தந்தவராகி விடுவராதலாலும், அவ்விஷயத்தைப் பற்றி சிறிது அறிந்து இருந்தாலும், அவர்மீது பொறுப்பு சுமத்தப்பட்டுவிடும் என எண்ணி யாரிடமும் ஏதுமே பேசாமல் இருந்துவிட்டார்.  ஆனால் மசூதிக்குச் சென்றபோது, பாபா தேக ஆரோக்கியத்துடன்  முன்போலவே இருப்பதைக் கண்டு மிகவும் அதிசயம் அடைந்தார்.  தான் முதல்நாள் பார்த்தது வெறும் கனவு என்றே அவர் எண்ணினார்.  

பாபா தமது சிசுப் பருவத்தில் இருந்தே யோகம் பயின்றார்.  அவர் பெற்றுள்ள திறமையை ஒருவரும் அறிந்திருக்கவில்லை அன்றி ஊக்கிக்கவும் இல்லை.  தமது சிகிச்சைகளுக்கு எவ்வித பணமும் அவர் வசூலிக்கவில்லை.  தமது தகைமைகளின் திறத்தின் பயனால் புகழ்பெற்றுப் பெருமையுற்றார்.  பல ஏழைகளுக்கும், துன்பப்படும் மக்களுக்கும் அவர் ஆரோக்கியம் அளித்தார்.  வைத்தியர்களில் எல்லாம் தலைசிறந்த புகழ்பெற்ற வைத்தியரான அவர் தமது தேவைகளை லட்சியம் செய்யவில்லை.  மற்றவர்களின் நன்மைக்கும், சௌகரியத்திற்குமே எப்போதும் உழைத்தார்.  தாங்கமுடியாத பயங்கர வலிகளை எல்லாம் தாமே பலமுறை, இம்முறைகளில் தாங்கித் துயருற்றிருக்கிறார்.  எங்கும் நிறைந்திருக்கும் மிகவும் கருணையுடைய பாபாவின் குணாதிசயத்தை எடுத்துக்காண்பிக்கும்   அத்தகைய ஒரு நிகழ்ச்சியை இங்கு தருகிறேன்.  


பாபாவின் எங்கும் நிறை தன்மையும் கருணையும்

1910ஆம் ஆண்டில் தீபாவளி விடுமுறையின்போது, பாபா துனிக்கருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.  பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த துனியில் விறகை நுழைத்தார்.  சிறிது நேரத்திற்குப்பின் விறகுகளை நுழைப்பதற்குப் பதில், பாபா தமது கரத்தையே துனி உள்ளே நுழைத்துவிட்டார்.  கரம் உடனே கருகி வெந்துவிட்டது.  இது வேலையாட்கள் மாதவாலும், மாதவ்ராவ் தேஷ்பாண்டேயாலும் உடனே கவனிக்கப்பட்டது.  உடனே அவர்கள் பாபாவிடம் ஓடினார்கள்.  மாதவ்ராவ் தனது கைகளை பாபாவின் இடுப்பில் கொடுத்துச் சேர்த்து, வலிந்து பின்னால் இழுத்து, "தேவா எதற்காக இங்ஙனம் செய்தீர்" என்று கேட்டார்.  பின்னர் பாபா தம் உணர்வுவந்து பதில் அளித்தார்.  "தொலை தூரத்தில் உள்ள ஏதோ ஒரு இடத்தில், ஒரு கொல்லனின் மனைவி   உலைக்களத்தில் இருந்த துருத்தியில் வேலை செய்துகொண்டிருந்தாள்.  அப்போது அவளது கணவன், அவளைக் கூப்பிட்டான்.  அவள் தனது இடுப்பில் குழந்தை இருப்பதை மறந்து அவசரமாக ஓடினாள்.  அதனால் ஊதுஉலைக்களத்தில் குழந்தை நழுவி விழுந்துவிட்டது.  நான் உடனே உலைக்களத்தில் கையைவிட்டு குழந்தையைக் காப்பாற்றினேன்.  எனது கரங்கள் வெந்துபோனதைப் பற்றி, நான் பொருட்படுத்தவில்லை.  குழந்தையின் உயிர் காக்கப்பட்டதை எண்ணி நான் மகிழ்வடைகிறேன்."


குஷ்டரோக அடியவரின் சேவை

மாதவ்ராவ் தேஷ்பாண்டேயிடமிருந்து பாபாவின் கரங்கள் வெந்துபோனதைக் கேள்விப்பட்ட நானா சாஹேப் சாந்தோர்கர், பம்பாயைச் சேர்ந்த புகழ்பெற்ற டாக்டரான பரமானந்த் என்பவரை ஆயின்மென்ட், லிண்ட் துணி, பாண்டேஜ் துணி உட்பட மருத்துவச் சாமான்களுடன் அழைத்துவந்து, பாபாவின் கரத்தைப் பரிசோதிக்கவும், வெந்ததினால் ஏற்பட்ட தீக்காயத்துக்கு சிகிச்சை செய்யவும் வேண்டிக்கொண்டார்.  ஆனால் பாபாவினால் இது மறுக்கப்பட்டது.  அது முதற்கொண்டு பாகோஜி ஷிண்டே என்ற குஷ்டரோகி அடியவரால், பாபாவுக்குச் சிகிச்சை செய்யப்பட்டு வந்தது.  வெந்துபோன இடத்தை நெய்போட்டு நன்றாகத் தேய்த்துவிட்டு ஒரு இலையை அதன்மீது வைத்துக் கட்டிவிடுவது அவரது சிகிச்சையாகும்.  நானா சாஹேப் பலமுறை பாபாவிடம் அந்தக்கட்டை நீக்கிவிட்டு, டாக்டர் பரமானந்தை காயத்தைச் சோதிக்கவும், சிகிச்சை செய்யவும், குணப்படுத்தவும் (அது விரைவில் குணப்படும் என்ற எண்ணத்துடன்) கேட்டுக்கொண்டார்.  டாக்டர் பரமானந்தும் அதையொப்ப பலமுறை வேண்டுகோள் விடுத்தார்.  ஆனால் அல்லாவே அவரது மருத்துவர் என்றுகூறி பாபா மறுத்துவிட்டார்.  

அவரைத் தனது கையைச் சோதிக்க அனுமதிக்கவேயில்லை.  டாக்டர் பரமானந்தின் மருந்துகள் ஷீர்டியில் உபயோகப்படுத்தப்படவில்லை.  இருப்பினும் டாக்டருக்கு பாபாவின் தரிசனத்தைப் பெறும்படியான நல்லதிஷ்டம் இருந்தது.  தினந்தோறும் பாகோஜி, அவர் கரத்திற்குச் சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டார்.  சில நாட்களுக்குப்பின் கரம் குணப்படுத்தப்பட்டது.  அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.  ஏதோ இலேசான வலி இன்னும் இருந்திருக்குமோ இல்லையோ என்பதை நாம் அறியோம்.  தினந்தோறும் பாகோஜி தனது நிஜதிப்படி கட்டுக்களைத் தளர்த்தி, நெய்யினால் அதை நன்றாக மீண்டும் தேய்த்து, அழுத்திக் கட்டுப்போடுவார்.  இது சாயிபாபாவின் மஹாசமாதிவரை நடைபெற்றது.

அவர் ஒரு முழு சித்தரானதால்  இந்த சிகிச்சை உண்மையில் அவருக்குத் தேவையிருக்கவில்லை.  ஆனால் தமது அடியவர் மீதுள்ள அன்பின் காரணத்தால் பாகோஜியினது உபாசனையை (சேவையை) முழுவதுமாகத் தடையின்றி நடத்த அனுமதித்தார்.  பாபா லெண்டித் தோட்டத்திற்க்குப் புறப்பட்டபோது பாகோஜி அவருக்குக் குடைபிடித்து அவருடன் கூடச் சென்றார்.  துனிக்கருகில் உள்ள கம்பத்தருகில் பாபா அமர்ந்ததும் பாகோஜி தனது சேவையை ஆரம்பித்தார்.  பாகோஜி முந்தைய ஜென்மத்தில் தீவினையாளர்.  அவர் குஷ்டரோகத்தால் அவதியுற்றுக்கொண்டிருந்தார்.  அவரது கைகள் சுருங்கியிருந்தன.  அவர் உடம்பு முழுவதும் சீழாகி, மோசமாக, நாற்றம் அடித்தது.  வெளியில் அவர் துரதிர்ஷ்டசாலியாக இருப்பதைப்போல் தோன்றினாலும், அவர் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும், மகிழ்ச்சியுள்ளவராகவும் இருந்தார்.  ஏனெனில் அவரே பாபாவின் முதன்மையான சேவகர்.  பாபாவின் நட்பினால் உண்டாகும் நன்மைகளை அடைந்தார்.  


குழந்தை கபர்தேயின் பிளேக் வியாதி

பாபாவின் மற்றொரு வியத்தகு லீலையை இப்போது கூறுகிறேன்.  அமராவதியைச் சேர்ந்த தாதா சாஹேப் கபர்டேயின் மனைவி ஷீர்டியில் தன் இளம் புதல்வனுடன் சிலநாட்கள் தங்கியிருந்தாள்.  அப்போது அவளது புதல்வனுக்கு அதிக காய்ச்சல் வந்து, அது நெறிகட்டி பிளேக்காகப் பெரிதானது.  தாயார் பயந்துபோய் மிகவும் மனவேதனையடைந்தாள்.  பின்பு அமராவதிக்குச் செல்ல நினைத்து, பாபா வழக்கமாக மாலையில் சுற்றுவரும்போது, வாதாவுக்கு (சமாதி மந்திர்) அருகில் வந்துகொண்டிருக்கையில் அவரது அனுமதியைப் பெறுவதற்காகப் பக்கத்தில் சென்று நடுங்கும் குரலில் தனது இளம் புத்திரன் பிளேக் நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்தாள்.  பாபா அவளிடம் அன்பாகவும், மிருதுவாகவும், "வானம் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது, அவைகள் உருகி ஓடிவிடும்.  எல்லாம் எளிதாகவும் தூயதாகவும் ஆகிவிடும்" என்று கூறினார்.  இவ்வாறு கூறிக்கொண்டே தமது கஃப்னி உடையை இடுப்புவரை தூக்கி அங்கு பிரசன்னமாயிருந்த அனைவருக்கும் நன்றாகப் பெரிதாக முட்டை அளவிற்குத் தோன்றியிருந்த பிளேக் கட்டிகளைக் காண்பித்து, "பாருங்கள், எனது அடியவர்களுக்காக நான் எங்கனம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.  அவர்களது கஷ்டங்களெல்லாம் எனதேயாகும்" என்றார்.  

இந்தச் சிறப்பான அசாதாரணச் செயலை (லீலை) மக்கள் கண்ணுற்று, ஞானிகள் தங்கள் அடியவர்களின் துன்பங்களைத் தாங்குகிறார்கள் என்று உறுதியடைந்தனர்.  ஞானிகளின் உள்ளமோ மெளுகைவிட மிருதுவானது.  உள்ளும், புறமும் அது வெண்ணெயைப் போன்று மிருதுவாக இருக்கிறது.  எவ்வித இலாபம் பெரும் நோக்கமின்றியே அவர்கள் தங்கள் அடியவர்களை நேசிக்கிறார்கள்.  அவர்களை உண்மை உறவினராயும் எண்ணுகின்றனர்.


பண்டரீபுரத்துக்குச் செல்லுதலும், அங்கு தங்குதலும்

பாபா எவ்வாறு தம் அடியவர்களை நேசித்தார்.  அவர்களின் விருப்பங்களையும், முயற்சிகளையும் எங்கனம் ஆவலுடன் எதிர்பார்த்து பூர்த்தி செய்தார் என்பதைச் சித்தரிக்கும் ஒரு கதையைக் கூறியபின்னர், இவ்வத்தியாயத்தை முடிக்கிறேன்.  

கான்தேஷில் உள்ள நந்துர்பாரின் மம்லதார் நானா சாஹேப் சாந்தோர்கர் பாபாவின் பெரும் அடியவர் ஆவார்.  அவருக்குப் பண்டரீபுரத்துக்கு மாற்றலாகும் உத்தரவு வந்தது.  சாயி பாபாவிடம் அவர் கொண்டுள்ள பக்தி பழுத்தது.  ஏனெனில், அவருக்குப் 'பூலோக வைகுண்டம்' என்றழைக்கப்படும் பண்டரீபுரத்துக்குப் போய்த்தங்க உத்தரவு கிடைத்திருக்கிறது.  நானா சாஹேப் அவசரமாக வேலையை ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயம் இருந்ததால் அவர் அவ்விடத்திற்கு உடனே ஒருவருக்கும் தெரிவிக்காமலும், எழுதாமலும் புறப்பட்டார்.  அவர் தனது பண்டரீபுரமான ஷீர்டிக்கு, ஒரு திடீர் விஜயம் செய்ய விரும்பினார்.  தமது விட்டோபா(சாயிபா)வைப் பார்த்து வணக்கம் தெரிவித்துப் பின்னர் புறப்பட எண்ணினார்.  ஒருவரும் நானா சாஹேப் ஷீர்டிக்குப் போவார் என்று கனவு கூடக் காணவில்லை.  ஆனால் சாயிபாபா இது அனைத்தையும் அறிவார்.  ஏனெனில் அவர் கண்கள் எங்கும் வியாபித்திருந்தன (சர்வாந்தர்யாமி)  

ஷீர்டியிலிருந்து சில மைல்கள் உள்ள நீம்காவனை நானா சாஹேப் அடைந்தபோது ஷீர்டியில் மசூதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.  பாபா உட்கார்ந்துகொண்டு மஹல்ஸாபதி, அப்பாஷிண்டே, காஷிராம் இவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென்று, "நாம் நால்வரும் பஜனை செய்வோம்.  பண்டாரீபுரத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன.  நாம் மகிழ்ச்சியாய்ப் பாடுவோம்" என்றார்.  அப்போது கோஷ்டியாக அவர்கள் பாடத் தொடங்கினர்.  அதன் பல்லவி........
"நான் பண்டரீபுதத்துக்குப் போகவேண்டும்!
அங்கே தங்க வேண்டும்!
  ஏனெனில் அதுவே என் பரமாத்மாவின் வீடு!"
 பாபா பாடினார்.  அடியவர்களும் அவரைத் தொடர்ந்து பாடினர்.  சிறிது நேரத்தில் நானா சாஹேப் தனது குடும்பத்துடன் வந்து பாபாவின் முன்னால் வீழ்ந்துபணிந்து அவரைத் தங்களுடன் தங்கும்படியும் வேண்டிக்கொண்டார்.  அவ்வேண்டுகோள் பாபாவுக்குத் தேவையாய் இருக்கவில்லை.  ஏனெனில் மற்ற அடியவர்கள் நானா சாஹேபிடம் பாபா ஏற்கனவே பண்டரீபுரத்திற்குப் போவதற்கும், அங்கு தங்குவதற்குமான ஊக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.  இதைக் கேட்டு நானா சாஹேப் உணர்ச்சிவசப்பட்டார்.  பாபாவின் காலடியில் வீழ்ந்தார்.  பிறகு பாபாவின் அனுமதி, உதி மற்றும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு, நானா சாஹேப் பண்டரீபுரத்துக்குப் புறப்பட்டார்.  

பாபாவின் கதைகளுக்கு ஒரு முடிவில்லை.  ஆனால் இங்கு நிறுத்தி, அடுத்த அத்தியாயத்தில் மானிட வாழ்க்கையின் முக்கியத்துவம், பாபாவின் இறந்து வாழும் வாழ்க்கை, பாயஜாபாயின் சேவை மற்றும் பலகதைகளையும் கூறுகிறேன்.

  
பாபாவின் நெருங்கிய பக்தரும், அவருடன் எப்போதும் மசூதியிலும், சாவடியிலும் படுத்துறங்கியவருமான மஹல்சாபதி பாபா தம்மிடம் ஒருமுறை தாம் 'பாத்ரி'யைச் சேர்ந்த பிராமணர் என்றும், பிறந்தபோதே (முஸ்லிம்) ஃபக்கீர் ஒருவரிடம் வளர்க்க ஒப்படைக்கப்படதாகவும் சொல்லியிருக்கிறார்.  இந்த உரையாடல் நிகழ்ந்த சமயம் பாத்திரியைச் சேர்ந்த சிலர் அங்கு வந்ததையும் அவர்களிடம் பாபா அங்கு வசிப்பவர்களைப்பற்றி விசாரித்ததையும் தெரிவித்திருக்கிறார்.  (சாயிலீலா சஞ்சிகை - வருடம் 1924, பக்கம் 179)    


*²  திருமதி. காஷிபாய் கனிட்கர், புனேவைச் சேர்ந்த புகழ்பெற்ற கற்றறிந்த பெண்மணி ஆவார்.  இவர் தம்முடைய அனுபவமாக சொல்லியவை சாயிலீலா சஞ்சிகையில் (வருடம் 1934, தொகுப்பு  2, பக்கம் 79) பதிக்கப்பட்டிருக்கிறது.


பாபாவின் அற்புதங்களைக் கேள்விப்பட்ட பிறகு எங்களுடைய பிரம்மசமாஜ நம்பிக்கைகளுக்கும், வழிமுறைகளுக்கும் ஏற்ப பாபா மாயவேலை செய்யும் முஹமதியரா அல்லது இந்து சித்தரா! என்று விவாதித்துக்கொண்டிருந்தோம்.  

 பின்பு ஒருமறை ஷீர்டி செல்லும்போது இதைப்பற்றிய எண்ணம் என் மனதில் சுழன்றுகொண்டிருந்தது.  ஆனால் மசூதியின் படிகளை நான் நெருங்கியபோது, பாபா வெளியேவந்து என்னை உற்றுநோக்கி, சற்றே கடுமையான குரலில் தனது நெஞ்சை சுட்டிக்காட்டி, "நான் ஒரு பிராமணன்,  தூய பிராமணன்.  எனக்கும் மாயமந்திர வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை.  அது மாதிரியான சித்து வேலைசெய்யும் எந்த முஹமதியனும் இங்கு நுழையத் துணிய முடியாது" என்றார்.

மீண்டும் தன்னைச் சுட்டிக்காட்டி, "இந்த பிராமணர் இலட்சக்கணக்கான மக்களை தூய்மையான ஒளிநிறைந்த பாதைக்கு இழுத்து, அவர்களின் இலட்சியத்தை அடைய இட்டுச்செல்வார்.  இது பிராமண மசூதி.  இங்கு மாயவேலை செய்யும் எந்த முஹமதியனின் நிழல்படவும் அனுமதிக்கமாட்டேன்" என்றார்.


 
ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்