Thursday, 8 November 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 38

•  பாபாவின் ஹண்டி
•  கோவிலை மதிக்காதிருத்தல்
•  காலா அல்லது கதம்ப உணவு
•  ஒரு கிண்ணம் மோர்


சென்ற அத்தியாயத்தில் நாம் பாபாவின் சாவடி ஊர்வலத்தைப் பற்றிப் பார்த்தோம்.  இந்த அத்தியாயத்தில் ஹண்டி(பெரிய அண்டா) என்ற பாபாவின் சமையல் பாத்திரத்தைப் பற்றியும் மற்றும் சில விஷயங்களையும் காண்போம்.





முன்னுரை 

ஓ! புனிதமான சத்குரு சாயி உலகமனைத்துக்கும் மகிழ்ச்சியை நல்கி அடியவர்களின் நலன்களை நிறைவேற்றி தங்களின் திருவடிகளைச் சரணடைந்தவர்களின் பேரிடர்களைப் போக்குபவருமான தங்களை வணங்குகிறோம்.  மிகுந்த தாராள குணமுடையவராகவும், தங்களைச் சரணடைவோர்களின் பாதுகாவலராகவும், ரட்சகராகவும் விளங்கும் தாங்கள் மக்களுக்காக இரங்கி அவர்களுக்கு நன்மை செய்யவே அவதரித்திருக்கிறீர்கள்.

தூய ஆன்மாவின் சாராம்சமான சாறு பிரம்மாவின் அச்சில் ஊற்றப்பட்டு இதிலிருந்து ஞானிகளுக்குள் எல்லாம் முடிமணியாக சாயி அவதரித்து விளங்குகிறார்.  இந்த சாயி ஆத்மராமனேயாவார்.  தூய தெய்வீகப் பேரின்பத்தின் இருப்பிடமே அவர்.  வாழ்க்கையின் அனைத்துக் குறிக்கோளையும் தாமே அவர் எய்தியதோடு நில்லாது, தமது அடியவர்களைப் பற்றற்றவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் ஆக்கினார். 



பாபாவின் ஹண்டி

நமது சாஸ்திரங்களில், வெவ்வேறு காலங்களுக்கு வெவ்வேறு சாதனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 
   தவம்        -  க்ருதயுகத்துக்கும்
   ஞானம்    -  த்ரே
தாயுகத்துக்கும்
   யக்ஞம்    -  த்வாபரயுகத்துக்கும்
   தானம்     -  கலியுகத்துக்கும்  
சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றன.  தானங்கள் அனைவற்றிலும் அன்னதானமே சிறந்தது.  மத்தியான நேரத்தில் நமக்கு உணவு கிடைக்காதபோது நாம் மிகவும் குழப்பமடைகிறோம். 

அதைப்போன்ற சூழ்நிலைகளில் மற்ற ஜீவராசிகளும் அங்ஙனமே உணர்கின்றன.  இதையறிந்து எளியவர்களுக்கும், பசியடைந்தோர்க்கும் உணவளிப்பவரே மிகச்சிறந்த கொடையாளி அல்லது தர்மவான்.  "உணவே பிரம்மம்.  உணவிலிருந்தே எல்லா உயிர்களும் பிறக்கின்றன.  பிறந்த பின்னும், உணவாலேயே உயிர் வாழ்கின்றன.  அழிந்த பின்னும் உணவின் உள்ளேதான் மீண்டும் உட்செல்லுகின்றன" என்கிறது தைத்திரீய உபநிஷதம்.

விருந்தாளி ஒருவர் நம் வீட்டுக்கு வர நேர்ந்தால் அவரை உணவளித்து வரவேற்பது நம்மைக் கட்டுப்படுத்தும் ஒரு கடமையாகும்.  செல்வம், சொத்து, உடை முதலான மற்றவித தானங்கள் செய்வதற்கு  விவேகம் தேவைப்படுகிறது.  ஆனால் உணவின் விஷயத்தில் அத்தகைய யோசனைகள்  எதுவும் தேவையில்லை.  மத்தியான நேரத்தில் யார் வேண்டுமானாலும் நம் வீட்டு வாசலிடை வரட்டும்.  அவருக்கு உணவு அளிக்கப்பட வேண்டும்.  அதிலும் முடவர்கள், சரியாக நடக்க முடியாதவர்கள், குருடர்கள், வியாதியஸ்தர்களான ஆண்டிகள் முதலியோருக்கு முதலில் உணவு அளிக்கப்படவேண்டும். 

முதலில் குறிப்பிட்டோருக்கு உணவளிப்பதால் உண்டாகும் புண்ணியம் பின்னால் குறிப்பிட்டவர்களுக்கு அளிப்பதைவிட மிகவும் அதிகமாகும்.  அன்னதானம் இல்லாத மற்ற தானங்களெல்லாம், நிலவற்ற நஷத்திரங்கள் போன்றும், பதக்கமற்ற அட்டிகை போன்றும், முடிமணி அற்ற கிரீடம் போன்றும், தாமரையற்ற குளத்தைப் போன்றும், பக்தியற்ற பஜனையைப் போன்றும், குங்குமமற்ற சுமங்கலியைப் போன்றும், இனிமையான சாரீரமில்லாத பாடலைப் போன்றும், உப்பற்ற தயிரைப் போன்றுமாக இருக்கிறது. 

வரண் (பருப்பு சூப்) மற்றெல்லா பதார்த்தங்களையும்விடச் சிறந்திருப்பதைப் போன்று மற்றெல்லா புண்ணியங்களையும்விட அன்னதானம் சிறந்திருக்கின்றது.  இப்போது பாபா எங்ஙனம் உணவு சமைத்து அதை வினியோகித்தார் என்பதைக் காண்போம்.

பாபாவுக்காக ஒரு சிறிதே உணவு தேவைப்பட்டது என்றும் அவருக்குத் தேவையானதும் சில வீடுகளில் பிச்சையெடுத்துப் பெறப்பட்டது என்பதும் முன்னமேயே எடுத்துச் சொல்லப்பட்டுவிட்டது.  ஆயின் அனைவர்க்கும் உணவளிக்க வேண்டுமென்று அவர் தீர்மானித்தால் அவராகவே எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார்.  இந்த விஷயத்தில் அவர் எவரையும் சார்ந்திருக்கவோ, தொல்லைப்படுத்தவோ இல்லை.  முதலில் கடைவீதிக்குச் சென்று சோளம், மாவு, நறுமண பலசரக்கு வகைகள் முதலிய எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்குகிறார்.  கோதுமை அரைத்தலையும் தாமே செய்கிறார். 

மசூதிக்கு முன்னாலுள்ள திறந்தவெளியில், ஒரு பெரிய அடுப்பை வைத்து நெருப்பை மூட்டி அதற்குமேல் ஹண்டி என்னும் ஒரு பாத்திரத்தை சரியான அளவு தண்ணீர் ஊற்றிவைக்கிறார். 
இரண்டு விதமான ஹண்டிகள் இருந்தன.  ஒன்று சிறியது.  மற்றொன்று பெரியது.  முன்னது 50 பேருக்கு உணவளிக்க ஏற்றது.  பின்னது 100 பேருக்கானது.  சில சமயம் அவர் மிட்டா சாவல் என்னும் சர்க்கரைப் பொங்கலைச் சமைத்தார்.  மற்றும் சில சமயங்களில் புலவை மாமிசத்துடன் சமைத்தார்.  சில சமயங்களில் கொதித்துக்கொண்டிருக்கும் வரண் என்னும் சூப்பில், கோதுமை மாவை சிறு உருண்டைகளாகவோ, அல்லது தட்டையான ரொட்டிகளாகவோ செய்து மிதக்கவிட்டார்.

வாசனைப் பொருட்களை அம்மியில் வைத்து இடித்துத் தூளை சமையல் பாத்திரத்தில் போட்டார்.  உணவை மிகவும் சுவையானதாக்க அவர் எல்லாச் சிரமங்களையும் எடுத்துக்கொண்டார்.  ஜவ்வாரி (கேள்வரகு) மாவைத் தண்ணீருடன் கொதிக்கவிட்டு அதைத் தயிருடன் கலந்து அம்பீல் (கூழ்) தயார் செய்தார்.  உணவுடன் இந்த அம்பீலை ஒரே மாதிரியாக விநியோகித்தார்.  உணவு ஒழுங்காக வேகிறதா என்பதைப் பார்க்க பாபா தனது கஃப்னியின் கைகளை மேலே சுருட்டிவிட்டுக்கொண்டு தனது வெறும் கையைக் கொதிக்கும் பாத்திரத்தில் துளியும் பயமின்றி விட்டுக் கொதிக்கும் கலவையை நன்றாக மேலும் கீழும், பக்கங்களிலும் கலக்கிவிடுகிறார்.

கை வெந்ததற்கான எந்த அடையாளத்தையோ முகத்தில் பயத்தின் எவ்விதச் சாயலையோ காணமுடிவதில்லை.  சமையல் முடிந்ததும், பாத்திரங்களை மசூதிக்குக் கொண்டுவந்து உரியமுறையில் மௌல்வியைக்கொண்டு புனிதமாக்கினார்.  முதல் உணவின் ஒரு பகுதியை மஹல்ஸாபதிக்கும், தாத்யா பாடீலுக்கும் அனுப்பிவிட்டு மிச்சத்தை எல்லா ஏழை எளியவர்களுக்கும், திக்கற்றவர்களுக்கும் அவர்கள் உளம்நிறையும் வண்ணம் தமது கையாலேயே பரிமாறினார்.  பாபா தாமே சமைத்து தாமே பரிமாறிய உணவை உட்கொண்டவர்கள் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அதிர்ஷ்டசாலிகள்.  இத்தருணத்தில் ஒரு சிலர் சந்தேகத்தையும் கிளப்பலாம்.  பாபா காய்கறிகளையும், அசைவ உணவையும் பிரசாதமாக தமது அடியவர்களுக்கு ஒரே மாதிரியாகவா வழங்கினார்?  விடை வெளிப்படையானதும், எளிதானதுமாகும்.  அசைவ உணவு பழக்கப்பட்டோருக்கு ஹண்டியிலிருந்து பிரசாதமாக உணவு வழங்கப்பட்டது.  அதில் பழக்கமில்லாதவர்களை அதைத்தொட அனுமதிப்பதில்லை.  இவ்வுணவை விசேஷமாக அனுசரிக்க அவர் அவர்களிடம் எவ்வித விருப்பத்தையோ, ஆசையையோ தூண்டிவிட்டதில்லை.

குருவே பிரசாதமாக எதையாவது அளிக்கும்போது அது ஏற்றுக்கொள்ளத்தக்கதா இல்லையா என்று எண்ணுபவன் நரகத்தை அடைகிறான் என்னும் ஒரு கொள்கை நன்றாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  இந்தக் கொள்கையை எந்த ஒரு சீடனும் எவ்விதம் மனதில் ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்பதை அறிய சில நேரங்களில் பாபா சோதனைகள் நடத்துவார்.  உதாரணமாக பாபா ஒரு ஏகாதசி தினத்தன்று தாதா கேல்கரிடம் சில ரூபாய்கள் கொடுத்து அவரையே நேராக கொரலாவுக்குச் சென்று அங்கிருந்து மாமிசம் வாங்கிவரும்படி கூறினார்.  இந்த தாதா கேல்கர் ஒரு வைதீக பிராமணர்.  எல்லா வைதீகச் சம்பிரதாயங்களையும் வாழ்க்கையில் அனுசரித்தவர்.  செல்வம், தானியங்கள், உடை முதலியவைகளை சத்குருவிற்குச் சமர்ப்பிப்பதெல்லாம் போதாதென்றும், முழுநிறை நம்பிக்கையுள்ள கீழ்ப்படிதலும், அவரது உத்தரவுகளை சரி நுட்பமாக நிறைவேற்றுதலுமே அவரை மிகவும் மகிழ்விக்கும் உண்மையான தஷிணையாகும் என்பதை அவர் அறிவார். 

எனவே தாதா கேல்கர் உடைகளை உடுத்திக்கொண்டு அவ்விடத்துக்குக் கிளம்பினார்.  பிறகு பாபா அவரைக் கூப்பிட்டு "நீயே போகாதே.  யாரையாவது அனுப்பு" என்று கூறினார்.  இதன் பேரில் தாதா, தமது வேலையாள் பாண்டுவை இதற்காக அனுப்பினார்.  பாபா அவரையும் திரும்பிவரச் சொல்லி, அதையும் ரத்து செய்துவிட்டார்.  மற்றொரு சந்தர்ப்பத்தின்போது 'புலவ்' என்னும் மாமிசக்கறியில் உப்பு சரியாக இருக்கிறதா என்பதைச் சற்று சுவைத்துப் பார்க்கும்படி பாபா தாதாவைக் கேட்டார்.  பின்னர் சாதாரணமாகவும், முறைக்காகவும் அது சரியாக இருக்கின்றது என்று கூறினார்.

அதற்கு பாபா நீ அதைக் கண்ணால் பார்த்ததோ, நாவால் சுவைத்
தோ கிடையாது.  பின்னர் அது சுவையாய் இருக்கிறது என்று எப்படி உன்னால் உரைக்கமுடியும்.  பாத்திரத்தின் மூடியைத் திறந்து பார் என்று கூறிக்கொண்டே, பாபா அவரது கையைப் பிடித்து பானைக்குள் அழுத்தி, "கையை முன்னால் நீட்டி கரண்டியை எடுத்து, வைதீகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பதறாமல், கொஞ்சம் எடுத்து சாப்பாட்டில் போட்டுக்கொள்" என்றார்.

தாய்க்கு குழந்தையிடம் ஒரு உண்மையான அன்பின் அலை தோன்றும்போது, அதைக் கிள்ளிவிட்டு அழத் தொடங்கியதும் தன் மார்போடு அணைத்துக்கொள்கிறாள்.  அவ்வாறே பாபா உண்மையான தாய் என்றமுறையில் தாதா கேல்கரை இவ்விதமாகக் கிள்ளிவிட்டார்.  உண்மையில் எந்த ஞானியோ அல்லது குருவோ தடுக்கப்பட்ட உணவைத் தமது வைதீகச் சீடனை உண்ணும்படி வற்புறுத்தி அதன்மூலம் தம்மை கீழ்மைப்படுத்திக் கொள்ளமாட்டார்.

இந்த ஹண்டி விவகாரம் 1910ஆம் ஆண்டுவரை சிலகாலம் நடந்தது.  பிறகு நின்றுவிட்டது.  முன்னரே கூறியதைப்போன்று தாஸ்கணு, பாபாவின் புகழை பம்பாய் மாகாணமெங்கிலும் தம் கீர்த்தனைகளால் பரப்பினார்.  அப்பகுதியிலிருந்து ஷீர்டிக்கு மக்கள் திரளாக வந்து கூடத்தொடங்கினர்.  ஷீர்டி சில நாட்களுக்குள்ளாகவே ஒரு புனித ஷேத்திரம் ஆகிவிட்டது.  பக்தர்கள் வெகுமதி அளிப்பதற்காக பல்வேறு பொருட்களைக் கொணர்ந்தனர்.  வெவ்வேறு உணவுவகைகளை நைவேத்யமாகச் சமர்ப்பித்தனர்.  அவர்கள் அவ்வாறு அளித்த உணவுப் பொருட்கள் எவ்வளவு என்றால் பக்கிரிகளும், ஆண்டிகளும் வயிறு புடைக்க உண்டுவிட்டு பின்னும் மீதி இருக்கும் அளவு இருந்தது.  எங்ஙனம் நைவேத்யம் பகிர்ந்தளிக்கப்பட்டது என்று கூறும்முன்பு, உள்ளூரில் இருந்த கோவில்களின் மீதும், தெய்வங்களின் மீதும் பாபாவுக்கு எத்தகைய மரியாதையும், ஆர்வமும் இருந்தது என்பதை விளக்கும் நானா சாஹேப் சாந்தோர்கரின் கதையை எடுத்துக்கொள்வோம்.   


 
நானா சாஹேப் கோவிலை மதியாதிருத்தல்

சிலர் தங்களுக்கே உரியமுறையில் அனுமானித்துக்கொண்டும், யூகித்துக்கொண்டும் சாயி ஒரு பிராமணர் என்றும், சிலர் அவர் ஒரு முஹமதியர் என்றும் கூறினர்.  உண்மையில் அவர் எந்த ஜாதியையும் சேர்ந்தவர் அல்ல.  எப்போது எந்த ஜாதியில் பிறந்தார் என்பதையும், அவரது பெற்றோர் யார் என்பதையும் ஒருவரும் நிச்சயமாக அறிந்திருக்கவில்லை.

முன்பே அத்தியாயம் 7ல் உள்ள பாபாவின் சொந்த கூற்றுப்படி அவர் பிராமணர் என்றாலும் பரமாத்மாவிடம் தன்னை முழுவதும் சரணாகதிசெய்து, அஹங்காரத்தையும் - உடல் உணர்வையும் ஒழித்து அவருடன் ஒன்றிவிடுபவனுக்கு ஜாதி - தேசம் என்னும் கேள்விகள் குறித்துக் கருத்திற்கொள்வதற்கு ஏதுமில்லை. 
பின்னர் அவர் எங்ஙகனம் ஒரு பிராமணராகவோ, முஹமதியராகவோ இருக்கமுடியும்?  அவர் ஒரு முஹமதியர் என்றால், மசூதியில் அணையாமல் எப்போதும் துனியை எங்ஙகனம் எரியவைத்துக் கொண்டிருக்கமுடியும்?  அங்கு எங்ஙனம் ஒரு துளசி பிருந்தாவனம் இருக்க முடியும்?  சங்கோசை, மணி ஓசை, இன்னிசைக்கருவிகள் ஆகியவைகளை அனுமதிக்க முடியும்?  அவர் ஹிந்து வழிபாட்டு முறைகளின் எல்லா அம்சம்களையும் எங்ஙனம்  நடக்கவிட்டிருக்க முடியும்?  அவர் ஒரு முஹமதியராக இருந்தால், அவர் காதுகள் குத்தப்பட்டிருக்குமா?  ஹிந்து கோவில்களைச் செப்பனிடத் தம் கையில் இருந்த பணத்தை அவர் செலவு செய்திருக்க முடியுமா?  மாறுபாடாக ஹிந்து கோவில்களையும், தெய்வங்களையும் மதியாமல் இருப்பதை அவர் சிறிதும் சகிப்பதில்லை.

ஒருமுறை நானா சாஹேப் சாந்தோர்கர் பினிவாலே என்ற தனது ஷட்டகருடன் ஷீர்டிக்கு வந்தார்.  அவர்கள் மசூதிக்குச்சென்று பாபாவின் முன்னால் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது பாபா திடீரென்று நானா சாஹேபின் மீது கோபம் அடைந்தார்.  "நீ இவ்வளவு காலம் எனது கூட்டுறவில் இருக்கிறாய்.  எங்ஙனம் நீ இவ்விதம் நடந்துகொள்கிறாய்?" என்று அவரைக் கேட்டார்.  முதலில் நானா சாஹேபுக்கு ஒன்றும் புரியவில்லை.  தாழ்மையுடன் விளக்கும்படி கேட்டுக்கொண்டார்.  பாபா அவரை கோபர்காவன் எப்போது வந்தாரென்றும், அங்கிருந்து ஷீர்டிக்கு எங்ஙனம் வந்தாரென்பதையும்  கேட்டார்.

உடனே நானா சாஹேப் தன் தவறைப் புரிந்துகொண்டார்
அவர் ஷீரடிக்கு வரும்போதெல்லாம் கோபர்காவனில் கோதாவரிக் கரையிலுள்ள தத்தரின் கோவிலை வழிபட்டு வருவது வழக்கம்.  ஆனால் இம்முறை தத்தரின் பக்தரான தனது உறவினரையும், அக்கோவிலுக்குப் போகாமல் தடுத்து, தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு ஷீர்டிக்கு நேரடியாக வந்துவிட்டார்.  இக்குற்றத்தை எல்லாம் அவர் பாபாவிடம் ஒப்புக்கொண்டு கோதாவரியில் குளித்துக்கொண்டிருக்கும்போது ஒரு பெரியமுள் அவர் பாதத்தில் குத்திவிட்டதனால், அது அவருக்கு மிகுதியான தொல்லையைக் கொடுத்தது என்று கூறினார்.  பாபா அது அவருக்கு லேசான தண்டனை என்று கூறி எதிகாலத்தில் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறினார்.



காலா (கதம்ப உணவு)

நைவேத்தியம் வினியோகிக்கப்படும் கதைக்குத் திரும்புவோம்.  ஆரத்தி நிகழ்ச்சி முடிந்தபின்னால் எல்லோரையும் உதியுடனும், ஆசீர்வாதங்களுடனும் அனுப்பிய பிறகு உள்ளே சென்று, நிம்பாரில் தமது முதுகைச் சாய்த்துக்கொண்டு இரண்டு வரிசையுள்ள பந்தியுடன் அமர்ந்திருப்பார்.  நைவேத்யம் கொண்டுவந்த பக்தர்கள் பூரி, மாண்டி, போளி, பாஸந்தி, சன்ஸா, சோறு முதலியவை உள்ள தங்களது உணவுப் பதார்த்தங்களை வலிந்து உள்ளே அனுப்புவார்கள்.

பாபாவினால் புனிதமாக்கப்பட்ட உணவின் பிரசாதத்தி
ற்
காக வெளியே காத்துக்கொண்டிருப்பார்கள்.  எல்லா உணவுகளும் கதம்பக் கூட்டாகக் கலக்கப்பட்டு பாபாவின் முன் வைக்கப்படும்.  அதை அவர் கடவுளுக்குச் சமர்ப்பித்து புனிதப்படுத்துவார்.  அதன் பகுதிகள் வெளியில் காத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு அளிக்கப்பட்டு மீதம் உள்ளே பாபா நடுநாயகமாக அ
ர்ந்திருக்கும் மக்களுக்குப் பரிமாறப்படும்.  இரண்டு வரிசையில் அமர்ந்திருக்கும் பக்தர்களும் வயிறார உண்ணுவர்.  புனிதமாக்கப்பட்ட உணவை உள்ளே அமர்ந்திருக்கும் அனைவருக்கும், ஒவ்வொருவரின் தேவையையும் சௌகரியத்தையும் கவனித்துப் பரிமாறும்படி நானா சாஹேப் நிமொண்கரையும், ஷாமாவையும் பாபா தினந்தோறும் கேட்டுக்கொள்வார்.

அவர்கள் இதை மிகவும் ஜாக்கிரதையாகவும், பிரியத்துடனும் செய்வர்.  இவ்வாறு அளிக்கப்பட்ட ஒவ்வொரு கவள உணவும் அடியவர்களுக்குப் போஷாக்கையும், திருப்தியையும் தந்தது.  எத்தகைய இனிமையான, விருப்பமான, புனிதமாக்கப்பட்ட உணவு அது!  எப்போதும் புனிதமானது, தெய்வீகமானது. 



ஒரு கிண்ணம் மோர்

ஒருமுறை இந்த கூட்டத்திலிருந்தபோது ஹேமத்பந்த் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டார்.  அப்போது பாபா அவருக்கு ஒரு கிண்ணத்தில் மோர் கொடுத்தார்.  அதன் வெள்ளையான தோற்றம் அவரை மகிழ்வித்தது.  ஆனால் வயிற்றில் அதற்கு இடம் இருக்காது என்று அஞ்சி லேசாக உறிஞ்சினார்.  மிகவும் சுவையாக இருந்தது.  அவரது தடுமாறும் எண்ணத்தைப் புரிந்துகொண்ட பாபா, "எல்லாவற்றையும் குடித்துவிடு.  இனிமேல் இம்மாதிரி வாய்ப்பு உனக்குக் கிடைக்காது" என்று கூறினார்.  அப்போது ஹேமத்பந்த் அதை முழுக்கவும் பருகினார்.  பாபாவின் உரை தீர்க்கதரிசனமானது என்று கண்டார்.  ஏனெனில் பாபா சீக்கிரத்தில் மஹாசமாதியடைந்தார்.

இப்போது வாசகர்கள் ஹேமத்பந்துக்கு நிச்சயம் நன்றி செலுத்த வேண்டும்.  அவர் கிண்ணத்தில் இருந்த மோரை அருந்தினார்.  ஆனால் பாபாவின் லீலைகள் என்ற ரூபத்தில் வேண்டிய அளவு அமிர்தத்தை நமக்கு விநியோகித்தார்.  பற்பல கிண்ணங்கள் அமிர்தத்தை நாம் பருகுவோம், திருப்தியடைந்து மகிழ்வோம்.


ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
 

No comments:

Post a Comment