Thursday, 2 February 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 7

•  வியத்தகு அவதாரம்
•  சாயிபாபாவின் குணாதிசயங்கள்
•  அவரின் யோகா சாதனைகள்
•  அவரின் எங்கும் நிறை தன்மை
•  குஷ்டரோக அடியவனின் சேவை
•  குழந்தை கபர்டேயின் பிளேக் வியாதி
•  பண்டரிபுரத்துக்குச் செல்லல் 


வியத்தகு அவதாரம்

சாயிபாபா எல்லாவித யோகப்பயிற்சிகளையும் அறிந்திருந்தார்.  அவர் தவ்தி (22½ அடி நீளமும், 3 அங்குல அகலமும் உள்ள நனைக்கப்பட்ட ஒரு லினன்(சணல்நார்) துணியினால் வயிறு சுத்தம் செய்தல்), கண்ட யோகம் (உடல் உறுப்புகளைத் தனியாகக் கழற்றி பின்னர் சேர்த்தல்), சமாதி உள்ளிட்ட ஆறு முறைகளிலும் கைதேர்ந்தவராக இருந்தார்.  அவரை ஒரு இந்து என்று நீங்கள் கருதுவீர்களானால், ஒரு யவனரைப் போன்று தோற்றமளித்தார்.  நீங்கள் அவரை ஒரு யவனர் என்று கருதுவீர்களானால், ஒரு சமயாசாரமுள்ள இந்துவாகத் தோற்றமளித்தார்.  அவர் ஒரு இந்துவா, முஹமதியரா என்று ஒருவரும் திட்டமாக அறிந்திருக்கவில்லை.  
இந்துக்களின் விழாவான ராமநவமியை உரிய சகல மரியாதைகளுடனும் கொண்டாடி, அதேநேரத்தில் முஹமதியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்தையும் அனுமதித்தார்.  திருவிழாக்களில் குத்துச்சண்டையை ஊக்குவித்து, வெற்றிபெற்றோர்க்குப் பரிசுகள் வழங்கினார்.  கோகுலாஷ்டமி வந்தபோது, 'கோபால்காலா' திருவிழாவை (கிருஷ்ணர் மேனியைக் கருமை நிறமாக்கும் வைபவம்) உரியமுறைப்படி செய்வித்தார்.  ஈத் திருவிழாவின்போது முஹமதியர்களைத் தங்கள் தொழுகையை (நமாஸ்) தமது மசூதியில் செய்ய அனுமதித்தார்.  ஒருமுறை மொஹரம் திருவிழாவின்போது சில முஹமதியர்கள், மசூதியில் ஒரு 'தாஸியா' அல்லது 'தாபூத்' (முஸ்லிம் ஞானியரின் பாடை உருவகம்) செய்யவும்,  அதைச் சிலநாட்கள் மசூதியில் வைத்திருந்து, கிராமத்தின் வழியாக ஊர்வலமாக எடுத்துச்சென்று புதைக்கவும் தீர்மானித்தனர்.  நான்கு நாட்களுக்கு தாபூத்தை மசூதியில் வைத்திருக்க சாயிபாபா சம்மதித்தார்.  ஐந்தாவது நாள் சிறிதளவும் தமது செயல்லுக்காக வருந்தும் தன்மையேயின்றி, மசூதியில் இருந்து அதை அப்புறப்படுத்தினார்.  நீங்கள் அவரை ஒரு முஹமதியர் என்று கூறுவீர்களானால், (இந்து மத வழக்கப்படி) காது குத்தப்படிருந்தார்.  நீங்கள் அவரை ஒரு இந்து என்று கருதுவீர்களானால், அவர் சுன்னத் கல்யாணம் செய்கிற வழக்கத்தை ஆதரித்தார்.  ஆனால் பாபாவை நெருங்கிய நானா சாஹேப் சாந்தோர்கர் கருத்துப்படி பாபாவுக்கே சுன்னத் செய்யப்படவில்லை.  

B.V. தேவ் எழுதிய 'பாபா ஹிந்து கி யவன்?' என்ற கட்டுரையை சாயிலீலா சஞ்சிகையில் (பக்கம் 562) பார்க்க.  நீங்கள் அவரை இந்து என்று அழைத்தால் எப்போதும் மசூதியில் வாழ்ந்தார்.  முஹமதியர் என்றால் துனி என்னும் அகண்ட நெருப்பை அவர் எப்போதும் மசூதியில் வைத்திருந்தார்.  மற்றும் முஹமதிய மதத்திற்கு விரோதமான பின்வரும் மூன்று பழக்கங்களையும் கொண்டிருந்தார்.  அதாவது திருக்கையில் அரைப்பது, சங்கு ஊதுவது, மணியடிப்பது, தீயில் ஆகுதி செய்தல், பஜனை, தண்ணீரால் சாயிபாபாவின் பாதத்தை அர்க்கிய வழிபாடு செய்தல் முதலியன எப்போதும் அங்கு அனுமதிக்கப்பட்டன.  நீங்கள் அவரை முஹமதியர் என்று நினைத்தால் பிராமண ஸ்ரேஷ்டர்களும், அக்னிஹோத்ரிகளும், தங்கள் வைதீகச் சம்பிரதாயத்தை விட்டிவிட்டு அவர் பாதங்களில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து பணிந்தனர்.  அவரது தேசம் முதலியவற்றை விசாரிக்கப் போனவர்கள் அவரது தரிசனத்தால், கவரப்பட்டுத் திகைத்து வாயடைத்து ஊமையானார்கள்.  

எனவே அவர் ஒரு முஹமதியரா, இந்துவா* என்பது ஒருவராலும் நிச்சயமாகத் தீர்க்க இயலாததாய் இருந்தது.  இது அதிசயம் அல்ல.  அஹங்காரத்தையும், உடல் உணர்வையும் ஒழிப்பதன் மூலம் பரமாத்மாவுடன் தன்னை முழுவதும் அர்ப்பணித்து, சரணாகதியடைந்து அவருடன் ஒன்றிவிடுபவனுக்கு ஜாதி, தேசம் என்னும் கேள்விகள் குறித்துக் கருத்திற்கொள்வதற்கு ஏதுமில்லை.  சாயிபாபாவைப் போன்ற அத்தகைய ஒருவர் ஜாதிக்குள்ளேயும், ஜந்துக்குள்ளேயும் எவ்வித வேறுபாட்டையும் காணவில்லை.  பக்கிரிகளுடன் மாமிசமும், மீனும் அவர் உண்டார்.  நாய்கள் அவைகளின் வாயால் அவ்வுணவைத் தீண்டியபோதும், அவர் அருவருப்புக் காட்டவில்லை.  

சாயிபாபா அத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த வியத்தகு அவதாரமாவார்.  முன்னர் செய்த நல்வினைகளின் காரணமாகவே நான் அவர் பாதத்தடியில் உட்காருவதற்கும், அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட நட்பை மகிழ்ந்து அனுபவிப்பதற்கும், நல்ல அதிஷ்டத்தைப் பெற்றேன்.  அதிலிருந்து நான் பெற்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும் தன்நிகர் இல்லாதவை.  உண்மையில் சாயிபாபா பரிபூரண ஆனந்தமும், உணர்வும் ஆவார்.  அவரின் உயர்வையும், தனித்தன்மைச் சிறப்பையும் போதுமான அளவிற்கு நான் விளக்க இயலாது.  அவரின் பாதாரவிந்தங்களில் ஆனந்தத்தை நுகர்பவன் அவருடையதேயான ஆத்மாவிலேயே ஸ்தாபிக்கப்படுகிறான்.  முக்தியில் ஆர்வமுள்ள பல சந்நியாசிகள், சாதகர்கள் மற்றும் எல்லாவித மக்களும் சாயிபாபாவிடம் வந்தனர்.  எப்போதும் அவர் நடந்தார், பேசினார், அவர்களுடன் சேர்ந்து சிரித்தார்.  எப்போதும் தம் நாவினால், 'அல்லா மாலிக்' (இறைவனே எஜமானர்) என மொழிந்தார்.  அவர் விவாதத்தையோ, கலகத்தையோ விரும்பவில்லை.

அவர் சிலநேரங்களில் கடுமையாக இருப்பினும் எப்போதும் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் இருந்தார்.  எப்போதும் முழு வேதாந்தத்தையும் போதித்தார்.  கடைசிவரை பாபா யார் என்பது ஒருவருக்கும் தெரியாது.  அரசர்களும், ஏழைகளும் அவர் முன் சமமாக நடத்தப்பட்டனர்.  அனைவருடைய ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிவார்.  அதை அவர் மொழிகளால் வெளியிட்டபோது அனைவரும் வியந்தனர்.  சர்வ விஞ்ஞானிகளின் கருவூலம் அவரே, எனினும் அறியாதவர்போல் நடித்தார்.  புகழை அவர் விரும்பவில்லை.  இவைகளே சாயிபாபாவின் குணாதிசயங்கள்.  அவர் மானிட உருவத்தில் இருப்பினும், அவரின் செய்கைகள் அவரது கடவுள் தன்மையை எடுத்துக்காட்டியது.  அனைவரும் அவரை ஷீர்டியில் இருக்கும் பரமாத்மா என்றே நம்பினர்.


சாயிபாபாவின் குணாதிசயங்கள்

பாபாவின் அற்புதங்களை விளக்கத் தெரியாத அறிவிலி நான்.  ஷீர்டியிலுள்ள ஏறக்குறைய எல்லாக் கோவில்களையும் அவர் பழுதுபார்க்கச் செய்தார்.  சனி, கணபதி, சங்கரர், சரஸ்வதி, கிராமதேவதை, மாருதி முதலிய எல்லாக் கோவில்களையும் தாத்யா பாடீல் மூலமாக ஒழுங்குபடுத்தச் செய்தார்.  அவருடைய தர்மமும் குறிப்பிடும்படியானது.  தட்சணை என்ற பெயரில் அவர் வழக்கமாக வாங்கிவந்த பணமும் தாராளமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டது.  ரூ.20 சிலருக்கும், ரூ.15 அல்லது ரூ.50 மற்றவர்களுக்கும் தினந்தோறும் அளிக்கப்பட்டது.  இது தூய தர்மப்பணம் என்றும், அதை உபயோகமாகப் பயன்படுத்தவும் பாபா விரும்பினார்.  பாபாவின் தரிசனத்தைப் பெற்றால்,  மக்கள் மிகப்பெரும் அளவில் பயனடைந்தார்கள்.  சிலர் ஆரோக்கியமும், நலமும் பெற்றனர்.  கொடியவர்கள் நல்லவர்களாகத் திருந்தினார்கள்.  சில சந்தர்ப்பத்தில் குஷ்டம் குணமாக்கப்பட்டது.  பலர் தங்களின் மனோபீஷ்டங்களில் பூர்த்தி எய்தினர்.  குருடர்கள் தமது கண்களில் எவ்வித மருந்தோ, சாறோ விடப்படாமல் பார்வையை அடைந்தார்கள்.  சில முடவர்கள் கால்களை அடைந்தார்கள்.  

அவரின் அசாதாரணப் பெருந்தன்மைக்கு ஒரு எல்லையை ஒருவராலும் காண இயலாது.  அவரது புகழ் நெடுந்தூரம் பரவி, எல்லா திசைகளிலிருந்தும் யாத்ரீகர்கள் ஷீர்டியை நோக்கித் திரண்டனர்.  பாபா எப்போதும் துனி அருகிலேயே அமர்ந்திருந்தார்.  அங்கு தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.  எப்போதும் தியானத்தில் அமர்ந்திருந்தார்.  சில சமயங்களில் குளித்தும், மற்றநேரங்களில் குளிக்காமலும் இருந்தார்.  தமது தலையில் ஒரு வெள்ளை டர்பனும்(தலைப்பாகை), இடுப்பில் சுத்தமான வேஷ்டியும், தமது உடம்பில் ஒரு சட்டையும் அணிவது வழக்கம்.  ஆரம்பத்தில் இதுவே அவரது உடையாகும்.  அவர் கிராமத்தில் முதலில் வைத்தியம் செய்தார்.  நோயாளிகளைக் கவனித்து மருந்து கொடுத்தார்.  அவர் எப்போதும் வெற்றிபெற்று ஹகீமைப் (வைத்தியர்) போன்று புகழடைந்தார்.  

ஒரு வினோதமான விஷயத்தை இங்கு கூறலாம்.  ஓர் அடியவரது கண்கள் சிவந்தும், வீங்கியும் இருந்தது.  ஷீர்டியில் ஒரு வைத்தியவரும் கிடைக்கவில்லை.  மற்ற அடியவர்கள் அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றனர்.  அதைப்போன்ற வியாதிக்கு மற்ற டாக்டர்கள் களிம்பு, அஞ்சனம், பசும்பால், கற்பூராதி மருந்துகள் முதலியன உபயோகிப்பர்.  ஆனால் பாபாவின் சிகிச்சையோ முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது.  சிறிது பிப்பாவை (சலவை செய்பவர் குறியிடும் செங்கோட்டைக் காயின் பசை) கைகளால் இரண்டு உருண்டைசெய்து, நோயாளியின் ஒவ்வொரு கண்களிலும் அவ்வுருண்டையைத் திணித்துவிட்டு துணியால் கண்களைச் சுற்றிக் கட்டுப்போட்டுவிட்டார்.  மறுநாள் கட்டு அவிழ்க்கப்பட்டுத் தண்ணீரால் சுத்தப்படுத்தப்படது.  எரிச்சல் மறைந்து கண்மணி வெண்மையாய் சுத்தமாகிவிட்டது.  கண்கள் நுண்ணிய உறுப்பானபோதும் செங்கோட்டை பசை அவற்றுக்கு எவ்விதத் தீங்கையும் அளிக்கவில்லை.  இம்மாதிரிப் பல வியாதிகளைக் குறிப்பிடலாம்.  ஆனால் இந்நிகழ்ச்சியே குறிப்பில் உள்ளது.


பாபாவின் யோகப் பயிற்சிகள்

பாபா யோகத்தின் எல்லாப் பயிற்சிமுறைகளையும் அறிவார்.  அவைகளில் இரண்டை இங்கே குறிப்பிடுவோம்.  


1. தவ்தி அல்லது சுத்த விருத்தி

ஒவ்வொரு மூன்றாவது நாளும் பாபா, மசூதியிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள ஆலமரத்துக்கு அருகில் இருக்கும் கிணற்றுக்குச் சென்று தமது வாயைக்கழுவி குளிப்பார்.  ஒரு சந்தர்ப்பத்தில் தமது குடல், கும்பி முதலியவற்றை அவர் வாந்தியெடுத்து, அவைகளின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் சுத்தம் செய்து பக்கத்திலுள்ள நாவல் மரத்தில் உலர்வதற்காக வைத்தது கவனிக்கப்பட்டது.  இதனைப் பார்த்தவர்கள் ஷீர்டியில் உள்ளனர்.  அவர்கள் இவ்வுண்மையைச் சோதனை செய்து பார்த்துவிட்டனர்.  3 அங்குல அகலமும், 22½ அடி நீளமும் உள்ள நனைக்கப்பட்ட லினன் துணியால் தவ்தி செய்யப்படுகிறது.  இது தொண்டைக்குள் விழுங்கபட்டு ஏறக்குறைய அரைமணி நேரத்திற்கு வயிற்றுக்குள்ளேயே கிரியைகள் நடத்த வைத்திருக்கப்பட்டுப் பிறகு வெளியே எடுக்கப்படுவதே சாதாரண தவ்தியாகும்.  ஆனால் பாபாவின் தவ்தியோ மிகவும் தனிச்சிறப்பானதும், அசாதாரணமானதும் ஆகும்.


2. கண்ட யோகம்

பாபா, தமது உடம்பிலிருந்து வெவ்வேறு உறுப்புக்களைப் பிய்த்தெடுத்து, மசூதியில் அவற்றைப் பல இடங்களிலும் தனியாக வைத்திருத்தார்.  ஒருமுறை, ஒரு பெருந்தகை மசூதிக்குச் சென்று பாபாவின் உடல் உறுப்புக்கள் தனித்தனியாக மசூதியின் பல இடங்களிலும் கிடப்பதைக் கண்டார்.  அவர் மிகவும் பீதியடைந்து, முதலில் கிராம அதிகாரிகளிடம் சென்று, பாபா கண்டதுண்டங்களாக வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டதை அறிவிக்க எண்ணினார்.  அவரே முதல் தகவல் தந்தவராகி விடுவராதலாலும், அவ்விஷயத்தைப் பற்றி சிறிது அறிந்து இருந்தாலும், அவர்மீது பொறுப்பு சுமத்தப்பட்டுவிடும் என எண்ணி யாரிடமும் ஏதுமே பேசாமல் இருந்துவிட்டார்.  ஆனால் மசூதிக்குச் சென்றபோது, பாபா தேக ஆரோக்கியத்துடன்  முன்போலவே இருப்பதைக் கண்டு மிகவும் அதிசயம் அடைந்தார்.  தான் முதல்நாள் பார்த்தது வெறும் கனவு என்றே அவர் எண்ணினார்.  

பாபா தமது சிசுப் பருவத்தில் இருந்தே யோகம் பயின்றார்.  அவர் பெற்றுள்ள திறமையை ஒருவரும் அறிந்திருக்கவில்லை அன்றி ஊக்கிக்கவும் இல்லை.  தமது சிகிச்சைகளுக்கு எவ்வித பணமும் அவர் வசூலிக்கவில்லை.  தமது தகைமைகளின் திறத்தின் பயனால் புகழ்பெற்றுப் பெருமையுற்றார்.  பல ஏழைகளுக்கும், துன்பப்படும் மக்களுக்கும் அவர் ஆரோக்கியம் அளித்தார்.  வைத்தியர்களில் எல்லாம் தலைசிறந்த புகழ்பெற்ற வைத்தியரான அவர் தமது தேவைகளை லட்சியம் செய்யவில்லை.  மற்றவர்களின் நன்மைக்கும், சௌகரியத்திற்குமே எப்போதும் உழைத்தார்.  தாங்கமுடியாத பயங்கர வலிகளை எல்லாம் தாமே பலமுறை, இம்முறைகளில் தாங்கித் துயருற்றிருக்கிறார்.  எங்கும் நிறைந்திருக்கும் மிகவும் கருணையுடைய பாபாவின் குணாதிசயத்தை எடுத்துக்காண்பிக்கும்   அத்தகைய ஒரு நிகழ்ச்சியை இங்கு தருகிறேன்.  


பாபாவின் எங்கும் நிறை தன்மையும் கருணையும்

1910ஆம் ஆண்டில் தீபாவளி விடுமுறையின்போது, பாபா துனிக்கருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.  பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த துனியில் விறகை நுழைத்தார்.  சிறிது நேரத்திற்குப்பின் விறகுகளை நுழைப்பதற்குப் பதில், பாபா தமது கரத்தையே துனி உள்ளே நுழைத்துவிட்டார்.  கரம் உடனே கருகி வெந்துவிட்டது.  இது வேலையாட்கள் மாதவாலும், மாதவ்ராவ் தேஷ்பாண்டேயாலும் உடனே கவனிக்கப்பட்டது.  உடனே அவர்கள் பாபாவிடம் ஓடினார்கள்.  மாதவ்ராவ் தனது கைகளை பாபாவின் இடுப்பில் கொடுத்துச் சேர்த்து, வலிந்து பின்னால் இழுத்து, "தேவா எதற்காக இங்ஙனம் செய்தீர்" என்று கேட்டார்.  பின்னர் பாபா தம் உணர்வுவந்து பதில் அளித்தார்.  "தொலை தூரத்தில் உள்ள ஏதோ ஒரு இடத்தில், ஒரு கொல்லனின் மனைவி   உலைக்களத்தில் இருந்த துருத்தியில் வேலை செய்துகொண்டிருந்தாள்.  அப்போது அவளது கணவன், அவளைக் கூப்பிட்டான்.  அவள் தனது இடுப்பில் குழந்தை இருப்பதை மறந்து அவசரமாக ஓடினாள்.  அதனால் ஊதுஉலைக்களத்தில் குழந்தை நழுவி விழுந்துவிட்டது.  நான் உடனே உலைக்களத்தில் கையைவிட்டு குழந்தையைக் காப்பாற்றினேன்.  எனது கரங்கள் வெந்துபோனதைப் பற்றி, நான் பொருட்படுத்தவில்லை.  குழந்தையின் உயிர் காக்கப்பட்டதை எண்ணி நான் மகிழ்வடைகிறேன்."


குஷ்டரோக அடியவரின் சேவை

மாதவ்ராவ் தேஷ்பாண்டேயிடமிருந்து பாபாவின் கரங்கள் வெந்துபோனதைக் கேள்விப்பட்ட நானா சாஹேப் சாந்தோர்கர், பம்பாயைச் சேர்ந்த புகழ்பெற்ற டாக்டரான பரமானந்த் என்பவரை ஆயின்மென்ட், லிண்ட் துணி, பாண்டேஜ் துணி உட்பட மருத்துவச் சாமான்களுடன் அழைத்துவந்து, பாபாவின் கரத்தைப் பரிசோதிக்கவும், வெந்ததினால் ஏற்பட்ட தீக்காயத்துக்கு சிகிச்சை செய்யவும் வேண்டிக்கொண்டார்.  ஆனால் பாபாவினால் இது மறுக்கப்பட்டது.  அது முதற்கொண்டு பாகோஜி ஷிண்டே என்ற குஷ்டரோகி அடியவரால், பாபாவுக்குச் சிகிச்சை செய்யப்பட்டு வந்தது.  வெந்துபோன இடத்தை நெய்போட்டு நன்றாகத் தேய்த்துவிட்டு ஒரு இலையை அதன்மீது வைத்துக் கட்டிவிடுவது அவரது சிகிச்சையாகும்.  நானா சாஹேப் பலமுறை பாபாவிடம் அந்தக்கட்டை நீக்கிவிட்டு, டாக்டர் பரமானந்தை காயத்தைச் சோதிக்கவும், சிகிச்சை செய்யவும், குணப்படுத்தவும் (அது விரைவில் குணப்படும் என்ற எண்ணத்துடன்) கேட்டுக்கொண்டார்.  டாக்டர் பரமானந்தும் அதையொப்ப பலமுறை வேண்டுகோள் விடுத்தார்.  ஆனால் அல்லாவே அவரது மருத்துவர் என்றுகூறி பாபா மறுத்துவிட்டார்.  

அவரைத் தனது கையைச் சோதிக்க அனுமதிக்கவேயில்லை.  டாக்டர் பரமானந்தின் மருந்துகள் ஷீர்டியில் உபயோகப்படுத்தப்படவில்லை.  இருப்பினும் டாக்டருக்கு பாபாவின் தரிசனத்தைப் பெறும்படியான நல்லதிஷ்டம் இருந்தது.  தினந்தோறும் பாகோஜி, அவர் கரத்திற்குச் சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டார்.  சில நாட்களுக்குப்பின் கரம் குணப்படுத்தப்பட்டது.  அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.  ஏதோ இலேசான வலி இன்னும் இருந்திருக்குமோ இல்லையோ என்பதை நாம் அறியோம்.  தினந்தோறும் பாகோஜி தனது நிஜதிப்படி கட்டுக்களைத் தளர்த்தி, நெய்யினால் அதை நன்றாக மீண்டும் தேய்த்து, அழுத்திக் கட்டுப்போடுவார்.  இது சாயிபாபாவின் மஹாசமாதிவரை நடைபெற்றது.

அவர் ஒரு முழு சித்தரானதால்  இந்த சிகிச்சை உண்மையில் அவருக்குத் தேவையிருக்கவில்லை.  ஆனால் தமது அடியவர் மீதுள்ள அன்பின் காரணத்தால் பாகோஜியினது உபாசனையை (சேவையை) முழுவதுமாகத் தடையின்றி நடத்த அனுமதித்தார்.  பாபா லெண்டித் தோட்டத்திற்க்குப் புறப்பட்டபோது பாகோஜி அவருக்குக் குடைபிடித்து அவருடன் கூடச் சென்றார்.  துனிக்கருகில் உள்ள கம்பத்தருகில் பாபா அமர்ந்ததும் பாகோஜி தனது சேவையை ஆரம்பித்தார்.  பாகோஜி முந்தைய ஜென்மத்தில் தீவினையாளர்.  அவர் குஷ்டரோகத்தால் அவதியுற்றுக்கொண்டிருந்தார்.  அவரது கைகள் சுருங்கியிருந்தன.  அவர் உடம்பு முழுவதும் சீழாகி, மோசமாக, நாற்றம் அடித்தது.  வெளியில் அவர் துரதிர்ஷ்டசாலியாக இருப்பதைப்போல் தோன்றினாலும், அவர் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும், மகிழ்ச்சியுள்ளவராகவும் இருந்தார்.  ஏனெனில் அவரே பாபாவின் முதன்மையான சேவகர்.  பாபாவின் நட்பினால் உண்டாகும் நன்மைகளை அடைந்தார்.  


குழந்தை கபர்தேயின் பிளேக் வியாதி

பாபாவின் மற்றொரு வியத்தகு லீலையை இப்போது கூறுகிறேன்.  அமராவதியைச் சேர்ந்த தாதா சாஹேப் கபர்டேயின் மனைவி ஷீர்டியில் தன் இளம் புதல்வனுடன் சிலநாட்கள் தங்கியிருந்தாள்.  அப்போது அவளது புதல்வனுக்கு அதிக காய்ச்சல் வந்து, அது நெறிகட்டி பிளேக்காகப் பெரிதானது.  தாயார் பயந்துபோய் மிகவும் மனவேதனையடைந்தாள்.  பின்பு அமராவதிக்குச் செல்ல நினைத்து, பாபா வழக்கமாக மாலையில் சுற்றுவரும்போது, வாதாவுக்கு (சமாதி மந்திர்) அருகில் வந்துகொண்டிருக்கையில் அவரது அனுமதியைப் பெறுவதற்காகப் பக்கத்தில் சென்று நடுங்கும் குரலில் தனது இளம் புத்திரன் பிளேக் நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்தாள்.  பாபா அவளிடம் அன்பாகவும், மிருதுவாகவும், "வானம் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது, அவைகள் உருகி ஓடிவிடும்.  எல்லாம் எளிதாகவும் தூயதாகவும் ஆகிவிடும்" என்று கூறினார்.  இவ்வாறு கூறிக்கொண்டே தமது கஃப்னி உடையை இடுப்புவரை தூக்கி அங்கு பிரசன்னமாயிருந்த அனைவருக்கும் நன்றாகப் பெரிதாக முட்டை அளவிற்குத் தோன்றியிருந்த பிளேக் கட்டிகளைக் காண்பித்து, "பாருங்கள், எனது அடியவர்களுக்காக நான் எங்கனம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.  அவர்களது கஷ்டங்களெல்லாம் எனதேயாகும்" என்றார்.  

இந்தச் சிறப்பான அசாதாரணச் செயலை (லீலை) மக்கள் கண்ணுற்று, ஞானிகள் தங்கள் அடியவர்களின் துன்பங்களைத் தாங்குகிறார்கள் என்று உறுதியடைந்தனர்.  ஞானிகளின் உள்ளமோ மெளுகைவிட மிருதுவானது.  உள்ளும், புறமும் அது வெண்ணெயைப் போன்று மிருதுவாக இருக்கிறது.  எவ்வித இலாபம் பெரும் நோக்கமின்றியே அவர்கள் தங்கள் அடியவர்களை நேசிக்கிறார்கள்.  அவர்களை உண்மை உறவினராயும் எண்ணுகின்றனர்.


பண்டரீபுரத்துக்குச் செல்லுதலும், அங்கு தங்குதலும்

பாபா எவ்வாறு தம் அடியவர்களை நேசித்தார்.  அவர்களின் விருப்பங்களையும், முயற்சிகளையும் எங்கனம் ஆவலுடன் எதிர்பார்த்து பூர்த்தி செய்தார் என்பதைச் சித்தரிக்கும் ஒரு கதையைக் கூறியபின்னர், இவ்வத்தியாயத்தை முடிக்கிறேன்.  

கான்தேஷில் உள்ள நந்துர்பாரின் மம்லதார் நானா சாஹேப் சாந்தோர்கர் பாபாவின் பெரும் அடியவர் ஆவார்.  அவருக்குப் பண்டரீபுரத்துக்கு மாற்றலாகும் உத்தரவு வந்தது.  சாயி பாபாவிடம் அவர் கொண்டுள்ள பக்தி பழுத்தது.  ஏனெனில், அவருக்குப் 'பூலோக வைகுண்டம்' என்றழைக்கப்படும் பண்டரீபுரத்துக்குப் போய்த்தங்க உத்தரவு கிடைத்திருக்கிறது.  நானா சாஹேப் அவசரமாக வேலையை ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயம் இருந்ததால் அவர் அவ்விடத்திற்கு உடனே ஒருவருக்கும் தெரிவிக்காமலும், எழுதாமலும் புறப்பட்டார்.  அவர் தனது பண்டரீபுரமான ஷீர்டிக்கு, ஒரு திடீர் விஜயம் செய்ய விரும்பினார்.  தமது விட்டோபா(சாயிபா)வைப் பார்த்து வணக்கம் தெரிவித்துப் பின்னர் புறப்பட எண்ணினார்.  ஒருவரும் நானா சாஹேப் ஷீர்டிக்குப் போவார் என்று கனவு கூடக் காணவில்லை.  ஆனால் சாயிபாபா இது அனைத்தையும் அறிவார்.  ஏனெனில் அவர் கண்கள் எங்கும் வியாபித்திருந்தன (சர்வாந்தர்யாமி)  

ஷீர்டியிலிருந்து சில மைல்கள் உள்ள நீம்காவனை நானா சாஹேப் அடைந்தபோது ஷீர்டியில் மசூதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.  பாபா உட்கார்ந்துகொண்டு மஹல்ஸாபதி, அப்பாஷிண்டே, காஷிராம் இவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென்று, "நாம் நால்வரும் பஜனை செய்வோம்.  பண்டாரீபுரத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன.  நாம் மகிழ்ச்சியாய்ப் பாடுவோம்" என்றார்.  அப்போது கோஷ்டியாக அவர்கள் பாடத் தொடங்கினர்.  அதன் பல்லவி........
"நான் பண்டரீபுதத்துக்குப் போகவேண்டும்!
அங்கே தங்க வேண்டும்!
  ஏனெனில் அதுவே என் பரமாத்மாவின் வீடு!"
 பாபா பாடினார்.  அடியவர்களும் அவரைத் தொடர்ந்து பாடினர்.  சிறிது நேரத்தில் நானா சாஹேப் தனது குடும்பத்துடன் வந்து பாபாவின் முன்னால் வீழ்ந்துபணிந்து அவரைத் தங்களுடன் தங்கும்படியும் வேண்டிக்கொண்டார்.  அவ்வேண்டுகோள் பாபாவுக்குத் தேவையாய் இருக்கவில்லை.  ஏனெனில் மற்ற அடியவர்கள் நானா சாஹேபிடம் பாபா ஏற்கனவே பண்டரீபுரத்திற்குப் போவதற்கும், அங்கு தங்குவதற்குமான ஊக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.  இதைக் கேட்டு நானா சாஹேப் உணர்ச்சிவசப்பட்டார்.  பாபாவின் காலடியில் வீழ்ந்தார்.  பிறகு பாபாவின் அனுமதி, உதி மற்றும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு, நானா சாஹேப் பண்டரீபுரத்துக்குப் புறப்பட்டார்.  

பாபாவின் கதைகளுக்கு ஒரு முடிவில்லை.  ஆனால் இங்கு நிறுத்தி, அடுத்த அத்தியாயத்தில் மானிட வாழ்க்கையின் முக்கியத்துவம், பாபாவின் இறந்து வாழும் வாழ்க்கை, பாயஜாபாயின் சேவை மற்றும் பலகதைகளையும் கூறுகிறேன்.

  
பாபாவின் நெருங்கிய பக்தரும், அவருடன் எப்போதும் மசூதியிலும், சாவடியிலும் படுத்துறங்கியவருமான மஹல்சாபதி பாபா தம்மிடம் ஒருமுறை தாம் 'பாத்ரி'யைச் சேர்ந்த பிராமணர் என்றும், பிறந்தபோதே (முஸ்லிம்) ஃபக்கீர் ஒருவரிடம் வளர்க்க ஒப்படைக்கப்படதாகவும் சொல்லியிருக்கிறார்.  இந்த உரையாடல் நிகழ்ந்த சமயம் பாத்திரியைச் சேர்ந்த சிலர் அங்கு வந்ததையும் அவர்களிடம் பாபா அங்கு வசிப்பவர்களைப்பற்றி விசாரித்ததையும் தெரிவித்திருக்கிறார்.  (சாயிலீலா சஞ்சிகை - வருடம் 1924, பக்கம் 179)    


*²  திருமதி. காஷிபாய் கனிட்கர், புனேவைச் சேர்ந்த புகழ்பெற்ற கற்றறிந்த பெண்மணி ஆவார்.  இவர் தம்முடைய அனுபவமாக சொல்லியவை சாயிலீலா சஞ்சிகையில் (வருடம் 1934, தொகுப்பு  2, பக்கம் 79) பதிக்கப்பட்டிருக்கிறது.


பாபாவின் அற்புதங்களைக் கேள்விப்பட்ட பிறகு எங்களுடைய பிரம்மசமாஜ நம்பிக்கைகளுக்கும், வழிமுறைகளுக்கும் ஏற்ப பாபா மாயவேலை செய்யும் முஹமதியரா அல்லது இந்து சித்தரா! என்று விவாதித்துக்கொண்டிருந்தோம்.  

 பின்பு ஒருமறை ஷீர்டி செல்லும்போது இதைப்பற்றிய எண்ணம் என் மனதில் சுழன்றுகொண்டிருந்தது.  ஆனால் மசூதியின் படிகளை நான் நெருங்கியபோது, பாபா வெளியேவந்து என்னை உற்றுநோக்கி, சற்றே கடுமையான குரலில் தனது நெஞ்சை சுட்டிக்காட்டி, "நான் ஒரு பிராமணன்,  தூய பிராமணன்.  எனக்கும் மாயமந்திர வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை.  அது மாதிரியான சித்து வேலைசெய்யும் எந்த முஹமதியனும் இங்கு நுழையத் துணிய முடியாது" என்றார்.

மீண்டும் தன்னைச் சுட்டிக்காட்டி, "இந்த பிராமணர் இலட்சக்கணக்கான மக்களை தூய்மையான ஒளிநிறைந்த பாதைக்கு இழுத்து, அவர்களின் இலட்சியத்தை அடைய இட்டுச்செல்வார்.  இது பிராமண மசூதி.  இங்கு மாயவேலை செய்யும் எந்த முஹமதியனின் நிழல்படவும் அனுமதிக்கமாட்டேன்" என்றார்.


 
ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்
 
  
 
 

No comments:

Post a Comment